“இருக்கட்டும் நாதன், நாங்க எடுத்து வச்சுக்கறோம். நீங்க கிளம்புங்க…” என சொல்ல,
“ஸார் நாளைக்கு லீவுங்களா?…” என்று நின்றார்.
“ஹ்ம்ம், ஆமா. வெளில போகவேண்டியதிருக்கே…” என்று சொல்லிவிட்டு அவரை அனுப்பியவன் திரும்பி பார்க்க வாசமல்லி அப்படியே தான் நின்றாள்.
“ஓய் ஆர்வம், எதுக்கு மூஞ்சியை தூக்கி வச்சுட்டு இருக்க?…” என கேட்க ஒன்றுமில்லை என்று தலையசைத்தாள்.
“சரி வா, சேர்ந்தே போவோம்…” என்று அவளுக்கு கை நீட்ட அதன் மேல் கை வைத்தவள் வளதுகாலை உள்ளே எடுத்துவைத்து வந்தாள்.
“என்ன இவ்வளோ ஜில்லுன்னு இருக்குது…” என்று பரபரவென அவளின் கையை தேய்த்து சூடேற்றினான் ஷ்ரவன்.
“அத்தான் கதவு திறந்திருக்குது. பெட்டியெல்லாம் வெளில இருக்குது…” என்று சொல்ல,
“சரி உட்கார்….” என்று அமரவைத்துவிட்டு அனைத்தையும் தூக்கி உள்ளே வைத்து கதவை சாற்றியவன் அறையின் ஹீட்டரை போட்டுவிட்டான்.
“குளிர் குறைஞ்சிரும்…” என்று சொல்லி,
“இங்க வா…” என அவளை அழைத்துக்கொண்டு வீட்டை சுற்றி காண்பிக்க ஆரம்பித்தான்.
இரண்டு படுக்கை அறையும், ஒரு ஹால், கிட்சன், பால்கனி, பின்னால் கொஞ்சம் இடம் என்று அம்சமாய் இருந்தது.
“சரி சரி, இருங்க இப்ப வந்திடறேன்…” என்றவள் பாத்ரூமிற்கு செல்ல அவள் வரட்டும் என்று பெட்டிகளை கொண்டுவந்து இன்னொரு அறையில் வைத்தவன் தாங்கள் இருக்கவிருக்கும் அறைக்கு கொண்டுவரவில்லை.
மறுநாள் எடுத்து ஒழுங்குபடுத்திகொள்வோம் என்று அங்கு வைத்துவிட்டான். வாசமல்லி வரவும் இரவு உணவை வெளியே வாங்கி வர செய்துவிட்டு சாப்பிட்டு முதலில் தூங்கவேண்டும் என அவன் திட்டமிட்டபடி ஹாலில் இருக்க,
“அத்தான் குளிருது…” என்று கையை காலியா உதறியபடி கிடுகிடுவென நடுங்கிக்கொண்டு வந்தாள்.
“வாசு என்ன இப்படி நனைஞ்சு வந்திருக்க?…” என அவளை பார்த்ததும் கேட்டவன் உடனே ஒரு டவலை கொண்டுவந்து அவளிடம் தர,
“எந்த பைப்புன்னு தெரியல. திறந்ததும் மேல இருந்து தண்ணி விழுந்துச்சு…” என்று சொல்லி முடிப்பதற்குள் அவள் சிரமப்பட்டு போக,
“முதல்ல ட்ரெஸ் மாத்து…” என அவளின் பெட்டியில் ஒன்றை கொண்டுவந்து தந்தான். அவளால் சுத்தமாக முடியவில்லை. கைகள் கிடுகிடுவென நடுங்க பார்க்கவே பாவமாக போனது அவனுக்கு.
பரபரவென அவளின் புடவையை உருவியவன் அந்த டவலுடன் சேர்த்து ஈரமான இடங்களை துடைத்து ஒரு கம்பளியை எடுத்து போர்த்திவிட்டு அவளின் கூந்தலை அவிழ்த்து துடைத்துவிட்டான்.
