பூ – 16
சங்கர் என்ன முடிவெடுப்பானோ என்று ஒருவருக்கும் தெரியவில்லை. விழித்தெழுந்த அபர்னிதா அனைவரும் இறுக்கமாக இருப்பதை பார்த்துவிட்டு,
“மம்மி, இங்க கம்பர்டபிளா இல்ல. நான் உள்ள போறேன்…” என சொல்லி ஆதவ் இருக்கும் அறைக்குள் சென்று படுத்துவிட்டாள்.
“உன்கிட்ட நான் இதை எதிர்பார்க்கலைம்மா. இப்படி நம்ப வச்சு கழுத்தை அறுத்த மாதிரி செஞ்சிட்டியே…” என நீலகண்டன் அனுசுயாவிடம் கேட்க,
“அண்ணா ஒரு அம்மாவா என் நிலைமையை கொஞ்சம் யோசிச்சு பாருங்க. புருஷனும் இல்லாம என் பொண்ணை நான் கஷ்டமில்லாம வளர்க்கனும்னு நினைச்சது தப்பா?…” என்று அழ,
“இந்த உலகத்துல எத்தனையோ லேடீஸ் சிங்கிள் பேரன்ட் தான் அனும்மா. அவங்களாம் இப்படித்தான் வளர்க்கறாங்களா? ஊருக்காக பார்த்து இப்ப உங்க பொண்ணை நீங்களே பாழாக்கிட்டீங்க. அது உங்களோட அபியோட போயிருந்தா கூட உங்களுக்குள்ள. இப்ப இத்தனை பேர் அனுபவப்பட்டு நிக்கறோம்…”
ஷ்ரவனின் கோபம் கொஞ்சமும் குறையவில்லை. விட்டால் அவனே அனுசுயா, அபியை உண்டில்லை என்று செய்துவிடுவான். அப்படி ஆக்ரோஷத்துடன் பொங்கினான்.
“கோவில்ல என்ன நடந்ததா பார்க்கும் போது உங்க பொண்ணை அடிச்சதுக்கே அந்த தேவகின்றவங்க மேல கேஸ் போடுவீங்கன்னு சொன்னீங்க இல்ல. இப்ப நான் கேஸ் போடறேன். அபிக்கு இருக்கற பிராப்ளத்தை மறைச்சு ஏமாத்தி கல்யாணம் செஞ்சு குடுத்ததா நான் குடுக்கறேன் கேஸ். நீங்க பேஸ் பண்ணுங்களேன்…” என்று சொல்லவும் அரண்டு போய் பார்த்தார்.
“நீயா ஷ்ரவா இதெல்லாம் பேசற? உன்னை என் மகன் மாதிரி…”
“வேண்டவே வேண்டாம்மா. நீங்க என்னை மகன் மாதிரி நினைக்கவே வேண்டாம். பெத்த பொண்ணையே சரியா சொல்லிக்குடுத்து கண்டிச்சு வளர்க்க தெரியலை. என்னை சரியா வளர்த்த எங்கப்பாம்மாவுக்கே அபியை கணிக்க முடியலை. போதும்…” என்று கையெடுத்து கும்பிட்டவன்,
“இந்த கல்யாணம் நடக்க ஒரு ஆரம்ப புள்ளியா நான் இருந்ததை நினைக்கும் போது எனக்கே வெறுப்பா இருக்கு…” என்று தலையை கோதி தான் கோபத்தை கட்டுப்படுத்த பார்த்தான்.
“என்னண்ணே ஷ்ரவன் இப்படி எல்லாம் பேசறான். அவன்கிட்ட சொல்லுங்க பேச வேண்டாம்ன்னு. என் பொண்ணை பேசினா ஓரளவுக்கு தான் பொறுத்துக்க முடியும். எனக்கு கஷ்டமா இருக்குது. நீங்க பார்த்து நடத்தி வச்ச கல்யாணம் இது. நீங்க தான் மாப்பிள்ளைட்ட பேசனும்…” என்று அனுசுயா சொல்ல,
“என்னம்மா பேச சொல்ற? உன் பொண்ணை பேசினா உனக்கு கஷ்டமா இருக்கற மாதிரி சங்கர் வாழ்க்கை இப்படி ஆகிடுச்சேன்னு நான் எவ்வளவு கஷ்டப்படறேன் தெரியுமா?…”
“உங்களுக்கு அபி முக்கியம் இல்லையா அப்போ?…” என அனுசுயா வேறு வகையில் திருப்ப பாவம் பார்த்த அமலாவுக்கே கோவம் வந்தது.
