“என்ன நினைச்சு நீ வாசுவை என்னை கல்யாணம் பண்ணிக்க சம்மதிக்க வச்ச அபி? அவளை என்ன சொல்லி என்னை பிடிக்க வச்ச?…” என்று அடுத்ததாக ஷ்ரவன் கேட்டதும்,
“ஷ்ரவா?…” என்று திகைப்புடன் அவள் பார்க்க,
“என்னமோ செஞ்சிருக்க. ஏன் எதுக்குன்னு எனக்கு தெரியலை. தெரிஞ்சுக்கவும் நான் விரும்பலை. கல்யாணம் ஆன இத்தனை நாள்ல ஓரளவு என்னால வாசுவை புரிஞ்சுக்க முடியுது. எதையோ மறைக்கிறா. என்ன பண்ணின? இது எல்லாமே உன்னோட கேம். அவளை ஆட்டிவைக்கிற…” என்று அழுத்தமாய் கேட்க,
“தெரிஞ்சு, தெரிஞ்சு என்ன பண்ண போற? அதான் அந்த பட்டிக்காட்டை உனக்கு புடிக்குதுன்னு சொல்றியே? சேர்ந்து ஏ பி சி டி படிங்க…” என்றாள் எள்ளலாய்.
“பிடிப்பு படிப்புல இல்லை அபி. இது உனக்கு புரியுமான்னு எனக்கு தெரியலை. புரிய வைக்க எனக்கு அவசியமில்லை. இனி நீ எப்படியும் இருந்துட்டு போ. ஆனா வாசு பக்கம் வராத. இதுதான் லாஸ்ட் வார்னிங். வார்னிங் மட்டும் தான். எனக்கு என்னோட சந்தோஷம் முக்கியம்…” என்றவன் அங்கிருந்து செல்ல போக உடனே வாசமல்லி அவ்விடம் கடந்தாள்.
அவர்கள் பார்க்கும் முன்னே உடனே வீட்டின் உள்ளே சென்றுவிட ஷ்ரவனும் வந்துவிட்டான்.
“என்ன ஷ்ரவா ட்ரைவர் வந்தாச்சா?…” என சங்கர் கேட்க,
“இதோ இப்ப வந்திருவார்…”
“எங்க போய்ட்ட அபியையும் காணோம்?….” என அமலா கேட்க,
“நானும் அபியும் தான் பேசிட்டு இருந்தோம். வெளில தான் நிக்கறா…” என்றவன் போன் அடிக்க,
“சொல்லுங்க நாதன். வந்துட்டாரா?…” என்றபடி வெளியே வந்தான்.
“அபி உள்ள தேடறாங்க. போ…” என்று சொல்ல அவனிடம் ஒன்றும் பேசாமல் உள்ளே வந்தவள் வாசுவை தேடி செல்ல அவள் ஆதவ்வை மடியில் வைத்துக்கொண்டு சித்ரா, சங்கரிடம் பேசிக்கொண்டு இருந்தாள்.
“வாசு…” என அபி அழைத்ததும் திரும்பி பார்த்தவள்,
“எதுவும் வேணும்ங்களா மதினி?…” என சாதாரணமாகவே கேட்க தொண்டை மட்டும் அடைத்தது.
“என்னாச்சு? உன் குரல் ஏன் அடைக்குது?…” என அபி வர,
“அதெல்லாம் ஒண்ணுமில்லையே…” என்றாள் வாசு.
“உனக்கும் முடியலைன்னா ஊருக்கு நீயும் கிளம்பி வாயேன். என்னன்னு பார்த்துட்டு அப்பறமா வரலாம்…” என அழைக்க அதை கேட்டபடி உள்ளே வந்த ஷ்ரவனுக்கு அடங்கிய கோபம் போங்க ஆரம்பிக்க,
“இல்லை மதினி. எனக்கொன்னும் இல்லை. அப்பிடியே எதுவா இருந்தாலும் அத்தான் பார்த்துப்பாங்க. நான் இனி இங்க தான். அத்தான் எப்ப வராங்களோ அப்ப கூட வரேன். நீங்க கிளம்புங்க…” என்றவளின் குரல் என்றுமில்லாமல் அத்தனை அழுத்தமாய் இருக்க அவளையே மொத்த குடும்பமும் ஆச்சர்யமாக பார்த்தனர்.