“இப்போ ஓகே வா? வாசு. வாசு…” என கேட்க குளிர் அதிகமாகிக்கொண்டே தான் இருந்தது.
இன்னும் நடுங்க கம்பளியை விடுத்து தன்னோடு அணைத்து அதை போர்த்திகொண்டான்.
“நத்திங் வொர்ரி வாசு. இப்ப குளிர் போய்டும்…” என்று சொல்லி அவளை தன் அணைப்பில் இறுக்கியவன் முதுகை பரபரவென தேய்த்துவிட்டான்.
“என்ன இது இன்னும் குளிருது?…” என தனக்கும் குளிர்வதை உணர்ந்து பார்வையை திருப்ப சற்று முன்னர் தான் ஜன்னலை திறந்துவைத்ததே தெரிந்தது.
இத்தனை நாள் அடைத்து வைத்திருந்ததில் என்னவோ போல் இருக்க ஜன்னல்களை எல்லாம் திறந்துவிட்டிருந்தான். மழை வரும் அறிகுறியில் காற்று வேறு பலமாய் வீச அது இன்னும் குளிர்ந்து.
மெதுவாய் அவளுடனே நகர்ந்து ஜன்னல் கதவை இழுத்து சாற்றியவன் சற்று நேரத்தில் வாசுவின் உடல் சமன்பட்டதை உணர்ந்ததும்,
“ஓகே, இனி ஒண்ணுமில்லை. ரூம் சூடாகிருச்சு. இப்ப நீ ட்ரெஸ் பண்ணிக்கோ. நான் சாப்பாடுக்கு சொல்லிட்டு வரேன்…” என்று அவளை விட்டு செல்ல வாசுவிற்கு தான் அந்த அணைப்பின் தாக்கத்தில் இருந்து வெளிவர நேரம் பிடித்தது.
அந்த அறையின் கதவை சாற்றிவிட்டு உடை மாற்றியவள் தலையை உலர்த்தியபடி வெளியே வந்தாள்.
“வாசு இப்போ சாப்பாடு வந்துரும். நாதன் தான் கொண்டுவருவாரு. வாங்கி வை. நான் குளிச்சுட்டு வரேன். வந்ததும் சேர்ந்து சாப்பிடுவோம்…” என்று சொல்ல,
“எஸ் அத்தான். ஐ டூ. யூ கோ…” என்று சொல்லவும் சென்றவன் அப்படியே திரும்பி நின்றான்.
“இங்க வா…” என அருகே அழைதத்தவன் முகம் தீவிரமாய் இருக்க சிரிப்பை குறைத்து அவனருகே நின்றாள். அவளின் தோளை பிடித்துக்கொண்டவன்,
“இங்க பாரு வாசு. உன்கிட்ட நான் கேட்கறது ஒரே ஒரு விஷயம் தான். என்னை கவர் பன்றேன்னு இந்த இங்க்லீஷ் எல்லாம் வேண்டாம். எப்பவும் போல நீ உங்க வீட்டுல எப்படி பேசுவியோ அப்படி பேசு. அது போதும்…” என்றவனின் முகத்தில் இருந்த தன்மை என்னவோ இயல்பாக இருக்க வாசுவின் மனது அடிவாங்கியது.
கொஞ்சநஞ்ச சிரிப்பும் சுத்தமாய் தொலைந்து போக, அதனை காட்டிக்கொள்ளாமல் உடனே அவனுக்கு சரி என்பதை போல வரவழைத்துக்கொண்ட சிரிப்புடன் வேகமாய் தலையாட்டினாலும் சட்டென மாறிய முகபாவனையை அவதானித்தான்.