‘செய்வதையும் செய்துவிட்டு தன் கணவனையே திருப்பி பேசுவதென்ன?’ என்று கோபமாக பார்த்தவர்,
“அனு என்ன பேச்சு இது? அவரையே கேள்வி கேட்கற நீ? எத்தனை பாசமும் அன்பும் இருந்திருந்தா அவர் ஆசையா சங்கருக்கு அபியை முடிச்சு வச்சிருந்திருபார். அன்னைக்கு கொண்டாட தெரிஞ்சது என் புருஷனையும், புள்ளையையும். எத்தனை இருக்கட்டும் அவரோட சொந்தங்களுக்கு அப்பறம் தான் மத்த உறவு…”
“அமலா நான்…” என்ற அனுசுயாவை பேச விடாமல் நிறுத்திய அமலா,
“குடும்ப பழக்கம் வேற, சொந்தம்ன்றது வேற. போக வர இல்லைன்னாலும் ஊர் உறவுகள்ன்னு எங்களோட நினைப்பு இங்க இருக்கற சொந்தங்களை சுத்தியே தான் இருந்துச்சு. அப்படி ஒரு உறவுல சொந்தபந்தம் இல்லாம இருக்கற உங்களை இணைச்சா என்னன்னு தான் என் புருஷன் அபிக்கு சங்கரை கேட்டாரு…”
“ஆனா அது எவ்வளவு பெரிய தப்புன்னு இப்ப புரியவச்சுட்டீங்க. நான் கூட யோசிச்சேன், அபியோட பிடிவாதத்துக்கும், முரண்டுக்கும் சங்கர் மாதிரி பையனுக்கு ஒத்து போக முடியுமான்னு. இப்ப தான தெரியுது நாங்க எவ்வளவு பெரிய தப்பு பண்ணிருக்கோம்னு…” என்று அமலா பேச பேச,
“ஐயோ போதும் அமலா. எல்லாரும் அபியையே சொல்லாதீங்க. அவ எதையும் தெரிஞ்சு பண்ணலைன்னு சொல்றேன். திரும்ப திரும்ப அவளையே சொல்லிட்டிருக்கீங்க…” என அனுசுயா சொல்ல,
“இப்பவும் புரியாம பேசற அனு. இதை முன்னாடியே நீ சொல்லியிருந்தா நல்ல ட்ரீட்மென்ட் எடுத்திருந்திருக்கலாம். அபியை மாத்திருந்திருக்கலாம். உன் பொண்ணோட இந்த நிலைமைக்கு இப்ப நீயே காரனமாகிட்ட…” என அமல சொல்ல,
“ஐயோ போதும். முடிஞ்சதையே பேசாதீங்க…” என்றவர்,
“அண்ணே, நீங்க சொல்லுங்க. நீங்க ஏன் அமைதியா இருக்கீங்க?…” என்றதும் நீலகண்டன் அழுத்தமாக அவரை பார்த்தார்.
“இத்தனை வருஷம் பழகியும் உன்னோட குணம் புரியாம போச்சே அனு. இப்பவும் உனக்கு கொஞ்சமும் குற்றவுணர்ச்சி இல்லையேம்மா…” என்றார் அவர்.
“ஐயோ அண்ணா, நான் இதுக்கு ரொம்ப ரொம்ப வருத்தப்படறேன். எனக்குள்ளயும் குற்றவுணர்ச்சி இருக்குது தான். ஆனா அதை விட இப்போ என் பொண்ணோட எதிர்காலம்ன்னு ஒன்னு இருக்கே…”
“அதை முடிவு பண்ண வேண்டியது சங்கர் தான். அவன் என்ன முடிவெடுத்தாலும் நானும் என் குடும்பமும் அவனுக்கு துணையா இருப்போம்…” என்றுவிட்டார் ஒரேடியாக.
