பூ – 21
தேவகி நேரடியாக இப்படி தாக்கவும் சங்கர் வாயடைத்து நின்றான். அவள் சொல்வது சரிதானே? தானும் அப்படிதானே இருந்தோம் என எண்ணியபடி அசையாமல் நிற்க,
“இப்ப இன்னைக்கு வந்த தைரியம் ஏன் இதுக்கு முன்னாடி இல்லாம போச்சு? பதில் சொல்லுங்க. நான் அந்த பக்கம் போனா கேட்க வேண்டியது தானே? நீங்க மட்டும் என்ன பண்ணுனீங்க?…”
“தேவா நான் அமைதியா இருந்ததுக்கு ஒரு காரணம் இருந்துச்சு…”
“ஏன் எங்களுக்கு எல்லாம் அந்த காரணம் இருக்க கூடாதா?…”
“சரி தப்பு தான். இந்த கல்யாணம், இது உனக்கு முதல்னாலும் எனக்கு இரண்டாவது. எனக்கு அந்த ஒரு குற்றவுணர்ச்சி. அதான் பேசலை…”
“அது எனக்கு தெரியாதா? நீங்க ஒன்னும் என்னை ஏமாத்தி கல்யாணம் செய்யலையே…”
“ஆமா, ஆனாலும்…”
“ப்ச், பேச, முன்னாடி நிக்க, வந்து பேச தைரியமில்லாத ஆள்க்கிட்ட எப்படி பேச சொல்றீங்க? உங்க மேல எனக்கு பயங்கற கோவம்….” என அவள் பல்லை கடிக்க,
“எந்த முகத்தை வச்சு உன்கிட்ட பேச சொல்ற? என்னால முடியலை…”
“உங்களை தேடி தேடி வந்து நான் தான் கல்யாணம் பண்ணனும். அதுக்கப்பறமும் நானா தான் பேசவும் வரனும். நீங்களா எந்த ஸ்டெப்பும் எடுக்க மாட்டீங்க. இல்ல….”
“இல்லை தேவா…”
“முதல்ல இப்படி கூப்பிடறத நிறுத்துங்க. புதுசா இருக்குது. அதே நேரம் எரிச்சலா வருது…” கடுகடுவென முகத்தை வைத்துக்கொண்டு அவள் சொல்ல,
“மெதுவா பேசு ஆதவ் முழிச்சுக்க போறான்…”
“அவனை எப்படி சமாதானம் செய்யனும்னு எனக்கு தெரியும். பேச்சை மாத்தாம பேசுங்க…” என்று சொல்லவும் பெருமூச்சுடன் ஓரமாய் போடப்பட்டிருந்த சிட்டரில் போய் அமர்ந்தான்.
“சத்தியமா உன்கிட்ட பேசறதுக்கு எனக்கு அவ்வளவு பயம். அதான் பேசாமலே இருந்தேன். அம்மா சொல்லவும் உன்னை விட்டுட்டு அபியை மேரேஜ் பண்ணிக்கிட்டேன். இப்ப அவ இல்லைன்னதும் உன்னை கல்யாணம் செஞ்சு வச்சுட்டாங்க…”
“ஓஹ் என்னை கல்யாணம் செஞ்சுக்கிட்டது அவ்வளவு கஷ்டமோ? ஏன் உங்க கையை காலை கட்டியா கட்டிவச்சாங்க. எந்திச்சு போக வேண்டியது தானே? இன்னொன்னு சொல்றேன். யாரும் கல்யாணம் செஞ்சு வைக்கலை. நானே எனக்கு பண்ணிக்கிட்டேன். இதுல உங்க பங்குன்னு ஒரு துரும்பை எடுத்து போடலை நீங்க…” என்றவள்,
“வெளில சொல்லாதீங்க போலீஸ்ன்னு. வெட்கக்கேடு. புடிச்சதை செய்ய தைரியமில்லை. அன்னைக்கு ரோட்ல ஒருத்தனை போட்டு புரட்டி எடுக்க மட்டும் தெரிஞ்சது. வீரமெல்லாம் வேலைல மட்டும் தான் போல…”
அவனை பயங்கரமாய் பங்கம் பண்ண பரிதாபமானது சங்கரின் நிலை. பாவமாய் அவளின் முகத்தை நிமிர்ந்து பார்த்தவன்,
“இப்படிலாம் என்னை டேமேஜ் பண்ணாத. ரொம்ப அசிங்கமா இருக்குது…” கிட்டத்தட்ட கெஞ்சிவிட்டான் அவளிடம்.