“நான் சொன்னது உன்னை காயப்படுத்தினாலும் நான் சொன்னதுல எந்த மாற்றமும் இல்லை வாசு. இதை புரிஞ்சுக்கோ…” என்றவன்,
“பாத்ரூம்ல எந்த பைப்ல வெந்நீர் வரும்ன்னு நான் குளிச்சுட்டு வந்து சொல்றேன். இனி இப்படி போய் நனைஞ்சிட்டு வராத. இனி இங்க குளிர் இன்னும் அதிகமாகும். புரியுதா?…” என்றபடி டவலை எடுத்துக்கொண்டு குளிக்க செல்ல வாசமல்லி அப்படியே அமர்ந்துவிட்டாள்.
அவன் அப்படி பேசிவிட்டு சென்றது என்னவோ போல் இருந்தது. முதன்முதலில் உள்ளுக்குள் மனதை பிசைந்தது. என்னென்னவோ எண்ணங்கள் முளைக்க சற்றுமுன் அவனின் அணைப்பில் இருந்த தோற்றம் எல்லாம் கனவோ என்பதை போல இருந்தது.
இப்படி யோசனைகளுக்குள் இருக்க அதற்குள் அபர்னிதா அழைத்துவிட்டாள் வாசுவின் எண்ணிற்கு.
“என்னடி வீட்டுக்கு வந்தாச்சா?…” என கேட்க,
“ஹ்ம்ம், வந்துட்டோம் மதினி. இப்ப கொஞ்சம் முன்னதான் வந்தோம்…” என்று சொல்ல,
“வீடு புடிச்சிருக்கா மல்லி? ஜீப்ல போகும் போது உன்கிட்ட நல்லா பேசினானா? நீ எப்படி பேசின? நான் சொல்ற மாதிரி தான பேசின?…” என கேட்க,
“எங்க மதினி? மலையேறவுமே எனக்கு தலை கிறுகிறுத்து போச்சு. சொணங்கிட்டேன். அத்தானுக்கு டென்சனாகிடுச்சு போல…” என்று சொன்னவள் கதை கதையாய் அபியிடம் சொல்ல குளித்துவிட்டு வந்தவன் அவள் பேசிக்கொண்டிருப்பதை பார்த்ததும் வேகமாய் அவளருகே வந்தான்.
“நனைஞ்சதுல ஒரே குளிர். எனக்கு என்ன பன்றதுன்னே தெரியல. அத்தான் தான் துண்டு கொண்டுவந்து குடுத்தாரு…”
“ஹ்ம்ம், அப்பறம்…” என அபி கதை கேட்க அடுத்து வாசு பதில் சொல்வதற்குள் அந்த மொபைலை பறித்திருந்தான் ஷ்ரவன்,
“சொல்லு வாசு? அப்பறம் என்ன? அவன் நல்லா பாத்துக்கிட்டான் தானே?…”
“வெய்ட் அபி…” என்ற ஷ்ரவனின் குரலை எதிர்பாராத அபி,
“டேய் நீ எப்படி?…” என கேட்க,
“வாசு அந்த ரூம்ல உன்னோட பெட்டி எல்லாம் இருக்குது. அந்த அலமாரில நீ கொண்டுவந்ததை எல்லாம் எடுத்து வை…” என்று அவளை அனுப்பிவிட்டு தங்கள் அறைக்கு வந்தவன்,
“என்ன பண்ணிட்டிருக்க அபி?…” என்றான் எடுத்ததுமே கோபமாய்.
