“டாக்டர்ட்ட பேசு ஷ்ரவா, எனக்கு இங்க இருக்க முடியலை. நான் வீட்டுக்கு வரேன். இப்போ நான் ஓகே தானே? என்னால ஸ்டிக் வச்சு நடக்க முடியுதே…”
“ஓகே, அத்தான் ஃபுல் செக்கப் பண்ணிடுவோம் இன்னைக்கு. அப்பறமா முடிவு பண்ணுவோம்…”
“என்னடா ட்ரைவ் பண்ணும் போது கேர்லஸா நான் இருந்ததால இப்பவும் நான் சரியில்லைன்னு நினைக்கிறியா?…” என்று பல்லை கடித்த சங்கர் மகனை கண்கலங்க பார்த்தான்.
“முடியலடா. ஆதவ் இங்க வந்து இப்படி சுருண்டு படுத்துருக்கறதை பாரு. வீட்டுல அவன் பாட்டுக்கு இருப்பான். இப்ப இவனை இப்படி அலைகழிக்கனுமா?…” என சொல்ல அவர்களின் பார்வை ஆதவ் மேல் படிந்து மீண்டது.
“அத்தான் நீங்க நல்லா இருக்கறது முக்கியம்….”
“நான் செத்தாடா போய்ட்டேன்? என் மகனுக்காக திரும்ப பிழைச்சு வந்திருக்கேன். அவனுக்கு இப்படி ஒரு கஷ்டத்தை நான் குடுக்க விரும்பலை…”
“ப்ச், ப்ராக்ட்டிக்கலா பேசுங்க அத்தான். இது செண்டிமெண்ட் பார்க்கற நேரமில்ல…”
“என் மகனுக்கு அப்பறம் தான் நான் திடமான மனுஷன், போலீஸ் எல்லாம். அவனை தாண்டி மத்ததை நான் யோசிப்பேன். இப்ப எனக்குன்னு அவன் தானே இருக்கான்…” என்று கண்கலங்க சொல்ல,
“அதான் அண்ணே அம்புட்டு சொல்லுறாங்க தானே அத்தான். டாக்டருட்ட நீங்க பேசுங்க. கூடவே இருந்து நான் பார்த்துக்கறேன்…” என்று வாசமல்லியும் சொல்ல வேறு வழியின்றி அனைத்து பரிசோதனைகளும் மறுநாளே மேற்கொள்ளப்பட்டு மாலையே வீடு திரும்பினான் சங்கர்.
ஒரு மாதம் ஆகிற்று அவன் நன்றாக உடல் தேறி வர. இன்னும் கையில் இருந்த கட்டு பிரிக்கப்படவில்லை அவனுக்கு. மற்றபடி பூரண குணமாகிவிட வாசமல்லியும் அங்கேயே தான் இருந்தாள்.
இந்தளவிற்கு அவர்களின் துணையோடு இதனை கடந்து வந்திருந்தனர் சங்கரின் குடும்பத்தினர். ஒரு கஷ்டம் வரும் நேரம் தான் சொந்தங்களின் அருமை புரிந்தது சங்கரின் அம்மாவிற்கு.
எதை செய்தாலும் சித்ராவிடம் ஒருவார்த்தை பேசிவிடுவதும், வாசமல்லியை மகளாய் தாங்குவதுமாய் மாறிப்போனார். மகனின் ஒதுக்கம் அவர் மற்றவர்கள் பக்கம் பாசமுடன் நடந்துகொண்டார்.
அப்போதுதான் சித்ரா தயக்கத்துடன் தேவகியை பற்றி பேச்சை எடுத்தார் சங்கரின் அம்மாவிடம்.
