பூ – 17
எல்லாம் கனவு போல நடந்து முடிந்து ஒருவாரம் ஆகிற்று. விபத்து முடிந்து இரு நாட்கள் சங்கர் கண் திறக்கவே இல்லை. ஆதவ்வை வைத்தே சடங்குகள் அனைத்தும் நடந்திருந்தனர்.
தலையிலும், வலது கையிலும் நல்ல அடியும், உடல் முழுவதும் உராய்வும் ஏற்பட்டிருக்க கால் பிசகி இருந்தது.
இரு நாட்களுக்கு பின்னர் கண் விழித்ததும் அவன் முதலில் கேட்டது அபியை தான். யார் சொல்வது என்று தெரியாமல் விழித்து நிற்க அங்கே சங்கரின் தாய் மீண்டும் ஒரு பிரச்சனையை கிளப்பினார்.
அபியை பத்தி யாரும் சங்கரிடம் பேச கூடாதென்றும் அமலாவையும், நீலகண்டனையும் அருகில் விடவே கூடாதென சொல்ல ஷ்ரவனின் முறைப்பில் தான் சற்று அடங்கினார்.
ஆக்ஸிடன்ட் என்று தெரிந்து ஹாஸ்பிடல் வந்த பொழுதே பயத்தில் அமலா நடந்த அனைத்தையும் சொல்லியிருக்க அத்தனை வெறுப்பு அவருக்கு தன்மீதே. மகனின் வாழ்க்கை தன்னாலே பாழாகிவிட்டதற்கு தான் தான் முதல் காரணம் என்று சித்ராவிடம் அழுது புலம்பினார்.
தன்னுடைய அத்தனை நாள் கர்வத்தையும், அகம்பாவத்தையும் துறந்து தாய் அவர் பரிதவிக்க அனுசுயாவை பார்க்க சென்ற அமலாவை தாங்கள் வேண்டுமா? அனுசுயா வேண்டுமா? என்று ஒருமூச்சு கத்தி ஓய்ந்தார்.
அவரையும் சேர்த்து பார்த்துக்கொள்ளும்படி ஆனது சித்ராவிற்கும், வாசமல்லிக்கும். ஷ்ரவன் இங்குமங்கும் என மூவரின் மேலும் கவனம் வைத்து அபியின் இறுதி சடங்கை சங்கரின் தந்தையுடனும், மாமனாருடனும் சேர்ந்து செய்துமுடித்திருந்தான்.
அனுசுயா கண்விழித்ததில் இருந்தே யாரிடமும் ஒற்றை வார்த்தை பேசாமல் மௌனமாகவே இருக்க அவரை சென்று பார்த்து வருவதோடு சரி அமலா. அவர் பேசாததனால் அமைதியாக இருந்துகொண்டார்.
நீலகண்டன் கூட தேறி வந்திருக்க ஓரளவுக்கு இயல்புநிலை திரும்ப ஆரம்பித்தது. அந்த குடும்பத்தில் பெரும் சூறாவளி ஒன்றும் மொத்தமாய் சுழற்றி சென்றதை போல அபி அத்தனை ஆட்டத்தை நிகழ்த்திவிட்டே சென்றிருந்தாள்.
இன்னும் நம்பவே முடியவில்லை சங்கரால். கண்களை மூடியவன் கருவிழிகளுக்குள் கடைசி நிகழ்வே வந்துபோய்க்கொண்டு இருந்தது.
வீட்டிலிருந்து கிளம்பி பாதி தூரம் தான் சென்றிருப்பான். சங்கர் கார் ஓட்ட அவனுக்கருகே நீலகண்டன் அமர்ந்திருந்தார். பின்னால் அபர்னிதாவும், அனுசுயாவும் அமர்ந்திருக்க அபி வேடிக்கை பார்த்துக்கொண்டே வந்தவள் திடீரென,
“மம்மி அப்பாக்கு தானே ஹாஸ்பிட்டல்? நாம ஏன் போகனும்? வா இப்படியே இறங்கிக்குவோம். ஷாப்பிங் போவோம்…” என்று அவரிடம் சொல்லவும் அனுசுயா பதறி பார்த்தார்.
