“காட்டுக்குள்ளையா இருக்க பயப்பட? நான் தான வண்டியை ஓட்டறேன். பின்னாடி சீட்டுல பிள்ளையோட உட்கார எல்லாம் பயந்தா பொழைப்பு ஓடின மாதிரி தான்…” என்றதும் மௌனமாக இருந்தவள்,
“நான் ஒன்னு சொன்னா என்னை தப்பான பொண்ணுன்னு நினைப்பீங்களா அத்தான்?…” என கேட்க அவளின் குரலே உடைந்து என்னவோ போல் இருந்தது அவனுக்கு.
“வாசு என்னாச்சு? ஏன் அழற மாதிரி பேசற?…” என கேட்டவனின் கவனம் வெகு கவனமாய் சாலையில் தான் இருந்தது.
“நான், நம்ம கல்யாணம். அதை பத்தி…” என்றவளுக்கு பேச்சு திணற தான் சொல்ல போகும் விஷயம் தெரிந்து தன்னை என்னவென்று நினைப்பானோ என பயந்து போய் இருந்தாள்.
திருமணமே ஆகியிருந்தாலும் பிடித்திருக்கிறது என்று சொல்லியதற்கே தன்னிடம் காய்ந்தவன் இதை சொன்னால் ஒருவேளை தவறாக நினைத்தால்? இப்படி பல்வேறு சிந்தனைகள் அவளை அலைகழிக்க ஒருமாதிரி படபடப்பாய் உணர்ந்தாள்.
“வாசு எதுவா இருந்தாலும் சொல்லிரு. எனக்கு டென்ஷன் ஆகுது. என்னம்மா?…” என்றான் ஒரு கையால் அவளின் தலையை வருடி.
“ஐயோ கையை போடுங்க. கையை போடுங்க…” என்று அவனின் கையை தட்டிவிட அவளின் படபடப்பில் அத்தனை டென்ஷனும் மறந்து சிரிப்புடன் ஸ்டியரிங்கை பிடித்தான்.
“இப்ப நீ சொல்லலைன்னா கையை எடுத்துடுவேன்…” என்று விளையாட்டுக்கு பயம் காண்பிக்க,
“சொல்லுவேன். இன்னைக்கு சொல்லிருவேன்…” என்றவள் அவனை திரும்பி பார்க்கவே இல்லை.
“உங்களை எனக்கு ரொம்ப புடிக்கும் அத்தான்…”
“அதான் தெரியுமே…” என்று அவள் சொல்லவும் இவன் சிரிக்க,
“குறுக்க பேசாதீங்க…” என்றவள்,
“அபி மதினி கல்யாணம் ஆகி வந்தப்போ அவங்க உங்க ஊர்ல எடுத்துக்கிட்ட போட்டோ எல்லாம் கொண்டுவந்துருந்தாங்க. அதுக்கு முன்ன உங்கள பத்தி அப்பப்ப பேசிட்டே தான் இருப்பாங்க. போட்டோவுல உங்கள பாத்திருக்கேனா. அப்பவே இஷ்டம் தான்…”
“ஆனாலும் வெளில சொல்லிக்கலை. சொன்னா என்ன நெனப்பாங்களோன்னு அச்சமா இருந்துச்சு. சங்கரண்ணே உங்கள பேசறப்ப எல்லாம் அம்புட்டு உசத்தியா பேசறப்ப கேட்டுட்டே இருக்க தோணும். கொஞ்சம் கொஞ்சமா எனக்கு தெரியாமலே உங்கள மட்டுமே நினைக்க ஆரம்பிச்சேன்…”
“அப்பத்தான் மதினி கொண்டு வந்துருந்த போட்டோவுல உங்க போட்டோவோட இன்னும் கொஞ்சமெல்லாம் வீட்டுல விட்டுட்டு போய்ட்டாங்க. அதுல உங்க போட்டோ ரெண்டை சுட்டு நான் தனியா வச்சுக்கிட்டேன்…” என்றதும் அவளை ஆச்சர்யமாக திரும்பி பார்த்தவனின் இதழ்களில் மெல்லிய புன்னகை.