“இப்ப இப்பிடி சொல்லுதேன்னு நினைக்காதீங்க அக்கா. குத்தி காமிக்கனுமின்னு இல்லை…”
“நீ எதுனாலும் சொல்லு சித்ரா. இத்தனை நாள் இருந்த மாதிரி நான் இல்லை. என் மகன் என்கிட்டே ஒரு வார்த்தை பேச மாட்டானான்னு தவிச்சுட்டு இருக்கேன். எல்லாத்துக்கும் கடைசில என் சொல் அம்பலம் ஏறனும்னு வாழ்ந்துட்டு வந்தேன். அது இதை பாக்கத்தானா?…” என்று கலங்கி போக,
“எல்லா கெட்டதுலயும் ஒரு நல்லதை நாம தான பார்க்கனும். நடந்ததை நினைச்சு அழுதா பிள்ளைகளை யாறு பாக்க?…”
“எனக்கொன்னு ஆனாலும் நீயும், அமலாவும் பார்ப்பீங்கன்னு எனக்கு நம்பிக்கை இருக்குது. நம்ம மல்லி பெத்த பிள்ளையா என் பேரனை தாங்கறா. அவ மனசுக்கு அவளை என்னலாம் பேசிட்டேன் நான்…”
“அட விடுங்கன்றேன். அவ பாத்தா நல்லா வசுவிடுவா. பேசாம கண்ண துடைங்கக்கா…” என்றவர்,
“இப்படியே எத்தன நாலு இருக்கறதா உத்தேசம்?…” என கேட்க,
“புரியல சித்ரா?…” என்றார் அவர்.
“மல்லியை அடுத்த வாரம் வந்து கூட்டிட்டு போறதா மருமகன் சொல்லிருக்காரு…” என்று சொல்லவும் ஒரு நொடி முகம் வாடிவிட்டது அவருக்கு.
“ஆமால, கல்யாணம் ஆனா புள்ள. இங்க மாசக்கணக்கா இருக்குது. சரி தானே?…”
“என்ன சரிதானே? அவ போகட்டும். சங்கருக்கும், பேரனுக்கும் ஒரு துணை வேண்டாமா?…”
“என்ன சித்ரா சொல்ற? அந்த ராட்சஸி போய் சேர்ந்து ஒன்றரை மாசம் தான் ஆகுது. அதுக்குள்ளே இன்னொரு கல்யாணமா?…” என்று அதிர்ந்து போனார்.
“கல்யாணம்ன்னா உடனேவா? இப்ப சொல்லிவைக்கறேன். பொறவாட்டி யோசனை பண்ணுங்க அக்கா…” என்ற சித்ரா,
“சொல்லுதேன்னு குறையா நினைக்காதீங்க. மொதவாட்டி தான் சங்கரு விருப்பம் தெரிஞ்சும் ஒதுக்கிட்டு அபியை பாத்து கட்டி வச்சேங்க. எந்த சாமி புண்ணியமோ ஒன்னும் இல்லாம புள்ள பாடாவதியா தான் திரும்ப கெடச்சிருக்குது. இப்பவாச்சும் அதோட விருப்பத்துக்கு பாருங்க…” என்று சொல்ல சித்ரா சொல்ல வருவது புரிந்தது அவருக்கு.
“சித்ரா நான் பொண்ணு கேட்டா அவங்க வீட்டுல சம்மதிச்சாலும் தேவகி சம்மதிக்கமாட்டாம்மா. நான் அந்த பொண்ணை அப்படி பேசிட்டேன். அவ மூஞ்சில எப்படி முழிப்பேன்?…” என்று முகத்தை மூடிக்கொண்டு அழ,
“புள்ள வாழ்க்க சிறக்கனும்னா செய்யத்தான் வேணும். உங்களுக்காக ஆசைய புதைச்சுட்டு சங்கரு அபியை கல்யாணம் பண்ணிக்கல? அம்புட்டு கஷ்டத்துலையும் ஒத்த வார்த்த நீங்க பாத்து கெட்டிவச்சது தானான்னு கேட்டிருக்குமா? யோசன பண்ணுங்க…”
“நீ சொல்லுதது எல்லாம் சரிதான். ஆனா?…”
“சம்மதிப்பாங்க அக்கா. எல்லாம் பேச்சுல தான் இருக்குது. பார்த்தீங்கள்ள. அவங்க வீட்டுல எம்புட்டு சடவு இருந்தாலும் துஷ்டிக்கு வந்தாங்க இல்ல…” என்றதும் ஆமாம் என தலையாட்டினார்.