“அப்படித்தான் சொல்லுவேன். உண்மையை சொன்னா அசிங்கமா இருக்கோ. இருக்கட்டும். அசிங்கம் எப்படி இருக்கும்னு இந்த நாலு சுவத்துக்குள்ள உங்களுக்கு தெரியுதேன்னு சந்தோஷப்படுங்க. என்னை மாதிரி ஊர் பேச கேட்கற நாதியில நிக்கலைன்னு திருப்திப்பட்டுக்கோங்க…”
“தேவா…” என்றான் அதிர்ச்சியுடன் எழுந்து நின்று.
“உங்களுக்கென்ன, ஊருக்கு வருவீங்க. அங்க இங்கன்னு பார்ப்பீங்க. என்னையும் பார்க்க வைப்பீங்க. பிடிக்க வைப்பீங்க. பேசிக்கலை, சொல்லிக்கலைன்னாலும் கட்டிப்பீங்கன்னு நம்பினேன். அந்த தைரியத்தோட நின்னா உங்கம்மா வந்து குடும்பத்தயே அசிங்கப்படுத்தி பேசினாங்க. அப்போ கூட நீங்க வந்து கேட்கலையே…”
“வருவீங்கன்னு எதிர்பார்த்தேன். ஆனா வரலை. அதை விட என்னால என் குடும்பம் அசிங்கப்பட்டு நின்னாங்க. உண்மையை சொல்ல போனா அந்த நிமிஷம் நீங்க வந்திருந்தாலும் நான் ஏத்திட்டு இருந்திருக்கமாட்டேன் தான். அவ்வளவு கோவம். அத்தனை கீழா போய்ட்டோமான்னு…”
“கல்யாணம்னு ஒன்னு பேசவே கூடாதுன்னு சொல்லிட்டேன். நல்லதோ கேட்டதோ உங்களோட சேர்ந்து என் பேர் ஊரெல்லாம் இப்படின்னு வந்திருச்சு. நானும் நினைச்சுட்டேன் மனசால. அதோட இருந்திரனும்னு ஒரு வைராக்கியம் எனக்குள்ள. அதான் அதுக்கு பின்னால கல்யாணம்ன்னு ஒன்னு பன்றதை யோசிக்கவே இல்லை…”
“உங்களுக்கு கல்யாணம்னு அடுத்த கொஞ்சநாள்லயே ஊர்ல பேசிக்கிட்டாங்க. அப்பவும் நீங்க சம்மதிச்சிருக்கமாட்டீங்கன்னு மனசுல ஒரு நினைப்பு எனக்கு. ஆனா எல்லாத்துக்குமே நீங்க அமைதியா இருந்தீங்க. கல்யாணமும் ஆச்சு. அந்தம்மா என்னன்னா?…”
“எந்தம்மா?…”
“அதான் உங்க முதல் பொண்டாட்டி…”
“இப்ப இந்த அன்டர்லைன் தேவையா?…”
“ஓஹ், நாலு வருஷம் கூட வாழ்ந்தவருக்கு இன்னைக்கு நான் சொல்லவும் கசக்குதோ?…” என்றவளின் எள்ளலில் வாயை மூடிக்கொண்டான்.
‘ஃபுல்பார்ம்ல இருக்கா. நானே சீண்டிவிட்டுடு சிக்கிட்டேன் போல. இன்னைக்கு என்னென்ன வெடிலாம் வெடிக்க போகுதோ? எதுவானாலும் தாங்கிக்கனும்’ என மனதை திடப்படுத்தியபடி அவன் நின்றான்.
“நான் எதுவும் சொல்லலை. நீ பேசு. நான் குறுக்க பேசலை…”
“அதான் இந்த எஸ்கேப் ஆகற வேலை எல்லாம் கரெக்ட்டா செய்வீங்களே. பேசவேண்டிய இடத்துல எல்லாம் வாயை மூடிட்டு இருந்துட்டு இன்னைக்கு வந்து பேசு பேசுன்னா. நான் பேசனும்னு நீங்க சொல்ல தேவை இல்லை….”
