தேவேஷ் அமைதியாய் இருக்க.. “நீ பார்த்த வரைக்கும் உன் மகன் செய்ததெல்லாம் ரொம்ப கம்மி.. சாயங்காலம் மொட்டை மாடிக்கு தூக்கிட்டு போனப்புறம் வந்து பாரு.. காக்கா, ஏரோப்ளேன், தெருவுல போற வண்டிலாம் அப்படி கவனமா பார்ப்பான்.. ஊ, ஆங்..னு என்னென்னவோ பேசுவான்..
மாஞ்சி மாஞ்சி அழுதாலும் மாண்டவர் மீளப்போறதில்ல.. உன்ன ஷர்மிளாவை மறக்க சொல்லல.. இவனோடவும் கொஞ்சம் நேரம் ஒதுக்க முயற்சி செய்.
அம்மாவோட அன்புக்கும் அரவணைப்புக்கும்தான் என் பேரனுக்கு கொடுத்து வைக்காம போய்டுச்சி, அப்பாவோட அன்புக்கும் அவனை ஏங்க வச்சிடாத..” என்றார் வேதனையோடு.
“ம்மா.. நான் கவனிச்சிக்கிறேன் தான?” என குரலில் பலமில்லையென்றாலும் வாதிட்டான்.
“ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு பேறது.. பால்காரனுக்கு ஆயிரம் ரூபா சேர்த்து கொடுக்குறதும்தான் கவனிக்கிறதா? ஒரு நாள் இவனை தூக்கி கொஞ்சிருப்பியா? ஆசையா ஒரு முத்தம் கொடுத்திருக்கியா?” என்றார் ஆற்றாமையாக.
பதில் சொல்ல திராணியற்று தலைகுனிந்தான் தேவேஷ். மகனின் கேசம் வருடிக்கொடுத்து.. “வேலைக்கு போற ஆறு நாளும் உன் விருப்பத்துக்கு இருந்துக்கோ.. வாரத்துல ஒருநாள் வீட்டுல இருக்கும்போதாவது உன் மகனோட இருடா தேவா.” என்றார் கெஞ்சலாக.
அன்னையின் வேதனை புரிந்து சரியென்பதாய் தலையசைத்தான் தேவேஷ்.
**** **** *****
மங்கை மருத்துவமணை செல்லும் முன்பே இருபது முறைக்கு மேல் அழைத்துவிட்டார் தவமணி. அன்னை அழைப்பது எதற்கென்று யூகித்திருக்கவே அழைப்பை ஏற்காமலிருந்தாள்.
தற்போது மருத்துவமணையில் இருந்தாள் மங்கை. இன்று சற்று கூட்டம் குறைவுதான் என்பதால்.. மங்கையை அழைத்த மருத்துவர்.. “இனி பேஷன்ட் இல்லையா?” என்றார்.
“இல்லைங்க சார்.” என்றாள் மங்கை.
“இனி வரவங்களுக்கு டோக்கன் கொடுக்க வேண்டாம்னு ரிசப்ஷன்ல சொல்லிடுங்க. ஈவ்னிங் பார்த்துக்கலாம்.. நீங்களும் வீட்டுக்கு போங்க” என விடைபெற்றார்.
நேரம் பார்க்க பனிரெண்டுதான் ஆனது. செவிலியர் அறைக்கு சென்று மொபைலை எடுத்துப் பார்க்கவே அறிவுக்கரசு அழைத்திருந்தான்.
நிச்சயம் அந்த பிரசாந்த் விசயமாத்தான் இருக்கும்.. இங்க வச்சி வேணாம், வீட்டுக்கு போய்ட்டு பேசலாம் என கிளம்பினாள்.
வீட்டிற்கு வந்து முகம் கழுவி உடைமாற்றி அண்ணனிற்கு அழைக்க மொபைலை எடுக்க.. அறிவே அழைத்தான். “அறிவு.. இப்போதான் உனக்கு கால் பண்ணலாம்னு மொபைலை எடுத்தேன். நீயே பண்ணிட்ட.” என்றாள்.
உங்கம்மாதான் முதல்லயே என்னை வேணாம்னு சொல்லிட்டாங்களே, இப்போ எப்படி சம்மதிச்சாங்கனு கேட்டேன். அவங்க சம்மதிக்கல, ஆனா எனக்கு உன்னை பிடிச்சிருக்கு. எங்கம்மாவை நான் கன்வின்ஸ் பண்ணிக்கிறேன்னு சொன்னான்.
எம்.எஸ் படிச்சவன், நர்ஸ்னு கூட பார்க்காம கல்யாணம் செய்துக்க நினைச்சா உனக்கு அவ்வளவு திமிரானு திட்டிட்டு கட் பண்ணிட்டான். விட்டது தொல்லைனு நிம்மதியானேன்.
அன்னைக்கு நைட் வீடியோ கால்ல வந்தான். இரண்டுமுறை கட் பண்ணினேன்.