“எனக்கே தெரியும் இது அதிகப்படின்னு. ஆனாலும் மனசு நிக்கல. திரும்ப திரும்ப உங்க நெனப்பாவே இருந்துச்சு. அப்பப்ப வீட்டுல யாருமில்லன்னா எடுப்பேன். பாத்துட்டு பத்தரமா வச்சிடுவேன். அப்படி ஒருக்கா எடுத்தப்போ தான் நானு நானு உங்க போட்டோவுக்கு…”
“ஹ்ம்ம், சொல்லு வாசு…”
“சத்தியமா என்னைய தப்பா நெனைக்க கூடாது அத்தான். அப்ப ஏதோ புத்தில சாத்தான் புகுந்துடுச்சு. அதான் அப்பிடி பண்ணிட்டேன். அதை மதினி போட்டோ புடிச்சுட்டாங்க அவங்க போனுல…”
“என்ன பண்ணினன்னு அபி போட்டோ எடுத்தா?…” என்றான் ஷ்ரவன் கூர்மையாக.
“நீங்க ஊருக்கு கோவிலுக்கு வந்துட்டு போனீங்கள. நேர்ல பாத்தது, நீங்க சிரிச்சு சிரிச்சு எல்லார்ட்டயும் பேசினதுன்னு சுத்த பைத்தியமாவே ஆகிட்டேன். பேசனும்னு தோணும். ஆனா முடியாதே. உங்க போட்டோவுக்கு ஆருமில்லன்னு நெனச்சு போட்டோவுக்கு முத்தம் குடுத்தேன்…” என்று சொல்லியவள் அவன் என்ன சொல்வானோ என்று நினைத்து கண்களை இறுக்கமாய் மூடிக்கொண்டாள்.
சிறிது நேரம் எதுவும் அவன் பேசாததும், ஜீப் நகராததை போலவும் இருக்க மெல்ல கண்களை திறந்து பார்த்தவள்,
“ஏன் வண்டிய நிறுத்தினீங்க. எடுங்க வண்டிய…” என்று மெல்லிய குரலில் கத்த,
“போட்டோவுக்கு கிஸ் பண்ணிருக்க. இதுக்கு பேர் தான் லவ். இதுல என்ன தப்பு வாசு?…” என்றவனின் இலகுவான குரலில் வண்டியை எடுக்காததை மறந்து,
“நிசமாவா? தப்பில்லையா? ஆனா அன்னைக்கு எனக்கு வெலவெலத்து போச்சு. மதினி அந்த போட்டோவை காட்டித்தான் உங்கள கல்யாணம் பண்ணிக்க வச்சாங்க…” என்றதும் அவனின் முகம் மாற,
“சத்தியமா கல்யாணம் வரைக்கும் எல்லாம் நானு யோசிக்கவே இல்லைத்தான். எனக்கு ஒரே பயம். இத எல்லாருட்டையும் காட்டி மானத்த வாங்கிருவாங்களோன்னு. எனக்கே தெரியும், தேவகி மதினிய சொந்தமா இருந்தாலும் வசதி இல்லன்னு தான் பெரியம்மா எடுக்கலை…”
“அவங்களுக்கே அப்பிடி. எனக்கு கேட்கவே வேண்டாம். அதான் நானே அந்த கனவு காண கூடாதுன்னு சொல்லிக்கிட்டேன். தேவகி மதினி மாதிரி கலியாணமே கூடாதுன்னு வைராக்கியமா நினைக்க ஆரம்பிச்சேன். ஆனா மதினி விடலை. அப்பங்க எனக்கு அவங்க அக்கறையில சொல்லுததா தான் பட்டுச்சு…”
“இப்படித்தான் சங்கரண்ணே விருப்பப்பட்டு அது நிறவேறாம மதினியோட இன்னும் சந்தோசமா இருக்காம இருக்காங்கன்னு சொல்லி புலம்பினாங்க. நானும் சங்கரண்ணே மாதிரி ஆவ கூடாது, ஆசைப்பட்ட வாழ்க்கைய வாழனும்னு எனக்காக பேசறதா சொன்னாங்க…”
“நானு அப்பவும் வேணாமுன்னு தான் சொன்னேன். போட்டோவ எல்லாருக்கும் அனுப்பிருவேன். அப்பவும் கலியாணம் நடக்கும்னு என்னை பயங்காட்டிட்டாங்க. சத்தியமா வெளில தெரிஞ்சா நாண்டுக்கலாம்னு தான் தோணுச்சு. பேசி பேசி கரைச்சுட்டாங்க…”
“முதல்ல மாமாட்ட பேசி அத்தையும் மாமாவும் முதல்ல சரின்னு சொல்லலை போல. ஊரு, உறவுன்னு சொல்லி, கடைசியில நானு மருந்த குடிச்சுட்டேன்னு அவங்களையும், என்னை பெத்தவங்களையும் சொல்லி நம்ப வச்சு என்னை வாயே திறக்கவிடலை…”
“சங்கரண்ணே வந்து ஒரே வார்த்தை தான் கேட்டுச்சு. உனக்கு புடிச்சிருக்கான்னு. அம்புட்டுத்தான். எனக்கு அடுத்து எல்லாம் கனவுல நடந்ததுகணக்கா தான் எல்லாம். அவங்க தான் அவங்க சொல்ற மாதிரி நடந்துக்கிட்டா உங்களுக்கு புடிக்கும்னு சொன்னாங்க. கடைசில எல்லாம்…” என்றவள் மௌனமாகிவிட ஒரு பெருமூச்சுடன் ஜீப்பை கிளப்பினான் ஷ்ரவன்.
