அமலா சொல்லி தேவகியிடம் கேட்க சொல்லியிருக்க அவளுக்கு அதை எப்படி கேட்பதென்ற தயக்கமும், கேட்டால் கோவிப்பாளோ என்ற அச்சமும் ஒருங்கே இருக்க ஒருகட்டத்தில் ஷ்ரவனிடம் வந்து நின்றாள்.
“அத்தான் நான் எப்படி இதை கேட்க?…” என வந்து நிற்க தூக்கிவாரி போட்டது அவனுக்கு.
“நீ எதுவும் கேட்டு வச்சிரலையே…” என்றான் அக்கம்பக்கம் சுற்றி பார்த்து.
“அதெப்படி கேட்பேன்? அதெல்லாம் இல்ல. எனக்கும் விவரம் தெரியுமாக்கும்…” என்று பெருமையடித்துக்கொண்டவள்,
“சொல்லுங்க, நான் கேட்டு அத்தைட்ட சொல்லனும்…” என்று அவனின் சட்டையை பிடித்து நொச்ச,
“முதல்ல இந்த அம்மாவை ஊரை விட்டு ஹரியானா பக்கம் அனுப்பிவிடனும். உன்கிட்ட போய் என்ன சொல்லிவிட்டிருக்காங்க பாரு…” என சிரிப்போடு தலையிலட்டித்துக்கொண்டவன்,
“இங்க வந்து மேடம் உட்காருங்க…” என அமர வைத்து,
“நீ எங்கயும், யார்கிட்டயும் எதுவும் கேட்க கூடாது. யார் சொன்னாலும் நான் சொன்னேன்னு சொல்லு. புரியுதா?…”
“ஹ்ம்ம்…” என தலையாட்ட,
“மல்லி…” என அமலா வர,
“என்னம்மா?…” என்றான் அவன்.
“மல்லிட்ட ஒன்னு கேட்கனும். அவகிட்ட சொல்லிருந்தேன்…”
“அத்தே நீங்க எதுவா இருந்தாலும் அத்தான்கிட்ட சொல்லி கேட்க சொல்லுங்க. அவங்க கேட்டு சொல்றேன்னு சொல்லிட்டாங்க…” என்றவள் ஷ்ரவனை பார்த்து எப்படி? என புருவம் உயர்த்த சுத்தம் என்று நினைத்தபடி அமலாவை பார்க்க,
“சரி நான் அப்பறம் வரேன்…” என ஓடிவிட்டார்.
“அத்தான் பார்த்தீங்களா?…” என்றவளின் கன்னத்தை பிடித்து இருகைகளாலும் வலிக்காமல் கிள்ளியவன்,
“சமத்து. எப்பவும் இப்படியே இரு. அது போதும்…” என கொஞ்சியவன்,
“ஆனா, முதல்ல எனக்கு சொல்லிட்டு சொல்லு. அம்மா நீ போட்ட போட்டுல ஒரே ஓட்டம்…” என்று சிரித்தான்.
அங்கு மூன்று நாட்களும் இருந்தவர்கள் தங்கள் வீட்டிற்கு கிளம்பிவிட்டனர் அதன்பின்பு.
சங்கரும் தேவகியும் பேசிக்கொள்ளாமல் இருந்தாலும் இருவரும் சேர்ந்தே ஆரவ்வை கவனித்துக்கொண்டனர். வெளியே மற்றவர்களிடத்தில் ஓரிருவார்த்தைக்கு பதில் சொல்லவும் தயங்கவில்லை அவள்.
“உங்களுக்கு சண்டையா? மம்மி மாதிரியா?…” என அவர்கள் சரியாக பேசாமல் இருப்பதை பார்த்து ஆதவ்வே ஒருமுறை கேட்டுவிட சங்கர் தான் பதில் சொல்ல திணறி போனான். ஆனால் தேவகி அழகாக அந்த சூழ்நிலையை கையாண்டாள்.
“அச்சோ ஆதவ், சண்டை இல்லை. இது ஒரு கேம். யார் வின் பன்றாங்கன்னு கேம். வின் பண்ணினதும் உனக்கு சொல்றேன்…” என அவனிடத்தில் சொல்ல குழந்தையோ,
“அம்மாப்பா கேம் ப்ளே பன்றாங்க….” என பேசுபவர்களிடத்தில் எல்லாம் புரியாமல் சொல்ல,
“அத்தான் என்ன கேம்ன்னு சொன்னா எனக்கும் தெரிஞ்சுக்க வசதியா இருக்கும்…” என ஷ்ரவன் கூட போனில் கேலி பேச,
“உனக்கு யார்ரா சொன்னா?…”
“வாசு தான். அவக்கிட்ட ஆதவ் சொல்லிருக்கான். நீங்க என்ன கேம் விளையாடறீங்கன்னு கேட்கறா உங்க தங்கச்சி….” என்றவன் ‘எனக்கு நீங்க எந்த கேமும் சொல்லித்தரலை அத்தான்?’ என்று ஆரம்பித்தவளை சமாளிக்க பட்ட பாட்டை சொல்லவில்லை அவன்.