“எதுவுமே பண்ணலைன்னு தான் சொல்றேன். அந்தம்மா வந்து என்னை யாரையாச்சும் கல்யாணம் செஞ்சுக்கோன்னு வந்து ஆடர் போடுது. என்னை பார்த்தா எப்படி இருந்துச்சு உங்க எல்லாருக்கும்?…” என்றவள்,
“யாருக்குமே என்னை புரியலைல்ல. எந்த தைரியமும் இல்லாத ஆளை விரும்பிட்டேனோன்னு எத்தனை நாள் தவிச்சு போனேன் தெரியுமா? எத்தனை ராத்திரி தூங்காம புலம்பிருப்பேன். எவ்வளவு கண்ணீர் வடிச்சு அதுக்கு என்னை நானே தண்டிச்சிருப்பேன். இதெல்ல்லாம் உங்களுக்கு எங்க புரிய போகுது?…”
“எல்லாம் விட்டாச்சு. எனக்குன்னு ஒரு தனி வாழ்க்கையை நிம்மதியா வாழ ஆரம்பிச்சேன். நிம்மதியா இருந்தேன். உங்களை மாதிரி ஒரு ஆளை நினைக்கவே கூடாதுன்னு இருந்தேன். ஆனா அப்பவும் நான் உடைஞ்சு போனேன். எப்போ தெரியுமா?…”
“இரண்டாவதா நமக்கு கல்யாண பேச்சு எடுக்கும் போது முதல்ல மாட்டேன்னு சொன்னேன். ஆத்திரமா வந்துச்சு. நான் என்ன அத்தனை ஈஸியான்னு தோணுச்சு. பொண்ணு கேட்டு நீங்க வரப்போ என்கிட்டே கேட்கறப்போ உங்க முகத்துக்கு நேரா நல்லா நாலு கேள்வி கேட்கனும்னு இருந்தேன்…”
“ஆனா அப்பவும் எனக்கு வலியை தான் குடுத்தீங்க. எப்பவும் ஒளிஞ்சுக்கற மாதிரி திரும்பவும் என்னை அலட்சியப்படுத்துனீங்க. அந்த கோவம் எல்லார் மேலையும் திரும்பிச்சு. யார் இதை பேசினாலும் எரிஞ்சு விழுந்தேன். என்கிட்டே இந்த பேச்சை கொண்டுவரவே கூடாதுன்ற அளவுல நின்னேன்…”
“ஆனா ஆதவ். என்னால அவன் முன்னாடி வைராக்கியமா இருக்க முடியலை. அவனை தள்ளியும் வைக்க முடியலை. எனக்கு அந்நேரம் யாரை பத்தியும், ஏன் உங்களை பத்தியுமே கவலை இல்லை. தனியா வழாறதுக்கு ஆதவ் கூட அவனுக்கு அம்மாவா வாழ்ந்த என்னன்னு தோணுச்சு. அப்பவும் என்னை நினைச்சு எனக்கு பெருமை தான். ஏன்னு சொல்லுங்க…” என்றவள்,
“அப்ப கூட ஒரு முடிவை எடுக்க உங்களை விட எனக்கு துணிச்சல் இருக்குதுன்ற பெருமை. கல்யாணம் ஆனா பின்னாடியும் ஒதுங்கி ஒதுங்கி ஒதுங்கி என்னை ஏன்தான் இந்த கல்யாணம் செஞ்சேனோன்னு நினைக்க வச்சுட்டீங்க. உங்களுக்கு இது பழகி போச்சுல. தள்ளி நிக்கறது…” என்று அவனை குத்தவும் அவள் தயங்கவில்லை.
சாட்டையை கொண்டு விளாசியதை போல அவனை முதுகெலும்பற்றவன் என்று சொல்லாமல் அவள் சொல்லியவிதம் சங்கரை கொன்று தின்றது.
