பூ – 7
இரவு உணவை முடித்துவிட்டு கிட்சனை ஒழுங்குபடுத்தியவள் வந்து படுக்கும் பொழுது ஷ்ரவன் இன்னும் உறங்காமல் ஜன்னலோர இருக்கையில் அமர்ந்திருந்தான்.
“இன்னும் தூங்கலையா அத்தான்?…” என கேட்க,
“ஹ்ம்ம், ஒரு போனுக்காக வெய்ட்டிங்…” என மொபைலில் இருந்து பார்வையை அவளிடம் நிலைக்கவிட்டவன்,
“புடவை மாத்திக்கலையா?…” என்றான்.
“உறங்கும் போதுக்குமா வேற மாத்துவாங்க? அதெல்லாம் வேணா. இதே போதும்…” என்று தான் படுக்கும் பக்கம் படுத்துக்கொள்ள ஷ்ரவனின் மனது அல்லாட துவங்கியது.
முதல்நாள் களைப்பும், கடுப்புமாய் படுத்துவிட்டவனுக்கு இன்றோ அப்படி உறக்கம் வருவதை போல தெரியவில்லை.
பார்வை பட்டும் படாமல் இல்லாமல் அழுத்தமாகவே அவளை தீண்டிக்கொண்டே இருக்க மனைவி என்ற உரிமையில் அதிகமாகவே அவளில் நிலைக்கவிட்டான் தனது கண்களை.
“என்னத்தான்?…” என்று அவள் கேட்டதும்,
“ஹ்ம்ம், சும்மா பார்த்தேன்…” என்று சொல்லியும் இன்னும் பார்த்துக்கொண்டே இருக்க,
“சரி நான் தூங்கறேன்…” என்று திரும்பிக்கொண்டாள்.
“வாசு…” என்றவனின் அழைப்பில் திரும்பி அவன் பக்கமாய் படுக்க,
“ஓகே, தூங்கு…” என்றவன் மனம் போகும் திசையை எண்ணி வெட்கினான்.
பிடிக்கவில்லை பிடிக்கவில்லை என்று சொல்லி சொல்லி இப்போது மனைவியாய் அவளிடத்தில் தன்னுரிமையை கேட்க உடலும் , மனதும் பரபரத்துக்கிடந்தது தான் இப்போது சுத்தமாய் பிடிக்கவில்லை.
அவளை நெருங்க தவித்தபடி இருந்தவனுக்கு அவளை முழுமையாய் கொண்டாட ஆசை இருந்தும் இன்னொரு மனம் வசைபாடியது.
இன்னும் அவளை மனது முழுமையாக ஏற்றுக்கொண்டதா என்றால் அவனிடத்தில் பதில் இல்லை. ஆனாலும் திருமணம் தான் ஆகிவிட்டதே. மனைவியவள் தனக்கு வேண்டும் என்று இன்னொரு உள்ளமோ அவனை பந்தாட அவனின் தேவைகளின் முன்னால் போராட்டம் புரிய துவங்கியது.
தனது போனை எடுத்துக்கொண்டு ஹாலுக்கு வந்துவிட்டவனின் மனது இருவேறு கரைகளின் பக்கம் நின்றுகொண்டு ஒவ்வொன்றாய் தங்கள் பக்கம் வாதிட அதிக நேரமெடுக்காமல் அவன் எதிர்பார்த்த போனும் வந்துவிட தற்போதைய எண்ணங்களை ஒத்தி வைத்தவன் பேச ஆரம்பித்தான்.
அரைமணி நேரம் சென்றிருக்கும். பேச்சுக்கள் முடிந்து மறுநாள் தான் வருவதை பற்றி சொல்லிமுடித்தவன் விளக்குகளை எல்லாம் அணைத்துவிட்டு வந்தான்.
முதல் நாள் போலவே அந்த இரண்டு போர்வைகளை போர்த்திக்கொண்டு ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள் அவனின் மனைவி.
