“ப்ச், அதுக்கென்ன? மிச்சத்தை செக்யூரிட்டிட்ட குடுத்துடலாம். எல்லாத்தையும் பேக் பண்ணு…” என சொல்லிவிட்டு வேகமாய் சாப்பிட்டவன் கிளம்பிக்கொண்டே அமலாவிற்கு அழைத்து தாங்கள் வருவதை பற்றி சொல்லிவிட்டு கிளம்பினான்.
இப்போதெல்லாம் வாசமல்லி ஓரளவு பழகி இருந்தாள் மலை பகுதி பயணத்திற்கு. பழக்கிவிட்டான் அவளை ஒருவழியாக்கி. எப்போதாவது தான் தலைசுற்றல் அப்படி என்று வரும்.
ஜீப்பில் கிளம்பிவிட செல்லும் வழி எங்கும் ஷ்ரவனுக்கு ஒரே யோசனை. அனுசுயா வருவதை பற்றி இன்னும் தாய்க்கு தெரியுமா என்றெல்லாம் அவனுக்கு தெரியவில்லை. ஆனால் பெரிய பிரச்சனை இருக்கிறது என்று நினைத்தான்.
அவனின் எண்ணத்திற்கு அப்பார்ப்பட்டதாக இருக்கும் பிரச்சனை அவன் மட்டுமல்ல யாருமே எதிர்பாராததாக இருக்க போகிறதென தெரியவில்லை அவனுக்குமே.
வீட்டிற்கு வந்ததும் சாப்பிட்டுவிட்டு மனைவியுடன் கிளம்பிவிட்டான் திருமணத்திற்கு.
“நாளைக்கு பூஜை முடிஞ்சதும் இங்க கிளம்பி வந்திருங்கம்மா. நானும் வந்திடுவேன்…” என்று சொல்லியே தான் கிளம்பினான்.
சங்கர் அபர்னிதாவுடன் சித்ராவின் வீட்டிற்கு வந்துவிட அவளோ அவர்களிடத்தில் ஒன்றுமே நடவாததை போலவே நடந்துகொண்டாள். அப்படி ஒரு சிரிப்பும், பேச்சுமாக இருக்க அமலாவும், நீலகண்டனுமே வந்து சேர்ந்தனர்.
அமலாவும் அபியிடம் எப்போதும் போலவே பேச சித்ராவிற்கு தான் மனதுக்கு ஒப்பவில்லை. அபியின் இந்த பாசாங்கு இப்போது அப்பட்டமாக புரிந்தது அவருக்கு.
இரவு பாத்து மணி போல வந்து சேர்ந்தார் அனுசுயா. தாயை பார்த்தவளுக்கு தன் கண்களையே நம்ப முடியவில்லை.
அவளுக்கு திருமணம் முடிந்த பின்னர் எண்ணி நான்கே முறை வந்து வந்ததும் கிளம்பிய தாய் இப்போது திடீரென்று வந்திருப்பதை ஆச்சர்யமாக பார்த்தவள்,
“மம்மி, வரேன்னு சொல்லவே இல்லை நீங்க?…” என்று ஓடி சென்று தாயை அணைத்துக்கொள்ள அவர் சங்கரை தான் பார்த்தார்.
“உன்னை பார்க்கனும்னு தோணுச்சுடா. அதான் கிளம்பி வந்தேன். சப்ரைஸ்ஸா இருக்கட்டுமேன்னு…” என்று கன்னம் வழித்து கொஞ்சியவர் அவளிடம் பேசிவிட்ட பின்பு தான் மற்றவர்களையே பார்த்தார்.
“வாங்க அத்தை…” என்றதோடு சங்கர் அமைதியாக நிற்க அங்கிருந்தவர்கள் அனைவரிடமும் நலம் விசாரித்தவர் பின்பு மீண்டும் மகளை பார்த்தார்.
பின் வெகுநேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு தான் உறங்க சென்றார். செல்லும் முன் சங்கரிடம் வந்தவர்,
“என்ன பிரச்சனை மாப்பிள்ளை?…” என்று கேட்க,
“நாளைக்கு கோவில்ல பூஜை. முடிச்சுட்டு வீட்டுக்கு போய் பேசுவோம் அத்தை…” என சொல்ல,
“வீட்டுக்கா?…” என்று யோசித்தார்.
