பூ – 3
“உன்னைத்தான்யா இத்தன நாளா தேடிட்டு இருந்தேன். அசிஸ்டன்ட் கமிஷ்னரா உன்னை ப்ரமோட் பன்றேன்…” என அமைச்சர் சொல்ல,
“எஸ் ஸார். தேங்க் யூ ஸார்…” என்று ஷ்ரவன் பெருமிதத்துடன் சல்யூட் அடிக்க,
“உனக்கு எல்லா பவரையும் தரேன். உன் கையில என் கண்ணையே ஒப்படைக்கிறேன். அதுல இந்த நாட்டு மக்களுக்கு ஆனந்த கண்ணீர் தான் வரனும்…”
“எஸ் ஸார், உங்க நம்பிக்கையை நான் காப்பாத்துவேன். கண்டிப்பா காப்பாத்துவேன்…”
“காப்பாத்தறதுக்கு முன்னாடி பல்லை தேச்சுட்டு சாப்பிட வாங்கத்தான்…”
“ஸார் உங்க வாய்ஸ் மாறிடுச்சு. நான் அசிஸ்டன்ட் கமிஷனர் ஷ்ரவன்…”
“அத்தான் எந்திச்சு பல்லை தேயுங்க…” இப்போது வாசமள்ளியின் குரல் இன்னும் நன்றாக கேட்க,
“நோ ஸார் நாட்டை காப்பாத்தனும். ஊரை காப்பாத்தனும்…”
“முதல்ல வெறும் வவுத்துல கபசுர தண்ணிய குடிச்சுட்டு எங்கயும் போங்க…” என்று அவனை பிடித்து எழுப்பி அமர வைத்தவள்,
“அத்தான்ன்ன்னன்ன்ன்…” என உலுக்கு உலுக்கென்று உலுக்கிய உலுக்கலில் அவனின் தலையும், தோள்களும் தனித்தனியே கழன்று விழாத குறைதான்.
“வாசு நீ எங்கடி இங்க?…” என இன்னும் தூக்க கலக்கம் கலையாமல் அவளை பார்க்க,
“அத்தான் இன்னுமா கனவுல இருக்கீங்க? திஸ் இஸ் மை வீடு. யுவர் அங்கிள் வீடு. டுடே மறுவீடு நம் வீடு. டுமாரோ கோயிங் அவர் வீடு…” என்று வரிசையாய் அடுக்க சுத்தமாய் மயக்கம் தெளிந்தது அவனுக்கு.
“போதும், முடிஞ்சிருச்சு. நிப்பாட்டு. இப்ப கிளம்பு…” என கையை நீட்டி அவளை நிறுத்த,
“இம்புட்டு நேரம் காட்டு கத்து கத்தறேன். தெளியலை. இப்ப தான் தெரியுது. அதுதான் என்னோட இங்க்லீஷ் பவர்…” என தனக்கு தானே பாராட்டு பத்திரம் வாசித்துக்கொண்டவளை கொலைவெறியோடு பார்த்தான் அவன்.
பின்னே முதல் நாள் மறுவீட்டிற்கு வந்து அன்று மாலையே கிளம்பிவிடுவதாக சொல்லி சொல்லி அல்லவா தன்னை அழைத்துவந்தாள்.
மாலை கிளம்புவாள் என பார்க்க பார்க்க மாற்றி மாற்றி அவனை வந்து பார்த்துவிட்டு தான் சென்றார்களே தவிர வாசமல்லிக்கு அங்கிருந்து கிளம்பும் எண்ணமே இல்லை.
அவ்வப்போது எதையாவது சொல்லிக்கொண்டு வந்து தன் முன்னே நிற்பதும், பின் ‘கிளம்புவோமா’ என்று தான் கேட்டதும் கண்டுகொள்ளாததை போல வீட்டிற்கு வருபவர்களிடம் வாய் ஓயாமல் பேசுவதுமாக இரவும் கவிழ்ந்து உணவும் கடந்துவிட்டது.
