பூ – 18
சங்கரிடம் ஒருமுறை பேசியதோடு சரி. மீண்டும் பேசினால் ட்ரான்ஸ்பர் வாங்கிக்கொண்டு பிள்ளையோடு வேறிடம் சென்றுவிடுவேன் என்ற பின்னர் யாரும் அவனை வற்புறுத்தவில்லை.
தேவகியின் வீட்டிற்கு இப்போதெல்லாம் அடிக்கடி சென்று வந்துகொண்டிருந்தார் சித்ரா. அபியின் இறப்பிற்கு பின் அந்த குடும்பத்திடம் அனைவருமே ஒட்டுதல் காட்ட அதற்கே தேவகி இன்னும் தள்ளித்தான் சென்றாள்.
வாசமல்லியிடம் மட்டும் பேசுபவள் ஆதவ்வை பற்றி வாசுவாக சொன்னால் கேட்டுக்கொள்வாள். தானாக எதையும் கேட்பதில்லை. இது வாசமல்லிக்கு பெரும் கவலையாக இருந்தது.
“இந்த தேவகி மதினி ஒத்த வார்த்த வாயவிட்டு நம்ம ஆதவ்வ கேட்டாதான் என்னவாம்? நானா சொன்னாத்தான் உண்டு. கேட்டாலும் ம்ம் மட்டுந்தான் வருது பதிலுக்கு…” என்று ஷ்ரவனிடம் புலம்புவாள்.
“நீயா ஏன் சொல்ற? கொஞ்ச நாளைக்கு அவங்கட்ட ஆதவ் பத்தியோ அத்தானை பத்தியோ எதுவும் சொல்லாம இருந்து பாரேன். கேட்காங்களா இல்லையான்னு தெரிஞ்சிரும்…” என்று அவன் சொல்ல,
“நானும் நீங்க சொல்லுதத கேட்கனும்னு தான்த்தான் நினைக்கறேன். ஆனா பாருங்க. மறந்து போயிருது…” என்று தலையை தட்டிக்கொண்டு அப்படி சொல்லும் பொழுது என்னவோ செய்துகொள் என்றுவிடுவான்.
ஊட்டி, அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அந்த வாரம் முழுவதும் கடும் மழையும் புயல் சேதமும் அதிகமாய் இருக்கும் என வானிலை அறிவிப்பில் சொல்லிக்கொண்டு இருக்க முன்ஜாக்கிரதை நடவடிக்கைகள் ஊரெங்கும் ஏற்படுத்தப்பட்டிருந்தது.
ஷ்ரவன் வீட்டில் இருப்பதே அறிதென்பதை போல வேலை வேலை என்று அதில் தீவிரமாக இருக்க இப்போதெல்லாம் அழகுவோடு சேர்ந்தே வெளியே எங்கேனும் செல்ல பழகி இருந்தாள் வாசு.
முதலில் மறுத்தவன் பின் இப்படியே வீட்டில் அவளும் என்ன செய்வாள் என்று போய் வரட்டும் என்றுவிட்டுவிட்டான்.
ஊரையே சுற்றி அனைவரிடமும் நல்ல பழக்கம் பிடித்து வைத்திருந்தாள் அவனின் மனைவி அந்த சில மாதங்களில்.
அன்று ஷ்ரவன் காலை சாப்பிடாமல் கூட விடியற்காலையிலேயே கிளம்பியிருக்க மழை பெய்யும் அறிகுறிக்கு லேசாய் காற்று வீசிக்கொண்டு இருந்தது. மூன்று மணி போல மதிய உணவுக்கு தான் மீண்டும் வந்தான்.
“என்னத்தான் விறுவிறுன்னு அடிக்குது இந்த காத்து…” என்று பரபரவென கையை தேய்த்துக்கொண்டே அவன் சாப்பிட்டு கிளம்பும் நேரம் பேச,
“இதை விட மழை ஆரம்பிச்சா இன்னும் காத்து ரொம்ப மோசமாகும். மண்சரிவு எல்லாம் இருக்கும்…” என சொல்ல,
“கரண்டு எல்லாம் போவும்னு சொல்லுவாங்கல்ல. எங்கயும் கடகன்னிக்கு போய் ஒத்த பொருளு வாங்க முடியுமா?…”
“ஹ்ம்ம், ஆமா. அதனால தான் எல்லாரும் முன்னாடியே வீட்டுக்கு அவசியத்துக்கு தேவையானதை எல்லாம் வாங்கி வச்சிருவாங்க. எப்போ நிலைமை சரியாகுமோ? உடனேவும் இந்த மழை விடலாம். இப்படி நிறைய இருக்குது…” என பேசிக்கொண்டே அந்த நேர நிலவரங்கள் எப்படி இருக்கும் என்று அவளிடம் சொல்லிகொண்டிருக்க வாசமல்லியின் மனக்கணக்கு ஆரம்பித்திருந்தது.