“ஏன் அபி எனக்குன்னா கூட வரமாட்டியா? வாம்மா. அப்படியே உங்கம்மாவுக்கு பார்ப்போம்…” என நீலகண்டன் சமாளிக்க,
“மாமா, ஷ்ரவன் ஊருக்கு போயாச்சான்னு கேளுங்க. ஆதவ் என்ன பன்றான்னு…” என சங்கர் சொல்லவும் அவரும் தன் போன் எடுத்து ஷ்ரவனுக்கு அழைக்க ரீச் ஆகவில்லை.
“சங்கர், அவனுக்கு போன் போகலைப்பா. அமலாட்ட கேட்கறேன். போன் பண்ணானான்னு…” என்று அந்த நேரம் தான் அமலாவிற்கு அழைக்க இருக்க பின்னால் அனுசுயா என்னவோ மெல்லிய குரலில் மகளிடம் பேச,
“நோ, என்னை என்ன பைத்தியம்ன்னு நினைச்சானா இவன்? நீயும் என்னை சரின்னு கூட்டிட்டு போற…” என ரகளையை ஆரம்பிக்க அவளை சமாளிக்கவே முடியவில்லை அனுசுயாவிற்கு.
“அபி எல்லாம் உன் நல்லதுக்குதான்டா. புரிஞ்சுக்கோ…” என அனுசுயா மகளின் கன்னத்தை தடவி சொல்ல,
“உங்களை இப்ப யார் சொல்ல சொன்னா அத்தை? தேவையில்லாம மனுஷன் உயிரை வாங்கறீங்க…” என்று முன்னால் இருந்து கத்தினான் சங்கர்.
இங்கே நடக்கும் ரகளையில் நீலகண்டன் அமலாவை மறந்து இவர்களை பார்க்க ஆரம்பித்திருந்தார்.
“இல்ல மாப்பிள்ளை, அங்க போய் பிரச்சனை பண்ணுவாளோன்னு தான் இங்கயே பக்குவமா சொல்லலாம்ன்னு…”
“உன் பக்குவத்தை எல்லாம் குப்பையில போடு அனு. சொல்ல வேண்டிய நேரத்துல எதுவும் சொல்லாம இப்ப சொல்லி…” என்று நீலகண்டன் கோபத்தில் சத்தம் போட,
“நீ வாய மூடுய்யா. என் மம்மிய யாராச்சும் பேசினீங்க. அவ்வளோ தான்…” என்று கத்திய அபி,
“எனக்கு பைத்தியம்ன்னு சர்டிபிகேட் வாங்கிட்டா ஈஸியா டிவோர்ஸ் பண்ணிடலாம். அதானே உங்க ப்ளான். அதுக்குத்தான சாட்சிக்கு இவரையும் கூட்டிட்டு போற…” என சங்கரிடம் பின்னால் இருந்தபடி அவனின் காலரை பற்றியபடி பாய சங்கரின் கையில் இருந்து கார் கட்டுப்பாட்டை இழந்தது.
“அபி வெய்ட்…” என்ற சங்கரின் கழுத்து இறுக்க ஆரம்பிக்க நிலைதடுமாறி போனான்.
“அப்படி இருக்காது அபி. அப்படி இருந்தா மம்மி ஒருத்தரையும் சும்மா விடமாட்டேன். நீ அமைதியா இரு…” என்று அனு சொல்லியும் அவரின் பேச்சு அபியின் காதில் ஏறவே இல்லை.
பின்னால் இருந்தவள் வெறிபிடித்ததை போல சங்கரை இழுத்துக்கொண்டே இருந்தாள்.
“அபி விடு, விடு…” என நீலகண்டன் கையில் இருந்த போனை நழுவவிட்டு காரை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர,
“நீ போயா, கல்யாணமும் பண்ணி வச்சுட்டு இப்ப என்னை கழட்டி விடவும் ப்ளான் பன்ற இவனுக்கு ஹெல்ப் பன்ற…” என்று சங்கரை முழுதாய் கீழே இழுக்க நீலகண்டனின் கையில் இருந்த ஸ்ட்ரியரிங் நடந்த களேபரத்தில் கையைவிட்டு போக அந்த அசம்பாவிதம் நடந்தேறியது.