“யாத்தே, எம்மவளுக்கு எம்புட்டு பொறுப்பான பேச்சு வருது?…” என்று சித்ரா வாயெல்லாம் சிரிப்பாக மகளின் முகத்தை வழித்து நொடித்தவர்,
“பாத்துக்க அபி. இப்படித்தான் இருக்கனும் பொண்டாட்டின்னா. புருஷனுக்கு மிஞ்சிதான் யாரா இருந்தாலும். சும்மா சும்மா கட்டினவர விட்டுட்டு பொறந்த வீட்டுக்கு பொட்டிய கட்டினா பொழைப்பு நடக்குமா?…” என்று சித்ரா மனதின் பொடுபொடுப்பெல்லாம் வார்த்தைகளாக கொட்ட அபர்னிதாவிற்கு அவமானமாக போனது.
“இருக்கட்டும் அத்தை, அவ மனசுல என்ன இருக்குன்னு நான் கேட்டதால தான தெரிஞ்சது…” என்று வஞ்சத்தை மறைத்து பூசி மொழுகும் சிரிப்புடன் அவள் சொல்லியவள்,
“வாசுவும் மாமனாரை ஒரு நல்ல மருமகளா இருந்து பார்த்துக்கனும்னு நினைக்கலாம் தானே? அதான் பேசினேன்…” என்றும் சொல்ல சித்ராவிற்கு திக்கென்று ஆனது.
‘இந்த புள்ள சரியில்லையே’ என்று மீண்டும் அதே எண்ணம் தான் சித்ராவிற்கு. ‘இது குடும்பத்திற்குள் கலக்கம் பண்ணும் வேலையாக இருக்கிறதே’ என்று நினைத்தார்.
“கூட இருந்து பார்த்தா தானா? இங்க இருக்கும் போதே என் மருமகளை தெரியாதா என்ன? அவரை பார்த்துக்கதான் நான் இருக்கேன். போதாக்குறைக்கு மகளா நீ இருக்க. சங்கர் இருக்கான். என் புள்ளைய பார்த்துக்க மருமக மட்டும் தான் இங்க இருக்கா. அவ வந்திருந்தா தான் எனக்கு கஷ்டம். இப்பத்தான் நிம்மதியா இருக்குது…”
அமலா பேசிக்கொண்டே சித்ராவின் கையை பிடித்துக்கொண்டார். அதை ஆமோதிப்பதை போல சங்கரும் தலையசைத்து அபியை முறைக்க வாயை மூடிக்கொண்டாள் அவள்.
‘எது எப்படியோ, என் பொண்ணு நல்லா இருந்தா சரித்தேன்’ என்ற நிம்மதியுடன் அமலாவிடம் பேசிக்கொண்டிருக்க,
“ஹ்ம்ம், கல்யாணம் ஆகவும் என் தங்கச்சி பெரிய பெரிய பேச்சு எல்லாம் பேசறா…” என்று சந்தோஷமாய் கிண்டல் செய்த சங்கர்,
“என்னடா எல்லாம் உன் ட்ரெயினிங்கா?…” என்று ஷ்ராவனையும் விடவில்லை.
அவனுக்குமே மனைவியின் இந்த பேச்சில் ஆச்சர்யம் தான். கொஞ்சம் முன்பு வரை அவளின் பின்னோடு சுற்றிக்கொண்டு திரிந்தவள் எப்படி இப்படி என்று யோசனையுடன் பார்க்க,
“சரி கிளம்புவோம்…” என்று சங்கர் எழுந்துகொள்ள,
“ஆதவ் குட்டி சமத்தா இருப்பீங்களாம். அடுத்த லீவ்க்கு வாங்க…” என்று சொல்லி வாசமல்லி முத்தமிட பதிலுக்கு அவனும் முத்தம் வைக்க பின் பெரியவர்கள் அவர்களுக்கு கவனங்களை சொல்லிவிட்டு கிளம்பினார்கள்.
ஷ்ரவன், வாசமல்லி இருவருக்குமே நீலகண்டனை உடன் இருந்து பார்த்துக்கொள்ள முடியவில்லையே என்று வருத்தம் இருந்தாலும் சூழ்நிலை இடம் கொடுக்காததும், அதனுடன் குடும்பத்தினரின் புரிந்துணர்வும் மனதை அமைதிப்படுத்தியது.
