பூ – 15
கோவிலில் இப்படி பிரச்சனை ஆனதும் பூஜை முடிந்து சித்ராவின் வீட்டிற்கு வந்தவர்கள் வந்த சில நிமிடங்கள் கூட அங்கே இருக்கவில்லை. உடனே கிளம்பினர்.
“ஒன்னும் சாப்பிடாமலா போவீங்க? பத்து நிமிசத்துல சாப்புட்டுட்டு கிளம்பறது தான? சங்கரு சித்தி சொல்லுதத கேளுப்பா…” என சித்ரா சொல்ல,
“சித்தி ப்ளீஸ். சாப்பிட்டு போற அளவுக்கு பொறுமையும் இல்லை. எனக்கு மனநிலையும் இல்லை. கிளம்பறேன்…” என்றவன் மகனோடு வெளியேறிவிட்டான்.
கோவிலில் தூக்கிக்கொண்ட குழந்தையை அவன் இறக்கவே இல்லை. வீட்டிற்கு வந்து அனுசுயா மகளிடம் பேசும் முன்பே,
“இங்க வச்சு இன்னும் அசிங்கப்பட வேண்டாம். விட்டா இவ அந்த பொண்ணு வீட்டுக்கே போய் பேசுவா…” என்று அவரையும் சொல்லி நிறுத்த எதையும் கண்டுகொண்டாள் இல்லை அபர்னிதா.
அத்தனை அலட்சியம் அவளின் கண்களில் சங்கரை பார்க்கும் பொழுது. அதே போல எந்த விளக்கமும் சொல்லாமல் திண்ணக்கமாக அமர்ந்திருக்க,
“ஏன் அபி இப்படி பன்ற நீ?…” என பத்மநாபன் கேட்க,
“நாளைக்கு ஷ்ரவன் இப்படி இருந்து வாசு உங்ககிட்ட இப்படி வந்து சொன்னா தெரியும் ஏன் என்னன்னு. நான் பார்த்து கட்டி வச்சதால உங்க மகளுக்கு இந்த வாழ்க்கை. புரியுதா? இந்த கேள்வி கேட்கற வேலை என்கிட்டே வச்சுக்காதீங்க…” என்று எகத்தாளம் பேச,
“அபி…” என கத்திவிட்டார் நீலகண்டன்.
“எல்லாரும் என்னையே ஏன் சொல்றீங்க?…” என்று மீண்டும் அபர்னிதா சூடாக,
“இங்க வேண்டாம். கிளம்புவோம்…” என்ற அமலா சித்ராவின் கைகளை பிடித்துக்கொண்டு,
“மன்னிச்சிடுங்க அண்ணி. அபிக்காக நாங்க மன்னிப்பு கேட்டுக்கறோம்…” என்று சொல்லவும் அதை பார்த்துக்கொண்டு நின்ற அனுசுயா சித்ராவை நெருங்க போக,
“என்ன நீயும் மன்னிப்பு கேட்க போறியா மம்மி? வா போகலாம்…” என அவரை இழுத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேற,
“முதல்ல என்னன்னு பேசி முடிவு பண்ணுங்க. சரிபண்ண பாருங்க…” என பத்மநாபன் தன்மையாக நீலகண்டனிடம் சொல்லி அனுப்பிவைக்க அவர்கள் கிளம்பி வந்தனர் கோவைக்கு.
அவர்கள் வரும் நேரம் ஷ்ரவன் வீட்டிற்கு வந்துவிட்டான் வாசமல்லியுடன். வந்தவர்கள் ஒருவரின் முகமும் சுரத்தின்றி இறுக்கமாக தெரிய,
“என்னடா கல்யாணம் முடிஞ்சதும் கிளம்பி வந்தாச்சா?…” என சாதாரணமாக கேட்டபடி அபர்னிதா அவனை தாண்டிக்கொண்டு சென்றவள்,
“வாசு குடிக்க ஏதாவது தா. தாகமா இருக்குது…” என்று சொல்லிவிட்டு சோபாவில் சென்று அமர்ந்துகொண்டாள் சட்டமாக.
“அபி…” என அனுசுயா சத்தம் போட,
“ம்மா, ட்ராவல் பண்ணிட்டு வந்தது டயர்டா இருக்குது…” என்றாள்.