“என்னடி, பேசிட்டிருக்கேன். பராக்குபாத்துட்டு இருக்க?…” என அவளின் தலையில் தட்ட,
“தட்டாதீங்க அத்தான். குட்டையாகிடுவேன்…”
“பார்ரா, வளர்ந்த வரைக்கும் போதும். ஏற்கனவே என் உயரத்துக்கு இருக்க…” என அவளுடன் நின்று காண்பிக்க,
“வளர்ற புள்ள அப்படித்தான் இருப்பேன்…”
“ஹ்ம்ம், என்னவோ வளர்ந்துக்கோ. ரொம்ப குளிரா இருந்தா தெர்மல்வியர் எடுத்து வச்சிருக்கேன். போட்டுக்கோ. அதுக்கு மேல ஸ்வெட்டர் போட்டுக்கோ…”
“ஹ்ம்ம். சரி…” என்று வேகமான தலையாட்டுடன் அவனை வழியனுப்பியவள் ஓடிச்சென்று கிட்சனில் என்னென்ன வேண்டும் என்று தேட ஆரம்பித்தாள்.
வேகமாய் ஒரு நோட்டை எடுத்து குறைவாகவும், இல்லாத பொருட்களையும் எழுதிவிட்டு தன்னுடைய பேக்கை எடுத்து பணம் இருக்கிறதா என்று சரி பார்த்தவள் உடனே கிளம்பிவிட்டாள்.
வாசல் கதவை பூட்ட போகும் முன்பு தான் அழகு இல்லை என்பதே ஞாபகம் வந்தது. எப்போதும் நாதனின் மனைவியோடு சேர்ந்து வீட்டிற்கு தேவையானதை எல்லாம் வாங்கி வருவாள். இப்போது அவர் இல்லை.
பழக்கமான இடமென்றாலும் தனியே செல்வது இதுவே முதல்முறை அவளுக்கு. ஒரு யோசனைக்கு பின்னர் ஷ்ரவனுக்கு அழைத்தாள்.
“வாசு, நான் அப்பறம் பேசறேன். வெளில இருக்கேன்…” என்றவனின் குரல் இரைச்சலுடன் கேட்க,
“அத்தான் நான் கடைக்கு போய்ட்டு வரேன். வீட்டுக்கு வாங்கனும்…” என்றவளின் குரல் அவனுக்கு சரியாகவே கேட்கவில்லை.
“வாசு கேட்கலை….” என இவன் கத்த போனை வைத்தவள் அவனுக்கு மெசேஜை அனுப்பிவிட்டு கதவை பூட்டிக்கொண்டு கிளம்பிவிட்டாள்.
மழை தூறலாக ஆரம்பித்திருக்க நடுங்கியபடி குடையை பிடித்துக்கொண்டு அருகில் இருக்கும் கடைக்கு சென்று வாங்கிவிட்டு மழை பெரிதாகும் முன்னர் வந்துவிடலாம் என்று இவள் நினைத்தபடி வேகவேகமாய் நடந்தாள்.
அப்போதே மேகம் கருகருவென்று இருந்து வெளிச்சத்தை மறைக்க ஆரம்பித்தது. கதைகள் எல்லாம் மூடப்பட்டிருக்க இன்னும் கொஞ்சம் கொஞ்சம் என்றே நடந்து வேறெங்கோ சென்றிருந்தாள்.
கிடைத்ததை வாங்கிக்கொண்டவள் மீண்டும் வீடு திரும்பும் நேரம் மழை பெரிதாக பெய்ய புயல்காற்றுடன் சுழன்றடிக்க ஆரம்பித்தது. திறந்திருந்த ஒருசில கடைகளுக்குள் சென்று நின்றுகொண்டவள் போனை எடுத்து பார்க்க இரவு நெருங்கியது.
ஷ்ரவன் ஏகப்பட்ட முறை அவளை அழைத்திருக்க மீண்டும் அவனுக்கு அழைக்க நினைத்தவளுக்கு முடியவில்லை. சுத்தமாக டவர் இல்லாது போல மின்சாரமும் துண்டாகி இருள் சூழ்ந்தது அவ்விடமே.
