“எங்க இல்லை அவ? இங்க தான் இங்க இவருக்குள்ள தான் இப்பவும் இருக்கா…” என்று அவனிடம் கத்தியவள்,
“இவனோட நான் பேசமாட்டேன். யாரோடையும் பேசமாட்டேன். மம்மி நீ மட்டும் கேளு. கேட்பியா?…” என்றதும் கண்ணீருடன் தலையசைத்தார்.
“உட்காரு. கால் வலிக்கும்ல உனக்கு. உட்காரு…” என தாயை அமர செய்து அவரின் காலடியில் அமர்ந்துகொண்டாள்.
“தெரியட்டும் இவர் லட்சணம் என்னன்னு எல்லாருக்கும்…” என்றவள் சங்கரை பழி வெறியுடன் திரும்பி பார்த்தாள்.
“எனக்கு கூட கல்யாணம் வேண்டாம்னு தோணுச்சு. ஆனா இவரை பிடிச்சதே. அதான் கல்யாணம் பண்ணி சந்தோஷமா இருப்போம்ன்னு ஓகே சொல்லிட்டேன். என்கிட்டே அப்படி சொல்லிட்டு கல்யாணம் பண்ணவும் அப்படியே அபி அபின்னு வராரு. எனக்கு ஒரே யோசனை. லவ் பண்ணின பொண்ணை விட்டுட்டு தாலி கட்டினதும் என் மேல எவ்வளவு பாசமா இருக்காருன்னு நினச்சுட்டே இருந்தேன்…”
“பாருங்க, ஒரு வாரம் கூட என்னால சேர்ந்து இருக்க முடியல அவரோட. சகிச்சு இருக்கற மாதிரி இருந்துச்சு மம்மி. எனக்கு சந்தோஷமே இல்லை. அப்பறம் எப்படி சேர்ந்து இருக்க? அதான் அப்பவே என்னை தொடாதன்னு சொல்லிட்டேன்…” என்று சொல்லவும் அத்தனை பேருக்கும் திக்கென்று ஆனது.
“அபி…” என்ற சங்கரின் குரலை அலட்சியப்படுத்த சபையில் தன்னுடைய அந்தரங்கம் கடைவிரிக்கப்பட துடிதுடித்து போனான் அவன்.
தான் பேச வந்தது என்ன? இவள் பேசிக்கொண்டிருப்பது என்ன? என நினைத்து நினைத்து மருகியவன் கண்கள் கலங்க ஷ்ரவன் சென்று சங்கரருகே அமர்ந்துகொண்டான் ஆதரவாய்.
எந்த ஆணுக்கும் இப்படி ஒரு நிலை வரவே கூடாதென நினைத்தபடி அவனின் கைகளை பிடித்துக்கொண்டான்.
“அபிம்மா, போதுன்டா. அம்மா சொல்றதை…”
“அப்ப நீ கூட என் பேச்சை கேட்க மாட்டியா மம்மி?…” என்றவள்,
“இவர் எப்படி மம்மி உடனே மாறினாரு? இன்னும் அவளை நினைக்கறீங்கலான்னு கேட்டா இல்லைன்னு சாதிக்கிறார். என்னைத்தான் புடிக்கும்னு போய் சொல்றார் மம்மி. என்னால நம்ப முடியல. அதை நினைச்சு நினைச்சு டென்ஷன் ஆகுது. திடீர்ன்னு தூங்காம ராத்திரில உட்கார்ந்திருக்கார். அப்ப அவளை நினைச்சு தான?…”
இப்படி அபர்னிதா தனது குடும்பம் பற்றிய மொத்தத்தையும் சொல்லிகொண்டே இருந்தவள் ஒருகட்டத்தில் சோர்வாகி அப்படியே படுத்துவிட்டாள். மகளின் தலையை வருடியபடி அனுசுயா அழுகையுடன் அமர்ந்திருந்தவர் அவள் தூங்கியதும் கீழே இறங்கி அமர்ந்து நன்றாக படுக்கவைக்க,
“அத்தான் உள்ள தூக்கிட்டு போங்க…” என்றான் ஷ்ரவன் சங்கரிடம்.
