“சொன்னாப்ல என்ன ஆக போகுது? சொல்லு…” என்று ஷ்ரவன் முறைக்க,
“ஒன்னும் ஆகாது. என்கிட்டே சொன்னா ரகசியமா பத்திரமா வச்சுப்பேன்….”
“அதான் தெரியுமே ரகசியத்தை நீ பாதுகாத்தது. பொங்கலை வை. இல்ல இப்படியே ஊருக்கு கூட்டிட்டு போய்டுவேன்…”
“நான் வரமாட்டேன் உங்களோட. சும்மா சும்மா மிரட்டிட்டே இருக்கீங்க. இது எங்க ஊரு. ஆமா…” என அவள் சிலிர்த்துக்கொள்ள,
“இங்க கெக்கபிக்கேன்னு நான்பாட்டுக்கு சிரிச்சா என்னை என்ன நினைப்பானுங்க? ஒரு போலீஸா எவ்வளவு மெயின்டெய்ன் பண்ணி வச்சிருக்கேன். நீ வேற…” என சொல்லிக்கொண்டே அங்கிருந்து நகர வாசு தேவகி இருந்த பக்கம் செல்ல போக,
“நீ என் கூட வா, கடைக்கு போய் எதாச்சும் வாங்கலாம்…”
“அதெல்லாம் வேண்டாம். ஊருக்கு கூட்டிட்டு போலாம்னு பார்க்கறீங்க…” என முறுக்கிக்கொண்டாள்.
“சத்தியமா இல்ல வாசு. வா. நைட்ல சரியா பார்க்கலை. இப்ப வந்து சுத்தி காண்பி. எனக்கு காமிக்கமாட்டியா என்ன? அத்தான் அத்தான்றது எல்லாம் சும்மாவா வாசு?…” என்று தாஜா பண்ண உடனடியாய் மலையிறங்கினாள் வாசு.
அவளுடன் சேர்ந்து கோவிலின் வெளியே இருந்த இடங்களுக்கு செல்ல தேவகி ஆதவ்வை தன்னுடைய மடியில் அமர்த்திக்கொண்டாள்.
தேவகியின் அண்ணியும், அம்மாவும் ஆச்சர்யமாய் பார்க்க அருகில் நின்றுகொண்டு இருந்த அண்ணன் தாயிடம் எதுவும் கேட்காதே என்று சமிஞ்சை செய்யவும் அவர்களும் ஆதவ்வுடன் பேசியபடியே பொங்கலை வைத்தனர்.
பொங்கல் பொங்கும் நேரம் அனைவரும் குலவை போட அந்த சத்தத்தை கேட்டு கை தட்டி சிரித்த ஆதவ்,
“ஒன்ஸ் மோர்…” என்று கேட்க,
“ம்மா, போடும்மா. ஆசைப்படறான்ல…” என்று தேவகியும் சொல்ல,
“இந்த புள்ள மேல இம்புட்டு பிரியம் வச்சிருக்கியே. அப்பறம் ஏன்டி கல்லு மனசா இருக்க?…” என்றார் அவர்.
கேட்கும் பொழுதே கண்ணீர் வந்துவிட கண்ணை துடைத்தபடி மகளிடம் பேசினார். சித்ரா மொத்த விவரங்களையும் சொல்லியிருக்க தன் மகள் திருமணம் செய்யாமலே நின்றுவிடுவாளோ என்ற எண்ணமும், சித்ரா எல்லாம் சொல்லியதால் இரண்டாம் தாரம் என்ற நினைப்பும் அகன்றிருக்க இதோ சங்கரின் குழந்தையை ஆசையாய் அவள் வைத்துக்கொண்டு அமர்ந்திருந்தவிதம் தாயும் மகனுமாய் தோற்றமளித்தது.
“ம்மா, சொல்றதை மட்டும் செய்…” என தேவகி அதட்ட,
“திட்டாதீங்க. உங்க மம்மி அடிப்பாங்க…” என ஆதவ் அவளின் காதுக்குள் ரகசியம் பேசினான்.