‘என்னை யோசிக்கவே மாட்டியா வாசு’ என புலம்பியபடி வந்து படுத்தவன் மீண்டும் அவள் பக்கம் திரும்பினான்.
“வாசு…” என மெல்ல அழைக்க அவளிடம் எந்த பிரதிபலிப்பும் இல்லை.
“வாசு…” என்றான் இன்னும் சற்று சத்தமாய் வேண்டுமென்றே.
“ஹ்ம்ம்…” என்ற முணங்கலுடன் லேசாய் கண் திறந்து பார்த்தவள்,
“இன்னும் தூங்கலையா அத்தான்?…” என கேட்டு மறுபக்கம் திரும்பி படுக்க போக சட்டென கையிட்டு அவளை தன்னோடு அணைத்துக்கொண்டான்.
“அத்தான்…” என அதிர்வுடன் அவனை பார்த்தவள் பார்வை அவனின் பார்வையோடு இணைய அவளின் அதிர்வை உள்வாங்கியவன்,
“ஒண்ணுமில்லை. இப்படியே தூங்கு…” என அவளின் இடையில் போட்டிருந்த கையை விலக்கவில்லை.
அவளை அணைத்தபடியே அவளின் தோளருகே முகம் பதித்து கண்ணை மூட வாசமல்லிக்குத்தான் பெரும் அவஸ்தையாக போயிற்று.
‘என்னடா இது முன்னுக்குமில்லாமல், பின்னுக்குமில்லாமல் இப்படி செய்கிறானே?’ என்று அவனையே பார்த்தவள்,
“அத்தான்…” என்று அழைக்க,
“ஹ்ம்ம், உனக்கு தூக்கம் வரலையா?…” என்றவனின் மூச்சுக்காற்று வாசுவின் கழுத்தில் சூடாய் பரவ லேசாய் அவனின் சிரிப்பும் கேட்டது.
“இல்லை, ஒண்ணுமில்லை…” என்றவளின் சத்தம் அவளுக்கே கேட்டதோ என்னவோ?
“ஏன் வாசு உன்னை நான் இப்படி பிடிச்சுக்க கூடாதா?…” என அவன் முகம் நிமிர்த்தி கேட்க பதில் சொல்லமுடியாமல் பார்வையை தாழ்த்திக்கொண்டாள்.
“என்னை பிடிச்சு விரும்பி தானே கல்யாணம் செஞ்சுக்கிட்ட? ஆமா தானே?…” என கேட்க,
“ஹ்ம்ம், ஆங், ஆமா தான்…” என திணறலுடன் அவள் சொல்ல அது தன் கையணைவில் இருப்பதால் உண்டான திணறல் என்றே அவன் நினைக்க வாசமல்லிக்கு அவனின் கேள்வியில் பேச்சே எழவில்லை.
“அப்பறம் என்ன? இதுக்கு ஏன் இப்படி நடுங்கற?…”
“அது, குளிர், அதான். குளிர்…” என்றவள் வார்த்தைகள் தடுமாற,
“ஹ்ம்ம், அதான் கட்டிப்புடிச்சுட்டேன். இனி குளிராது, தூங்கு…” என்றவன் மீண்டும் அவளின் கழுத்தில் முகம் புதைத்து கண்மூட வாசுவின் இதயம் தடதடவென ஓடத்தொடங்கியது.
“தூங்கு வாசு…” என்றவனின் மீசை முடிகள் அவளின் கழுத்தில் உரச இதழ்களும் சேர்ந்து உராய்ந்து செல்ல சுத்தமாய் தூக்கம் என்பதே இல்லாது போக ஷ்ரவன் நன்றாய் உறங்கி போனான்.
அவனுக்கு அந்த அணைப்பே ஒரு அமைதி தர நிம்மதியான உறக்கம் சுகமாய் தழுவ தானும் வாசுவை தழுவியபடியே தூங்கினான்.