அவர்கள் கிளம்பியதுமே வீட்டினுள் நுழைந்ததும் வாசுவின் முகம் பார்க்க அவளோ என்றைக்குமில்லாத அப்படி ஒரு அமைதியில் இருந்தாள். வீட்டை எல்லாம் ஒழுங்குபடுத்த ஆரம்பிக்க,
“இப்பவே எதுக்கு இதை பண்ணிட்டிருக்க வாசு? விடு, நாளைக்கு பார்த்துக்கலாம். இப்ப சாப்பிட்டு படுப்போம்…” என அவன் சொல்ல,
“இருக்கட்டும் அத்தான். எல்லாரும் ஊருக்கு போய்ட்டு போன் பண்ணட்டும். எனக்கு தூக்கம் வராது…” என்றவள் அவனின் பேச்சை கேட்காமல் வேலையை பார்க்க அவளின் கையை பிடித்து நிறுத்தினான்.
“என்னாச்சு? என் முகம் வாடி இருக்குது?…”
“ஒண்ணுமில்லையே…” என்றாள் வரவழைத்துக்கொண்ட சிரிப்போடு.
“ம்ஹூம், என்கிட்டே சொல்ல கூடாதுன்னு ஏன் நினைக்கிற நீ?…” என கேட்டவனுக்கு பதில் சொல்லவே அத்தனை அச்சமாக இருந்தது.
“நான் சொல்லுவேன், ஆனா கோவிக்க மாட்டீங்க தானே?…” என கேட்க,
“ஹ்ம்ம், சொல்லு. கோபப்படலை…” என்றவன் கையை கட்டியபடி அவளையே பார்க்க எச்சிலை கூட்டிவிழுங்கியவள்,
“அது வந்து, நான் கல்யாணத்துக்கு முன்னாடி மருந்த குடிச்சுட்டேன்னு மதினி சொன்னது பொய். அது சும்மா….” என்று சொல்லியவள் அவனை பார்க்க பயந்து கண்ணை இறுக்கமாய் மூடிக்கொள்ள ஷ்ரவன் அசையாமல் பார்த்தபடியே நின்றான்.
ஐந்து நிமிடம் சென்றிருக்கும். அவன் திட்டுவான், கோபமாய் சண்டையிடுவான் என்று இவள் எதிர்பார்த்திருக்க இதை எல்லாம் ஓரளவு அனுமானித்தவன் போலவே அவனும் இருந்தான்.
“அத்தான்…” என்றவளின் குரல் வெளியில் வராமல் இருக்க மெதுவாய் கண்ணை திறந்து பார்த்தாள்.
“அப்படி என்ன இருக்குன்னு என்னை கல்யாணம் பண்ணின?…” என்று லேசாய் அவன் சிரிக்க இன்னும் கண்ணை விரித்து பார்த்தவள்,
“உங்களை கல்யாணம் பண்ணனும்னு எல்லாம் நான் நினைக்கலை…” என்றாள் அடுத்த குண்டை போட்டு.
“வாட்?…” இதை அவன் எதிர்பார்க்கவில்லை.
“கோவப்படாதீங்க அத்தான். ஆனா நீங்கன்னா எனக்கு அம்புட்டு இஷ்டம். உங்களை ரொம்ப ரொம்ப புடிச்சது…” என்று சொல்லியவள் கண்கள் கலங்கி போனது.
எங்கே தன் மீதான அபிப்ராயம் மாறிவிடுமோ என்று கவலையுடன் லேசாய் தேம்ப ஆரம்பித்தாள்.
‘நான் அழவெல்லாம் மாட்டனே. எப்பவும்’ என்று தன்னிடம் அவள் சொல்லியது ஞாபகம் வர ஷ்ரவனுக்கு அந்த சூழ்நிலையை எப்படி கையாள்வது என்றே புரியவில்லை.
“சரி சரி, அழாத…” என்று அவளின் கண்ணை துடைத்தான்,
“கோவமா?…”
“இப்போ கோபப்பட்டு என்ன செய்ய?…” என்றான் அமைதியாக.
வாசு அப்படியே அமர்ந்திருக்க அந்த கனமான சூழல் ஷ்ரவனுக்கு சுத்தமாய் பிடிக்கவில்லை. நடந்தததையே நினைத்துக்கொண்டு இருக்கும் வாழ்க்கையை குலைத்துக்கொள்ள அவன் விரும்பவில்லை.