“மம்மி தப்பு பண்ணினா பிள்ளைங்க சொல்லலாம். தப்பில்லை…”
“ஆனா அடிப்பாங்க. வலிக்கும்ல…” என்று சொல்லவும் அவனை அணைத்துக்கொண்டவள் பேச்சை மாற்ற,
“இந்தா வெல்லம். வாய்ல போட்டுக்கோ…” என்று துருவி வைத்திருந்த வெல்லத்தை எடுத்து ஆதவ்வின் கையில் தர போனவள் தாயையும், தன் அண்ணியையும் பார்த்தாள்.
“அதான் எடுத்துட்டல்ல. குடு. சாமியும், பிள்ளைகளும் ஒண்ணுதான். நாங்க ஒன்னும் நினைக்கல…” என்று அவளின் அண்ணி சொல்ல,
“நா சாமியா?…” என்றான் ஆதவ் அதற்கும் குலுங்கி சிரித்தபடி.
“சாமிதான்யா…” என்று தேவகியின் அண்ணி அவனின் கன்னம் தொட்டு கொஞ்ச,
“அச்சோ, நான் பாய். ஆதவ். பிக் பாய். அப்பா போல. உங்களுக்கு ஒண்ணுமே தெரியல…” என்று அதற்கும் நெற்றியில் பிஞ்சு கைகளால் தட்டியபடி கிளுக்கி சிரிக்க தேவகிக்கு அவனை விடவே மனதில்லை.
பின் பொங்கல் வைத்து முடிக்கும் வரை அவனுடனே இருந்து சாமிக்கு கொண்டு வைக்கும் போது கூடவே வைத்திருக்க,
“அவங்க பூசைக்கு நிக்க போறாங்கம்மா. புள்ளைய கொண்டு போயி குடு…” என்று அவளின் அம்மா சொல்ல,
“ம்மா, பேசாம இரு. அவங்களே கேட்கல…” என்று காய்ந்தாள் அவள்.
“ஆமா, ஊருக்கு போனா போர் அடிக்கும். இங்க இருக்கேன்…” என்று நின்றுகொண்டான்.
தேவகியின் அண்ணன் பிள்ளைகள் இருவர் இருக்க அவனுக்கு விளையாட்டு துணைக்காகிற்று ஆதவ்விற்கு.
“நீ இங்கயே இரு…” என்று தெளிவாய் தேவகியும் சொல்ல ஒன்றும் சொல்லாமல் இருந்துகொண்டனர் அவளின் குடும்பத்தினர். மீறி பேசினாள் கத்திவிடுவாள் அவள் என்று.
தன் வீட்டினர் சாமி கும்பிடும் போது மகனை அழைத்து வருவார்கள் என்று சங்கர் பார்த்திருக்க அவர்களும் ஒன்றும் செய்யாமல் இருந்தனர். தேவகியாக கொண்டுவந்து விடுவதை போல தெரியாததால் தானே சென்றான் அங்கே.
“ஆதவ்…” என்று சங்கர் வந்து நின்றதும்,
“அப்பா சித்தி…” என்றான் ஆதவ்.
“இவங்க ஆச்சி, அத்தை, மாமா, தாத்தா…” என்று ஒவ்வொருவரையாக காண்பித்து அறிமுக செய்தது அந்த அறிவாளி குழந்தை.
“ஓகே. வா போகலாம்…” என்று சங்கர் அழைக்க தேவகிக்கு கோபம் கனன்றது. சுள்ளென சங்கரை முறைத்து பார்க்க அவன் அவளை பார்க்கவே இல்லை.
“நோ அப்பா. கொஞ்சம் நேரம் ப்ளீஸ்…” என்று கெஞ்ச,
“சாமி கும்பிடனும் ஆதவ். அங்க ஆச்சி தாத்தான்னு எல்லாரும் இருக்காங்க. நம்மளை தேடுவாங்க. நேரமாச்சு. வா போகலாம்…” என்றான் மீண்டும்.