“தேவகி அண்ணனும் அப்பாவும் வந்திருந்தாங்க. பார்த்தேன். ஆனா தேவகி. அன்னைக்கே அவ தான் எனக்கு உங்க பையன் மேல எந்த விருப்பமும் இல்ல, வெளில போங்கன்னு சொல்லி என்னை பேசினா…”
“பேசத்தான் செய்யுவா. அவ பாவம். ஆனா தைரியசாலி. ஊருக்குள்ள எம்புட்டு பேச்சுக்கும் அசரலையே. இன்னும் கல்யாணம் செஞ்சுக்கலையான்னு கேட்காத ஆளில்லா. அசஞ்சு குடுக்கல அந்த புள்ள. மானஸ்தி. கொஞ்சம் கஷ்டந்தேன். ஆனாலும் பாத்துக்கிடலாம். நாங்கலாம் எதுக்கு இருக்கோம்…”
“சங்கர்ட்ட நான் என்னன்னு பேச இதை பத்தி? எனக்கு பயமா இருக்கே சித்ரா….”
“அட நீங்க என்ன தனியாவா பேச போறீங்க? எனக்கு நீங்க என்ன நினைக்கறீங்கன்னு தெரிஞ்சுக்கனும். அம்புட்டுதேன். ஒரு கெட்டது நடந்த வீட்டுல சுபகாரியம் நடக்கனும்னு சொல்லுவாங்க. ஒரு மூணுமாசம் போவட்டும். பேசுவோம்க்கா….”
“சம்மதிப்பானா சித்ரா…”
“சம்மதிக்கறானோ இல்லையோ யோசிப்பான்ல. நாங்களும் கிளம்பிட்டா நீங்க மட்டுந்தேன் இருப்பீங்க. அப்ப கொஞ்சம் கொஞ்சம் புரியும். இப்பவே கேட்டா தான் தாம்தூம்ன்னு குதிப்பான். இப்போதைக்கு விடுங்க…” என்று தைரியம் சொன்ன சித்ரா,
“சங்கரை சம்மதிக்க வச்சிடலாம். தேவகிய தான் சம்மதிக்க வைக்க முடியாது. தலைகீழா நின்னாலும் எம்புள்ளைக்கு ஒரு வாழ்க்கைய பாத்துட மாட்டேனா?…” என்றவரின் கையை பிடித்து கண்களில் ஒற்றிக்கொண்டார் சங்கரின் தாய்.
மறுவாரமே வாசமல்லியை கூட்டிக்கொண்டு ஊட்டிக்கு வந்து சேர்ந்தான் ஷ்ரவன். வரும் வழியெங்கும் ஒற்றை வார்த்தை பேசவில்லை அவளிடம். வீடு நுழைந்ததும் அவளை அள்ளிக்கொண்டவன்,
“ஊருக்கு வரனும், புருஷனை பார்க்கனும்னு எண்ணமே இல்லை உனக்கு. என் மூஞ்சியை பார்த்தா கூப்பிட்டுடுவேன்னு பம்மி பம்மி ஓடற கண்ணுக்கும், கைக்கும் சிக்காம. உன்னை என்ன பன்றேன் பாரு…” என்றவனின் பழிவாங்கல்கள் எல்லாம் வாசமல்லிக்கு கிச்சுக்கிச்சு மூட்ட,
“அத்தான் கோபப்படறது சரி. ஆனா இப்படியெல்லாம் கோவப்படாதீங்க. சிரிப்பு தான் வருது…” என்று அவனை சீண்ட நெருக்கங்கள் கூடி பேச்சுக்கள் குறைந்தது.
இரண்டு மாதங்கள் கண்சிமிட்டும் நேரத்தில் ஓடிவிட சங்கரும் பணியில் மீண்டும் சேர்ந்துவிட்டான். தந்தையும் அவ்வப்போது இல்லாது, தாயும் இல்லாது தவித்து போனதென்னவோ ஆதவ் மட்டுமே.
இரு வாரங்களுக்கு ஒருமுறை ஷ்ரவனும், வாசுவும் சென்று பார்த்துவிட்டு இருநாட்கள் இருந்துவிட்டே வருவார்கள். அவர்கள் இருக்கும் வரை இருக்கும் கலகலப்பு குறைந்து எப்போது அவர்கள் வருவார்கள் என்று தேடி ஏங்க ஆரம்பித்ததும் தான் மகனின் ஏக்கம் புரிந்தது அவனுக்கு.