“வாசு பசிக்குது. ஏதாவது செய்யேன். இன்னைக்கு வெளில சுத்தினதும் கொஞ்சம் டயர்டா இருக்குது…” என சொல்ல,
“இதோ அத்தான். இப்ப வந்திடறேன்…” என்று வேகமாய் எழுந்து ஓடினாள்.
கட்டிலில் அப்படியே சாய்ந்தவன் மனமெங்கும் அன்றைய அபியுடனான பேச்சும், வாசுவின் தற்போதையே பேச்சுமே மனதினுள் வலம் வந்தது.
சங்கரின் விருப்பம் நிராகரிப்பு, சங்கர் அபர்னிதா திருமணம், தன்னை பிடித்திருந்தும் கல்யாணம் செய்யவேண்டும் என்று நினைக்காதா வாசு, பல குழறுபடி செய்து வலிய தனக்கு வாசுவை திருமணம் செய்துவைத்த அபி.
இப்படி ஒவ்வொன்றும் ஒன்றுகொன்று தொடர்புடையதாய் இருக்க அத்தனை புள்ளிக்கும் தொடர்பு அபியாக மட்டுமே இருந்தாள்.
நினைக்க ஆயாசமாய் இருந்தது அவனுக்கு. சிறிய வயதிலிருந்தே அவளின் தவறுகள் எல்லாம் தகப்பன் இன்றி வளரும் பெண் என்ற போர்வையில் கவனிக்கபடாமல் போக இன்றோ அவளின் சுயநலம் இன்னொரு அப்பாவி பெண்ணின் எதிர்காலத்தை பாதிக்கும் அளவிற்கு அல்லவா வளர்ந்திருக்கிறது.
“உன் கோபத்துக்கு எல்லாம் எந்த பொண்ணும் உனக்கு செட் ஆக மாட்டாடா…” என வேண்டுமென்றே தன்னை வம்பிழுக்கும் அபி,
“ஷ்ரவா சங்கருக்கு அவர் தங்கச்சின்னா உயிர். அத்தனை பிரியம். என்னை விட தங்கச்சி மேல தான் அத்தனை பாசம். நீ அவருக்காக சம்மதிக்கனும்…” என்று தன்னிடம் மன்றாடிய அவளின் குரல் இப்போதும் காதில் விழ சட்டென எழுந்தமர்ந்தான் ஷ்ரவன்.
‘சங்கருக்கு தங்கச்சின்னா உயிர்’ இப்போது ஷ்ரவனுக்கு புரிந்தது அபியின் இந்த ஆட்டம் எதற்கென்று.
“வாசு…” என வேகமாய் அவளை தேடி வந்தவன்,
“நீ சொன்னியே தேவகி. உன்னோட சொந்தக்கார பொண்ணு. அதான் சங்கரத்தான் விரும்பினாங்கன்னு…” என்று விளக்க அவனை அதிர்வுடன் பார்த்தாள் வாசு.
“ஆமா, அதுக்கென்ன?…” என யோசனையுடன் கேட்க,
“அவங்க இப்ப எங்க இருக்காங்க?…” என்றான் அவன் தெரிந்துகொள்ளும் ஆவலில்.
“எங்க ஊர்ல தான்…”
“உங்க ஊர்லனா? கல்யாணம் ஆய்டுச்சா?…”
“அத்தான் இதெல்லாம் ஏன் கேட்கறீங்க?…” என்று பயத்துடன் பார்க்க,
“சொல்லு முதல்ல…”
“இல்லை, இன்னும் ஆகலை. அவங்களுக்கு சங்கரண்ணனை பேசும் போது சின்ன வயசு தான். கிட்டத்தட்ட எனக்கு ஒரு வயசு மூத்தவங்கன்னு வச்சுக்கோங்க. இப்ப வரைக்கும் ஏனோ எதுவும் தகையலை…”
“ஓஹ்…” என்றவன் அமைதியாய் சென்று அமர்ந்துகொண்டான்.
“என்னத்தான்? எதுக்கு கேட்கறீங்க?…” என்று அவனருகே வந்து அமர,
“ப்ச், அதை விடு. இனி நம்ம வாழ்க்கையை பார்ப்போம்…” என்று சொல்ல அவனின் மனதில் என்ன ஓடுகிறது என்றே தெரியாமல் தலையை மட்டும் ஆட்டினாள் வாசமல்லி.