“இவளுக்கு வாய் ஓயுமா ஓயாதா? வலிக்காம பேசிட்டே இருக்கா….” என்று அபர்னிதாவிடம் குமுறத்தான் முடிந்தது அவனால்.
அந்தகாலத்து முற்றம் வைத்த வீடு. அழகாய் இருந்தது. சங்கரின் பூர்வீகமும் வாசமல்லியின் ஊர். சொந்த வீடும் இங்கிருந்தாலும் இருப்பதென்னவோ கோவையில் தான்.
ஆடு பகை குட்டி உறவு என்பதை போல சங்கர் மட்டுமே பிடித்தம். மற்றபடி அங்கே அந்த ஊரை பற்றி கூட தெரிந்துகொள்ள ஷ்ரவன் ஆர்வம் கட்டியதில்லை.
பிறந்து வளர்ந்ததெல்லாம் வேறிடம் என்றிருக்க அவனுக்கு அதனை தெரிந்துகொள்ளவும் எந்த எண்ணமும் இல்லை.
அபர்னிதாவுக்கு சங்கரை பேசும் பொழுதே நீலகண்டன் அந்த ஊரை பற்றி சொல்லியிருக்க ஷ்ரவனுக்கு சங்கர் கோவையில் தான் இருக்கிறான் என்றதில் பெரிதாய் எந்த ஊரை பற்றி யோசிக்க தோன்றவில்லை.
இப்பொழுது மொத்தமாய் அந்த ஊர்க்காரனை போலவே தன்னை அமர வைத்திருக்கும் அந்த குடும்பத்தை என்னவென்று அவன் சொல்வது?
இதோ உறங்கி எழுந்து விடிந்தும் விட்டாகிவிட்டது. கோபத்தோடு படுக்கையை விட்டு எழுந்து நின்றவன்,
“ரொம்ப சந்தோஷமா? உன் இஷ்டப்படி வந்துட்ட. இருந்துட்டல்ல. வா கிளம்புவோம்…” என ஷ்ரவன் எழுந்து நிற்க,
“வொய் கோயிங் அத்தான். டுடே இங்க இருந்திங். டுமாரோ கோயிங்…”
“காண்டாகிடுவேன் பார்த்துக்க. தமிழ்ல பேசு…”
“மார்னிங் ஐ டாக். யு நோ தெரிஞ்சு…” என அப்போதும் அவள் அப்படியே பேச மண்டை காய்ந்தது.
“சத்தியமா சொல்றேன்டி. கொல்லாத…” என்றதற்கு அவள் களுக்கென சிரிக்க,
“என்ன சொல்லிட்டேன்னு இப்ப பல்ல காட்டுற?…”
“கொல்லாதன்னு நிறைய கதைல படிச்சிருக்கேன்…”
“என்னது?…”
“பார்த்தீங்களா. தமிழ்ல பேசினாலும் யூ நோ தெரிஞ்சு. அதான் உங்களுக்கு புரியற மாதிரி…”
“போதும். மேல சொல்லு…”
“ஓகே. ஸ்டோரீஸ் ஹீரோஸ் சொல்லிங் கொல்லாத ஹீரோயின பாத்து. அதுவும் லவ்வா டெல்….” என்று அவள் சொல்ல புரிவதற்குள் விழி பிதுங்கியது.
அவசரத்திற்கு ஒதுங்கி அழ கூட அந்த அறையில் பாத்ரூம் இல்லை. இடுப்பில் கை வைத்துக்கொண்டு,
“இப்பவே கண்ணை கட்டுதே…”
“ஸ்லீப்பிங் கம்மிங்கா அத்தான்?…”
“நான் எதுவுமே கேட்கலை. ஆளை விடு…” என தான் கழட்டி வைத்திருந்த உடையை அணிவதற்காக எடுத்தவன்,
“இன்னும் என்ன?…”
“நீங்க கேள்வி கேட்டு பதில் சொல்லாம போவமுடியாது…”
‘பாத்ரூம் வேற போகனும். இவ விடமாட்டா போல’ என கண்ணை மூடி யோசித்தவன்,
“சரி சொல்லு…” என்று நிற்க,
“கொல்லாதன்னா ஆசையா சொல்லுறது தான. நான் படிச்ச கதைல அப்படித்தான் சொல்லுவாங்க…” என்று எதிர்பார்ப்போடு அவள் சொல்லியவிதம் அவனுக்கு சிரிப்புமூட்டியது.
