பூ – 2
சிறிது நேரம் சென்று போர்வையில் இருந்து தலைய உயர்த்தி மெதுவாய் பார்க்க வாசமல்லி கதவை திறந்து வெளியே எட்டி பார்த்துக்கொண்டு இருந்தாள். மீண்டும் கதவை சாற்றிவிட்டு உள்ளே வந்து எதையோ பேசிக்கொண்டே சுற்ற,
“வாசு…” என்றவனின் குரலில் திரும்பியவள்,
“இங்க பாருங்க அத்தான். நான் சொல்றதை கேளுங்க…” என்று அவனருகே வந்து தொப்பென அவள் அமர,
“எதே, உன் பேச்சை நான் கேட்கறதா? ரொம்பத்தான் உனக்கு கொழுப்பு. நேத்தே உன்னை…” என ஆவேசம் கொண்டு பேசியவனை இடைமறித்தவள்,
“அட அதத்தான் சொல்ல வரேன். இப்ப கதவை திறந்து வெளில போனா மொத்தமா கூடிருவாங்க. என்ன நடந்துச்சுன்னு எது நடந்துச்சுன்னு கேட்டு நச்சரிக்க ஆரம்பிப்பாங்க…”
“என்ன என்ன நடந்துச்சு?…” என ஒரு கணம் புரியாமல் அவன் பார்க்க,
“ஆங், இதுக்குத்தான் மொதவே சொல்லிறலாம்னு இருந்தேன். நீங்க எதுவும் வெளில வாய திறக்க கூடாது. எல்லாம் நான் பார்த்துகிடுவேன்…”
“என்ன என்ன வாய திறக்க கூடாது?…”
“யூ நோ டெல். ஐ டெல். அப்பறம் ஆல் வெல்…” என்றதில் கடுப்பானவன்,
“ஒழுங்கா தமிழ்ல சொல்லு…” என்று எரிந்துவிழ,
“ப்ச், அத சொல்லி புரியலைன்னு தான உங்களுக்கு புரியற மாதிரி சொன்னேன்…”
“என்னது நீ சொன்ன இங்க்லீஷ் எனக்கு புரியற மாதிரியா?…” என்று இடுப்பில் கை வைத்து அவன் முறைக்க,
“சரி மறுக்கா சொல்லுறேன். வெளில போனா நீங்க எதுவும் பேச கூடாது…”
“ஏய் என்ன எனக்கே ஆடர் போடுறியா நீ?…”
“ப்ச், ஐயோ அத்தான் உங்களுக்கு வெவரமே பத்தாது இந்த விஷயத்துல…” என இன்னும் பூடகமாகவே அவள் பேச,
“வாசமல்லி…” என பல்லை கடித்தான்.
“ப்ச் யாரு என்ன கேட்டாலும் லேசா சிரிச்சுட்டு போயிருங்க…”
“என்னடி கேட்பாங்க. உயிரை வாங்காம சொல்லி தொலை. மனுஷனுக்கு இருக்கற கடுப்புல ஏதாவது செஞ்சிட போறேன்…” என அதிகமான கோபத்திற்கு ஆளாகி அவன் இரைய வாசமல்லியின் முகம் சுருங்கி போனது.
“இதத்தான் கேட்பாங்க. நேத்து இங்க என்ன நடந்துச்சுன்னு…”
அவளின் பதிலில் அப்போதுதான் மூளைக்குள் மின்னலடித்தது அவனுக்கு. அவள் சொல்ல வருவதும் புரிய லேசாய் சிரிப்பு வந்தாலும் அடக்கிக்கொண்டவன்,
“என்ன நடந்துச்சு அதான் ஒன்னும் நடக்கலையே…” என்றான் விட்டேற்றியாக.
“அதத்தான் சொல்லாதீங்கன்னு சொல்றேன்…”
“ஏன்? ஏன்? ஏன்?…”
“உங்களுக்கு சொல்ல தெரியாது அத்தான். நான் பார்த்துகிடுவேன்…” என்று பெரியமனித தோரணையில் அவள் விரைப்பாய் சொல்ல,
“என்னவாம்? என்னன்னு சொல்லுவ?…” என்றான் சுவாரசியமான பார்வையில்.