“இல்ல, வேண்டாம் ஷ்ரவா. தூக்கிட்டு போகும் போது முழிச்சுட்டா பிரச்சனை பெருசாகிடும். இப்படியே இருக்கட்டும்…” என்று சொல்லியவரின் முகம் களையிழந்து அனைத்தும் முடிந்துவிட்டதை போல ஒரு தோற்றம்.
“இப்போவாச்சும் சொல்லுங்க. அவ ஏன் சம்பந்தமே இல்லாம பேசறா. இன்னைக்கு தான் இந்த சேஞ்சை நாங்க பார்க்கறோம். என்ன அனும்மா இதெல்லாம்?…” என்ற ஷ்ரவனை தாண்டி சங்கரை பார்த்தவர்,
“என்னை மன்னிச்சிருங்க தம்பி…” என்று கை கூப்பி கும்பிட கல்லென சமைந்துதான் இருந்தான் அவன். எந்த உணர்வையும் பிரதிபலிக்காமல் அவன் அமர்ந்திருந்த விதமே எத்தனை போராட்டத்தை தாங்கிக்கொண்டு இருந்திருப்பான் என்று புரியவைத்தது.
சென்னையை சேர்ந்த அனுசுயாவை ஹரியானாவில் இருந்த தமிழ் குடும்பத்தில் திருமணம் செய்துவைக்க மணவாழ்க்கை எந்த தடைகளும் இன்றி எட்டு வருடம் சிறப்பாகவே சென்றது.
ஏழு வயது மகள் அபர்னிதாவுடன் சந்தோஷமாக வாழ்ந்துகொண்டிருக்க திடீரென ஏற்பட்ட மாரடைப்பினால் தந்தையை இழந்தாள் அவள். எதிர்பாராத அதிர்ச்சியில் சில நாட்கள் இருந்தாலும் மகளை கவனிக்கமுடியாத நிலைமையில் இருந்த அனுசுயா மீண்டு வந்து மகளை தாங்கிக்கொண்டார்.
கார் கம்பெனியில் வேலை பார்த்துக்கொண்டு இருந்தவர் அங்கேயே மரணித்திருக்க அனுசுயாவும் நன்கு படித்திருந்ததால் அந்த வேலையில் மனிதாபிமான அடிப்படையில் அமர்ந்தார்.
அதுவரை சலுகையுடன் வளர்ந்து வந்த குழந்தையின் நடவடிக்கையில் தந்தையின் இழப்பு பெரும் பாதிப்பை உண்டுபண்ணியிருக்க மற்றவர்களின் அனுதாப பார்வை தந்தையை இழந்தவள் என்ற பேச்சுக்கள் புரிந்தும் புரியாத நிலை.
சின்ன சின்ன விஷயங்களுக்கும் தந்தையை எண்ணி ஏங்க ஆரம்பிக்க மகளை அதிலிருந்து வெளிக்கொண்டுவர முடியாமல் திணறிப்போனார் அனுசுயா.
சென்னைக்கு வந்துவிடுமாறு குடும்பத்தினர் எத்தனை அழைத்தும் செல்லமுடியாதென்று மறுத்துவிட்டார்.
காரணம் பெரிய பதவியில் கணவன் கிடைத்ததும் சொந்தங்களுக்கு மத்தியில் தான் தான் உசத்தி என்ற இறுமாப்புடன் வளைய வந்தவர் இன்று இப்படி நிர்கதியாக அவர்கள் முன்னால் வாழகூடாதென்ற வைராக்கியத்தில் மறுத்துவிட்டார்.
