மேலும் இரண்டு மாதங்கள் முடிந்திருக்க.. குழந்தைக்கு ஐந்தாவது மாதம் என்பதால் தற்போது ஒரு வாரமாக இட்லி, ராகிகூழ், அவித்த காய்கள், கொடுக்க ஆரம்பித்திருந்தார் கற்பகம்.
இன்று ஞாயிற்று கிழமையாதலால் வீட்டில்தான் இருந்தான் தேவேஷ். குழந்தைக்கு காய்ச்சல் இருக்கவே இரண்டு நாட்களுக்கு முன்பு மருத்துவரிடம் அழைத்து சென்று வந்திருந்தான். இன்னைக்கென்ன எந்த மருந்தை கொடுக்கனு கேட்கவேயில்ல.. நேத்து சொன்னதே நியாபகத்துல இருக்குமோ? என யோசித்தவாறு அறையிலிருந்து வெளிவந்தான்.
“பொண்டாட்டியை பறிகொடுத்துட்டு வாழ்ற வயசா இது? என் மகனை இப்படி பார்க்கனும்னு என் தலையில எழுதியிருக்கு.. அந்த ஆண்டவன் இன்னும் என்னலாம் வச்சிருக்கானு பார்க்கலாம்.” என கிச்சனில் வேலைசெய்து கொண்டே யாரிடமோ போனில் வருந்திக்கொண்டிருந்தார் கற்பகம்.
ஹாலில் மெத்தை விரிப்பை கீழே விரித்து அதில் குழந்தையை படுக்க வைத்திருந்தார் கற்பகம். கை கால்களை உதறியபடி வாயால் வண்டி ஓட்டிக்கொண்டிருந்த குழந்தையை ஆழ்ந்து பார்த்தவன் மனது கணத்துப்போனது.
தன் சாயலில் இருக்கும் மகனை பாரக்கும்போதெல்லாம் என் தேவ் மாதிரிதான் எனக்கு குழந்தை வேணும் என ஷர்மிளா அழுது கரைந்ததுதான் நினைவில் வரும்.. தற்போதும் ஷர்மிளாவே கண்முன் வர, ஆழ மூச்செடுத்தவன்.. “ம்மா குழந்தைக்கு மருந்து கொடுத்திட்டியா?” என்றான்.
தேவேஷின் கேள்வி கற்பகத்தின் கவனத்தில் பதியாமல் போகவே.. “இல்லம்மா, அப்படி என்னால தேவாகிட்ட கேட்கவே முடியாது.. மருமகளும் மகனும் வாழ்ந்த வாழ்க்கையை கண்கூட பார்த்தவ நான்.. தேவாவோட வருங்கால வாழ்க்கையை நினைச்சி மனசு கணத்து போகுதான்.. ஆனாலும் என் வாயால இன்னொரு கல்யாணம் செய்துக்கோனு கேக்குற தைரியம் இப்போதைக்கு எனக்கில்லமா..” என்றார் வேதனையோடு.
அன்னையின் பதிலிலேயே யாரோ தனக்கு மறுமணம் செய்து வைக்க பரிந்துரை செய்கிறார்கள் எனப்புரிய, இதுக்குத்தான் யார்கிட்டயும் பேசாதனு சொல்றேன்.. கேக்குறாங்களா? என மனதில் கடிந்தவன்.. “ம்மா.. குழந்தைக்கு மருந்து கொடுத்துட்டியா?” என உரக்க கேட்டான் மீண்டும்.
“தேவா எழுந்துட்டான்.. நான் அப்புறம் பேசறேன்.” என அவசரமாய் இணைப்பை துண்டித்து.. “கொடுத்துட்டேன் தேவா..” என்றார்.
மருமகள் சென்றபின்னே நம் அன்னைபோல் எத்தனை பேர் மகனைப்புரிந்து கொள்வார்கள் எனப் பெருமையாய் நினைத்தவன்.. “பார்டா, என்கிட்ட கேட்காமலே கரெக்டா கொடுத்திட்ட போல..” என்றவன் பார்வை செல்ஃபில் புதிதாய் முளைத்திருந்த பிளாஸ்டிக் கூடைக்கு போக.. அதை எடுத்துப் பார்த்ததும்.. “ம்மா நல்ல ஐடியா பண்ணிருக்கம்மா..” எனப் பாராட்டினான் தேவேஷ்.
காலை, மாலை, இரவு, என மூன்று வெவ்வேறு வர்ண டப்பாக்களில் மருந்துகளை போட்டு, கற்பகத்திற்கு புரியும்படி சொல்லிக் கொடுத்திருந்தாள் மங்கை.
“நீ பாராட்டனும்னா மங்கையைதான் பாராட்டனும்.” என்றபடி வெளியே வந்தார் கற்பகம்.