‘இந்த டெக்னாலஜி வேர்ல்ட்ல கூட இப்படி அப்பாவி பெண்களும் இருக்கிறார்களே!’ என ஆச்சர்யத்துடன் நினைத்தவன் முகம் சட்டென கடுமையானது.
‘இவளா அப்பாவி? அல்வாத்துண்டு மாதிரி என்னைய அள்ளிக்கிட்டு வந்துட்டு ஒன்னும் தெரியாதாமா?’ என்று அவளை முறைத்து பார்த்து,
“யு ஆர் டேஞ்சரஸ்…” என தன்னை மறந்து அவன் சொல்ல வாசமல்லியின் காதில் விழுந்தது.
“என்னது டேஞ்சரா?…” என்று பார்த்தவள்,
“என்னை எதுக்கு அத்தான் இப்படி பேசறீங்க?…” என கேட்க,
“நீயும் உனக்குள்ள இருக்கறதும்…” என்றவனை பேசவிடாமல்,
“அதை நானே சொல்லிடறேன். எனக்குள்ள நீங்க. ஐ மீன். மீ இப்போ யூ, இட்ஸ் மீ, மீ இன்ஸைட் கூட யூ தான் மாமா. என்னை போய் முறைக்கறீங்க…” என்று சொல்லிய விதத்தில் அவனிடத்தில் அடக்கப்பட்ட சிரிப்பு வெடித்து கிளம்ப,
“நித்யானந்தம்…” என்று சொல்லி இன்னும் அவன் சிரித்து,
“சத்தமா சொல்லிடாத. இன்ஸைட் மீ யாம். வந்து பார்த்திட போறேன்…” என்று சொல்லியவன் தன் பேச்சின் அர்த்தம் புரித்து சட்டென தன் தலையில் தானே தட்டிக்கொண்டவன்,
“என்ன பார்த்துட்டே இருக்க? கிளம்பு கிளம்பு…” என்று சொல்ல,
“எங்க அத்தான்?…”
“ப்ச், என்ன எங்க? ஊருக்கு தான். ட்ரெஸ் எதுவும் எடுத்துட்டு வரலை நான். ஒரு ப்ரெஷ் கூட. நான் என்ன பண்ண?…”
“ஆனா நான் எடுத்துட்டு வந்திருக்கேனே…”
“என்ன நக்கலா? உன் ட்ரெஸ் எனக்கெக்குடி? கொன்னுடுவேன் பார்த்துக்க…”
“இல்ல என் ட்ரெஸ் இல்ல அத்தான். உங்க ட்ரெஸ் தான்…” என்று சொல்லியவளை அதிர்ச்சியுடன் பார்க்க,
“மதினி தான் ஹெல்ப் டூயிங்…”
“என்னடி சொல்ற…” என்றவன் பின் புரிந்து,
“எல்லாம் அவ வேலையா? இருக்கட்டும்…” என்று பல்லை கடித்தவன்,
“இங்க பாரு இன்னும் ரெண்டு நல்ல ஊட்டி போகனும்…”
“தேன்நிலவா அத்தான்?…” என்று கேட்க ஷ்ரவனுக்கு தான் அவளை இன்னும் கடிந்து பேச சிரமமாக இருந்தது.
என்ன பேசினாலும் முகத்தில் வாடாத புன்னகையுடன் தன்னை ஆர்வமும், வெட்கமுமாய் பார்ப்பவளை அதிகம் காயப்படுத்தி தன் ஆற்றாமையை குறைத்துக்கொள்ள முடியாமல் தள்ளாடி நின்றான்.