“எங்க வீட்டுக்கு இல்லை. அமலாத்தை வீட்டுக்கு தான். பிரச்சனை எங்கம்மாவுக்கு தெரிஞ்சா அப்பறம் எப்படி பிஹேவ் பண்ணுவாங்கன்னே தெரியாது. நான் இதை சால்வ் பண்ண நினைக்கறேன்…” என்றதும் அமைதியாகி போனார் அனுசுயா.
இந்தளவிற்கு பொறுமையாக அவன் பேசியதே பெரிது என நினைத்தவர் மகளின் மேல் கவலையானார். மறுநாள் காலை எழுந்ததுமே கோவிலுக்கு கிளம்பினார்கள் அனைவரும்.
“பசிக்குது அத்தை…” என புலம்பிக்கொண்டே அபி வர,
“கோவில்ல பொங்கல் வைக்கறோம். இன்னைக்கு விரதம்னு சங்கர் சொல்லிருக்கானே? இல்லனா இரு, ரெண்டு தோசை ஊத்திட்டு ஓடியாறேன்…” என்றவரை நிறுத்திய அனுசுயா,
“அபி கோவிலுக்கு போகும் போது என்ன இது அவங்களை வேலை வாங்கிட்டு? அங்க போய் பொங்கல் வச்சு முடிச்சுட்டு வந்துருவோம். மணி ஏழு கூட ஆகலை. அதுக்குள்ளே என்ன?…” என்று அதட்டிவிட முட்டிக்கொண்டு வந்த கண்ணீரை துடைத்தவள்,
“அப்போ எனக்கு பசிச்சா உனக்கு ஒண்ணுமே இல்லையா? என்ன அம்மா நீ?…” என்று எடுத்தெறிந்து பேசியவள் வேகமாய் வெளியே சென்று கோவிலை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.
“என்ன மதினி நீங்க? நான் பேசிருப்பேன்ல. கோச்சுக்கிட்டா பாருங்க…” என அவளின் பின்னே சென்றார் சித்ரா.
“இந்த புள்ளைய வச்சு என்னன்னு பொழைப்பை ஓட்டறானோ சங்கரு…” என்று புலம்பிக்கொண்டே அபியை நெருங்கி நடக்க அவரை பார்த்தவள் இன்னும் வேகமாய் நடையை எட்டி போட்டாள்.
“மெதுவா நட அபி…” என அவளின் கையை பிடித்து நிறுத்த,
“விடுங்கத்தை. எதையும் செய்யாதன்னு என்னை சொல்லாதீங்க…” என்று அந்த இடத்திலேயே வெடுக்கென்று சொல்ல சித்ராவிற்கு அதிர்ச்சியாக போனது. இதை எல்லாம் பார்த்தபடி வந்த அனுசுயா,
“என்ன அமலா? இவ இப்படி இருக்கறா?…” என கேட்க,
“பசின்னு சொன்னால்ல. கோவிலுக்கு போய் பார்த்துப்போம்…” என்று சொல்லி தேற்றினார்.
இவர்களுக்கு முன்பே கோவிலுக்கு பத்மநாபனும், நீலகண்டனும் சென்றிருக்க அவர்களுடன் சங்கரும் போயிருந்தான்.
கோவிலுக்கு சென்றதும் பொங்கல் வைக்கும் வேலையை ஆரம்பிக்க சங்கர் திருமண வீட்டில் இருந்து வீடியோ காலில் வந்துவிட்டான்.
மாற்றி மாற்றி அனைவரும் பேசிக்கொண்டிருக்க அத்தனை பேரின் முகத்திலும் அப்படி ஒரு சந்தோஷம். அபி அவற்றை எல்லாம் ஒரு இறுக்கத்துடன் பார்த்துக்கொண்டு இருந்தாள்.
“அபி இந்தா ஷ்ரவன்…” என அமலா போனை நீட்ட,
“நான் பேசலை…” என்றாள்.
“ப்ச், என்ன அபி இது?…” என அமலா கேட்க அவள் அங்கிருந்து நகர்ந்துவிட்டாள்.
பின் பேசி வைத்துவிட்டு சித்ராவோடு சேர்ந்து பொங்கலை இறக்கி சாமிக்கு முன்னால் வைத்துக்கொண்டு இருக்க சங்கரை தேடி வந்தார் அனுசுயா.
“இப்போவாச்சும் சொல்லுங்க மாப்பிள்ளை. என்ன பிரச்சனை? இங்க யாரும் இல்லையே. பெத்த தாயா எனக்கு பதறுது…” என அவனிடம் பேசிக்கொண்டிருக்க,
“நான் தான் சொன்னேனே அத்தை. இங்க வச்சு பேசற விஷயம் இல்லை. வீட்டுக்கு போய் பேசுவோம். பூஜை முடியவும் கிளம்பிருவோம்…” என்று சொல்லிக்கொண்டிருக்க சப்பென்று ஒரு அறை சத்தம்.