“மங்கையா.?” என சில நொடி யோசித்தவன்.. “பச் எதிர்வீட்டுப் பொண்ணா?” என கோபமாகி, “அதுகிட்ட எதுக்கு கேட்ட? நான் சொல்லிக்கொடுத்துட்டுதான போனேன்?” என்றான் முறைப்பாக.
“நீ காலைல சொல்லிகொடுத்துட்டு போன.. டானிக் ஊத்தியும் மதியம் பையனுக்கு காய்ச்சல் அனலா கொதிச்சது, திரும்பவும் ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போகலாம்னா அந்த டாக்டர் திரும்பவும் சாயங்காலம்தான் வருவாங்க, அதுல காய்ச்சல் மாத்திரை தனியா இருக்கு அதை ஊத்துனு நீ சொன்ன..
ஆனா எந்த மாத்திரைனு குழப்பம் ஆகிடுச்சி, அதான் மங்கைகிட்ட கேட்டேன், அந்த பொண்ணு சொல்லிகொடுத்துட்டு இத மாதிரி வச்சிக்கோங்க ஆன்ட்டினு தனித்தனி டப்பால போட்டு கொடுத்தா..
தெரியாததை கேட்டு தெரிஞ்சிக்கிறதுல என்ன தப்பிருக்கு?” என முறைக்க, குழந்தை பசிக்கு சிணுங்க ஆரம்பித்தான். “இதோ அஞ்சி நிமிஷத்துல ஆகிடும்டா தங்கம்.” என குழந்தையை தூக்கியவர், வேடிக்கை காட்டியவாறு அவனிற்காக காய்ச்சிய கூழை ஆர வைக்க ஆரம்பித்தார் கற்பகம்.
“ம்மா..” என சலித்தவன்.. “அந்த பொண்ணு ஏற்கனவே மறக்க முடியாத உதவி செஞ்சிருக்கா, நம்ம சுயநலத்துக்கு திரும்ப திரும்ப ஊரார் பொண்ணை கஷ்டப்படுத்த கூடாதில்ல?” என்றான் புரிய வைக்கும் நோக்கோடு.
தன் கண்ணீர் தேவேஷிற்கு தெரியாவண்ணம் குனிந்த நிலையில் கூழை ஆர வைத்துக்கொண்டிருந்தபோதும் அவரின் கமறிய குரலிலேயே அழுகிறார் என தேவ்விற்கு காட்டியது.
“ம்மா..” என தவிக்கவும், “சாகற அன்னைக்கு கூட சமையல் முடிச்சிட்டு, உங்க மகன் என்னை பார்ட்டிக்கு கூப்பிடறார், வர நைட்டாகிடும், அதுக்காக நைட்டுக்கு பழையது சாப்பிடாதிங்க, ஹோட்டல்ல சொல்றேனு சொல்லிட்டு போனாடா..” என்றார் வேதனையாக.
நீ வாழப்போற மிச்ச வாழ்க்கைக்கு அர்த்தம் கொடுத்துட்டு போயிருக்கா.. என் பேரனுக்காக இல்லனாலும், உன் பொண்டாட்டிக்காகவாவது இவனை பார்க்கலாமில்ல? என்னால உன்ன இப்படி பார்க்க முடியலடா..” என கதறினார் கற்பகம்.
“ம்மா..” என எழுந்தவன் அன்னையை அணைத்து தேற்ற.. “குழந்தைக்கு அஞ்சு மாசமாகுது, இன்னும் பேரு கூட வைக்கில..” என்றார் வேதனையோடு.
“இன்னைக்கு ஜோசியர்கிட்ட போலாமா? இவன் ராசி நட்சத்திரத்துக்கு எந்த எழுத்துல வைக்கலாம்னு கேட்டுட்டு வரலாம்.” என்றார் ஆர்வமாக.
“இப்ப என்னால ஊருக்கு வரமுடியாதும்மா, முக்கியமான ப்ராஜக்ட் போய்ட்டிருக்கு.. பேர் வைக்க ஜாதகம் பார்த்தேதான் ஆகனுமா? உனக்கு பிடிச்ச பேரை சொல்லு, எனக்கும் பிடிச்சிருந்தா வச்சிடலாம்.” என்றான் தன்மையாக.
ஷர்மிளா இறந்தபின்னே முதன்முறையாக தன்னிடம் இயல்பாய் பேசும் மகனை நிறைவாய் பார்த்தவர்.. “உனக்கு நேரமில்லனா பரவால்ல, அபிராமிகிட்ட சொல்லி நம்ம ஜோசியரை பார்க்க சொல்லலாம். பையன் பிறந்த நேரத்தை டாக்டர் குறிச்சி கொடுத்தாங்கள்ல? அதை போட்டோ எடுத்து அபிக்கு அனுப்பு.” என்றார்.