அனைத்திற்கும் அழுது அடம் பிடிக்க ஆரம்பித்த அபி தந்தையின் படத்தை வைத்துக்கொண்டு அதில் கவனத்தை செலுத்த பெண்ணின் எதிர்காலத்தை குறித்த பயம் அவருக்கு அதிகமாகியது. அதிலும் சில நிகழ்வுகளின் விவரங்கள் அபியின் வார்த்தைகளில் ஒரு பெண்ணின் தாயாய் பயத்தை ஏற்படுத்தியது.
இருக்கும் பகுதியை விட்டு வேறு ஒரு பகுதிக்கு இடம் பெயர்ந்தார் அனுசுயா. அது தான் நீலகண்டன் இருக்கும் வீட்டின் சற்று அருகிலேயே.
புதிதாக சென்று இருந்ததால் அபியை அங்குள்ள குழந்தைகள் அத்தனை எளிதாக சேர்த்துக்கொள்ளவில்லை. அங்கு வைத்து தான் அவர்கள் குடும்பத்துடன் பழக்கம் நல்ல ஏற்பட்டது.
தமிழ்நாட்டை சேர்ந்த பெண் என்பதாலேயே அமலாவும் நீலகண்டனும் நெருங்கி பழக குடும்பமாய் ஒன்றாகினார்கள். தனியாய் கணவனை இழந்து இருக்கும் பெண் என்று இன்னும் கூடுதல் ஒட்டுதல் காட்ட அபியின் மேலும் தனி பாசம் அவர்களுக்கு.
ஷ்ரவனுடன் அபியும் சேர்ந்து விளையாட செல்ல ஆரம்பித்தாள். செல்லும் இடத்தில் சிறு குழந்தைகள் மத்தியில் சிறு சிறு சண்டைகள் வர அதை தாங்கமுடியாமல் அழுதுகொண்டே அனுவிடம் வருவாள் அபி.
“அபி இங்க பாரு, இப்படி எல்லாத்துக்கும் அழுதுட்டு இருக்க கூடாது. போல்டா இருக்கனும்…”
“எனக்கு டாடி வேணும்…” என எதை பேசினாலும் அதையே சொல்ல எப்பவும் கண்டித்து பழகி இராதவருக்கு கஷ்டமாக போனது மகளை சமாளிப்பது.
“அப்பாவை பத்தியே நினைக்கிறதை விட உன்னோட ஹேப்பினஸ் எப்படி இருக்குன்னு யோசி அபி…” என்றவர் அவளை சுற்றி உள்ள குழந்தைகளின் முகத்தில் மிளிர்ந்த அந்த சிரிப்பை சுட்டி காட்டியவர்,
“அவங்கல்லாம் எவ்வளவு சந்தோஷமா இருக்காங்க. அது மாதிரி நீயும் எப்பவும் சந்தோஷமா இருக்கனும். உனக்கு மம்மி இருக்கேன்டா…” என்று தேற்ற மற்ற குழந்தைகளோடு சேர்ந்து விளையாடிவிட்டு அங்கும் பிரச்சனை என்று வந்து நின்ற குழந்தையிடம்,
“உன்னோட சந்தோஷத்தை நீ தான் பில்ட் பண்ணனும். அவங்க சேர்க்கலை, இவங்களுக்கு நம்மை பிடிக்கலைன்னு என்ன இது அபி பேச்சு. அபியால எதுவும் முடியும். சின்ன விஷயத்துக்கு எல்லாம் துவண்டு போக கூடாது அபிம்மா…”
“அவங்க யாருக்கும் என்னை புடிக்கலை. என்னை கீழே தள்ளி விடறாங்க…” என சொல்ல,
“இல்ல அனும்மா, அபி பொய். அவ தான் தள்ளி விட்டா. எல்லாரையும் அடிக்கிறா. யாராச்சும் சிரிச்சு விளையாண்டா வேணும்னுட்டே பன்றா. நீங்க சொல்லுங்க அனும்மா…” என ஷ்ரவன் அவளை பற்றி சொல்ல அவனை முறைப்பாள் அபி. ஆனால் அனு அதை எல்லாம் பெரிதுபடுத்தாமல்,
“இப்போ என்ன? அந்த பொண்ணு பண்ணினது அபிக்கு பிடிக்கலை. அதான் அடிச்சிருப்பா. அதனால ஒண்ணுமில்லை…” என்று ஷ்ரவனிடம் சொல்லிவிட்டு,
“என்னடா அபி? மம்மி சொல்றது சரிதானே?…” என கேட்டு மகள் செய்யும் எந்த தவறும் திருத்தப்படாமலே போக சந்தோஷம், சுயநலம், பிடிவாதம் என்று ஒட்டுமொத்த உருவமாக மாறிக்கொண்டு இருந்தாள் அபர்னிதா.