கோவிலில் இவர்கள் குடும்பத்தை தவிர ஆட்கள் ஒருசிலர் மட்டுமே இருக்க வேறு யாருமில்லை என்பதால் எல்லோருமே என்ன ஏதென்று ஓடி சென்று பார்த்தனர்.
அவர்கள் கண்ணெதிரே மீண்டும் ஒரு அறையை அபர்னிதா கன்னத்தில் இடியென இறக்கியிருந்தாள் தேவகி.
“இன்னொரு வார்த்தை பேசின வாயை கிழிச்சு தச்சிருவேன்…” என்று விரல் நீட்டி எச்சரித்தபடி நிற்க பார்த்திருந்தவர்கள் அத்தனை பெரும் ஸ்தம்பித்து நின்றனர்.
“தேவகி…” என்று சங்கரின் கோப குரலில் சட்டென திரும்பி பார்த்தவளின் கண்கள் அவனோடு ஒரு நொடி பிணைந்து மீண்டும் அபர்னிதாவை பார்த்தது.
“யாரும்மா நீ? என் பொண்ணை அடிக்கிற?…” என்று ஆக்ரோஷமாய் அனுசுயா கேட்க தேவகியை தெரிந்தவர்களுக்கு தர்மசங்கடமான சூழ்நிலை.
யார் பக்கம் பேசுவதென்று தெரியாமல் விழிக்க தேவகியோ எதையும் அஞ்சாத பாவனையுடன் திடமாய் நின்றாள்.
“மம்மி என்னை ரெண்டுதடவை அடிச்சுட்டா மம்மி இவ. இவளை சும்மா விட கூடாது…” என்று அபர்னிதா கன்னத்தில் இருந்த கையை எடுத்துவிட்டு ஆக்ரோஷமாய் பேச,
“என்ன பண்ணுவ? இங்க உன் முன்னாடி தான நிக்கறேன். எங்க என்ன பண்ணுவன்னு நானும் பார்க்கறேன்…” என நிமிர்வாய் நின்று அவள் கேட்க,
“அபி என்ன பண்ண? என்ன நடந்துச்சு? பொய் சொல்லாம சொல்லு…” என்று சங்கர் மனைவியை பார்க்க அபர்னிதாவின் கண்களில் இருந்து கண்ணீர் கொட்டியது.
“பார்த்திங்களா மம்மி? இவர் என்ன கேட்கறார்ன்னு…” என்று தாயிடம் முறையிட,
“என்ன மாப்பிள்ளை இது? இந்த பொண்ணை என்னன்னு கேட்காம என் பொண்ணை…”
“அத்தை வெய்ட்…” என்றவன்,
“நீ சொல்லு அபி…” என்றான்.
“ஆதவ் விளையாடிட்டு இருந்தான். திடீர்ன்னு காணுமேன்னு தேடி வந்தப்போ கீழே விழுந்துருந்தான். இவ பக்கத்துல நின்னா. என்னன்னு கேட்டதுக்கு…” என்று சொல்லிக்கொண்டே தேவகியை பார்க்க அதுவரை சாதாரணமாக நின்றிருந்தவள் இப்போது மார்பின் குறுக்கே கையை கட்டியபடி நின்றாள்.
‘பேசு, பேசு. என்ன பேசறன்னு பார்க்கறேன்’ என்னும் தோரணையே அதில் அப்பட்டமாய் தெரிந்தது. வார்த்தைகள் தடுமாற என்ன பேசவென தெரியாமல் அபி திணறினாள்.
“சொல்லு அபி…” என சங்கர் கேட்க,
“சொல்லு சொல்லுன்னா ஆதவ் என்ன அவ பிள்ளையா? அவ அப்படி தான் சொல்றா…” என்று சொல்லிவிட சங்கர் கூர்மையாய் பார்த்தான் அவளை.
“உண்மையை சொல்லு…” என்றான் இப்போது மிகுந்த கடுமையுடன்.