தன்னை சுற்றி இன்னும் பலர் நின்றிருக்க ஓரளவு பயமின்றி இருந்தாலும் கணவன் தேடுவானே என நினைத்து பதைபதைத்து தான் போனாள்.
வாசமல்லி அனுப்பிய மெசேஜை உடனே பார்க்காதவன் மூன்றுமணி நேரம் கழித்தே பார்க்க பார்த்ததும் பதறி போனான்.
“என்ன காரியம் பண்ணிவச்சிருக்க வாசு?…” என்று வாய்விட்டு சொல்லியவன் உடனே கிளம்பி வீட்டில் வந்து பார்க்க பூட்டியிருந்த வீட்டை பார்த்ததுமே திக்கென்று ஆனது.
ஏற்கனவே ஓரிடத்தில் நிலச்சரிவு என்று தகவல் வந்திருக்க ரெஸ்க்யூ டீம் சென்றிருக்கின்றனர். இவள் எங்கு சென்று மாட்டியிருக்கிறாளோ? என எண்ணியவன் கலங்கி போனான்.
‘உயிரை வாங்கறியேடி’ என்றவன் அவளை தேட ஆரம்பிக்க வாசுவோ லேசாய் மழை குறையவும் கொஞ்சம் கொஞ்சமாய் போனின் டார்ச்சில் இடம் பெயர்ந்து ஒருவழியாய் வீடு வந்து சேர ஒன்பது மணியாகிவிட்டது.
“நல்லவேள இங்க கரண்டு இருக்குது…” என சந்தோஷமாக வந்தாள்.
வந்ததும் ஹீட்டரில் சூடாக குளித்தவள் வேறு உடையை மாற்றிவிட்டு வந்து நடுங்கியபடி வெந்நீர் போட்டு குடித்தாள். அதன் பின்னர் தான் நடுக்கம் குறைய ஆரம்பித்தது.
பசி எடுக்க அவசரத்திற்கு மிளகு, பூண்டு, உளுந்து, கைப்பிடி அரிசி சேர்ந்து வறுத்து குக்கரில் குலைய வேகவிட்டு கஞ்சி செய்து ஊறுகாயுடன் குடிக்கவும் தான் நன்றாக பார்க்கவே முடிந்தது அவளால்.
“எப்பா பசி வந்த இந்த கண்ணு வேற மங்கலாகிடுது…” என வந்தவள் ஷ்ரவன் வரவும் அவனுக்கு எதுவும் செய்துகொள்ளலாம் என்று அவனுக்கு கேட்க போனை எடுக்க போன் சுத்தமாய் சார்ஜ் இல்லாமல் உயிரை விட்டிருந்தது.
அதை சார்ஜில் போட்டவள் ஆன் செய்து பார்க்க மழைநீர் உள்ளே போனதால் ஆன் ஆகவும் இல்லை. மீண்டும் சுட்விட்ச்சை ஆஃப் செய்து ஆன்செய்த நேரம் அங்கேயும் மின்சாரம் துண்டிக்கப்பட,
“போச்சு. இருட்டுக்குள்ள உலாத்தவேண்டியதான்…” என உள்ளே சென்று அப்படியே படுத்துவிட்டாள். கரண்ட் வரும் போது வரட்டும் என்று.
மழைநீரில் கால்கள் வேறு ஊறியிருக்க அதனுடன் நடந்தது வலிக்கவேறு செய்தது. சோர்வுடன் கண்ணை மூடியதும் அவள் தூங்கிவிட ஷ்ரவன் அவள் செல்லும் இடமெல்லாம் தேடி பார்த்துவிட்டு வீடு வர நடு இரவானது.
ஒருவேளை வந்திருப்பாளோ என்ற எண்ணத்தில் தான் மீண்டும் வீட்டின் பக்கம் வந்தான். அவன் நினைத்ததை போலவே ஜன்னலில் பெரிய மெழுகுவர்த்தி வெளிச்சம் எரிந்துகொண்டு இருக்க போன உயிர் வந்ததை போல வேகமாய் ஜீப்பை நிறுத்திவிட்டு வீட்டிற்குள் வந்தான்.
அந்த மெழுகுவர்த்தியை எடுத்துக்கொண்டு நேராக படுக்கைக்கு வர அங்கே ஆழ்ந்த நித்திரையில் வாசு.