“வாசுவும் இப்போ தான் வந்தா. அவளுக்கும் டயர்டா தான இருக்கும்…” என்றான் ஷ்ரவனும்.
“எப்படி இருக்க ஷ்ரவா?…” என அனுசுயா பார்த்து கேட்டதும் தான் அவரிடம் இன்னும் பேசாமல் இருப்பதை எண்ணி இரு விரலால் தலையில் தட்டிக்கொண்டவன்,
“வந்ததும் பேசனும்னு இருந்தேன்ம்மா. பாருங்க இப்பவும் இவ பன்றதை…” என அவரிடம் அவன் சொல்ல,
“உங்க சண்டை இன்னைக்கு நேத்தா நடக்குது? சரி விடு. உன் வொய்ப்க்கு நான் யார்ன்னு சொல்லமாட்டியா?…” என்று சூழ்நிலையை இலகுவாக்க அவர் சிரித்தபடி பேச அதற்குள் ப்ரிட்ஜில் இருந்த கூல்ட்ரிங்கை ஊற்றிக்கொண்டு வந்தாள் வாசு.
“அதான் வீடியோ கால்ல பேசினீங்களே?…” என சொல்லிவிட்டு மனைவியிடம் பார்த்து,
“இவங்க தான் அபி அம்மா. போட்டோல காமிச்சேன் தானே?…” என்றதும்,
“அத்தைய எனக்கு தெரியுமே. ஏற்கனவே அண்ணே கல்யாணம் அப்போ வீட்டுக்கு வந்திருக்காங்க தானே?…” என்று சொல்ல,
“அதை மறந்துட்டேன் பாரு…” என்று சிரித்தபடி அவருக்கு ஒரு தம்ளர் எடுத்துக்கொடுத்து தனக்கும் எடுத்துக்கொண்டான்.
பின் அமலா, சங்கரிடம் தந்தவள் ஆதவ் சங்கரின் மடியில் உறங்குவதை பார்த்துவிட்டு அபர்னிதாவிடம் சென்றாள்.
“மதினி சூஸ்…” என நீட்ட,
“ப்ச், ப்ரெஷா போடுவன்னு பார்த்தா நீ என்ன இப்படி பன்ற?…” என நொட்டை சொல்லியபடி எடுத்துக்கொண்டவள் டிவியை போட்டுவிட்டு பார்க்க ஆரம்பித்தாள்.
“உட்காரும்மா நீ. வச்சுட்டே நிக்கற?…” என சங்கர் சொல்ல,
“மாமாவுக்கு டீ போடலாம்னு பால் வச்சிருக்கேன். அவங்களுக்கு சில்லுன்னு குடுத்தா ஒத்துக்காதுல…” என்று சொல்லி உள்ளே செல்ல ஷ்ரவன் அமலாவின் முகம் பார்த்தான்.
வந்ததில் இருந்து தாய் தந்தையும் எதுவும் பேசாமல் இருக்க சங்கரும் அமைதியாக இருக்க அனுசுயா என்னதான் பேசினாலும் எதையோ மறைக்கும் பாவனை அவரின் முகத்தில் தெரிய, பயந்துகொண்டிருக்கிறார் என்பதை கண்டுகொண்டான் அவன்.
“அனும்மா, ஓகே தானே நீங்க?…” என கேட்க அவருக்கு என்னவோ போல் இருந்தது.
“இல்லை நான் நார்மலா தான் இருக்கேன். ஒண்ணுமில்லையே. என்ன ஓகேன்னு கேட்கற?…” என்றார் பதட்டமான குரலில்.
“ஷ்ரவா, லஞ்ச்க்கு சொல்லிடறியா? இன்னும் யாரும் ப்ரேக்பாஸ்ட் கூட சாப்பிடலை…” என அமலா சொல்ல,
“ஏன்?…” என்றவன் பின் ஒன்றும் சொல்லாமல் உணவுக்கு சொல்லிவிட டீயுடன் வந்தாள் வாசமல்லி. அதை வாங்கி குடித்து முடித்த நீலகண்டன்,
“சரி நான் கொஞ்சம் நேரம் படுக்கறேன். நீங்க பேசுங்க…” என எழுந்துகொள்ள,
“மாமா உட்காருங்க. பேசனும்னா எல்லாருமே பேசுவோம். அதுக்குத்தான உங்களை இருங்கன்னு சொல்றேன். இல்லைன்னா எங்க வீட்டுக்கே போயிருக்கமாட்டேனா?…” என சங்கர் சொல்லவும் அனுசுயாவை சங்கடத்துடன் பார்த்தார் நீலகண்டன்.