“எல்லாம் நடந்துடுச்சுன்னு சொல்லுவேன். சுபம்…”
“எல்லாம்ன்னா?…” என்று அவளை தூண்டி சீண்ட நினைக்க,
“பார்த்தீங்களா? இது கூட உங்களுக்கு தெரியலை. அதுக்குத்தான் வெவரம் வேணும்த்தான். நீங்க ஒன்னும் கவலைப்படாதீங்க. நான் இருக்கேன்ல…” என்று சொல்லி எழுந்துகொள்ள போக அதற்குள் அவளருகே விழுந்து அவளின் கையை பிடித்துக்கொண்டவன்,
“என்ன எனக்கா விவரம் இல்லை? எங்க நீ சொல்லு உனக்கு எவ்வளோ விவரம்னு நான் தெரிஞ்சுக்கறேன்…” என கேட்க,
“நான் சொல்லிருவேன். அப்பறம் நீங்க தான் வெக்கப்பட்டு ஓடுவீங்க…” என்று குறும்பாய் வாசமல்லி சொல்ல உண்மையில் அவனுக்கு வெட்கமாகிபோனது.
அதையும் தாண்டி அவனின் நாசியில் ஏறிய அவளின் வாசம். மஞ்சள் பூசிய அந்த நறுமணம் அவனுக்கு சுகந்தம் தருவதாய் இருந்தது. ஆழந்து சுவாசித்தான்.
“அத்தான் சொல்லட்டுமா?…” என சிரிப்புடன் கேட்டவளின் தலையில் லேசாய் குட்டினான்.
‘இவள் என்னை கலாய்க்கிறாளே. நாலு காட்டு காட்டாம இப்படி போறேனே?’ என்று பார்த்தவன் அவளை பார்த்துக்கொண்டே எழுந்து குளிக்க சென்றான்.
அவனின் பேச்சில், செய்கையில், வெட்கத்தில் மெல்ல உள்ளம் பூக்க அவனின் தலை மறைந்ததும் சிரிப்புடன் அவனின் வருகைக்காக காத்திருந்தாள்.
“இன்னும் போலயா நீ?…” என அங்கேயே அமர்ந்திருந்தவளை கண்டு என்னவென கேட்க,
“நீங்களும் வாங்க சேர்ந்து போவோம்…” என்று சொல்லவும் பதில் பேசினால் எடக்குமடக்காய் பேசுவாளோ என்று நினைத்து வாயே திறக்கவில்லை ஷ்ரவன்.
“போலாமா அத்தான்…” என அவன் தயாராகி நின்றும் கண்ணாடியை விட்டு அகலாமல் அங்கேயே நிற்பதை பார்த்து கேட்க,
“ஹ்ம்ம், ஹ்ம்ம்…” என்று அவளை கடந்து கதவை திறந்துகொண்டு வெளியே செல்ல அவனின் பின்னாலே துள்ளிக்கொண்டு ஓடினாள் வாசமல்லி.
“வாங்க வாங்க. எல்லாரும் உங்களுக்காக தான் வெய்ட்டிங்…”
“கம்மிங் கம்மிங் சொல்லுங்க அத்தான்…” என வாசமல்லி அவனின் காதருகே கிசுகிசுக்க,
“தள்ளி வா வாசு. எல்லாரும் பார்க்கறாங்க…”
“பார்க்கட்டும். பார்க்கத்தான வந்திருக்காங்க. எம்புருஷன் எனக்கு மட்டும். தள்ளி எல்லாம் வர முடியாது. தலையில கூட உட்கார்ந்து வருவேன். யாரும் கேட்க முடியாது…” என அடாவடியாய் சொல்ல,
“நீ செஞ்சாலும் செய்வ. நான் மட்டும் தாலி கட்டலைன்னா வாங்கி என் கழுத்துல கட்டிருப்ப தானே?…”
இருவரும் பேசிக்கொண்டு வர பார்த்தவர்களுக்கு அன்யோன்யமான தம்பதிகளாக தெரியவில்லை. சண்டையிட்டுகொண்டு வருவது அப்பட்டமாக தெரிய கலவரத்துடன் பார்த்தனர்.
“ஷ்ரவன்…” என்று அபர்னிதா அழைத்ததும் திரும்பி அவளை ஒரு பார்வை பார்த்தவன்,
“பசிக்குதும்மா…” என்றான் தாயிடம்.
“அட இதுக்கெதுக்கு அத்தை? நான் இருக்கேனில்ல. வாங்க வாங்க…” என அவன் சொல்லி முடித்த நொடி அவனின் கையை பற்றிக்கொண்டு வேகமாய் உணவுமேஜைக்கு செல்ல அவளின் செயலில் அனைவருக்குமே சிரிப்பு வந்தது.