இப்படியெல்லாம் அவள் பேசுவாள் என்று சுத்தமாய் அவன் எதிர்பார்க்கவே இல்லை. பதில் பேசமுடியாமல் மௌனமாக நிற்க,
“பேசுங்க, பேசாம நின்னீங்க எனக்கு பயங்கர கோவம் வரும். எப்பவும் நானே எல்லாம் செய்யனுமா? அப்போ உங்க கழுத்துக்கு நான் தான் தாலி கட்டியிருக்கனும். தப்பு பண்ணிட்டேன்…” என்று சொல்ல,
“தப்பு பண்ணிட்டேன்னு புரியுது தேவா. ஆனா என்னால இதை எப்படி சரி பண்ண முடியும்னு தான் தெரியலை. சத்தியமா நீ சொல்றதை கேட்க கேட்க நான் பண்ணிவச்சதோட வீரியம் இந்தளவுக்கு உன்னை பாதிச்சிருக்கும்னு நான் நினைக்கலை…”
“எதைத்தான்யா நீ நினைச்ச?…” என்றுவிட்டாள் பட்டென்று மரியாதை இல்லாமல். கோபத்தை அடக்க,
“ஹேய் என்ன வாயா போயான்னு…” என அதிர,
“எனக்கு புரியுது. எல்லாம் தெரிஞ்சு தான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன். ஆனாலும் மனசு எதிர்பார்க்கிறதுக்கு என்னால அணை போட முடியலை. எல்லா முயற்சியுமே நான் மட்டுமே பன்ற மாதிரி ரொம்ப பாரமா இருக்குது மனசு. பார்க்கறீங்க, பக்கத்துல வந்து பேச நினைக்கமாட்டிக்கீங்க. கேட்டா என் மேல பயமாம்…”
“நம்பற மாதிரியாயா இருக்குது நீ பயப்படறன்னு சொன்னா? பொண்டாட்டி என்கிட்டே என்ன பயம்? அப்போ பயந்தே இந்த மொத்த வாழ்க்கையும் போய்டனுமா? முன்னாடி தான் பேசவே யோசிச்சு தள்ளியே இருந்தீங்க. இப்பவும் இப்படியேன்னா வெறுப்பா இருக்குது…”
“இப்ப என்னன்னா இங்கயும் உங்களுக்கு அவ்வளவு மரியாதை வேணும். அப்படித்தான? அதெல்லாம் என்னால தர முடியாது. இப்ப கூட இங்க இருந்து போய்டுன்னு ஒரு மனசு சொல்லுது. நான் பேசற அளவுக்கு கூட பேசு முடியலை இல்ல…” என கேட்க,
“நிஜமாவே சொல்றேன், எனக்கே என்னை நினைக்கும் போது ஒரு சந்தர்ப்பவாதியா தெரியுது. உன்னை நினைக்காம பெத்தவங்க மனசுக்காக இன்னொருத்தியை கல்யாணம் பண்ணி உன்னை நோகடிச்சேன். இப்போ என் சுயநலத்துக்காக இரண்டாவதா உன்னை என்னோட வாழ்க்கைக்குள்ள கொண்டு வரது தப்போன்னு தோணுச்சு…”
“ஓஹ், அப்பறம்…” என்றாள் தேவகி அவன் பேசியதில்.
“நீ என்னை என்னவேணா கிண்டல் பண்ணிக்கோ. நான் உனக்காக தான் வேண்டாம்னு சொன்னேன். முதல்ல வேண்டாம்னு சொல்லிட்டு இரண்டாவதா ஆதவ்க்கு அம்மாவா உன்னை கூட்டிக்க எனக்கு இஷ்டம் இல்லை. அது உன்னோட வாழ்க்கையை அழிச்சுடுமோன்னு பயமா இருந்தது…”
“இப்ப கல்யாணம் ஆகிடுச்சுன்னு எந்த உரிமையும் எடுத்துக்க முடியலை. பக்கத்துல வந்தா என்ன சொல்லுவியோன்னு யோசனை. வெளிப்படையா சொல்லனும்னா வேற வழியில்லை எனக்கு வாழ்க்கை குடுன்னு சொல்லி உன்னோட எதிர்காலத்தை இதுக்குள்ள அடைக்க கூடாதுன்னு தான் நம்ம கல்யாணத்துக்கு நான் சம்மதிக்கலை. நீயா ஏற்பாடு பண்ண சொல்லவும் தடுக்க முடியலை…”
“ஓஹ் அவ்வளவு மண்டக்கணமா உங்களுக்கு? ஏன் கேட்டா என்ன?…” என்றாள் தேவகி அவன் சொல்லியதை எல்லாம் விட்டுவிட்டு.
“என்ன சொல்ற தேவா? என்ன கேட்கனும்? மன்னிப்பா? ஓகே, நான் பண்ணின தப்புக்கு எல்லாமே மன்னிப்பு கேட்கறேன். இல்லை எப்படி கேட்டா உனக்கு மனசு நிம்மதியாகுமோ அப்படி கேட்கறேன். நீ என்ன சொன்னாலும் கேட்கறேன்….” என,
“மன்னிப்பு கேட்டா எல்லாம் மறையுமா? யாருக்கு வேணும் உங்க மன்னிப்பு. ஒத்த வார்த்தையில எல்லாம் முடிச்சுக்க பார்க்கறீங்களா? அது என்கிட்டே நடக்காது…”
“சரி அப்ப என்னதான் செஞ்சா என்னோட பேசுவ? இயல்பா இருப்ப? அதை சொல்லு…”
“கேளுங்க, வழியில்லை வாழ்க்கை குடுன்னு கேளுங்க. கல்யாணத்துக்கு முன்னாடி தான் கேட்கலை. இப்போ கேளுங்க. அப்போ தான் பேசுவேன். பேசலாமான்னு யோசிப்பேன். இல்லைன்னா நீங்க அந்த சுவத்தை பாருங்க. நான் இந்த சுவத்தை பார்க்கறேன். இப்படியே இருந்துப்போம்…” என்றவளின் பேச்சில் திகைத்து போனான்.