சரியென்பதாய் தலையசைக்கவும், குழந்தை பசிக்கு அழ ஆரம்பித்தான். “இதோ வந்துட்டேன் பட்டு..” என குழந்தைக்கு ஊட்ட ஆரம்பித்தார் கற்பகம்.
“எப்போயிருந்து கூழ் கொடுக்க ஆரம்பிச்ச? இரண்டு நாளா ஜுரம் இருந்தது, இப்போ இது கொடுத்தா ஜீரணம் ஆகுமா?” என்றான்.
“அடேய்.. மூனு பிள்ள பெத்தவளுக்கு, உன் குழந்தைக்கு எப்போ என்ன கொடுக்கனும்னு தெரியாதா?” என செல்லமாய் நொடித்து.. “இப்போ அஞ்சி மாசம் ஆகிடுச்சில்ல? அதனால கொஞ்சம் கொஞ்சம் இப்படி ஆகாரம் கொடுக்க ஆரம்பிக்கனும்.” என எடுத்துரைத்து குழந்தைக்கு ஊட்ட, சமத்தாய் சாப்பிடும் குழந்தையை ஆச்சர்யமாய் பார்த்தான் தேவேஷ்.
சாப்பிட்டிருந்தவன் சற்றே பசியடங்கிய பின்னே, வழக்கம்போல் வாயில் வண்டி ஓட்டவும்.. ஊட்டிய கூழ் கற்பகத்தின் முகத்திலும், அவனின் முகத்திலும் தெறித்துவிட, “படுவா.. கொஞ்சம் வயிறு நிறைஞ்சிடக்கூடாது, உடனே வண்டி ஓட்ட ஆரம்மபிச்சிடு..” என குழந்தையை கடுகடுத்தவாறு அவன் முகத்தையும் தன் முகத்தையும் துடைத்தார்.
“ங்க..” என குழந்தை சிரிக்க, வாயில் மீதமிருந்த கூழ் “ங்..க..ட..” என ஒலி எழுப்ப, “அடேய் பொறையேறிடப்போகுதுடா..” என குழந்தையை தூக்கி தன் தோள்மீது போட்டு முதுகைத் தடவினார் கற்பகம்.
குழந்தை ஏப்பம் விடவே தன் மடியமர்த்தியவர், அவனிற்கு மீண்டுமொருமுறை முகம் துடைத்து, உடை மாற்றி படுக்க வைத்தவர் சப்தம் எழுப்பும் பொம்மை ஒன்றை குழந்தை கையில் கொடுக்கவே, அதனை கெட்டியாய் பிடித்தவன்.. “ப்ரூ..” என்ற ஒலியோடு விதவிதமாய் அப்பொம்மையோடு விளையாட ஆரம்பித்தான். கூழ் ஊட்டிய பாத்திரங்களை எடுத்துக்கொண்டு கிச்சன் சென்றார் கற்பகம்.
இன்றுதான் குழந்தையின் செய்கைகளை ஊன்றிப் பார்க்கிறான். இத்தனை சேட்டை செய்யிறியாடா? என சில நிமிடம்தான் ரசித்தான்.
குழந்தை குழந்தைன்னு பேயா அலைஞ்சிட்டு கடைசியா பார்க்கமலே போய்ட்டியேடி, இவன் செய்யிற சேட்டையெல்லாம் பார்த்தா எத்தனை பூரிப்ப..? என ஷர்மியின் நினைவு வர, விபத்தை நினைத்தவன் மனம் பாரமாக.. “கொஞ்சம் கவனமா இருந்திருக்கலாம்ல? இப்படி என்னை தவிக்கவிட்டுட்டு போகத்தான் அவசரமா க்ராஸ் பண்ணுனியா?” என கடிந்தான் கணத்த மனதோடு.
ஒரு மணி நேரம் முடிந்திருக்க, குழந்தை சிணுங்கினான். “வந்துட்டேன், வந்துட்டேன்.” என்றவாறு பால்பாட்டிலை எடுத்து வந்தவர்.. “ஓ.. ஈரமாகிடுச்சா.. ஒரு நிமிஷம் கூட பொறுக்கிறதில்ல? துரைக்கு உடனே மாத்தியாகனும்..” என செல்லமாய் நொடித்து.. உடை மாற்றி தனதறைக்கு தூக்கி சென்றவர் தொட்டிலில் படுக்க வைத்து பால்பாட்டிலை வாயில் வைக்கவும், அடுத்த பத்தாவது நிமிடத்தில் கற்பகம் அறையிலிருந்து சப்தம் வர.. “என்னம்மா?” என உள்ளே வந்தான் தேவேஷ்.
“ம்.. உன் மகன் பண்ற வேலை பார்த்தியா? இப்போ இருபது நாளா இதுதான் நடக்குது.” என்றார் பெருமையாக.