பெற்றோர் தன்னிடம் வந்து வாசமல்லியை தான் திருமணம் செய்ய வேண்டும் என்று கெஞ்சியும், போராடியும், வேண்டுதலாகவும் கேட்க நீலகண்டன் முகத்திற்காக ஓரளவு தன்னை சமாதானம் செய்து அரைமனதுடன் சம்மதித்தவனுக்கு சங்கர் வந்து கேட்ட பின்பு மறுக்கவே முடியாதென்பதானது.
“நீ தெளிவா தான முடிவு பண்ணியிருக்க ஷ்ரவா? மல்லிக்கும், உனக்கும் எப்படி செட் ஆகும்ன்னு சரின்னு சொன்னன்னு எனக்கு தெரியலை. ஆனா நீ சொல்லிட்ட. இதுல இருந்து நீ பின்வாங்க மாட்ட தான? எனக்கு என் தங்கச்சி எந்தளவுக்கு முக்கியமோ அந்தளவுக்கு நீயும் முக்கியம்…” என்ற சங்கர்,
“பெரியவங்க ஆயிரம் சொல்லுவாங்க. அவங்க ஆசைக்கு கல்யாணம் செஞ்சு வச்சிருவாங்க. ஆனா அதோட கஷ்டநஷ்டங்கள் அவங்களுக்கு வெறும் பார்வைக்கும் மட்டும் தான். அனுபவிக்கிறது நாம தான். அதான் கேட்கறேன்…” என்றவனின் அன்றைய பேச்சை முழுமையாய் ஷ்ரவன் கவனிக்கவில்லை.
தன்னிடம் சங்கர் கேட்டு வந்திருக்க சிறு மறுப்பும் ஷ்ரவனிடத்தில் இல்லை. சங்கரிடம் முடியாதென சொல்ல மனது வரவில்லை அவனுக்கு. உடனே எந்தவித சஞ்சலமும் இன்றி அந்த நொடி சம்மதத்தை சொல்லவும் தான் இந்த திருமணத்தை பேசவே தொடங்கினான் அவன்.
இப்போது எத்தனை பெரிய விஷயத்தை செய்திருக்கிறாள் அபி என்று புரிய ஆத்திரங்கள் கூடியது.
“அத்தான், ஒன்னும் பேசலை. கல்யாணத்துக்கு முன்னாடி ஒருத்தன் போட்டோவுக்கு முத்தம் குடுத்தேன்னு உங்களுக்கு கோவமா இருக்கா?…” என கேட்க,
“என் போட்டோவுக்கு தான குடுத்த? அதனால என்ன?…” என்றவன்,
“இதுக்கெல்லாம் பயந்து அவ சொல்றதுக்கெல்லாம் தலையாட்டுவியா? வேற என்ன சொல்லிருந்தாலும் செஞ்சிருவியா? இது ஒரு விஷயமே இல்லை வாசு….” என்றான் கண்டிப்பான குரலில்.
“உங்களுக்கு விஷயமில்ல. ஆனா அப்பாவுக்கு தெரிஞ்சா எனக்குத்தான அவமானம். பாக்கறவங்க என்னைய மட்டுமா பேசுவாங்க. பெத்தவங்களையும் பேசுவாங்களே. எனக்கு அத மதினி பாத்ததுக்கே இன்னும் கூசுது. அந்த போட்டோவை அவங்க வச்சிட்டிருக்கறது எம்புட்டு அய்யறவா இருக்குன்னு உங்களுக்கு தெரியாதுத்தான். நீங்க உங்க ஊரு வேற. இது நாங்க இங்க வேற. சொல்லு பொறுக்கமாட்டோம்…”
“நமக்கு தான் கல்யாணம் ஆகிருச்சுல…” என்றான் எரிச்சலாக.
“ப்ச், அது இப்ப தான? போட்டோ எடுத்தப்போ இல்லையில. அப்ப நான் சொன்னதுதான நடக்கும்…” என்றாள் அவள்.