அபியின் மொத்த கவனமும் சங்கரின் மேலேயே இருக்க கார் விபத்துக்குள்ளாக போவது அவளின் கருத்தில் பதியவே இல்லை.
“நான் பைத்தியமா? சொல்லுடா நான் பைத்தியமா?…” என்று அவனின் கழுத்தின் இறுக்கத்தை கூட்ட கூட்ட சங்கரின் மூளையே ஸ்தம்பித்தது.
கதவுக்கு போட்டிருந்த லாக் ஓபன் ஆக நீலகண்டன் உருண்டு முதலில் விழ காரோடு உருண்டனர் சங்கர், அபர்னிதா, அனுசுயா மூவரும்.
சங்கரை மொத்தமாய் பின்பக்கம் இழுத்து போட்டிருந்ததில் அவன் கீழே சரிந்திருக்க அபிக்கோ அப்போதுதான் மூளையில் உரைத்தது.
“அபிம்மா, தப்பிச்சுடுடா…” என்று அனுசுயா மகளை பிடித்து வெளியே தள்ள வெளியே அபி விழுந்து மீண்டும் உருண்டு காரில் கால் மாட்டிக்கொள்ள காரோடு இழுத்துசெல்லப்பட்டு அங்கேயே உயிரிழந்தாள் அவள்.
மகளை தன் கையாலேயே தள்ளிவிட்டு தன் கண் முன்னே இப்படி அவளுக்கு ஆகவும் அனுசுயாவால் அந்த அதிர்ச்சியை தாங்கமுடியாமல் அப்படியே மயங்கிவிட்டார்.
கடைசி வரை தன்னை புரிந்துகொள்ளாமல் ஆணவத்திலும், சந்தேகத்திலும் தானும் நிம்மதியாக வாழாமல் யாரையும் வாழவிடாமல் செய்தவள் இன்றோ இருந்ததற்கான வலிகளையும் வேதனைகளையும் மட்டுமே மிச்சம் விட்டு சென்றிருக்கிறாள் என எண்ணி எண்ணி உடைந்து போனான்.
என்னதான் தேவகியை மனது விரும்பினாலும் அபியை திருமணம் செய்த பின்னர் அவளுக்கு உண்மையாகவே வாழ விரும்பியவன் முழுமனதாக அவளை ஏற்றுக்கொள்ள அபிக்கு சுத்தமாக அதில் உடன்பாடு இல்லை என்பதை விட நொடிக்கு நொடி அவள் படுத்தியபாடு.
வெறும் சந்தேகம் என்று நினைத்து யாரிடமும் சொல்லாமல் தனக்குள்ளேயே மருகி மருகி ஒருகட்டத்தில் இதென்ன வாழ்க்கை என்று அபியின் மீது மட்டுமல்லாது வாழ்வின் மீதும் ஒரு வெறுப்பு உண்டானது.
ஆதவ் ஒருவனுக்காக அந்த வாழ்க்கையை வாழ்ந்தவனுக்கு அப்போதும் அவளை விட்டு செல்வதென்ற எண்ணம் வரவே இல்லை. வெளியில் எத்தனை கண்டிப்பானவனாக இருந்தாலும் அந்தரங்க வாழ்வில் கோழையாகி போனான்.
“சங்கர் கண்ணு முழிச்சுட்டியாப்பா?…” என்று உள்ளே வந்த சித்ராவை பார்த்ததும்,
“வாங்க சித்தி…” என்றான்.
“சரி, சித்தி சாப்பாடு கொண்டுவந்திருக்கேன். மெதுவா எந்தி. போயி முகத்தை கழுவிட்டு வா. சாப்பிடலாம்…” என்று கொண்டுவந்ததை எடுத்து டேபிளில் வைத்தார்.
ஒரு கையால் ஸ்டிக்கை பிடித்துக்கொண்டு மெல்ல இறங்கி நடந்தவன் கூடவே சித்ரா சென்று அவனுக்கு உதவிவிட்டு வந்து அவனை அமரவைத்து முகத்தை துடைத்துவிட்டார்.