“நீங்களுமா அண்ணா?…” என்று முகத்தை மூடிக்கொண்டு அவர் அழ யாரும் சமாதானம் செய்ய கூட அருகில் செல்லவில்லை.
“அழாதீங்க அத்தை…” என வாசமல்லி தான் அருகில் செல்ல,
“வாசு நில்லு. முதல்ல இங்க பேசி ஒரு முடிவுக்கு வருவோம். அனும்மா மனசுல என்னதான் நினைக்கறாங்கன்னு பார்ப்போம்…” என்று ஷ்ரவன் அவளின் கை பிடித்து நிறுத்தினான்.
சங்கர் அங்கிருக்க முடியாமல் வேகமாய் வெளியே செல்ல அவரின் பின்னால் போகவிருந்த அனுசுயாவை பிடித்து நிறுத்திய ஷ்ரவன்,
“அத்தான் வருவாரு. ஆதவ் இங்க தான இருக்கான். அவர் வரட்டும். கொஞ்சம் அவரை ப்ரீயா விடுங்க…” என்று சொல்லவும் அனு எதுவும் பேசாமல் மகள் இருந்த அறைக்குள் செல்ல,
“ம்மா, நீங்களும் கூட போங்க. கூட இருங்க. இப்பவும் ஏதாவது அவளுக்கு சொல்லிட்டிருக்க போறாங்க…” என்றான் அனுசுயாவை நம்பாமல்.
வலி மிகுந்த கண்களுடன் அவனை ஏறிட்டவர் ஒன்றும் சொல்லாமல் உள்ளே சென்றுவிட்டார்.
சொல்லியிருந்த உணவு வந்தும் ஒருவரும் சாப்பிடவில்லை. ஒருமணி நேரம் சென்றே சங்கர் மீண்டும் வந்தான்.
“சாப்பிடுங்க அத்தான் வாங்க…” என அவனை ஷ்ரவன் சாப்பிட அழைக்க,
“ஹூம், ஆதவ், அபி சாப்பிட்டாச்சா?…” என்று கேட்க,
“இன்னும் யாருமே சாப்பிடலை…” என வாசமல்லி சொல்லவும் அவர்கள இருந்த அறைக்குள் எட்டி பார்த்தான் சங்கர்.
அமலாவிடம் எதையோ சொல்லியபடி அழுதுகொண்டே இருந்தார் அனுசுயா. அதை கேட்டுக்கொண்டே அமலாவும் அவருக்கு பதில் பேசிக்கொண்டிருக்க உறங்கிக்கொண்டிருந்த மகனை எழுப்பினான் அவன்.
“அத்தை…” என்றதும் அனுசுயா திரும்பி பார்க்க அவரை பார்க்காமல்,
“அமலாத்தை, அபியை எழுப்பி கூட்டிட்டு வாங்க எல்லாரும் சாப்பிடலாம்…” என்று அழைக்கவும் அனுசுயாவிற்கு சிறிது நம்பிக்கை பிறந்தது. தன்னிடம் பேசவில்லை என்றாலும் மகளை கவனிக்காமல் இல்லையே.
அதுவும் இத்தனை நிதானத்துடன் சாப்பிடவும் அழைக்கும் மருமகனை பற்றிய பயம் குறைந்தது அவருக்கு.
“நீ போய் எடுத்து வை அமலா. நான் கூட்டிட்டு வரேன்…” என சொல்ல அமலா அங்கிருந்து நகரவே இல்லை. ஏற்கனவே மகன் சொல்லியிருந்தானே கூடவே இருக்கும் படி.
“நீ முகத்தை கழுவிட்டு வா. நான் அபியை எழுப்பறேன்…” என்று சொல்லவும் அதை புரிந்த அனுசுயா முகம் சுண்டி போனது. ஒன்றும் பேசாமல் அவர் செல்ல அபியை எழுப்பினார் அமலா.
எழுந்தமர்ந்தவள் கண்ணை கசக்கியபடி அமலாவை பார்த்து சிரிக்க அவருக்கு வருத்தமாய் இருந்தது.