“அப்பா உட்காருங்க. அதான் பிரச்சனைன்னு சொல்றாங்கல்ல. கட்டி வைக்க மட்டும் தெரிஞ்சது. என்னன்னு கேட்டு சால்வ் பண்ண தெரியாதா?…” என ஷ்ரவனுக்கும் கோபம் வந்துவிட அப்படியே அமர்ந்துவிட்டார்.
“என்னாச்சு? வரும் போதே யார் முகமும் சரியில்லை…” என ஷ்ரவன் கேட்க,
“அத்தான், இப்பவே கேட்கனுமா?…” என்ற வாசமல்லி ஷ்ரவனின் ஒற்றை பார்வையில் வாயை மூடிக்கொள்ள,
“இங்க வந்து உட்கார்…” என்று அழைத்து தன்னருகே அமரவைத்துக்கொண்டான்.
“ஆதவ் அண்ணே மடிலையே தூங்கறான். நான் உள்ள படுக்க வைக்கறேன்…” என்றவள் எதிர் சோபாவில் இருந்தவனின் மடியில் இருந்தவனை தூக்க லேசாக உறக்கம் கலைந்த குழந்தை அத்தை என அவளிடம் தாவிக்கொள்ள இப்போதுதான் அவனின் கன்னத்தில் இருக்கும் கைத்தடத்தை பார்த்தாள்.
“என்னடாம்மா அடி பட்டிருக்குது? அத்தான் இங்க பாருங்க…” என ஷ்ரவனிடம் காண்பிக்க,
“என்னாச்சு? யார் அடிச்சது குழந்தையை?…” என்று அனைவரையும் பார்த்தவன் பார்வை அபியிடம் வந்து நிலைக்க,
“நான் தான். என்ன இப்போ? சொன்ன பேச்சு கேட்கலைன்னா கண்டிக்க தான் செய்வேன்…” என சொல்லிய அபி,
“என்கிட்டே கொண்டா அவனை…” என்றாள்.
“நோ நோ மம்மி நோ…” என வாசுவின் கழுத்தை கட்டிக்கொண்டான் ஆதவ்.
“என்ன சொன்ன கண்டிச்சியா? உன் அம்மா உன்னை கண்டிச்சிருந்தா நீ இப்படி இருந்திருக்க மாட்ட…” என ஷ்ரவன் பட்டென்று சொல்லிவிட,
“ஷ்ரவா…” என அதட்டினார் அமலா.
“ம்மா, நீங்க பேசாம இருங்க. அவ இப்படி இருக்கறதுக்கு காரணமே நீங்க மூணுபேர் தான். எப்ப பார்த்தாலும் அப்பா இல்லாத புள்ளை புள்ளைன்னு சொல்லி சொல்லியே அவளை ரொம்ப ரூட் ஆக்கி வச்சுட்டீங்க…” என்று கத்தியவன்,
“அனும்மா, நான் சொல்றேன்னு நீங்க என்னை தப்பா நினைச்சாலும் பரவாயில்லை. ஆனா இதை சொல்லிடறது தான் எங்களுக்குமே நல்லது…” என்றவன் தனக்கு திருமணம் ஆனதில் இருந்து அபி நடந்துகொண்ட விதங்களை பற்றியும், வாசுவை நடத்துவதை பற்றியும் அவன் சொல்லிவிட கண்ணீர் மல்க பார்த்தபடி இருந்தார்.
அமலாவுக்கும், நீலகண்டனுக்கும் இது அதிர்ச்சியை தந்தது. அமலாவுக்கு ஏதோ லேசாக தெரிந்திருக்க இன்று மகனின் வாய்வார்த்தையில் எல்லாம் கேட்டவர் அபர்னிதாவை அதிர்ச்சியுடன் பார்த்தார்.