“உனக்கு தெரியாதா? நான் அங்க தான் வொர்க் பன்றேன்…” என மென்மையாய் சொல்ல,
“ஓஹ், ஆமா சொன்னாங்க. ஆனா நான் கவனிக்கலை. ஞாபகம் இல்லையே…” என கண்களை விரித்து அவள் சொல்ல,
“இது கூடவா ஞாபகம் இல்லை. நான் ஞாபகம் இருக்கும் போது என் வேலை இல்லையோ?…” என ஆச்சர்யம் மிக கேட்க,,
“நீங்க ஞாபகத்துல இருக்கீங்களே? போதாதாமா?…” என சொல்லியவளை மேலும் கடிய முடியாமல்,
“என் பேஸ்ட் ப்ரெஷ், ட்ரெஸ்…”
“இதோ…” என ஓடி சென்று எடுத்துக்கொண்டு வந்து அவனிடம் தர வாங்கி கொண்டு வீட்டின் பின்பக்கம் பாத்ரூமிற்கு சென்றான்.
“அத்தான் இருங்க, வெந்நீர் வெளாவறேன்…” என்று பெரிய பானை ஒன்று அவள் தூக்கிக்கொண்டு வர அரண்டு பின்னால் நகர்ந்து நின்றவன்,
“எதுக்கு கொதிக்கிற தண்ணி பானையை தூக்கிட்டு வர? கொட்டிட்டேனா கால்ல தான சுடும்…” என்று கத்த,
“இது ஒரு விஷயமா? அதெல்லாம் பலவாட்டி கொட்டிருக்கு. பழக்கம் தான் அத்தான்…” என சொல்லி,
“எங்க இது போதுமா பாருங்க…” என்று அவனை தொட்டு பார்க்க சொல்ல,
“வச்சுட்டு போ. நானே கலந்துக்கறேன்…” என்று அவளை வெளியே அனுப்பினான்.
ஒரு பெருமூச்சுடன் குளிக்க ஆரம்பித்தவன் மனமெங்கும் மனைவியின் சிந்தனையே. அவளை விலக்கவும் முடியாமல் வெறுக்கவும் முடியாமல் அவளுடன் வாழ்க்கையை ஆரம்பிக்கவும் முடியாமல் தடுமாறி நின்றான்.
எதுவானாலும் இப்போதைக்கு எதையும் நினையாமல் இருப்போம் முடிவெடுத்துவிட்டு குளித்துவிட்டு வெளியே வந்தவன் காதில் நீர் இறங்கி இருக்க சுண்டுவிரல் கொண்டு காதை குடைந்தபடி வெளியே வந்தான் ஷ்ரவன்.
அங்கே கிணற்றடியில் இருந்த துணி துவைக்கும் சலவை கல்லில் சாய்ந்து நின்றபடி காதை இன்னும் குடைய நீர் வடியவே இல்லை. காது அடைத்தது.
“என்னாச்சு அத்தான். காதை குடைஞ்சிட்டு இருக்கீங்க?…” என வந்த வாசமல்லியிடம்,
“காதுக்குள்ள தண்ணி போய்டுச்சு வாசு. அதான்…” என சொல்லிக்கொண்டே இன்னும் விரலை விட்டு காதில் குடைய,
“நான் ஊதிவிடட்டா? உடனே போய்டும்…”
“நிஜமாவா?…” என அவளை சந்தேகமாக பார்க்க,
“ஐ ப்ராமிஸ் அத்தான்….” என அவளின் இடதுகையை நீட்டி வலது கையால் அவளுக்கவளே சத்தியம் வைக்க,
“போதும் தாயே. திருவாயை திறக்காம ஊது…” என காதை அவளுக்கு வாகாக காண்பிக்க,
“குன்னாங்குன்னா குர்ரர்ர்ர்ர்…” என்று அவள் சத்தமாக கத்த காதில் ஒலித்த ஒலிபெருக்கியின் ஒலியில் சத்தமாய் கத்த,
“ஆஆஆஆஆஆஆ…” என்று பயந்துபோய் அவளுக்கு மேல் அவன் கத்தினான்.