“அம்மா எங்க சித்தி?…”
“நான் தான் வீட்டுக்கு அனுப்பிவிட்டேன். நைட்டெல்லாம் கண்ணு முழிச்சுட்டு இருந்தாங்கன்னு மதினி சொன்னாங்க. அதான் அனுப்பிட்டேன்…” என்றவர்,
“அம்மாக்கிட்ட பேசுய்யா. ரொம்ப உடைஞ்சு போயிட்டாங்க. என்னத்துக்கு முகத்த திருப்பனும்?…” என்றதற்கு சங்கர் பதிலே சொல்லவில்லை.
“ஆதவ் எங்க அத்தை?…” என மகனை கேட்க,
“மதியம் மல்லி வரப்போ கூட்டிட்டு வருவா. நான் கேட்டதுக்கு என்னத்துக்கு பேச்சை மாத்துற நீ?…”
“ப்ச், அம்மா எங்க தனியாவா வீட்டுக்கு போயிருக்காங்க சித்தி?…”
“தனியா ஏன் போக போறாங்க? இப்ப எல்லாம் உங்க வீட்டுல தான் இருக்காங்க சங்கரு. அமலா மதினி, அண்ணன் கூட்டிட்டு அங்க தான் போயிருக்காங்க. ஒத்தையில் விட்டா இன்னும் நொடிஞ்சு போயிருவாங்கப்பா…”
நீலகண்டனை முதல் நாள் தான் டிசார்ஜ் செய்து சங்கரின் இல்லத்திற்கு அழைத்து சென்றிருந்தனர். சங்கரின் தாயின் கோபமெல்லாம் மகன் கண்விழிக்கும் வரை மட்டுமே. அதன் பின்னர் அவன் பேசவில்லை என்று அத்தனைபேரிடமும் முறையிட ஆரம்பித்தார்.
“ஹ்ம்ம், இப்பவாச்சும் சொந்தங்களை புரியட்டும். அமலாத்தை எப்படி போனாங்க?…”
“மாப்பிள்ளை சொல்லித்தான். மல்லியும் கூட அங்க தான இருக்கா…” இப்படி பேசியபடியே அவனுக்கு சாப்பாட்டை ஊட்டினார் சித்ரா.
“நானே சாப்பிட்டுப்பேனே சித்தி. ஒரு ஸ்பூன் குடுங்கன்னு சொன்னா கேட்க மாட்டிக்கிறீங்க. ஒரு கை நல்லாதான இருக்குது?…” என்றவனை பார்க்க தன்னையறியாமல் பேச ஆரம்பித்தார் சித்ரா.
“இந்த கைய வச்சு அவ புடிச்சு இழுக்கும் போது பளாருன்னு நாலு அறை விட்டு காரை நிப்பாட்டி அவ அம்மாவோட அனுப்பிவிட்டிருந்தேனா நீ மனுசென். அவ இழுத்தான்னு நீயும் போயிருக்க அவ போக்குக்கு. என்ன போலீஸோ? என்ன உனக்கு கத்து குடுத்தானுங்களோ?…” என்று அவர் ஆற்றமாட்டாமல் பேசிவிட்டு சட்டென பேச்சை நிறுத்தினார்.
“சொல்லுங்க சித்தி. அவ்வளோ தானா?…” என்று கேட்டான் சங்கர் மெலிதான புன்னகையுடன்.
“யம்மாடி எம்புள்ள சிரிக்க இத்தன நாளாச்சா?…” என்று அவனின் முகத்தை வழித்து திருஷ்டி கழித்தார் அவர்.
“போதும் சித்தி. நீங்க சொல்ற மாதிரி அந்த நிமிஷம் நான் என் கண்ட்ரோல்ல இல்லை. உண்மையா எனக்கு என்ன செய்யன்னே தெரியலை. பேலன்ஸ் போகவும் சுதாரிக்கிற முன்னாடி அவ என்னை இழுத்துட்டா…” என்றான் வேதனையுடன்.
“சரி விடு, போனவளை நினைச்சு என்னத்த பேச. அப்படியே அவ அம்மா குணம். இந்தம்மா சொல்ல சொல்ல கிளம்பி ஊருக்கு போயிருச்சு. இங்க இருக்கமாட்டேன்னு…” என்றார் சித்ரா.
அனுசுயாவிற்கும் சங்கர் அளவுக்கு அடி இருந்தும் ஐந்தாம் நாளே அங்கிருந்து கிளம்பினாலே ஆகிற்று என்று பிடிவாதமாய் கிளம்பிவிட்டார்.