“இந்த கேம் உனக்கு வேண்டாம். எங்களோடவே இருக்கட்டும்…” என சொல்லி போனை வைத்துவிட்டான் சங்கர்.
எத்தனை தான் ஒரு வீட்டில் இருந்தாலும் சங்கரின் தாயிடமும் தேவகி இன்னும் ஒரு ஒட்டுதலின்றி தான் பேசிக்கொண்டிருக்கிறாள். மாமியார் என்கிற எல்லை மட்டுமே. அதனை தாண்டி வேறு எதுவும் இல்லை.
அவசியத்திற்கே வார்த்தைகளை அளப்பவள் அனாவசியத்திற்கா உபயோகிப்பாள்? இன்னும் ஆறாத வடுவாய் சில காயங்கள். அதன் மேல் இன்னுமின்னும் சங்கர் காயமேற்றிக்கொண்டிருப்பதை அவன் தான் அறியவில்லை.
இரண்டு மாதங்கள் கடந்துவிட்டது தேவகி அந்த வீட்டின் மருமகளாய் அடியெடுத்துவைத்து.
அன்று அனுசுயா அமலாவின் வீட்டில் வந்து அமர்ந்துகொண்டு ஆதவ்வை மட்டும் அழைத்து வர சொல்லி சொல்ல கூட்டிக்கொண்டு வந்ததோ தேவகி.
“இவளை பார்க்க கூடாதுன்னு தான் நான் தனியா கூட்டிட்டு வர சொல்லி உன்கிட்ட சொன்னேன்…” என அனுசுயா வார்த்தையை விட,
“அவன் என் பையன். அப்போ அம்மாவா நானும் வருவேன் தானே?…”
“அம்மாவா?…” என அனுசுயா முகம் சுளிக்க,
“அம்மா தான் பாட்டி. இவங்க தான் எனக்கு அம்மா…” என ஆதவ்வும் சிரிக்க,
“இவ உனக்கு…” என்று அனுசுயா ஆரம்பிக்கும் போதே,
“ஆதவ், உள்ள போய் உன் அத்தைட்ட உனக்கு என்ன வேணும்னு கேளு…” என்றவள் வாசமல்லியை ஒரு பார்வை பார்த்துவிட்டு அனுசுயா பக்கம் திரும்பினாள்.
“இங்க பிரச்சனை பண்ண வந்திருக்கீங்களா?…”
“யாரு நானா?…”
“அனு, இப்ப எதுக்கு அவக்கிட்ட இப்படியெல்லாம் பேசற? தப்பு…” என அமலா திட்ட,
“எல்லாரும் ஒண்ணு கூடி என் பேரனையும் என்கிட்டே இருந்து பிரிக்க பார்க்கறீங்க?…” என அழ,
“ஓகே, நாங்க கிளம்பறோம்…” என்று தேவகி எழுந்துகொள்ள அவளை அதிர்வுடன் பார்த்தார்.
“இந்த கண்ணீர் பூச்சாண்டிக்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன். இதை நீங்க இவங்க எல்லார்ட்டயும் காமிச்சுக்கோங்க. இப்ப நான் சங்கருக்கு பொண்டாட்டின்னா ஆதவ் என் பிள்ளை. அவன் விஷயத்துல முடிவெடுக்க எல்லா அதிகாரமும் எனக்கு இருக்குது. ஆசைப்பட்டீங்களேன்னு தான் பார்க்க கூட்டிட்டு வந்தேன். என்னை சீண்டாம இருங்க…” என்றதும் அனுசுயா பல்லை கடிக்க அதற்குள் ஆதவ் வந்துவிட்டான்.
பின் பேரனை பார்த்தவர் அவனோடு விளையாட அவனுக்கு வாங்கி வந்தவை எல்லாம் எடுத்து தர அதில் ஏகப்பட்ட சாக்லேட்கள் இருந்தது.
ஒன்றை பிரித்து அவனுக்கு வாயில் போட்டுவிட்டார். அதுவரை ஒன்றும் சொல்லாமல் தான் பார்த்துக்கொண்டு தள்ளி நின்று அமலாவிடம் பேசிக்கொண்டிருந்தாள் தேவகி.
“இன்னொன்னு சாப்பிடறியா?…” என கேட்க அவன் தேவகியை பார்க்க வேண்டாம் என சொல்ல நினைத்தவள் இன்றைக்கு மட்டும் தானே என்று தலையசைத்தாள். அதில் கோபமான அனுசுயா அவனுக்கு அதை பிரித்து கொடுத்து,
“இங்க பாரு ஆதவ் கண்ணா உனக்கு பிடிச்சா நீ சாப்பிடு. உனக்கு என்ன வேணும்ன்றதை நீ முடிவு பண்ணு. நீ பெரிய பையன் ஆகிட்ட தானே? உனக்கு இதுல எவ்வவளவு வேணுமோ சாப்பிடு. யாரும் எதுவும் சொல்லாம பாட்டி பார்த்துப்பேன்…” என்று கொஞ்ச,
“நோ பாட்டி. பூச்சி வரும். அது என்னோட டீத்தை கொண்டு போய்டும்…” என அவன் சொல்ல,
“அதெல்லாம் இல்லை. ஒரு நாள் தானே?…” என சொல்லிக்கொண்டு இருக்க,
“ஆதவ், கிளம்பாலாம்…” என வந்துவிட்டாள் தேவகி.