“ஹ்ம்ம், என்ன சொல்லன்னு தெரியலை. ஆமா அதுக்கப்பறம் அந்த போட்டோவ காட்டி அபி ஒன்னும் சொல்லலையா?…” என கேட்டான்.
“ஏன் கேட்காம? எனக்கு அம்புட்டு கோவம். தேவகி மதினி என்ன பேசறாங்கன்னு சொல்லுன்னு கேட்டாங்க. சொல்ல மாட்டேன்னு சொன்னேனா. அதுக்கு இந்த போட்டோவ மறந்துட்டியான்னு கேக்கறாங்க…”
“என்ன? இப்போ வந்தப்போவா?…”
“ம்ஹூம், அதுக்கு முதவாட்டி ஒருக்கா வந்தாங்க இல்ல. அப்போ. நான் முடியாதுன்னுட்டேன். இதெல்லாம் வச்சுக்காதீங்க. அனுப்புனா அனுப்பிக்காங்க. எம்புருசனுக்கு தான குடுத்தேன்னு சொல்லிட்டேன்…” என வாசமல்லி வசனமாக குறையாத கோவத்துடன் சொல்ல,
“நீ கோவப்படாதடி, சத்தியமா சிரிப்பு வருது…” என்று சிரித்தான்.
“இந்தளவுக்கு உனக்கு விவரமெல்லாம் இருக்குது. ஆனாலும் மதினின்னு நிக்கற…” என்று அவன் சொல்ல,
“என்ன பன்றது அத்தான்? அடிச்சாலும் புடிச்சாலும் உறவு இல்லன்னு ஆகிடுமா? வந்தவங்கட்ட மூஞ்சிய காட்டினா நல்லாவா இருக்கும். நம்ம குடும்பத்துக்காண்டியாச்சும் பாக்கனுமில்ல…” என்று சொல்லவும் அவளின் பேச்சை கேட்டபடி ஊட்டிக்குள் நுழைந்தான்.
“ஆதவ்க்கு ஏதாவது ஸ்நாக்ஸ் வாங்கிட்டு போய்டுவோம்…” என்று ஒரு கடையில் ஜீப்பை நிறுத்தியவன்,
“வாசு நீ உள்ளயே இரு. அவன் இன்னும் முழிக்கலை. நீ எழுந்தா அவனும் முழிச்சுப்பான். அதனால இரு. நான் வாங்கிட்டு வரேன்…” என்றவன் வீட்டிற்கு மொபைலில் அழைத்துகொண்டே கடைக்குள் நுழைந்தவன் தேவயானதை வாங்க ஆரம்பித்தான்.
“ம்மா, ஹ்ம்ம் ஊருக்கு வந்துட்டோம். இன்னும் அரைமணி நேரத்துல வீட்டுக்கு போய்டுவோம்…”
“ஏன் இவ்வளவு நேரம் ஷ்ரவா?…” என்றார் அமலா மறுமுனையில்.
“இன்னைக்கு சண்டே இல்லையா? டூரிஸ்ட் நிறைய. அதான் மெதுவா வந்தோம். லேட் ஆகிடுச்சு…” என்று சொல்லிவிட்டு,
“ஹாஸ்பிட்டல் கிளம்பிட்டாங்களா அத்தான்? கால் பண்ணேன் ரிங் போய்ட்டே இருக்குது…” என கேட்க,
“அப்பவே கிளம்பிட்டாங்க ஷ்ரவா. நான் இன்னும் பேசலை. தொந்தரவு செய்ய வேண்டாமேன்னு தான். வரட்டும். நீயும் கால் பண்ண வேண்டாம்…” என,
“ஹ்ம்ம், சரி. அப்பா எங்க?…”
“அப்பாவும், அனுசுயாவும் கூட போயிருக்காங்க. சங்கர் அப்பாவுக்கு ஒரு செக்கப் பார்த்துடலாம்னு சொல்லி கூடவே கூட்டிட்டு போயிருக்கான்…”
“சரிங்கம்மா, வைக்கறேன்…”
“ஷ்ரவா வீட்டுக்கு போய்ட்டு கூப்பிடு…” என்று அறிவுருத்த சரி என்றுவிட்டு வாங்கியவற்றிற்கு பணம் செலுத்திவிட்டு வந்தான். பின் சீட்டில் வாங்கியதை வைத்தவன் அமலாவிடம் பேசியதை பற்றி வாசுவிற்கு சொல்லியபடி வீடு நோக்கி சென்றான்.
வீட்டில் இறங்கியதும் சுற்றி சுற்றி வந்து விளையாடிய ஆதவ் பத்து நிமிடத்தில் அப்பாவை, அம்மாவை தேட ஆரம்பித்துவிட்டான்.