“உண்மைன்னா? இதான் உண்மை. அப்ப நீங்க என்னை நம்பலையா?…” என்றவள்,
“மம்மி…” என தாயை கட்டிக்கொள்ள,
“மாப்பிள்ளை என் பொண்ணு சொல்றது என்னனு…”
“தேவகி பொய் சொல்லமாட்டா அத்தை. அவ அடிக்கிற அளவுக்கு அபி பேசியிருக்கா. அதை சொல்ல சொன்னா பேச்சை மாத்தறா…” என்றவன் அப்போதுதான் தேவகியின் தாவணியின் பின்னால் ஒளிந்திருந்த ஆதவ்வை பார்த்தான்.
“ஆதவ்…” என்று அழைக்கவும் அழுதுகொண்டே எட்டி பார்த்தவன் அபர்னிதாவை பார்த்து மிரண்டான்.
“ஆதவ் இங்க வா…” என்று மகனை அழைக்கவும் நடுங்கிக்கொண்டே ஓடி சென்று தந்தையின் காலை கட்டிக்கொண்டான்.
பிள்ளையின் கன்னம் சிவந்து விரல்தடங்கள் தெரிந்தது. ஆத்திரத்துடன் அதை பார்த்தவன்,
“யார் குட்டி உன்னை அடிச்சா?…” என கேட்க,
“நா நா…” என்று தேம்பியபடி ஒவ்வொருவரையாய் பார்த்தவன் கடைசியில் தேவகியை பார்த்துவிட்டு மெதுவாய் யாருக்கும் கேட்காத குரலில் சங்கரின் காதில் சொல்ல சொல்ல அவனின் கண்கள் சிவந்தது.
“நீயெல்லாம் பொண்ணா? கீழே விழுந்த பையனை தூக்கிவிட்டு ஹெல்ப் பண்ண பொண்ணுக்கு தேங்க்ஸ் சொல்லிருக்கான் ஆதவ். அதுக்கு நீ எதுக்கு ஆதவ்வையும் அடிச்சு தேவகியையும் ஏன்அடிச்ச?…” என்று கோபத்துடன் கேட்க,
“அவன் பயத்துல பொய் சொல்றான்…”
“ஏய் ச்சீ, பேச்சை நிறுத்து…” என்று சொல்லவும் தேவகியின் முன்னால் தன் கணவன் இப்படி பேசிவிட அவமானத்தில் குறுகி நின்றவளின் பார்வை வன்மமாய் தேவகியின் மீது படிந்தது.
“அவ அடிச்சா நீ திரும்ப அடிப்பியாமா? அதுவும் ரெண்டு தடவை அடிச்சிருக்க? இதுக்கே உன் மேல கேஸ் குடுப்பேன் நான்…” என்று அனுசுயா சொல்ல,
“முடிஞ்சா குடுத்துதான் பாருங்களேன். இதுக்கெல்லாம் நான் ஏன் பயப்படனும்? இங்க நான் எந்த தப்பும் பண்ணலை…” என்றவள்,
“இங்க பாரு, என்னோட வாழ்க்கையை நான் வாழ்ந்துட்டு போறேன். என்னை பேச உனக்கு எந்த அதிகாரமும், உரிமையும் இல்லை. தேவையில்லாம வார்த்தையை விட்ட இந்த தடவை ரெண்டு அறையோட நிறுத்திருக்கேன். திரும்ப பிரச்சனை பண்ணின…”
“அப்படித்தான்டி பேசுவேன். நீ என் புருஷனை பார்க்க தான வந்திருக்க. எனக்கு தெரியும். அவர் உன்னை வர சொன்னாரா?…” என்று வாயடங்காமல் அபர்னிதா குதிக்க,
“சரி அவர் வர சொல்லியே வந்தேன்னு வச்சுக்க, என்ன செய்ய முடியும் உன்னால?…” என கேட்க அத்தனைபேரும் வாயடைத்து போய் பார்த்தனர்.
சங்கர் அதிர்ந்து போய் தேவகியை பார்க்க அவள் பார்வை அவனின் நிழலை கூட தீண்டவில்லை. அபியை மட்டுமே பார்த்து பேசினாள்.
“இந்த கோவில் என்ன உன் அப்பன்வீட்டு சொத்தா? யார் வரனும்னு முடிவு பண்ண? இது என் சொந்த ஊரு. இங்க நான் எப்ப வேணாலும் வருவேன். என்ன வேணாலும் செய்வேன். உனக்கு ஏன் விளக்கம் சொல்லனும்?…” என்றவள்,
“உன்னோட சாக்கடை புத்தி எப்படி யோசிக்குமோ எனக்கு தெரியாது. ஆனா என்னோடது நல்ல புத்தி. எங்கம்மாப்பா அப்படி வளர்க்கலை. எத்தனை பெரிய பிரச்சனையா இருந்தாலும் அதை நிதானமா அணுகனும்னு தான் எனக்கு சொல்லிருக்காங்க. இப்படி அசிங்கமா பேச இல்லை..”