“மம்மி, இவங்க சொல்றதை எல்லாம் காதில வாங்காதீங்க. இவங்க எப்பவுமே இப்படிதான். அமலாம்மா கூட என்னை திட்டீட்டாங்க தெரியுமா? எல்லாருமே என்னை பேடா நினைக்க ஆரம்பிச்சுட்டாங்க…” என்று சொல்லி தாயின் கழுத்தை கட்டிக்கொண்டு அவரின் மடி சாய்ந்தாள்.
“ஏன்டா அபிம்மா இப்படி பன்ற? மம்மி சொல்றதை கேளு…”
“நீங்க சொல்றதை தான நான் கேட்டேன். இவங்க எல்லாரும் என்னை விட சந்தோஷமா இருக்காங்க. நீங்க தான சொன்னீங்க உனக்கு எது சந்தோஷம் தருதோ அதை தயங்காம செய்ன்னு. அதை தான் நான் செஞ்சேன். எனக்கு இது தான் சந்தோஷம்…” என்று சொல்ல இப்போது அனுசுயா வருத்தத்துடன் அனைவரையும் பார்த்தார்.
“என்ன அனு இதெல்லாம்?…” என அமலா கேட்க,
“என்ன அனுன்னா? நீங்க பேசாதீங்க அமலாம்மா. எத்தனை திட்டீட்டீங்க. உங்களுக்கு உங்க மகன் தான் முக்கியம்ன்னு சொன்னீங்கள்ள. அப்பறம் ஏன் என் மம்மியை கேட்கறீங்க?…” என்று கோபமாய் பேசியவள்,
“மம்மி, வாங்க நம்ம வீட்டுக்கு போவோம்…” என்றவள் சங்கரை பார்த்து,
“கிளம்புவோம்…” என்று சொல்ல,
“அபி உட்கார்…” என்றான் அவன்,
“அதெல்லாம் முடியாது. இப்பவே கிளம்பனும். எனக்கு இங்க இருக்கவே பிடிக்கலை…” என அவனை கட்டாயப்படுத்த,
“அபி அதான் சொல்றார்ல. உட்காரேன்…” என அனுசுயா சொல்ல,
“மம்மி உங்களுக்கு ஒன்னும் தெரியாது. நீங்க பேசாம இருங்க…” என்றவள்,
“கிளம்புங்க. எனக்கு இங்க இருக்க வேண்டாம். இவங்களோட இருந்தா நான் சந்தோஷமா இருக்கமாட்டேன். கிளம்புவோம்…” என மீண்டும் சொல்ல அவளின் முகத்தையே அவதானித்தபடி அமர்ந்திருந்த சங்கர்,
“போகலாம் அபி. இப்ப கொஞ்சமா அமைதியா உட்கார். நான் சொல்றதை இப்போவாச்சும் கேளும்மா…” என்று இறுக்கத்தை எல்லாம விட்டு கெஞ்சலில் இறங்க மற்றவர்கள் அதனை பார்த்தபடி இருந்தனர்.
“முடியாது. நான்தான் சொல்றேன்ல, பேச வேண்டாம். எதுவும் பேச வேண்டாம். போகனும் போகனும்…” என்று சொன்னதையே சொல்ல,
“அபி இங்க பாரு, இப்போவாச்சும் உன் மனசுல என்னதான் நினைக்கிறன்னு சொல்லு. என் மேல தப்புன்னா திருத்திக்க நான் தயாரா இருக்கேன். சொல்றதை கேளு அபி. நம்ம ஆதவ்க்காக நான் சொல்றதை கேளு…” என்றவன் லேசா அவளின் தோளை தொட்டு பேச,
“தொடாதடா…” என்று சட்டென கையை தட்டிவிட்டாள் அவள். அவளின் ஆக்ரோஷத்தில் அத்தனை பேரும் எழுந்துவிட,
“தொடாதன்னு சொல்லிருக்கேன்ல. உனக்கு எத்தனை தடவை சொல்றது. தொடாத. தொடாத. தொடாத…” என்று அந்த வீடே அதிரும்படி கத்தியவள் சட்டென தாயை வந்து கட்டிக்கொண்டாள்.