அவனை சமாளித்து விளையாடு காண்பித்து அப்படி இப்படி என வந்ததில் இருந்து நேரம் ஓட்டி டிவியில் அவனுக்கு பிடித்ததை போட்டுவிட்டு வாசுவும் அவனுடன் அமர்ந்துகொள்ள ஷ்ரவன் தன்னுடைய போனுடன் அமர்ந்துகொண்டான்.
ஸ்டேஷனிற்கு அழைத்து பேசிக்கொண்டிருந்தவனுக்கு இன்னொரு அழைப்பு வந்துகொண்டே இருக்க அதை சட்டை செய்யாதவன் பேச்சு மும்மரத்தில் இருந்தான்.
பின் வாசுவின் எண்ணிற்கு அழைப்பு வரவும் சென்று எடுத்தவள் அதிர்ந்து போனாள்.
“என்னத்தே சொல்லுறீங்க?…” என கேட்கும் போதே அழுதுவிட,
“வாசு என்னாச்சு?…” என்று ஓடி வந்தான் ஷ்ரவன்.
“அத்தான் அத்தை…” என்று சொல்லியவள் ஆதவ்வை கட்டிக்கொண்டு அழ அவள் ஏன் அழுகிறாள் என்று தெரியாமல்,
“அழாத, பேட் அழாத, அத்தை அழாத…” என்று அவளின் கண்ணீரை துடைக்க இங்கே ஷ்ரவனுக்கு தலைசுற்றியது.
“ம்மா, அழாம சொல்லுங்க. யாருக்கு எங்க ஆக்ஸிடென்ட்?…” என்று அவன் கேட்க,
“கார்ல ஹாஸ்பிட்டல் போறப்போ ஏதோ வாக்குவாதம் ஆகிருக்குது. அப்பா எனக்கு கால் பண்ணி உன்னை கேட்டார். உனக்கு ரீச் ஆகலைன்னு நீ பேசினியான்னு கேட்டுட்டு இருந்தார். அப்பத்தான் அபியோட சத்தமும் சங்கரோட சத்தமும் கேட்டுச்சு. கொஞ்சம் நேரத்துல என்னாச்சுன்னு தெரியலை…”
“சரி சரி, பதட்டப்படாதீங்க. இப்போ இப்போ யாருக்கும் எதுவும் இல்லை தானே? அடி பெருசா இல்லை தானே?…” என்றான் பதட்டத்தை மறைத்துக்கொண்டு.
“சங்கருக்கும், அனுவுக்கும் தான் நல்ல அடி. அப்பாவுக்கு லேசான்னு சொல்றாங்க. அபி அபி…”
“அபிக்கு என்னம்மா?
“கார் உருண்டதுல கதவு திறந்து அபி ஸ்பாட்லயே…” என்று சொல்லி அமலா அழ அதிர்ச்சியில் உறைந்து போனான்.
“இந்த பொண்ணுக்கு இப்படியா கோபம் கண்ணை மறைக்கும். ரோட்டுல கார் ஓட்டும் போது ரகளை பண்ணி இப்ப அவளே இல்லாம போய்ட்டாளே. அவளை குணமாக்கியாச்சும் அவளோட நல்லா வாழனும்னு சொல்லி சாமியெல்லாம் கும்பிட்டுட்டு கிளம்பி போனான்டா அந்த பிள்ளை. இப்ப கண்ணு முழிச்சு என்னன்னு கேட்டான்னா என்ன சொல்ல?…”
“சங்கர் அம்மா வந்து இங்க ஒரே ரகளை. எதுக்கு ஹாஸ்பிட்டல் ஏன்னு கேட்டு எனக்கு ஒன்னும் சொல்ல முடியலை. அப்பாவை பார்க்கனும், அனுவையும் பார்க்கனும். மல்லி வீட்டுக்கு சொல்லிட்டேன்…”
“நான் இப்பவே கிளம்பி வரேன்ம்மா. நீங்க தைரியமா இருங்க…” என்றவன் மீண்டும் ஆதவ்வையும், மனைவியையும் கூட்டிக்கொண்டு கோவைக்கு கிளம்பினான்.
இதற்கா இத்தனை ஆட்டமும், கோபமும், துவேஷமும் என அபர்னிதாவை பற்றி எண்ணிய மனது கனத்து போனது.
கிளம்பி வரும் வரை உயிருடன் அதனை ஆர்ப்பாட்டம் செய்து வீட்டையே அதிர செய்தவள் அடங்கி போன மாயம் இன்னும் நம்ப முடியவில்லை அவனால்.