காலை எழுந்துகொள்ளும் நேரம் அவள் இல்லாது பார்த்தவன் முதல்நாள் தன்செயலை எண்ணி சிரித்தபடி குளித்து கிளம்பி வர அவள் இன்னொரு அறையை கூட்டி சுத்தம் செய்துகொண்டு இருந்தாள்.
“இங்க ஏன் கிளீன் பண்ணிட்டு இருக்க?…” என அதை பார்த்ததும் கேட்க,
“இல்லை, இது பூரா தூசியா இருந்துச்சு. அதான் எடுத்து வச்சுட்டு துடைச்சு வைப்போம்னு இருந்தேன் அத்தான்…” என்றபடி வந்தவள் தூக்கி சொருகியிருந்த புடவையை இழுத்துவிட்டுக்கொண்டாள்.
“டிபன் ரெடியா வாசு?…”
“வாங்க, அதெல்லாம் எப்பவோ ரெடி ஆகிருச்சு. எந்நேரம் கிளம்புவீங்கன்னு தெரியாதுல. அதேன் வெரசா செஞ்சிட்டேன்…” என்று அவனுக்கு இட்லியை வைத்து பரிமாற,
“உன்னையும் சேர்ந்து சாப்பிட சொன்னேன்ல…” என அவளையும் அமர்த்திக்கொண்டான்.
இருவருமாய் பேசியபடியே சாப்பிட ஆரம்பித்தனர், சாப்பிடும் பொழுதே என்ன செய்யவேண்டும் என்று அவன் சொல்லிக்கொண்டே தான் சாப்பிட்டான்.
“இன்னைக்கு உன் பொருளை எல்லாம் எடுத்து அடுக்கி வை. லஞ்ச்க்கு வீட்டுக்கே வந்திடறேன். செஞ்சிடுவ தானே?…”
“கண்டிப்பா அத்தான்….”
“ஓகே, வந்து சாப்பிட்டதும் கிளம்பிடுவேன். ஈவ்னிங் எப்போ வரேன்னு போன்ல சொல்றேன்…”
“ஹ்ம்ம், சரி…”
“சொல்றதை எல்லாம் கவனமா கேட்டுக்கோ…”
“ஹ்ம்ம், சரி…”
“நான் வரவும் பக்கத்துல வெளில போகலாம். அதுவரைக்கும் வீட்டுலையே ரெஸ்ட் எடு…”
“பகல்ல தூக்கம் வராதே…”
“இனி பழகிக்கோ. தூக்கம் வரலைன்னா டிவி பாரு. படம் பாரு பொழுது போக எத்தனையோ இருக்குதே…”
“ஹ்ம்ம், சரி…”
“என்ன சரி?…”
“நீங்க சொல்றதுக்கெல்லாம் சரி…”
“அப்பறம் ஏன் நைட்ல நெளிஞ்சிட்டே இருந்த? அப்போ அதுமட்டும் சரியில்லைன்னு தோணுச்சா?…” என்று கேட்டதும் புரையேற அவனை பாவமாய் பார்த்தாள்.
“தண்ணிய குடி, தண்ணிய குடி…” என்று லேசாய் அடக்கப்பட்ட சிரிப்புடன் சொல்லியவன்,
“வெளில சும்மா வீட்டு முன்னாடி நடக்கனும்னா மறக்காம ஜெர்கின் போட்டுக்கோ. வீட்டுக்கு பின்னால இடம் இருக்குது. அங்க என்ன பண்ணனுமோ பாரு. உன் விருப்பம்…”
“என்ன பண்ணனும்?…”
“அதையும் நான்தான் சொல்லனுமா?…”
“ஹ்ம்ம், சரி…” என்றவள் முகம் பெரும் குழப்பத்தில் இருக்க,
“வாசு என்னாச்சு?…” என்றான் அவளின் முகத்தை கண்டு.
“ஒன்னுமில்லையே. நீங்க சொல்லுங்க அத்தான்…” என்று சிரிக்க,
“ஹ்ம்ம், இதான் மிஸ் ஆச்சு…” என அவளுடன் சேர்ந்து புன்னகைத்தவன்,
“ஓகே, நான் போய் ட்ரெஸ் மாத்திட்டு வரேன்…” என்று கை கழுவிவிட்டு எழுந்து செல்ல வாசமல்லி அப்படியே அமர்ந்திருந்தாள்.