ஷ்ரவன் தன் வீட்டில் சொன்னாலும் பெரிதாய் எந்த மாற்றமும் இல்லை. அவர்களும் தந்தை இல்லை ஏங்கிவிடுவாள் என்றே சொல்லி அபியை தாங்க அவளுக்கு ஷ்ரவனை விட தன்னை தான் அனைவருக்கும் பிடிக்கும் என்னும் எண்ணம் வேரூன்ற ஆரம்பித்தது.
தனக்கு போட்டியாக ஷ்ரவனை நினைக்க ஆரம்பித்தவள் வேண்டுமென்றே அவனிடம் வம்பிழுத்து அதற்கும் அமலாவிடம் திட்டுவாங்கி கொடுக்க முயல இப்படி எந்த செயல்களுக்கும் வீட்டினர் செவி சாய்க்காமல் போக அபர்னிதா நிலை இன்னும் மோசமானது.
பெரிய பெண்ணாகி இருக்கும் நேரத்தில் ஏற்பட்ட உடல்நிலை மாற்றங்கள் வேறு அவளால் தாங்க முடியாததாக இருக்க அந்த நேரத்தில் பத்துநாள் சுற்றுலாவிற்கு சென்றிருந்தனர் ஷ்ரவனின் குடும்பத்தினர்.
தன்னையும் அனுப்பு என்று வீட்டையே இரண்டாக்கினாள் அபர்னிதா. அன்று தான் மகளிடம் வேறு ஒரு அணுகுமுறையை கண்டார் அனு. பயந்து போய் டாக்டரிடம் காட்ட அவர் அடுத்ததாய் அதிர்சசியை இறக்கினார்.
“மெண்டலி உங்க பொண்ணு ரொம்ப டிஸ்டர்ப்ட். சில நேரங்கள்ல ஹைப்பர் ஆகும் போது என்ன பன்றாங்கன்னு அவங்களுக்கே தெரியாம போகும். மாத்திரைகளால குணப்படுத்த கூடிய விதம் தான்….” என்று சொல்லி அனுவுக்கு சற்றே நிம்மதியை தந்து அனுப்ப அடுத்த தவறையும் அனு செய்தார்.
கணவனை இழந்து இப்போதுதான் ஒரு நல்ல நிலையில் இருக்க மகளுக்கு இப்படி ஒரு சோதனையா? இது வெளியே தெரிந்தால் மகளின் எதிர்காலம் என்னாவது? என பயந்து போனார்.
அதிலும் குணப்படுத்திவிடலாம் என்ற நம்பிக்கையில் ‘குணமாகக்கூடிய ஒன்றை ஏன் வெளியில் சொல்ல வேண்டும்?’ என்று முடிவெடுத்தவர் அந்த ரகசியத்தை அப்படியே மறைத்துவிட முடிவெடுத்தார்.