‘என்ன கொடுமையடா இது? என்னை தரதரன்னு இழுத்துட்டு போறா. அம்புட்டும் பார்த்து ரசிக்குதுங்க.’ என புலம்பிக்கொண்டு,
“கையை விடு வாசு. மெதுவா வரேன்….”
“ப்ச், பசிச்சா காதடைக்கும். காதடைச்சா மயக்கம் வரும். மயக்கம் வந்தா ஊருக்கு போக முடியாது…” என்று சொல்லி அவனுக்கு தட்டு வைத்து பரிமாற ,
“என்னது ஊருக்கா?…” என்று அடுத்த அதிர்ச்சியாக வாயை பிளக்க,
“ஆமா ஊருக்கு போறோம். நம்ம ஊருக்கு. நானும் போய் நம்ம அய்யனாரு கோவில்ல தேங்காய் உடைக்கனும். வேண்டுதலை நிறவேத்தனும்…”
“என்ன வேண்டுதல்?…” என கேட்டுக்கொண்டே உணவை எடுத்து விழுங்கினான்.
தொண்டையில் இறங்கத்தான் இல்லை. அந்த ஊருக்கு செல்லவேண்டும் என்றதுமே கசப்பை உண்டவனை போல முகத்தை வைத்துக்கொள்ள வாசமல்லிக்கு அவனின் முகபாவனை எல்லாம் ஒரு பொருட்டே இல்லை என்பதை போல அவள் வேலை நடந்துகொண்டு இருந்தது.
பரபரவென அத்தனைபேரையும் அமர சொல்லி அவளே பரிமாற அபர்னிதா ஷ்ரவனை பார்த்து ‘எப்படி?’ என புருவம் உயர்த்தினாள்.
‘கொன்னுடுவேன்’ என ஷ்ரவன் கத்தியை காட்ட அவள் முக சுளிப்புடன் திரும்பிக்கொண்டாள்.
“அவனை சீண்டலைன்னா உனக்கு நேரமே போகாதே. ஒழுங்கா சாப்பிடு. பிள்ளைக்கு ஊட்டு. உன்னையே பார்த்துட்டு ஆன்னு வாயை காமிக்குது…” என்ற சங்கரின் மிரட்டலில் தலையை நிமிர்த்தவில்லை அவள்.
மகன் ஆதவனுக்கு வெண்பொங்கலில் சாப்பாறை லேசாய் தோய்த்து அவனுக்கு ஊட்டிக்கொண்டே தானும் உண்டாள்.
திருமணமாகி இத்தனை வருடங்கள் ஆகிவிட்டது. அத்தனை விரும்பி சங்கரை திருமணம் செய்தவள் இன்னும் அவனின் பேச்சுக்களுக்கான அர்த்தங்கள் புரியவே இல்லை. அவனுக்கு உண்மையில் தன் மீது விருப்பமா என்றும் தெரியவில்லை.
அபர்னிதாவிற்கு சங்கரை பிடித்திருந்தது. ஆனாலும் வெளியில் சொல்லிக்கொள்ளவில்லை. ஷ்ரவனுக்கு மட்டுமே தெரியும் அவளின் விருப்பம்.
அவன் மூலமாக அமலாவிடம் சொல்லி நீலகண்டன் அபர்னிதாவின் தாயிடம் பேசி அவரும் சம்மதித்தார். காரணம் தூரத்து சொந்தம், ஒருவகையில் நீலகண்டனுக்கு இன்னும் சொந்தம் என்பதால் திருமணம் நல்லபடியாக அனடந்து இதோ மூன்று வயதில் ஆதவன் அவர்கள் கையில்.
அபர்னிதாவிற்கும் சொந்த ஊர் ஹரியானா தான் என்பதால் இரு குடும்பங்களுக்கும் அத்தனை நெருக்கம். அதனால் உரிமையும் அவளுக்கு அதிகம் ஷ்ரவன் வீட்டில்.
“இருங்க வந்திடறேன்…” என்று எழுந்து சங்கர் செல்லவும் அவனை பார்த்தபடி அபர்னிதா சாப்பிட வாசமல்லி பரிமாறினாள்.