“அவ தான்டா ஊருக்கு போனதை பத்தி கதை சொல்லிட்டு இருந்தா. நான் ஜஸ்ட் கேட்டுட்டு இருந்தேன்…” என சிரிக்க,
“சரி கேட்டாச்சுல. போனை வை…”
“அட இருடான்னா. ரொம்பத்தான். நீ வாசுக்கிட்ட போனை குடு. நான் பேசனும். நீ ஏன் எங்களுக்குள்ள தலையிடற?…”
“இப்ப எங்களுக்கு ப்ரைவேசி வேணும். சாப்பிட வேண்டாமா? போனை வை…”
“சரி இன்னைக்கு இல்லைன்னா என்ன? நாளைக்கு பேசிக்கறேன். ரொம்பத்தான். அதை விடு. நீ ஏன்டா ஜீப்ல போகும் போது டென்ஷன் ஆன? அவ்வளவு கோபம் வருதா உனக்கு? அவளுக்கு இது பர்ஸ்ட் ஜர்னி. மலைல சேரலைன்னா உடனே கோபப்படுவியா?…” என்று பேச,
“இப்ப நான் அவக்கிட்ட கோபப்பட்டா உனக்கு என்ன? உன் வேலையை பாரு…”
“இப்போலாம் நீ என்கிட்டே கோச்சுக்கிட்டே இருக்க ஷ்ரவா. நான் உனக்கும், மல்லிக்கும் நல்லது தான செய்யறேன். உனக்கு ஏன் புரியலை? அவளை…”
“போதும் அபி, வரும் போது உன்கிட்ட சொல்லிட்டு தான வந்தேன். என் பொறுமையை ரொம்ப சோதிக்கிற நீ. ஜஸ்ட் இனஃப்…”
“ஷ்ரவா, அவளுக்கு அந்த ஊர் புதுசுடா. அதான் எல்லாம் சொல்லி குடுக்கலாமேன்னு…”
“சொல்லி வளர்க்கறதுன்னா அது அவ அப்பா வீட்டுல இருக்கும் போதே வளர்த்திருக்கனும். கல்யாணம் பண்ணின பின்னால ஸ்கூலுக்கு அனுப்பறது மாதிரி இருக்குது உங்க வேலை எல்லாம். கூடவே அத்தனை வருஷம் இருந்தப்போ இவளுக்கு சொல்லிக்குடுக்க முடியலையோ?…”
“உனக்கு ஏன் இத்தனை கோபம் வருதுடா?…” அபி எரிச்சல் பட,
“கோபப்படாம? உன் புருஷனுக்கும் தெரியும் தானே? அவரையும் சேர்த்து தான் சொல்றேன். இவ்வளோ நாள் அவளுக்கு அது பிடிக்கலை இது பிடிக்கலைன்னு அவ போக்குல விட்டு பொத்தி பொத்தி வளர்த்துட்டு இப்ப வந்து என்னத்தை சொல்லிக்குடுத்து மாத்தறீங்கலாம்?…” என்று வெடித்தவன் வாசமல்லி வந்ததையும் கவனிக்காமல்,
“புருஷனை பார்த்துக்கறவ தான் பொண்டாட்டி. இங்க இவளை நான் பார்த்துக்கனும் போல இருக்குது. என்னோட வேலைக்கு இந்த மாதிரி பொண்ணு ஒத்து வராதுன்னு தெரிஞ்சு தான கல்யாணம் செஞ்சு வச்சீங்க? வச்சதோட நில்லுங்க. இப்ப என்ன இவளை நான் பார்த்துக்கனும். நான் பார்த்துக்கறேன்…”
“அதுக்குத்தான், உன்னோட இந்த மாதிரி தோண கூடாதுன்னு தான் நான் அவக்கிட்ட பேசி மாத்தலாம்னு…”
“ஒன்னும் மாத்த வேண்டாம். இப்படி ஒரு ஜர்னி என் வாழ்நாள்லையே வந்ததில்லை. அப்படி ஒரு கடுப்பு. அவளை ஒன்னும் சொல்லவும் முடியலை. இப்ப நீ என்னன்னா போதாததுக்கு ஏத்தி விட்டுட்டு இருக்க அவளை…”
“ஷ்ரவா உனக்கு கல்யாணம் ஆனதும் நீ மாறிட்ட…” என்ற அபியின் குற்றசாட்டில்,
“ஷட் அப் அபி. ஒரு லிமிட் தான் உனக்கும். திரும்ப வெறுப்பேத்தாத. மனுஷன் இருக்கற கடுப்புல…” என்று சொல்லி போனை கட் செய்தவன் திரும்பி பார்க்க அங்கே அதிர்வுடன் நின்றிருந்தாள் வாசமல்லி.