நின்ற மூச்சு வந்ததை போல இருந்தது அவனுக்கு அவளை பார்க்கவும். வந்துவிட்டாள் என்னும் ஆசுவாசம் மறைவதற்குள் கோபம் அதிகமாக இப்படி பைத்தியக்காரன் போல சுற்றவைத்துவிட்டாளே என்ற ஆற்றாமையுடன் அவளை எழுப்ப,
“அத்தான், கரண்ட் இன்னும் வரலையா? சாப்பிடறீங்களா?…” என்றாள் அவன் இப்படி அர்த்த ராத்திரியில் சாப்பிடும் பழக்கமற்றவன் என தெரிந்தும்.
“எங்க போன வாசு?…”
“மெசேஜ் பண்ணிருந்தேனே அத்தான்? அச்சோ நனையுறீங்க. இருங்க வெந்நீர் வைக்கறேன். கரண்ட் இல்ல. சுடுதண்ணி வராது. அடுப்புல போடறேன்…” என்று அவன் கையில் இருந்த மெழுகுவர்த்தியை வாங்கிக்கொண்டவள் வேகமாய் செல்ல,
“நில்லு வாசு, பேசறத கொஞ்சமும் மதிக்கமாட்டியா நீ?…”
“அத்தான் நீங்க உடுப்ப மாத்துங்க. போங்க…” என்று சொல்லிக்கொண்டே அவள்பாட்டிற்கு சென்றுவிட கோபத்துடன் உடைமாற்றி பாத்ரூம் உள்ளே சென்று நின்றான்.
மூன்று அடுப்பிலும் பாத்திரம் வைத்து வெந்நீர் வைத்தவள் அவனுக்கு குடிக்க முதலில் கொண்டுவந்து தந்தாள்.
“துவட்டிட்டீங்களா? இத குடிங்க. வெந்நீர் சுட்டுடும். தூக்கிட்டு வரேன்…” என அப்போதும் சென்றுவிட,
“பேச்சை கேட்காமலா போற?” என முறைத்தபடி மௌனமாய் இருந்தான். அதற்குள் வெந்நீரை ஊற்றிக்கொண்டு வந்து தந்தவள்,
“குளிச்சுட்டு வாங்கத்தான். குடிக்க கடுங்காப்பி தரேன்…” என்று சொல்லிவிட்டு செல்ல அவனின் மௌனம் கூட அவளுக்கு புரியவில்லை.
ஒன்றும் பேசாமலே மறுநாளும் அவன் இருக்க அவளாக பேசினாலும் அவனிடத்தில் ம்ம் மட்டுமே. மழையில் நனைந்திருந்ததால் வாசுவிற்கு காய்ச்சலும் வந்துவிட எதற்கும் அவளை திட்டமுடியாமல் பார்த்துக்கொண்டான்.
மாத்திரையை போட்டு லேசாக உடல் நன்றாக இருந்தால் எழுந்து சென்று சமைத்துவிட்டு வந்து படுத்துக்கொள்வாள்.
மாத்திரை, மருந்துகளை ஷ்ரவன் எடுத்து தர அதற்கு நூறு வியாக்கியானம் பேசிக்கொண்டு தான் சாப்பிடுவாள். அவளாகவே கசாயம் போட்டுவைத்து அதையே தண்ணீருக்கு பதில் குடிக்க,
“இதென்ன இத்தனைதடவை குடிக்க? அளவா குடி…”
“இந்த கசாயம் எவ்ரி கால் அவர் ஒருக்கா குடிக்கலாம் அத்தான். ஒன்னுமாவாது…” என்பாள்.
ஒருவாரம் ஆகிற்று, ஊட்டியில் நிலவரம் சீராக ஆரம்பிக்க இயல்புநிலை திரும்பியது அங்கே. மழையும் குறைந்துவிட்டது.
அன்று ஷ்ரவனுக்கு விடுமுறை. ஊரில் இருந்து சித்ரா பத்மநாபன் போன் செய்திருக்க அதை பற்றி சொல்லிக்கொண்டு இருந்தாள் வாசு.
“ஊர்ல திருவிழா வருதுத்தான். அப்பா உங்கட்ட சொன்னதா சொன்னாரு. என்னைக்கி போவோம்?…” என கேட்க அவள் எத்தனை கேட்டும் பதிலின்றி இருந்தான் அவன்.
“அத்தான் இது நல்ல இல்லை. நானும் பார்த்துட்டே இருக்கேன். என்கிட்டே பேசறதே இல்லை. என்ன நினைச்சுட்டு இருக்கீங்க? பேசவே மாட்டேன்றீங்க…” என அவனை பிடித்து கேட்க,
“என்ன பேசனும்? அதான் எனக்கும் சேர்த்து நீயே பேசறியே. நான் பேசவந்தப்ப நீ கேட்டியா? போடி…”