அவள் கத்தியதில் காதில் கிங்ங்கென்று சத்தம் மட்டும் தான் கேட்டது. சுற்றிலும் வேறு எந்த சத்தமும் கேட்காமல் போக இவனின் அலறலில் அனைவருமே பின்பக்கம் வந்துவிட்டனர்.
“என்னாச்சு என்னாச்சு?…” என்ற அபர்னிதா வாசமல்லியை பார்க்க,
“மல்லி என்னடாம்மா?…” என அவளிடம் விசாரித்தனர் அவளின் அன்பு தந்தையும், தாயுமான பத்மநாபனும், சித்ராவும்.
‘அடப்பாவிங்களா காத்து ஜவ்வு அந்து போயி ஒய் ப்ளட் சேம் ப்ளட் ரேஞ்ச்ல ஒருத்தன் நிக்கறேன் கொஞ்சல் அங்கயா?’ என ஜவ்வு கிழிந்த காதில் சூடாய் புகை வெளியேற,
“என்ன ஷ்ரவா?…” என்ற சங்கரின் கேள்வியில்,
“அத்தான் காதுல தண்ணி கோர்த்திருச்சு. அதான் நான் ஊதி விட்டேன். கொஞ்சம் சத்தமா ஊதிட்டேன் போல…” என அப்பாவியை சொல்ல,
“கொஞ்ச சத்தமாவா?..” என வாய்விட்டே ஷ்ரவன் கேட்க,
“இந்தா அவங்க சின்னஞ்சிறுசுங்க விளையாடிட்டு இருக்காங்க. இது புரியாம. அவங்களை விட்டுட்டு உள்ள வாங்க…” என சித்ரா சொல்லிவிட்டு சிரிப்புடன் உள்ளே செல்ல சங்கரும் அபர்னிதாவும் கூட சிரிப்போடு அங்கிருந்து நகர்ந்துவிட,
“பார்த்துடாம்மா…” என பத்மநாபன் மகளின் தலையில் தடவிக்கொடுத்து அவரும் சென்றுவிட்டார்.
அனைவரும் சென்றதும் இப்பொழுது மனைவியை தான் முடிந்த மட்டும் முறைத்து பார்த்தான் ஷ்ரவன்.
“உங்க வீட்டுல யாருமே யார்ட்டையும் என்ன ஏதுன்னு கேட்கற பழக்கமே கிடையாது போல? போட்டு என் தலையை உருட்டுங்க…” என தனியாக போய் நின்றுகொண்டான்.
“அத்தான் கோவமா இருக்கீங்களா?…” என்றவளுக்கு பதில் சொல்லாமல் அவன் திரும்பி நிற்க,
“ஒத்தையில நின்னதென்ன யே மன்னவனே மன்னவனே…” என்று தொண்டையை செருமிக்கொண்டு பாடி அவனின் முன்னால் வந்து நிற்க அப்போதும் அவன் அசையாமல் நிற்க,
“ஐயோ அத்தானுக்கு புரியலை…” என்றவள் யோசிக்கவுமே அலர்ட் ஆனவன் அவள் வாயை திறக்கும் முன்னரே,
“பசிக்குது. வா உள்ள போவோம்…” ஷ்ரவன் அவளின் கையை பிடித்து இழுத்துக்கொண்டு சென்றான் வேகவேகமாய்.
பின்னே அவனுக்கு புரியவில்லை என்று அதையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்கிறேன் என்று ஆரம்பித்துவிட்டால்? அவன் கவலை அவனுக்கு.
ஆனாலும் அவளின் அந்த பேச்சு அத்தனை பிடித்திருந்தது. திருட்டுத்தனமாக ரசிக்க கூட செய்தான். தனியாக இருக்கும் பொழுது நினைத்து சிரிக்கவும் செய்ய தன் மனம் போகும் போக்கின் விந்தையில் இன்னுமே குழப்பமானான்.