பேசியதை எல்லாம் கேட்டிருக்கிறாள் என்று. அவளிடம் சென்று தன்னிலை விளக்கம் கொடுக்கும் அளவிற்கு இப்போது நிதானம் இல்லை அவனுக்கு. அப்படி ஒரு கோபத்தில் இருந்தான் ஷ்ரவன்.
வாசமல்லியும் ஏதாவது கேட்டிருந்தால் கூட பதில் சொல்லியிருப்பானோ என்னவோ, அவளும் அப்படியே அசையாது நிற்க தலையை கோதியபடி கதவை திறந்துகொண்டு வெளியில் வந்து டிவியை போட்டு அமர்ந்துவிட்டான்.
வந்த முதல்நாளே இருவருக்குமே கசந்த நாளாக மாறியது. முதன்முதலாக எதிர்காலத்தை பற்றிய பயம் இருவருக்கும் கவ்விக்கொண்டது.
நாதன் வந்து உணவை கொடுத்துவிட்டு சென்ற பின்னரும் வாசமல்லி அந்த அறையை விட்டு வெளியே வரவில்லை. அங்கேயே சுருண்டு படுத்துக்கொள்ள வந்து பார்த்தவன் ஒரு பெருமூச்சோடு அவளருகே வந்தான்.
“வாசு, வா சாப்பிடலாம்…” என அழைக்க அமைதியாய் எழுந்து வந்தாள்.
இப்படி அவள் பேசாமல் இருந்ததே இல்லை. இத்தனை நிமிடங்கள் கூட அவள் பேசாமல் இருந்ததில்லை. அவள் வீட்டில் அவளை பார்த்தானே? அப்படி ஒரு சலசலப்பு நீரோடை போல பேசிக்கொண்டே இருந்தவள் ஒரே நாளில் இப்படி ஆகிவிட ஷ்ரவனுக்கே பொறுக்கவில்லை.
கிட்சனிற்கு அழைத்து சென்றவன் எதெது எங்கெங்கே இருக்கிறது என்று சொல்ல சொல்ல சிரத்தையுடன் கேட்டுக்கொண்டவள் முகம் மீண்டும் கொஞ்சம் கொஞ்சமாய் தெளிவாக மாறியது.
“பாத்திரம் எல்லாம இருக்குன்னு தான் வேண்டாம்னு சொன்னீங்களா அத்தான்?…” என அவள் கேட்க,
“ஹ்ம்ம், ஆமா வாசு. இங்க வைக்கவும் இடமிருக்காது. அதான் சொன்னேன். நான் சொன்னா அதுல ஒரு அர்த்தம் இருக்கும். புரியுதா?…” என மென்மையாக கேட்கும்,
“புரியுது அத்தான்…” என அதற்கும் அவள் தலையாட்ட,
“கொஞ்சம் சிரிச்சுட்டே சொல்லலாம் வாசு. இந்த முகம் நல்லா இல்லை…” என்று புன்னகையுடன் சொல்லவும் வாசுவின் முகத்திலும் சிறு புன்னகை விரிய ஆரம்பிக்க,
“குட், வா சாப்பிடலாம்…” என்று முன்னால் நடக்க தட்டுகள் தண்ணீர் என எடுத்துக்கொண்டு வந்தாள். இருவரும் சேர்ந்து உண்டு முடிக்கவும் உறக்கம் வர வந்து படுத்துவிட்டான்.
மறுநாள் அவளை அழைத்துக்கொண்டு எங்கே செல்லவேண்டும், என்ன வாங்கவேண்டும் என்றெல்லாம் யோசித்து முடித்தவன்,
“நாளைக்கு மார்கெட் போகலாம். வீட்டுக்கு என்ன தேவையோ போய் வாங்கிட்டு வருவோம்…” என்று சொல்லி வாசுவை திரும்பி பார்க்க படுத்த நிமிடத்தில் உறங்கி போயிருந்தாள் அவள்.