“இந்தாம்மா….” என அனுசுயா பொறுக்காமல் பேச,
“அட நிறுத்துங்கம்மா. உங்க பொண்ணு கோவில்ன்னு கூட பார்க்காம அசிங்கமா பேசுது. தப்பு யார் பக்கம் இருந்தாலும் நாகரீகமா பேசனும்னு சொல்ல தெரியாதா உங்களுக்கு? இதுல என்னை பேச வந்துட்டீங்க….” என அவரின் மூக்கை உதைத்தவள்,
“நான் வேண்டாம்னு விலகினது விலகினது தான். நான் நினைச்சிருந்தா நீ இப்படி என்கிட்டே பேசிருந்திருக்க முடியாது. உனக்கு அட்வைஸ் பன்ற அளவுக்கு எனக்கு நேரமில்லை. நீ எப்படியும் இருந்துட்டு போ. என்னை ஏன் குடையுற? உன் பிள்ளையை அடிச்ச. நான் ஏதாவது கேட்டேனா? என்னை ஏன் பேசின?…” என சொல்லி,
“என் வரை நீ வராதவரைக்கும் நானும் வாயை திறக்கமாட்டேன். வந்த அவ்வளோ தான்…” என்றவள் ஒருவரையும் மீண்டும் காணாமல் அங்கிருந்து பூஜை கூடையை தூக்கிக்கொண்டு சென்றவள் ஒரு பெருமூச்சுடன் மீண்டும் சன்னிதி பக்கம் வந்தாள்.
“பூஜை பண்ணி குடுங்க மாமா…” என அக்கோவில் பூசாரியிடம் கூடையை நீட்ட அவரும் நடந்ததை எல்லாம் பார்த்துக்கொண்டு தானே நின்றார்.
“என்னம்மா தேவகி இதெல்லாம்?…” என அவருக்கே மனதுக்கு தாங்கவில்லை.
“கோவிலுக்கு வந்துட்டு சாமி கும்பிடாம போக கூடாது மாமா. நீங்க தேங்காயை உடைச்சுட்டு பூஜையை பண்ணுங்க…” என்றவள் கை கூப்பி நிற்க சங்கரின் கையில் இருந்த குழந்தை இறங்கி குடுகுடுவென ஓடியது.
மனமுருகி இறைவனிடம் வேண்டிக்கொண்டிருந்தவள் தாவணியை பிடித்து லேசாய் இழுக்க கண் திறந்து அவனை தேவகி பார்த்தும் ஒன்றும் பேசாமல் நிற்க,
“சண்ட போடாதீங்க…” என்று கையை ஆட்டி சொல்ல அவனின் உயரத்திகு குனிந்து அமர்ந்தாள்.
“யாரோட சண்டை போட்டேன்?…” என கேட்க,
“மம்மி கூட…”
“இல்லையே…” என்று சொல்லும் பொழுதே ஆரத்தி தட்டும் பூஜை கூடையும் வந்துவிட அதை வாங்கியவள் குழந்தைக்கும் நெற்றியில் பிரசாதத்தை பூசிவிட்டவள்,
“நான் கிளம்பறேன்…” என அவனின் கன்னம் தட்டி சொல்லி செல்ல ஆதவ் அவளை பார்த்தபடியே நின்றான்.
இதை எல்லாம் ஜீரணிக்க முடியாதவள் கோவிலில் இருந்து வீட்டிற்கு கிளம்பிவிட சித்ரா தான் பூஜை முடித்துவிட்டு செல்லலாம் என்று சொல்லவும் மனமே இல்லாமல் சாமி கும்பிட்டனர்.
அடுத்த சிலமணி நேரத்தில் நீலகண்டன் வீட்டில் அனைவரும் முக இறுக்கத்துடன் அமர்ந்திருக்க இதை எல்லாம் ஒரு பொருட்டாக நினைக்காதா அபர்னிதா தன் போக்கில் வார்த்தைகளால் தேவகியை வகுந்துகொண்டு இருந்தாள்.
ஆனால் இதில் அதிகமாக பயந்து போய் இருந்தது அனுசுயா மட்டும் தான். கண்களில் அப்படி ஒரு மிரட்சியுடன் எச்சிலை கூட்டி விழுங்கியபடி மகளை பார்த்தபடி இருந்தவருக்கு வியர்வை பெருகியது.