“வாசு…” என்று வந்த ஷ்ரவனின் அழைப்பில் எழுந்து தானும் கையை கழுவிவிட்டு வர,
“ஓகே நான் கிளம்பறேன். மத்தியானம் வரேன். பார்த்துக்கோ. ஒன்னும் பயமில்லை. இருந்தாலும் டோர் லாக் பண்ணிக்கோ. என் நம்பர் தெரியும் தானே? எதுவானாலும் கூப்பிடு. அதுக்காக சும்மா சும்மா கூப்பிட கூடாது…”
“சரி கூப்பிடலை…” என்றவள் அவனின் உடையையே மேலும் கீழும் பார்க்க,
“என்ன பார்வை இது? என்ன?…” என்றான் காவல் உடைக்கு மேல் தன்னுடைய ஜெர்கினை எடுத்து போட்டபடி,
“இந்த துப்பாக்கி சுடுமா அத்தான்?…” என்று அவள் கேட்க வாய்விட்டு சிரித்தவன்,
“சுடாம? பின்ன பொம்மை துப்பாக்கியா போலீஸ்க்கு குடுப்பாங்க?…” என்று கேலி பேச,
“சும்மா தெரிஞ்சுக்கதான் கேட்டேன். சரி கிளம்புங்க…” என்றவளின் கன்னம் தட்டியவன்,
“பார்த்து இரு. வெளில போய் வளவளக்காம…” என சொல்லிவிட்டு கிளம்பினான். வாசல் வரை சென்று வழியனுப்பிவிட்டு வந்தவளுக்கு அந்த யாருமற்ற வீடே வெறிச்சோடி இருந்தது.
ஒரு பெருமூச்சுடன் அனைத்தையும் எடுத்து ஒழுங்குபடுத்தியவள் பாதி வேலையில் விட்டிருந்த அந்த அறைக்கு சென்று முழுதாய் முடிக்க ஆரம்பித்தாள்.
அந்த அறையை முடிக்கவே மதிய நேரம் ஆகிற்று. பின் அவசரமாய் சமையலை முடித்துவிட்டு அவனுக்காக காத்திருக்க சற்று தாமதமாவே வந்து சேர்ந்தான். வந்ததும் பேச கூட நேரமின்று வேகமாய் சாப்பிட்டு முடித்து கிளம்பியவன் மீண்டும் வர இரவு ஏழுமணி ஆனது.
வந்ததும் ஒரு டீயை குடித்துவிட்டு வாசமல்லியையும் அழைத்துக்கொண்டு அந்த வளாகத்தில் இருந்த பார்க்கிற்கு கூட்டி சென்றான் அவன்.
சற்று உள்ளே நடந்து செல்லும் அளவில் தான் இருந்தது பார்க். அதுவே ஒருகிலோமீட்டரை நெருங்கும் போக இருந்தது. போகும் வழியில் தென்படுபவர்களிடம் ஆங்காங்கே நின்று பேசிவிட்டே தான நடந்தார்கள்.
“இங்க தான் அடிக்கடி வருவீங்களா அத்தான்?…” என கேட்டுக்கொண்டே தனது கைகளை தேய்த்து சூடேற்றிய படி அவள் வந்தாள்.
“ரொம்ப குளிரா இருக்கா வாசு?…” என கேட்டவன்,
“இங்க அடிக்கடி வரமாட்டேன். எப்போவாச்சும் தான். வரதுக்கு டைமும் இருக்காதுன்னு வச்சுக்கோயேன்…” என,
“ஆனா நல்லா இருக்குதுல. கலர் கலரா பூவோட. எங்க ஊர்ல எல்லாம் இது இல்ல…” என்று சொல்லியபடி அங்கே நின்று நின்று பார்த்துக்கொண்டே இருந்தாள்.