“சாப்பிடலாம் அபி. சாப்பாடு வந்திருச்சு…” என்று சொல்லவும் எழுந்தவள்,
“இந்த ஷ்ரவன் எங்க ஆடர் குடுத்தான்னு தெரியலையே. நான் அதை கவனிக்கவே இல்லை பாருங்க அமலாம்மா…” என பேசிக்கொண்டே நடந்த எதையும் ஞாபகம் இல்லாததை போல அவள் செல்ல அமலாவுக்கு ஆயாசமாய் போனது.
அங்கே மேஜையில் நீலகண்டன் மற்று ஷ்ரவனிடம் சங்கர் என்னவோ முணுமுணுப்புடன் பேசிக்கொண்டிருப்பதை கண்ட அபி ஒரு முக சுளிப்புடன் சாப்பிட அமர்ந்தாள்.
“வாசு ப்ளேட் இன்னும் வைக்கலையா? எடுத்துட்டு வா. பசிக்குது…” என்று அபி சத்தமாய் சொல்ல,
“அபி…” என அதட்டினார் அனுசுயா.
“மம்மி, நீங்க சும்மா இருங்க. சாப்பிட வருவோம்னு தெரியும் தானே? இன்னும் எடுத்து வைக்காம இவ…” என்று மேலும் பேசும் முன்,
“வாசு ப்ளேட் எல்லாம் வச்சுட்டு நீயும் உட்கார். எல்லாருமே போட்டுக்கலாம். தனியா ஏன் பரிமாறிட்டு?…” என்றவன் தன்னருகே அவளை அமர்த்திக்கொள்ள,
“ஆதவ்க்கு ஊட்டிக்கறேன் அத்தான். நீங்க விடுங்க…” என்றவளை கோபத்துடன் முறைத்தவன்,
“சாப்பிட்டு நாம கிளம்பனும். இப்போ கிளம்பினாத்தான் இருட்டுமுன்ன ஊட்டி போக முடியும்…” என்று பல்லை கடித்துக்கொண்டு சொல்ல,
“அதுக்குள்ளே என்னடா உனக்கு ஊருக்கு? மம்மியும் வந்திருக்காங்க. இன்னைக்கு இரேன். நாளைக்கு போவ…” என்று அபி ஆடர் போட,
“உன் மம்மி வந்தா நான் ஏன் இருக்கனும்?…” என்று சூடாக அவளுக்கு திருப்பி கொடுத்தான் ஷ்ரவன்.
“அபி, பேசாம சாப்பிடு. இல்லனா நான் கிளம்பிருவேன்…” என்ற அனுசுயா சொல்லவும் அபி அவரை முறைத்துவிட்டு சாப்பிட ஆரம்பித்தாள்.
சிறிது நேரத்தில் ஷ்ரவன் வாசமல்லியுடன் கிளம்ப நீலகண்டன், அமலா இருவரும் வெளியே வந்து நின்றனர்.
“ஓகே அத்தான். என்னன்னு பார்த்துட்டு சொல்லுங்க. எத்தனை மணிக்கு?…” என கேட்க எங்கே என்னவென்று ஒன்றும் புரியாமல் பார்த்தார் அனுசுயா.
“ஆறு மணிக்கு அப்பாயின்மென்ட் வாங்கிருக்கேன் ஷ்ரவா. பார்ப்போம்…” என சங்கரும் சொல்ல,
“ஷ்ரவா என்னப்பா?…” என்றார் அமலா.
“அபியை சைக்யாட்ரிஸ்ட்ட கூட்டிட்டு போறதுக்கு பேசிட்டு இருக்கோம்…” என்று ஷ்ரவன் சொல்லவும்,
“அய்யோ, அபிக்கு தெரிஞ்சா…” என அனுசுயா ஆரம்பிக்க,
“நீங்க வாயை மூடுங்க. இப்பவாச்சும் ஒரு நல்ல முடிவெடுக்கட்டும்…” என்று கத்திவிட்டான் ஷ்ரவன்.