“என்ன அதுக்குள்ளே கிளம்பலாம்ன்னு சொல்ற? இவன் என் பேரன் இன்னைக்கு ஃபுல்லா என் கூட தான் இருப்பான். நீ யாரு…” என பேச,
“அத்தை நான் தான் போன் பண்ணி கிளம்பி இருக்க சொன்னேன்….” என அந்த நேரம் சங்கர் வந்துவிட அவனை எதிர்பாராதவர்கள் அவன் முகம் கோபத்துடன் இருப்பதை பார்த்து மௌனமாகினர்.
“இன்னும் என்ன பார்த்துட்டு நிக்கற தேவா? கிளம்பு…” என சொல்ல,
“பை பாட்டி…” என அனுசுயாவிற்கு கை ஆட்டிய ஆதவ் தேவகியின் கையை பிடித்துக்கொண்டு ஒவ்வொருவருக்காய் அழைத்து பை சொல்ல,
“ஓகே அத்தை. நீங்க ஆதவ்வை பார்க்கனும்னா வீட்டுக்கு வாங்க…” என சொல்லியவன் தேவகியின் கையை பிடித்துக்கொண்டு மகனை தூக்கி தோளில் போட்டு கிளம்பிவிட்டான்.
“சொன்னேனே கேட்டியா? இப்ப சங்கருக்கு கோவம் வந்திருச்சு…” என அமலா கடிந்துகொள்ள,
“அப்போ எனக்கு உரிமை இல்லைன்னு சொல்றியா? பாரு இடையில வந்தவ எப்படி மாத்தி வச்சிருக்கான்னு…”
“இடையில வந்தது அபி தான் அனு. இல்லைன்னா அவங்க கல்யாணம் தான் முடிஞ்சிருக்கும். இப்பவும் சங்கர் நல்லா வாழனும்னு நினைக்காம என்ன எண்ணம் இது? இப்படியே இருந்தா உனக்கு நாங்களும் இருக்கமாட்டோம்…” என்று சொல்லிவிட,
“அமலா…”
“பின்ன உன் பொண்ணு கூடவே இருந்து அந்த பையனை வாழவிடாம பண்ணினா. நீ என்னன்னா அபி இல்லைன்னளும் சங்கர் அப்படியே இருக்கனும், ஆதவ் அம்மாவுக்கு ஏங்கி போகனும்னு நினைச்சிட்டிருக்க. முதல்ல இந்த குணத்தை மாத்து. ஆதவ்க்கு இன்னைக்கு சொல்லி குடுத்தது மாதிரி தான அபியையும் கெடுத்த? என்னத்தை சாதிச்ச நீ?…” என்று கேட்க அனுசுயாவிற்கு அங்கிருக்கமுடியவில்லை.
“நான் கிளம்பறேன்…” என்றுமட்டும் சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார்.
வீடு வந்து சேர்ந்த சங்கரும் தேவகி ஏதாவது சொல்வாள் என எதிர்பார்த்து நிற்க அவளோ கண்டுகொள்ளாமல் இருக்க பயங்கர கோபமாகி போனது அவனுக்கு.
“இன்னும் உனக்கு என்ன தான் பிரச்சனை தேவா?…” என்றான் அவன் ஆதவ் தூங்கியதும்.
“ப்ச், என்ன பிரச்சனை?…” என அசட்டை செய்ய,
“இதுதான் பிரச்சனை. என்னை பார்த்து பேசு. என் முகத்தை பார்க்கறதில்லை. நான் இருக்கற பக்கம் திரும்பறதில்லை. என்னோட இயல்பா பேசறதில்லை. ஏன் இப்படி இருக்க?…” என கேட்க அவனை நேருக்கு நேராய் நிமிர்ந்து பார்த்தவளின் பார்வையை எதிர்கொள்ள அவன் தான் திணறி போனான்.
“ஆமா, பார்க்க முடியாது. பேச முடியாது. நீங்க இருக்கற பக்கம் இருக்க முடியாது. அதுக்கென்ன இப்போ?…” என கேட்க,
“அதான் ஏன்னு கேட்கறேன்…”
“நீங்க மட்டும் இத்தனை வருஷம் எப்படி இருந்தீங்க? இந்த வீட்டுக்கு நான் வந்த பின்னால எப்படி இருந்தீங்க?…” என்றவளின் கேள்வி துப்பாக்கியில் இருந்து வெளிவந்த குண்டுகளாய் அவனை துளைக்க திகைத்து போய் பார்த்தான்.