“நீயும் உட்கார்ந்து சாப்பிடும்மா…” என அமலா சொல்ல,
“இருக்கட்டும்ங்க அத்தை. அவங்க சாப்பிட்டு முடிக்கட்டும்…” என்றவள் ஷ்ரவன் கேட்டதற்கு,
“உங்களை எனக்கு கட்டி வச்சுட்டா அவருக்கு நூத்தி ஓர் தேங்காய் உடைக்கறேன்னு அய்யனாருக்கு வேண்டிருக்கேன். அத உங்களோட போயித்தான நிறவேத்தனும்…” என்று அவனிடமே விளக்கம் கேட்க,
“ஏன் சாமிக்கு உடைக்கற? என்னை உனக்கு கட்டி வச்சவங்க இத்தனை பேர் இங்க தான இருக்காங்க. ஆளுக்கு கொஞ்சம்ன்னு தலைக்கணக்கு போட்டு அவங்க தலையில உடைச்சாலே நூத்தி ஓர் தேங்காயும் காலி ஆகிடும்…” என அசட்டையாய் அவன் சொல்ல,
“ம்மா, இவன் சாமிக்கு உடைகிற தேங்காயை நம்ம தலைக்கு டைவர்ட் பண்ணி நம்மளையே சாமியாக்க பார்க்கறான். எவ்வளவு வெஞ்சன்ஸ் பாருங்க…” என அபர்னிதா அமலாவிடம் சொல்ல,
“வெஞ்சனம் மத்தியானத்துக்கு தான மதினி செய்யுவாங்க? சட்டினி சாம்பாருதேன் இருக்குது…” என வாசமல்லி வேகமாய் பதிலளிக்க சாப்பிட்டு கொண்டிருந்தவனுக்கு புரையேறியது.
“என்னாச்சுத்தான்? மெல்ல மெல்ல…” என அவனின் தலையில் அவள் தட்ட அதுவே தேங்காயை உடைத்ததை போல தான் இருந்தது.
“போதும் வாசு….” என்று அவளின் கையை எடுத்துவிட,
“வாசுவா????…” என வாயை பிளந்தனர் அவனின் வீட்டாட்கள்.
“அத்தனை பேருக்கும் மல்லி, உனக்கு மட்டும் வாசுவா? அதுக்குள்ளே செல்ல பேர்லாம் வச்சுட்ட. நடத்து நடத்து…” என்று அபர்னிதா கண்ணடித்து விட்டு எழுந்து மகனை கூட்டிக்கொண்டு செல்ல,
“அவ பேரே அதான? இதுல என்ன செல்ல பேர்?…” என முணுமுணுத்தபடி மனைவியை பார்க்க அவளோ வெட்கத்தில் சிவந்துபோய் நாணிக்கொண்டு நின்றாள்.
‘அய்யோ, இவ ஒருத்தி நேரங்காலம் தெரியாம வெட்கப்பட்டு மனுஷனை கடுப்பேத்திக்கிட்டு’ என சாப்பிட்டு எழுந்து செல்ல வழக்கமாக சாப்பிட்ட தட்டை எடுத்துக்கொண்டு சென்றவனின் பின்னால் ஓடியவள்,
“தட்டை குடுங்க அத்தான்….” என்று பிடுங்குவதை போல வர அதற்குள் சின்கில் போட்டு தண்ணீரை திறந்துவிட்டிருந்தான்.
“என்ன இப்படி பண்ணீட்டீங்க…” என்று அவன் ஏதோ குற்றம் செய்துவிட்டதை போல கண்ணில் முறைப்புடன் அவனை பார்க்க,
“என்ன என்ன பண்ணிட்டேன்? தட்டை கொண்டு வந்து போட்டேன்…” என சொல்ல,
“அதத்தான் ஏன் செஞ்சீங்க? போச்சு போச்சு…” என சொல்லி கோபமாய் அங்கிருந்து செல்ல,
“மல்லி சாப்பிட்டு போடா…” என்று அவரின் கையை பிடித்த அமலாவை கண்டு,
“பாருங்கத்தை அத்தான் பண்ணினத? எனக்கு சாப்பாடு வேண்டாம்…” என சொல்லி செல்ல,
“என்னடா இப்படி பண்ணிட்ட?…” என ஒவ்வொருவராய் வந்து கேட்டு அவனை மண்டை காயவிட்டனர்.