“தேவா?…” என லேசாய் சிரிப்பு கூட வந்தது. அத்தனை நேரம் இருந்த தவிப்புகள், சஞ்சலங்கள் எல்லாம் குறைந்து மனது லேசானது.
“என்ன என்ன தேவா? அப்ப கேட்க மாட்டீங்களோ? தேவையே இல்லை…” என்றாள் வீம்பாக.
“நான் எப்ப மாட்டேன்னு சொன்னேன்?…”
“அப்போ கேளுங்க. எங்க நீங்க எப்படி கேட்கறீங்கன்னு நானும் பார்க்கறேன்…” என்று பிடிவாதமாய் இருக்க லேசாய் சிரிப்புடன் அவளை பார்த்தவன்,
“ஓகே எனக்கு வாழ்க்கை குடுப்பியா தேவா?…” என கேட்க அவனுக்கே அது சிறுபிள்ளைத்தனமாய் தெரிந்தது.
“வாழ்க்கை இருக்குது. ஆனா வழி எங்க போச்சு? தேடி கண்டுபிடிங்க அதை…” என்றாள் கறாராய்.
“ப்ச், தேவா…”
“அப்போ சரி, நான் போறேன்…” என அவள் திரும்ப,
“நில்லு தேவா…” என அவளை மறித்து முன்னால் நின்றவன்,
“ஓகே ஓகே, வழியில்லை எனக்கு. நீ தான் வாழ்க்கை குடுக்கனும்…” என சொல்ல அவனை ஆழ்ந்து பார்த்தவள்,
“ஹ்ம்ம், இதையே ஒரு பத்து நாள் என்னை பார்க்கும் போதெல்லாம் சொல்லி சுத்தி வாங்க…” என்று சொல்லி அவனை தாண்டி சென்றவளின் கையை பிடித்து தன் முன்னால் கொண்டுவந்து நிறுத்தியவன்,
“என்னை பார்த்தா உனக்கு எப்படி தெரியுது?…” என்று கேட்க அவனின் கையில் இருந்து தனது கையை உருவிக்கொள்ள பார்த்தவள்,
“ப்ச் கையை விடுங்க. உங்களை பார்த்தா இப்ப வரைக்கும் எனக்கு எப்படியும் தெரியலை. எப்படி தெரியனும்னு தெரியவைக்க வேண்டியது உங்க பொறுப்பு. இதுலயாச்சும் சொந்தமா யோசிங்க ஆபீசர். இதயும் என்கிட்டே கேட்டா போலீஸ்ன்னு பார்க்கமாட்டேன். நல்லா பேசிடுவேன். பேசட்டுமா?…” என கத்த,
“கத்தாத தேவா. மெதுவா பேசுன்னு சொல்லிருக்கேன்ல….” என அவளின் வாயை தன் கையால் மூட வேகமாய் எடுத்துவிட்டவள்,
“பக்கத்துல வந்தீங்க, அவ்வளவு தான்…” என்று சொல்லிவிட்டு வேகமாய் சென்று ஆதவ்வுடன் படுத்த பின்பு தான் சங்கர் தான் செய்ததையே உணர்ந்தான்.
அவளை இழுத்த வேகத்தில் தன் அணைப்பிற்குள் நிறுத்தியிருந்தவனின் செயலை மீண்டும் மனதிற்கு நினைத்து அந்த நெருக்கத்தை உணர முயன்றான் கண்ணை மூடி நின்று. இதழ்களில் சிறு வெட்க புன்னகை வேறு மின்ன,
“நீங்க எவ்வளவு நேரம் வேணும்னாலும் அங்கயே நின்னுக்கோங்க. முதல்ல அந்த லைட்டை ஆஃப் பண்ணுங்க. தூக்கம் வருது….” என்றவளை திரும்பி பார்த்தவன் ஒரு சிரிப்போடு தேவகியின் இதழ்களை மூடிய தனது உள்ளங்கைக்கு அவனே முத்தமிட ஆதவ்வின் பொம்மையை தூக்கி எறிந்தாள் அவள்.