“மம்மி, இங்க வேண்டாம் மம்மி. நான் இங்க சந்தோஷமாவே இல்லை. என்னால என் சந்தோஷத்தை உருவாக்க முடியலை. இங்க யாரும் என் பேச்சை கேட்கறதில்லை…” என்று அழ,
“அபிம்மா, கொஞ்சம் நாள் அம்மாவோட வந்து இரேன்டா. கொஞ்சம் நாள் மட்டும். இந்த கோபம் எல்லாம் குறையவும் வரலாம்…” என்று அப்போதும் மகளை ஆதரவாய் வருடிக்கொடுக்க உடனே தாயின் கைகளில் இருந்து வெளிவந்தவள் சங்கரின் பின்னால் நின்றாள்.
“நோ, நான் வரமாட்டேன்…” என்று சொல்ல அப்போதும் தொடாமலே நிற்க,
“அபிக்கு என்ன அனும்மா? இதென்ன அப்நார்மல் பிஹேவியர். இதுவரைக்கும் நான் பார்த்ததில்லையே…” என ஷ்ரவன் கேட்க,
“என்னை பத்தி பேசாத நீ. உனக்கு இவளை கட்டி வச்சதுக்கு என்னை என்னலாம் பேசற. அவளை புடிக்கலைன்னா ஏன்டா என்கிட்டே அந்த கோவத்தை காட்டுற?…” என்று அபி பேச,
“ஷட் அப் அபி. நான் அனும்மாட்ட பேசிட்டு இருக்கேன்…”
“அவங்க என்னோட மம்மி. நீ பேசாத…”
“அதை அவங்க சொல்லட்டும்…”
“உன் அம்மாவும் தான் ஏன் என் மகன் வீட்டுக்கு போனான்னு என்னை கேட்டாங்க. உன் வீட்டுக்கு வந்ததுக்கு நீ தான சொல்லனும். ஆனா அவங்க ஏன் பேசினாங்க? அது மாதிரிதான்…” என்று பேச பேச அனுசுயாவின் அழுகை கூடியது.
“மம்மி அழாத மம்மி. போவோமா?…” என இப்போது குரல் சாதாரணமாக இருக்க,
“ஏன்டி ஏன்டி உன் வாழ்க்கையை நீயே கெடுத்துக்கற?…” என்றவரின் கண்ணீரை துடைத்தபடி,
“இல்லையே. என் வாழ்க்கையை எங்க கெடுத்தேன்? இல்லவே இல்லை. மம்மி, உனக்கு தெரியாதுல இவரை நான் எவ்வளோ விரும்பினேன்னு. ஆனா கல்யாணம் முடிவு பண்ணதும் என்ன பண்ணாருன்னு தெரியுமா? என்கிட்டே போன்ல பேசறாரு ஏற்கனவே ஒரு பொண்ணை விரும்பறதா. எனக்கு செம்ம கோவம்…”
“ஆனாலும் ஒண்ணுமே காட்டிக்கலை நான். இவங்க அம்மா தான் தேவகியை கட்டிக்க கூடாதுன்னு என்னை கல்யாணம் பண்ண வச்சாங்கன்னு சொன்னாரு. தேவகி வீட்டுல தான் பொண்ணு கேட்டதுக்கு அவங்க குடுக்கலையாம். அதனால என்கூட கல்யாணத்துக்கு சரின்னு சொல்லிட்டாரு போல…”
“அபி ப்ளீஸ், உனக்கு இதுக்கு ஆயிரம் விளக்கம் குடுத்துட்டேன். உன்கிட்ட எதையும் மறைக்க கூடாதுன்னு தான் சொன்னேன். அதுவும் நீ என்கிட்டே கேட்டுக்கிட்டதால…” என ஆயாசத்துடன் சங்கர் சொல்ல,
“வாசு, ஆதவ்வை கூட்டிட்டு போய் படுக்க வை…” என்று அவளை உள்ளே அனுப்பினான் ஷ்ரவன்.
“இப்ப என பிரச்சனை அபி? ஏன் சம்பந்தமில்லாம இங்க இல்லாதவங்களை பத்தி பேசற?…” என்று கேட்டான் ஷ்ரவன்.