“அபிம்மா, நாம ஹாஸ்பிட்டலுக்கு வந்ததை பத்தி அமலாம்மாட்ட ஷ்ரவன்ட்ட எல்லாம் சொல்ல கூடாது புரியுதா?…”
“ஏன் மம்மி?…” என விளக்கம் கேட்ட அபியிடம்,
“இப்ப நீ பெரிய பொண்ணாகிட்டன்னு தான ஷ்ரவன் வீட்டுல உன்னையும் உனக்கு துணையா இருக்கட்டும்னு என்னையும் விட்டுட்டு போனாங்க ட்ரிப்க்கு. இப்ப இது தெரிஞ்சா எப்பவும் இங்க வரமாட்டாங்க. நாம வீட்டுக்குள்ளையே தான் இருக்கனும்…”
அனு சொல்ல சொல்ல அபி அப்படியே அதை எல்லாம் உள்வாங்கிக்கொண்டாள் எதிர்மறையாக.
“அப்போ நம்மளை செப்ரைட் பண்ணுவாங்களா?…” என்று கோபமாக அவள் கேட்க,
“ஆமாடா அபி. மம்மியும், அபியும் பாவம் இல்ல. எனக்கு அபி சந்தோஷம் தான் முக்கியம். அதனால இதை மறைக்கலாம் தப்பில்ல. நமக்கு எது நல்லதோ அதை செய்யலாம்டா…” என்று சொல்லி சொல்லி மகளை வேறு திசைக்கு அவரே பயணிக்க வைத்தார்.
அது அவளின் வாழ்வை மட்டுமல்ல மூன்று குடும்பங்களின் எதிர்காலத்தையே ஆட்டிப்படைக்க ஆரம்பித்தது. இந்த விஷயம் தெரிந்ததில் இருந்து இன்னும் தன் குடும்பத்தை விட்டு விலகினார் அனுசுயா.
எத்தனை தான் குடும்பத்தினர் தேடி தேடி வர என்று அவர்களுக்கும் சலித்துவிட வைராக்கியம், பயம், வறட்டு பிடிவாதம் என்று மகளின் எதிர்காலத்தையும் சேர்த்தே பலியிட்டார் அவர்.
அபியை போல இல்லாத ஷ்ரவன் ஒரு சகோதரிக்கான பாசத்தோடு அவளிடம் பழக அவளுக்கு சங்கரை பிடித்திருக்கிறது என்பதை அறிந்து தான் நீலகண்டனிடம் சொல்லியது.
திருமணம் பற்றி அனுசுயாவிடம் நீலகண்டன் பேச அவரி எண்ணம் ஒன்றே ஓன்று தான். நீலகண்டன் மேற்பார்வையில் அவரின் பொறுப்பில் இத்திருமணம் நடந்தால் பின்னால் எந்த பிரச்சனையாக இருந்தாலும் அபியின் மீதான அன்பில் அவர்கள் அவளுக்கு துணையாக நிற்பார்கள் என்ற நம்பிக்கையில் உடனே சம்மதித்தார்.
ஆனால் மகளின் திருமண வாழ்க்கை இப்படி ஆகியிருக்கும் என்று அவர் நினைக்கவே இல்லை. அதிலும் தானே மறந்து போயிருந்த அவளின் மூர்க்க குணத்தின் உச்சத்தை இன்று பார்த்துவிட்டாரே.
“எல்லாரும் என்னை மன்னிச்சிருங்க. என்னோட சுயநலம். அதுக்கு என் பொண்ணை தண்டிச்சிறாதீங்க. அவ என்ன பன்றோம்னு தெரியாமலே பண்ணிட்டு இருக்கா. புரியவைக்கறேன் நான்…” என்று சங்கரை நோக்கி கை கூப்ப அவன் இன்னும் மீளமுடியாத அளவிற்கு ஸ்தம்பித்து போயிருந்தான்.