ஆதவ் தேவகியின் முகத்தையும் தகப்பனின் முகத்தையும் மாறி மாறி பார்த்தவன் சட்டென,
“நாம இவங்க கூட ப்ரே பண்ணுவோம். நீங்க இருங்க…” என்று சொல்லி தேவகியை பார்த்து சிரிக்க அவளின் கண்கள் கலங்கி போனது.
‘இந்த மனுசன் முன்னாடி ஒத்த சொட்ட வெளில விடாதடி தேவகி’ என இறுகி போய் நின்றவள் ஆதவ்வை இன்னும் இறுக்கி பிடித்தாள்.
“என் கூட இருக்கனுமா உனக்கு?…” என்று கேட்க,
“ஜாலில. அதான்…” என்று அவளின் கன்னத்தோடு கன்னம் வைத்துக்கொண்டது குழந்தை.
“அப்போ சித்தி சொல்லாத. அம்மா சொல்லு…” என தேவகி சொல்ல சங்கர் அதிர்ந்து போனான்.
“அம்மான்னா மம்மி. நீங்க மம்மியா?…”
“ம்ஹூம், நான் உனக்கு அம்மா. அம்மா மட்டும் தான்…” என்றாள் அழுத்தம் திருத்தமாய்.
“ஓகே அம்மா…” என்று குழந்தையும் தலையாட்ட,
“ஆதவ்…” என்ற அதட்டலோடு சங்கர் மகனை அழைக்க,
“ம்மா, எனக்கு கல்யாணத்துக்கு சம்மதம். சட்டுபுட்டுன்னு ஏற்பாட்ட பண்ண சொல்லும்மா. எல்லாருக்கும் புரியும்னு நினைக்கறேன்…” என்றவள் ஆதவ்வை தூக்கிக்கொண்டு நடக்க ஆரம்பிக்க அதிர்ந்து போய் நின்றிருந்தான் சங்கர்.
தேவகியின் குடும்பத்தினருக்கு சொல்லொண்ணா மகிழ்ச்சி. அவர்கள் சங்கரை பார்க்க அவன் தேவகி செல்லும் திசையையே பார்த்தபடி நிற்க தேவகியின் அப்பாவும் அம்மாவும் சங்கரின் பெற்றோரை தேடி வந்தனர் இதனை சொல்வதற்கு.
“சக்சஸ்…” என்றான் அதை கேட்டதும் ஷ்ரவன்.
“என்னது அத்தான்?…”
“உனக்கு விளக்கம் ஊட்டில வச்சு சொல்லி தரேன்டி பொண்டாட்டி. இப்ப தேவகி கல்யாணத்துக்கு சம்மதிச்சுட்டாங்க. இதுக்கே பார்ட்டி வச்சு கொண்டாடனும்…” என்று அலப்பரையை கூட்டினான்.
அதன் பின் எங்கே சங்கரின் மறுப்புகள் எடுபட்டது? அதுவுமே யாரிடத்திலும் ஸ்திரமாக அவனால் சொல்லமுடியவில்லை.
அது தேவகியின் காதுக்கு சென்றுவிடுமோ என்று பயந்து ஷ்ரவனிடம் தான் நின்றான்.
“என்னடா இது? எனக்கு கில்டியா பீல் ஆகுதுடா. இது தப்பில்லையா?…” என்ற சங்கரின் மனதிற்கு தன்னுடைய மறுப்பு கூட வலிமையற்றதாக தோன்றியது.
‘நான் இத்தனை பலகீனமானவனா?’ என்று அவனுக்கவனே கேள்வி எழுப்பியவன் தேவகியை எப்படி எதிர்க்கொள்ள போகிறோமோ என்று மனவுளைச்சலில் தத்தளித்தான்.
ஆனால் ஆதவ்வின் முகத்தை பார்க்கும் போதே தன்னுடைய மறுப்பை எல்லாம் மறக்க ஆரம்பித்தான்.
எளிமையாக வாசமல்லியின் ஊரில் அவர்கள் கோவிலில் வைத்தே திருமணம் நடந்தேறியது.