அங்கே கிடந்த பால்பாட்டிலை பார்த்தவன்.. “அவனா தூக்கிப்போட்டான்?” என ஆச்சர்யப்பட, “குடிச்சி முடிச்சதும் விசிறியடிச்சிடறான். போன முறை பாதி பாலோட போட்டதுல டப்பா விரிசல் விட்டுடுச்சி. இரண்டு நாள் முன்னதான் இது வாங்கினேன்.” என்றார்.
கற்பகம் தன் பேரன் செயல்களை பெருமையாக விளக்கினாலும் தேவேஷ் முகம் இறுக்கம் தளர்ந்ததே அன்றி பெரிதாய் சந்தோசமெல்லாம் வரவில்லை. ஆனால் குழந்தைக்காக தன் அன்னை எத்தனை சிரத்தை எடுக்கிறார் என இன்று வீட்டிலிருக்கவும் அறிந்தான்.
ஷர்மிளா இருக்கும்போது சமையல் அவள் செய்திட, வீட்டு வேலைக்கும் ஆள் வந்ததால் கற்பகத்திற்கு பெரிதாய் வேலையிருக்காது. கோவில் செல்வது, நாடகம் பார்ப்பதென பொழுதை கழிப்பார்.
ஆனால் தற்போது பம்பரமாய் சுழன்று கொண்டிருப்பதை பார்த்து, இந்த வயதில் இத்தனை வேலை செய்வது வருத்தமளித்தாலும்.. என்ன செய்வது? இவன் வளரும் வரை சிரமப்பட்டுதான் ஆகனும்.. பள்ளி செல்லும் பருவம் வந்துவிட்டால் அன்னையின் பளு சற்று குறையும் என தனக்குள் நினைத்துக்கொண்டான்.
குழந்தையை தூங்க வைத்த பின்னே மகனருகே வந்த கற்பகம். “தேவா சாப்பிட வா.” என்றார்.
“பசிக்கலம்மா, நீ சாப்பிடு.. நான் அப்புறம் சாப்பிடறேன்.” என எழ முற்பட்டவனை கை பிடித்து நிறுத்தினார்.
“அப்புறம் சாப்பிடறதுனா சாப்பிடு, அதுக்கெதுக்கு உள்ள போற.? முதலல்லாம் என்னை நாடகம் பார்க்க விடாம குத்து சண்டை, கபடினு நிறைய விளையாட்டு பார்ப்பல்ல? அது பாரு.” என ரிமோட்டை கையில் கொடுத்தார் கற்பகம்.
“அவனுக்கு பால்டப்பா.. எனக்கு ரிமோட்டா?” என்றான் திடமற்ற முறைப்போடு.
“அப்படித்தான் வச்சிக்கோயேன், அதிலென்ன தப்பிருக்கு? உன் மகனுக்கு கல்யாண வயசே வந்தாலும் நீ எனக்கு மகன்தான?” என உரிமையாய் சொன்னவர்.. “கொஞ்சம் வெளில வாயேன்டா.” என்றார் உடைந்த குரலில்.
“ம்மா.” என தேவேஷ் தடுமாற.. “இப்படி உக்காரு தேவா..” என அமரவைத்தவர்.. “இப்ப கொஞ்சம் முன்ன அபிராமியோட மாமியார் போன் செய்தாங்க.. குழந்தைக்கு விபரம் வரும்முன்ன தேவாக்கு பொண்ணு பாருங்கனு சொன்னாங்க.” எனும்போதே தேவாவின் முகம் இறுக.. “ப்ச் நான் சொல்றதை முழுசா கேளுடா.” என அதட்டி..
“உன்னால இந்த ஜென்மத்துல ஷர்மிளாவை மறக்க முடியாதுனு எனக்கு மட்டும் தெரியாதா? நீ என்ன? என்னாலயே அவளை மறக்க முடியல..” என வருந்தி..
“மத்த அம்மா மாதிரி மறுகல்யாணம் செய்தேதான் ஆகனும்னு உன்ன வற்புறுத்தமாட்டேன்.. ஆனா இந்த துக்கத்துலயிருந்து எனக்கு என் பையன் மீண்டு வரனும்..
உங்கப்பா இருக்கும்வரை மட்டும்தான் எந்த கவலையுமில்லாம நீ நீயா இருந்த.. அவர் போனதுக்கப்புறம் அக்கா தங்கைங்க தேவையை நிறைவேத்துன, அப்பறம் உன் பொண்டாட்டிக்காக வாழ்ந்த.. இப்போ எனக்காகவும் உன் மகனுக்காகவும் ஷர்மிளா இழப்புலயிருந்து கொஞ்சம் மீண்டு வாடா..” என வருந்தினார்.