“இதுக்குத்தான் படிச்சு படிச்சு சொன்னேன். காதுல வாங்கினீங்களா? அவ சரியில்ல. சின்ன விஷயத்துக்கு கூட ஹைப்பர் ஆகறா. விளையாட்டை எல்லாம் சீரியஸா எடுத்துக்கறா. ரொம்ப தப்பா இருக்குன்னு சொன்னேன்ல…” என்ற கத்தியவன் பார்வை அங்கே ஓரமாய் நின்று இதை எல்லாம் கேட்டுக்கொண்டு இருந்த வாசமல்லியிடம் சென்றது.
வேகமாய் சென்று அவளை இழுத்துக்கொண்டு வந்து அனுசுயாவின் முன்னால் நிறுத்தியவன்,
“இவளை என்ன பேசி எனக்கு கல்யாணம் செஞ்சு வச்சான்னு தெரியுமா? அது ஏன்னு உங்களுக்கு தெரியுமா?…” என ஆக்ரோஷமாக கேட்க,
“ஷ்ரவா…”
“பதில் சொல்லுங்க, இதுவே நான் நல்லவனா இல்லாம ஒரு பொறுக்கியாவோ, கொடுமைக்காரனாவோ இருந்திருந்தா இவ நிலைமை என்ன? அத்தனை சுயநலமா உங்க பொண்ணுக்கு?…” என்று கொதித்து போய் அவன் பேச,
“ஷ்ரவா அமைதியா இருப்பா. அனு பாவம்…” என அமலா சொல்லவும் அவரை தீயாய் முறைத்தான்.
“வாயை மூடுங்க நீங்க. பாவம், பாவம்ன்னு இப்ப எத்தனை பேருக்கு இப்ப கஷ்டம்…” என்றவன் சங்கரை நெருங்கி,
“இவர் என்னம்மா தப்பு பண்ணினார்? இவருக்கு செஞ்சது துரோகம் இல்லையா? இவருன்னு இல்லை இவர் இடத்துல யாரா இருந்தாலும் அது துரோகம் தானே? ஏன் அபியை சரி பண்ணியோ, இல்லை இவங்க வீட்டுல உண்மையை சொல்லியோ கல்யாணம் செஞ்சிருக்கலாமே…” என்றவன்,
“கேட்டேங்க தானே? நீங்க பார்த்துப்பீங்கலாம். நாளைக்கு சங்கரத்தான் அம்மாவும், அப்பாவும் வந்து கேள்வி கேட்பாங்க. அப்பவும் இப்படி சொல்லுங்க…” என்றவனுக்கு பொறுக்கவே முடியவில்லை.
“ஷ்ரவா அதான் மன்னிப்பு கேட்டேனே. என் பொண்ணு பாவம்ப்பா. அவ தெரிஞ்சு எதுவும் செய்யலை…” என அனு சொல்ல,
“இன்னுமா உங்க பொண்ணு பாவம்…” என்று கோபத்தை அடக்கி ஒரு நொடி நிதானித்து,
“சரி கேட்டாச்சு. இப்ப இதுக்கு ஒரு முடிவு என்னன்னு நீங்களே சொல்லுங்க. அதான் சொன்னாலே ஒரு வாரம் தான் வாழ்ந்தோம்ன்னு. கல்யாணம் பண்ணிட்டு இவரோட வாலாம இருந்திருக்கா அபி. அப்போ தெரியாமலா எல்லாம் பண்ணினா?…” என்று சங்கர் கேட்கவேண்டியதை எல்லாம் அவன் பொரிந்து தள்ள அனுசுயா தலை குனிந்து அமர்ந்திருந்தார்.
“கூடவே பழகி இப்படி ஏமாத்தியிருக்கீங்களே. உங்க மேல எத்தனை மரியாதை வச்சிருந்தேன்…” என்றவனுக்கு தாளமுடியவில்லை.
அடுத்து என்ன என்று யோசிக்க கூட முடியாமல் எல்லோருமே ஸ்தம்பித்து நிற்க சிறிது நேரத்தில் கண் விழித்தாள் அபர்னிதா.