இந்த சில நாட்களில் மகனுக்கு கொஞ்சமாய் புரியவைத்திருந்தான் அவன் அபி இல்லை என்பதன் நிதர்சனத்தை. புரிந்ததோ என்னவோ இனி தாய் வரப்போவதில்லை என்பது மட்டும் விளங்கியதை போல இருந்துகொண்டான் ஆதவ்.
அவ்வப்போது அபியின் படங்களை பார்த்தபடி அவன் அமர்ந்திருப்பது சங்கரின் மனதை பிழியும்.
“அப்பா போதும்டா கண்ணா. அப்பா உன்னை பார்த்துப்பேன்…” என்று முடிந்தளவு மகனுடன் இருக்குமாறு பார்த்துக்கொண்டான்.
பள்ளிக்கும் செல்ல ஆரம்பித்ததனால் அதில் பகல் கழிய மாலை நேரம் அமலா வந்துவிடுவார் ஒருநாள், இல்லை என்றால் ஆதவுடன் சங்கரின் பெற்றோர் வந்துவிடுவார்கள்.
இப்படியே செல்ல அமலா தான் மெல்ல பேச்சை துவங்கினார் வாசமல்லியும், ஷ்ரவனும் வந்திருக்கும் போது. சித்ராவின் யோசனையே அதற்கு காரணம்.
ஆதவ்வின் வாட்டத்தை சொல்ல சொல்ல இனியும் வெகுநாட்கள் தள்ளி போடவேண்டாம் என்று முடிவெடுத்து அனைவரும் ஒன்று கூடி திருமணத்தை பேச,
“முடியவே முடியாது. ஏன் என்னால என் பிள்ளையை தனியா வளர்க்க முடியாதுன்னு நினைக்கறீங்களா?…” என்று சீறினான் அவன்.
“இப்ப நான் தேவகியை கல்யாணம் பண்ணிக்கிட்டா அபி சொன்னதெல்லாம் உண்மைன்னு ஆகிடாதா? இதுக்குன்னே காத்திட்டு இருந்ததை போல ஆகிடும். நோ. நோ…” என்று அவன் சத்தம் போட,
“ஓகே அத்தான், அப்போ வேற பொண்ணாவது பார்ப்போம். ஆதவ்க்காக தான் இதுவும்…” என ஷ்ரவன் சொல்ல,
“மத்தவங்க ஏதாவது பேசுவாங்க, சொல்லுவாங்கன்னு நினைக்கிறியா சங்கர்?…” என நீலகண்டன் கேட்க,
“எனக்குன்னு மனசாட்சி இருக்கே. அபியை நான் சரி பண்ண முடியாம இருந்தப்பவே என் மகன் முகத்தை பார்த்தே இந்த வாழ்க்கையை கழிச்சிடனும்னு முடிவுல இருந்தேன். என்னால அவளை விலக முடியாமலா? ஆனா அப்படி செய்ய நான் விரும்பலையே. வேண்டாம். இந்த கல்யாண பேச்சை இத்தோட நிறுத்திருங்க…”
முடிவாய் சங்கர் சொல்லிவிட அனைவரும் அதிர்ந்து போய்விட்டனர். இப்படி ஒரேடியாக மறுப்பவனை என்ன சொல்லி சம்மதிக்க வைக்க என்று திணறி போயினர்.
“என்ன சித்ரா இது? தேவகியை தான் சமாளிக்கனும்ன்னு நினைச்சு பயந்தா இவன் என்னடான்னா இப்படி பேசிட்டு பேசிட்டு போய்ட்டனே…” என்று அமலா புலம்பினார்.
சித்ரா இங்கே பேசியதை போல தேவகியின் வீட்டிலும் பேசியிருக்க அவள் பதிலே பேசவில்லை.
அவர்கள் நினைத்ததை போல சங்கரும் சரி, தேவகியும் சரி ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் இல்லை என்று பிடிவாதமாய் நின்றனர்.