கிளம்பிய அன்று ஷ்ரவன் எவ்வளவோ சொல்லியும், அமலா பேசியும் ஒரே மறுப்பாய் மறுத்துவிட்டார்.
“எனக்கு யாரோடையும் பேச இஷ்டமில்லை. யார் முகத்தை பாக்கவும் விருப்பமில்லை. இங்க இருந்தா மக இல்லைன்றதே என்னை குத்திட்டே இருக்குது. என் அபியை காப்பாத்த தான் நான் வெளில தள்ளினேன். தள்ளாம இருந்தா அவளும் எங்களை மாதிரி உயிர் பிழைச்சிருப்பாளோ?…”
அமலாவிடம் சொல்லி அழுதவர் அங்கிருந்தே ஆம்புலன்ஸ் ஏற்பாடு செயது கிளம்பிவிட்டார். எல்லாவற்றிலும் பிடிவாதமும், அவசரமுடிவும் எடுத்ததை போல அப்போதும் அதையே தான் செய்தார்.
“ம்மா, இவங்களை திருத்த முடியாது. விடுங்க…” என்றுவிட்டான் ஷ்ரவன்.
“ஒரே ஒரு ரிக்வெஸ்ட் தான். என் பேரனை நான் வந்து பார்க்க மட்டும் அனுமதி குடுத்தா போதும்…” என்று கண்ணீருடன் பேசிவிட்டு கிளம்பினார்.
அந்தளவிற்கு சங்கரின் தாய் அனுசுயாவை பேசி பேசி ஒருவழியாக்கி இருந்தார். அவரை அப்படியெல்லாம் எதிர்பார்த்திராத அனுசுயா மகளும் இன்றி அங்கிருக்கவே விருப்பமில்லாமல் கொஞ்சம் சரியானதும் கிளம்பிவிட்டார்.
மதிய உணவை எடுத்துக்கொண்டு வரும் பொழுது வாசமல்லி ஆதவ்வை அழைத்துக்கொண்டு வர உடன் ஷ்ரவனும் வந்திருந்தான்.
“டாடி…” என்று தந்தையின் மடியில் வந்து அமர்ந்துகொண்ட ஆதவ்,
“ஓகே, டாடி ஓகே…” என கேட்க,
“அப்பா நல்லா இருக்கேன் குட்டி. நீ சாப்பிட்டியா?…” என்று மகனின் கன்னத்தை வருடியபடியே கேட்க,
“அவன் உங்களோட சாப்பிடறேன்னு சொல்லிட்டான் அண்ணே…” என வாசமல்லி அவனுக்கு எடுத்துவைத்து ஆதவ்க்கு ஊட்ட ஆரம்பித்தாள்.
ஷ்ரவன் சங்கருக்கு உதவி செய்ய சங்கரின் பார்வை மொத்தமும் மகனிடமே. தன்னுடலில் இருக்கும் காயங்கள் ஒவ்வொன்றையும் பிஞ்சு விரலில் தடவி தடவி பார்த்துக்கொண்டே தான் இருந்தான் ஆதவ்.
அவனுக்கு தெரியும் அபியை குழந்தை தேடியிருப்பான் என்று. வீட்டினர் வெகுவாக சமாளித்தே வைத்திருந்தனர். தன்னை சுற்றி என்ன நடக்கிறதென தெரியாமல் சடங்குகளை செய்தான் குழந்தை.
இப்போதும் அபி தந்தையை போல ஏதோ ஒரு அறையில் இப்படி இருக்கிறாள் என்று நினைத்துக்கொண்டே இருந்தான். சங்கரிடம் கேட்க வேண்டாம் என்று ஆதவ்விற்கு வாசமல்லி சொல்லியிருக்க ஆதவ்வும் நல்லபிள்ளையாய் தலையாட்டினான்.
“டாடி வீட்டுக்கு…” என கேட்க,
“இன்னும் த்ரீ டேய்ஸ்ல வீட்டுக்கு அப்பா வந்துருவேன். சரியா?…” என மகனிடம் வேறு கதைகள் பேசிக்கொண்டிருக்க ஆதவ் சங்கரின் மடியிலேயே பேசியபடி தூங்கிவிட்டான்.