இவனுக்கு ஒரு முடிவு சொல்லிடலாம்னு அட்டன் செய்தேன். என்னைப் பார்த்ததும்.. என்னை கட்டிக்க உனக்கு கசக்குதான்னு அசிங்கமா டபுள் மீனிங்ல பேசினான். அதுக்கு நான் சிங்கிள் மீனிங்ல பச்சையா திட்டினது தப்பா?” என்றாள் கோபமாக.
“ஹா..ஹா.. தப்பே இல்ல..” என்றான் அறிவுக்கரசு.
“இதப்போய் அம்மாகிட்ட என்ன்னு சொல்றது? அந்த ரேவதி ஆன்ட்டி பையன்தான் இவன்னு தெரிஞ்சிருந்தா முதல்லயே அவாய்ட் பண்ணிருப்பேன்..” என முன்பு ரேவதி தன் குடும்பத்தைப் பற்றி பேசியதனைத்தும் சொன்னாள்.
“அம்மா இதெல்லாம் என்கிட்ட சொல்லவேயில்ல..” என கடுகடுத்தவன்.. “சரி விடு.. அம்மாகிட்ட நான் பேசிக்கிறேன்.” என்றான் சமாதனமாக.
“ப்ச்.. அப்படிலாம் ஒருத்தனும் என் கண்ணுக்கு படல.” என இவள் சலிப்பாக சொல்லவும்.. “அப்போ நான் உனக்கு மாப்பிள்ளை பார்க்கவா?” என்றான் அனுமதியாக.
“பாரு.. பாரு..” என சம்மதித்தவள்.. “ஆனா என்னை பிடிச்சி கல்யாணம் செய்துக்கிறவனா இருக்கனும், அப்பா பணத்தை எதிர்பார்க்கிறவனும் வேணாம், அவரை மாதிரிதான் பொண்ணும் இருக்கும்னு நம்ம குடும்பத்தை கேவலமா நினைக்கிறவனும் வேணாம்..” என்றாள் கண்டிப்போடு.
அறிவுக்கரசு.. “இன்னும் மூனு மாசம் கழிச்சி கண்டிப்பா வரேன்.. வந்தா கண்டிப்பா கல்யாணம் முடிச்சிட்டுதான் கிளம்புவேன்.. இந்த மூனு மாச கேப்புல எனக்கு பொண்டாட்டியும், உனக்கு புருசனும் சல்லடை போட்டு தேடுறோம்.. யாருக்கு முதல்ல ஃபிக்ஸ் ஆனாலும் நான் அங்க வந்ததும் ஒரே மாசத்துல கல்யாணம்.. ஓ.கே.” என்றான்.
“தேடுறோம் இல்ல, நீயே தேடு..” என்றாள் சந்தோசமாக.
*** **** *****
அடுத்த நாள் காலை தேவேஷ் கம்பெனிக்குள் நுழைந்ததும்.. “தேவா..” என சந்தோசத்தோடு ஆர்பரித்தனர் அனைவரும்.
இத்தனை சந்தோஷம் எதற்கு என்பதுபோல் புருவம் சுருக்கினான் தேவேஷ். “தேவா.. நம்மளோட ப்ராஜக்ட்டை அமெரிக்காவுல அப்ரூவ் பண்ணியிருக்காங்களாம்.. கம்பெனி சார்பா உன் தலைமைல நாம அமெரிக்கா போகப்போறோம்..” என்றான் நிலைகொள்ளா சந்தோசத்தோடு.
சென்ற வருடமே இப்படி வாய்ப்பு கிடைக்குமென எதிர்பார்த்திருந்தான் தேவேஷ். ஷர்மிளாவிடமும் நாம கண்டிப்பா அமெரிக்கா போகப்போறோம் என சொல்லியிருந்தான்.
அமெரிக்கா சென்றால் உங்கம்மாவையும் அழைச்சிட்டு போலாம் என ஷர்மிளா சொல்லவே, அன்னைக்கும் பாஸ்போர்ட் எடுத்திருந்தான்.. எத்தனை முன்னேற்பாடோடிருந்தும் சற்றும் எதிர்பாராமல் வாய்ப்பு நழுவிப்போகவே இவனின் ஆசை நிறைவேறவில்லை.
தற்போது கடந்த ஐந்து மாதங்களாக தன் துக்கம் மறைக்க முயன்று, இரவு பகலாக வேலையில் கவனம் செலுத்த தற்போது அது கிடைத்திருக்கிறது.. ஆனால் ஆசை மனைவி உடனில்லையே என மனம் அழுத்த.. “ஹம்..” என தனது இருக்கைக்கு சென்றவனை அத்தனை கோபத்தோடு நெருங்கினான் சுதீப்.
சுதீப் தேவாவை முறைக்க, தேவா அசால்ட்டாய் அதை புறக்கணிக்க.. “மச்சான், என்ன ஆனாலும் சரி.. இன்னைக்கு அந்த வீடியோவை இவனுக்கு காட்டியே ஆகனும்டா.. தூக்குடா இவனை.. அதை பார்த்தாதான் இவன் பித்தம் தெளியும்..” என கோபத்தோடு சுதீப்பிடம் சொன்னான் தீபக்.