“ஷ்ரவா அபிக்கு தெரிஞ்சா சண்டை போடுவா. அவ ஹாஸ்பிட்டல் வர ஒத்துக்க மாட்டா. இப்போ இந்த விஷயம் சம்பந்தி வீட்டுக்கு தெரிஞ்சிருச்சுன்னா…”
“அப்ப அவளை கூட்டிட்டு போய்டுங்க நீங்க…” என்றான் ஷ்ரவன் இரக்கமில்லாது. அவன் பேச்சிற்கு ஒருவரும் அங்கே மறுப்பு பேசாமல் போக கண்ணீர் பொங்கியது அனுசுயாவிற்கு.
“அதுக்கா நான் இந்த பாடு படறேன்…” என அழ,
“அப்போ வருஷமெல்லாம் இந்த மனுஷன் இப்படியே இருந்தாலும் உங்களுக்கு உங்க பொண்ணு இங்க எல்லார் உயிரையும் வாங்கிட்டு இருந்தாலும் ஒண்ணுமில்லை. அப்படித்தானே?. சரி படுத்தவும் கூடாது. ஆனா கூடவே வச்சிட்டு இருக்கனும்…”
“நான் அப்படி சொல்லலைப்பா. வெளில தெரிஞ்சா…”
“தெரிஞ்சா? தெரிஞ்சா என்ன? நீங்க இதுக்கு எதாச்சும் பேசி ஹாஸ்பிட்டல் போக வேண்டாம்ன்னு சொல்லிட்டிருந்தீங்க நானே பெரியத்தை, மாமாவை வரவழைச்சிருவேன். எப்படியும் சங்கரத்தான் இதை சொல்லமாட்டார். ஆனா நான் சொல்லுவேன்…” என்றவான்,
“அம்மா, ஹாஸ்பிட்டல் போறாங்களா இல்லையான்னு எனக்கு நீங்க சொல்லனும். அந்த டாக்டர் எனக்கு தெரிஞ்சவர் தான். நானே கான்டேக்ட் பண்ணிடுவேன்…” என்று சொல்லிவிட்டு கிளம்பியவன் ஆதவ்வையும் தங்களுடன் கூட்டிக்கொண்டான்.
‘ஊருக்கு வருகிறாயா?’ என்று வாசமல்லி கேட்டதும் துள்ளிக்கொண்டு கிளம்பிவிட்டான் ஆதவ்.
சங்கருக்கும் சில நாட்கள் மகன் அபியுடன் இல்லாமல் இருந்தாலே நல்லது என நினைத்து உடனே சம்மதிக்க அபியும் உடன் வருகிறேன் என்று ஆரம்பித்துவிட்டாள்.
அனுசுயா தான் இரண்டு நாட்கள் கழித்து போவோம் என்று சொல்லியிருக்க கோபத்துடன் உள்ளே சென்றுவிட்டவல் இப்போது வரை வரவில்லை.
“ஆதவ்வை பார்த்துக்கோம்மா…” என்று மகனின் தலையை வருடி சொல்ல,
“அதை சொல்லனுமா சங்கர். உன் தங்கச்சி எப்படி பார்த்துப்பா. நீ ஒன்னும் நினைக்காத…” என்று அமலா சொல்லவும் ஜீப்பை கிளப்பிக்கொண்டு ஊட்டியை நோக்கி சென்றான் ஷ்ரவன்.
வாசுவின் மடியில் அமர்ந்திருந்த ஆதவை நன்றாய் கட்டிக்கொண்டு அவனுக்கு குளிராமல் ஒரு சால்வையால் மூடிக்கொண்டாள். ஏற்கனவே அவன் ஸ்வெட்டர் போட்டிருக்க இவளும் அவனுக்கு போர்த்தி பாதுகாப்பாய் அணைவாய் கட்டிக்கொண்டாள்.
மலை ஏற ஆரம்பித்ததுமே ஆதவ் உறங்கிவிட வாசுவும், ஷ்ரவனும் அதுவரை எதுவுமே பேசாமலே வந்துகொண்டிருந்தனர்.
“ஆதவ்வை பின் சீட்ல படுக்க வைக்கிறியா வாசு?…” என ஷ்ரவன் கேட்க,
“இல்லைத்தான். நானே வச்சுக்கறேன். பின்னாடின்னா எனக்கும் பயமா இருக்கும்…” என்று சொல்லவும் அவளை முறைத்தான்.