“என்னடா பண்ணிட்டேன்? சொல்லிட்டுதான் போங்களேன்…” என புலம்பியவனிடம் வந்த அபர்னிதா,
“மூளையே கிடையாது. இதுல போலீஸ்…” என்று அவள் அவனுக்கு கேட்கும் விதமாகவே முணுமுணுக்க,
“அபி அவ என்ன சொல்ல வரா? சொல்லிட்டு போயேன்…” என கேட்க,
“அவளுக்கு சாப்பாடு கொண்டு போய் குடுத்துட்டு அவக்கிட்ட நீயே கேளு…”
“என்னது நான் அவளுக்கு கொண்டு போகனுமா? என்னை என்ன சர்வர்ன்னு நினைச்சியா? இந்த வேலையெல்லாம் என்கிட்டே வச்சுக்காத…”
“சரி கொண்டு போகாத. இப்ப உன் அத்தான் வருவாரு…” என்றவளை முறைத்தவன்,
“போய்ட்டேன் போய்ட்டேன்…” என கடுப்புடன் உடனே அவளுக்கு எடுத்துக்கொண்டு செல்ல,
“என்னாச்சு?…” என்று வந்தான் சங்கர்.
“ஒண்ணுமில்லையே…” என அபர்னிதா தோள் குலுக்க,
“ஷ்ரவன் கைல என்ன ப்ளேட்?…”
“ஒன்னும் தப்பாது இவர் கண்ணுல இருந்து…” என அவனுக்கு கேட்டுவிடாமல் முணங்கியவள்,
“மல்லிக்கு சாப்பாடு கொண்டு போறான்…”
“ஏன் அவ இங்க வச்சு சாப்பிட மாட்டாளா? என்ன பழக்கம் இது?…” என கோபப்பட,
‘எல்லாம் உன் குடும்ப பழக்கம் தான்’ என சொல்ல வாய் வரை வந்துவிட்ட வார்த்தையை அப்படியே விழுங்கியவள்,
“அவங்களுக்குள்ள என்னவோ? எனக்கென்ன தெரியும். உள்ள வச்சு தனியா சாப்பிடும்னு கூட நினைச்சிருக்கலாம். அதுக்கெல்லாம் லவ் மூட் இருக்கனும். அது என் ப்ரெண்ட் கிட்ட இருக்குது…” என்று குத்தலாக சொல்ல,
“என்கிட்டே இல்லைன்னு தெரிஞ்சு தானே கல்யாணம் செஞ்ச. இப்ப புலம்பி நோ யூஸ். வா, கிளம்பனும்…” என்று சட்டென அவளுக்கு அதே குத்தலை திருப்பி தந்து சென்றான்.
அபர்னிதாவுக்கு சுறுசுறுவென்று கோபம் பொங்கினாலும் அவனிடம் கேட்க முடியாமல் அடக்கிக்கொண்டு அவனின் பின்னே சென்றாள்.
தன் அறைக்குள் நுழைந்த ஷ்ரவன் வாசமல்லியை தேட சோபாவில் அமர்ந்து டிவியை போட்டுவிட்டு பார்த்துக்கொண்டு இருந்தாள்.
அழுதுகொண்டிருப்பாளோ என எண்ணி வந்தவனுக்கு அவளின் இலகுவான முகம் நிம்மதியாக இருந்தது. ‘ஊப்’ என்று பெருமூச்செறிந்தவன் உள்ளே வந்து கதவை அடைத்துவிட்டு,
“வாசு…” என்று அழைக்க,
“வாங்கத்தான்…” என அவனின் முன்னே வந்து நின்றாள்.
“இந்தா சாப்பிடு…” என சொல்லவும் முகம் மாற,
“இல்லை எனக்கு வேண்டாம்…”
“ப்ச், இப்ப என்ன ஆச்சுன்னு சொல்லாம சாப்பிடாம இருந்தா எனக்கு பயங்கரமா கோபம் வரும் பார்த்துக்கோ…” என மிரட்ட, சட்டமாய் நின்றவள் அப்படியே அசையாமல் இருக்க அவன் தான் தழைந்து போகவேண்டியதானது.
“ப்ச், ஓகே. கோச்சுக்காம கேட்கறேன். என்ன ஆச்சு? ஏன் கோபமா வந்த?…” என மென்மையாக மெல்லிய குரலில் கேட்க,
“உங்களுக்கு தெரியாதா?…”
“நிஜமாவே தெரியலை…” என அவளின் கை பிடித்து கட்டிலில் அமர்த்தியவன் அவளிடம் தட்டை நீட்டினான்.
“நீங்க சாப்பிட்ட தட்டுல தான நான் சாப்பிடனும்னு அம்மா சொல்லி அனுப்பிச்சுச்சு. நீங்க என்னன்னா அதை கழுவிட்டீங்க…” என்று சொல்லியவள் அவன் வைத்திருந்த பிளேட்டை வாங்கி சாப்பிட ஆரம்பிக்க,
“நிஜமாவே அந்த ரீசனுக்காக தான் கோச்சுக்கிட்டு அழுதுட்டு வந்தியா?…” என இன்னும் நம்பமுடியாமல் கேட்டான்.
“ஹ்ம்ம் ஆமா, ஆனா அழுதுட்டு எல்லாம் வரலை. அழவெல்லாம் மாட்டேன்…” என்று வியாக்கியானம் பேசியபடி அவள் சாப்பிட்டுக்கொண்டிருந்தாள்.
“சுத்தம், நான் என்னவோன்னு நினைச்சுட்டேன்…” என்றவன் சட்டென ஞாபகம் வந்தவனாக,
“அழ மாட்டியா? அப்போ என்னை தான் கல்யாணம் பண்ணுவேன்னு அடம்புடிச்சு அழுதது?…” என கிண்டலாய் கேட்க,
“அடம் புடிச்சேன். பிடிவாதமா இருந்தேன். ஆனா அழுகலை. யார் சொன்ன அத்தான் சொன்னா நான் அழுதேன்னு?…” என்று அவனிடமே திருப்பி கேட்க,
“ஷ்ரவா அந்த பொண்ணு மூலையில உட்கார்ந்து கண்ணீரோட அழுதுட்டே இருக்குதுப்பா. ஒரு பொண்ணோட கண்ணீருக்கு நாம காரணமாகலாமா?…” என கண்ணை கசக்கியபடி அமலா கேட்க,
“அவ அழுததுல குடும்பமே உட்கார்ந்து கண்ணீர் வடிக்குதும்மா….” என ஒத்துப்பாட்டு பாடியபடி அபர்னிதா அழ நீலகண்டன் கூட லேசாய் கலங்கிய கண்களை துடைத்துக்கொண்டே மகனை பார்த்தார்.
அதை நினைக்க நினைக்க பற்றிக்கொண்டு வந்தது ஷ்ரவனுக்கு. எல்லோரும் சேர்ந்து ஏமாற்றியிருக்கிறார்கள் என நினைத்தவன்,
“அடப்பாவிங்களா?…” என்று வாய்விட்டே சொல்ல,
“இன்னும் ரெண்டு இட்லி வச்சிட்டு வந்திருக்கலாம். சரி நானே போய் எடுத்துக்கறேன். வரப்போ தண்ணி கொண்டு வந்திருக்கலாம்லத்தான்…” என்றவள் அவனின் முகத்தை பார்த்து,
“என்னத்தான் கண்ணு கலங்குது? சாப்புட்ட வேகத்தில சாம்பார் எதுவும் கண்ணுல தெறிச்சுடுச்சா?…” என கவலையாக கேட்க,
‘இவ பார்க்கற அளவுக்கா கலங்கி போனோம்?’ என கண்களை துடைத்தவன்,
“ஆமா, மெதுவா சாப்பிடத்தான?…” என்று கடுப்புடன் சொல்ல,
“சாப்பாடுன்னா வேகம் தான். சும்மா உட்காந்து ஒளட்டிட்டு இருக்கமாட்டேன். சாப்பாட்ட காக்க வச்சா சாமிக்குத்தம் ஆகுமாம். அதான் வேகமா சாப்ட்டுடுவேன்…” என சொல்ல,
“எல்லாமே வேகம் தான் உனக்கு…” என்றான் தன்னை மறந்து.
“கண்ணு வைக்காதீங்க. நான் கீழே போய் கையை கழுவறேன்…” என எழுந்து செல்ல அவள் செல்வதையே பார்த்தபடி அமர்ந்திருந்தான்.
பயங்கர கோபம் வந்தாலும் அவளிடம் காட்ட நினைத்தும் அதை ஒரு தூசி போல கடந்து செல்பவளை பற்றி எந்த கணிப்பிற்கும் அவனால் வரமுடியாமல் தடுமாறி நின்றான்.
எதோ ஒன்று அவளை கடிந்துகொள்ள முடியாமல் தடுத்தது. அமைதியாக அமர்ந்து யோசிக்க ஆரம்பித்தான் ஷ்ரவன்.