தீபக்.. “ஆமாம்.. உன்ன இரிடேட் பண்ணத்தான நாங்க ஆஃபீஸ் வரோம்.” என முறைக்கவே.. வெளியே எம்.டி அவரின் காரை பார்க் செய்ய வாட்ச்மேனிடம் சாவியை கொடுப்பதை பார்த்த தீபக்.. “எவ்வளோ பெரிய அச்சிவ்மண்ட் இது.. இதுக்காக எத்தனை எஃபக்ட் போட்டிருப்ப? ஏண்டா இப்படி?” என வருந்தியவன்..
“இன்னைக்கு ஒருநாள் எனக்கு பத்தே பத்து நிமிஷம் டைம் கொடு. அதுக்கப்புறம் உன்னை எப்பவும் தொல்லை பண்ணமாட்டேன்.” என முறைப்போடே முனுமுனுத்து அவனிடத்திற்கு சென்றான்.
சற்று நேரத்தில் உள்ளே வந்த எம்.டி தேவேஷிற்கு வாழ்த்து தெரிவித்து, மதியம் இரண்டு மணிபோல் மீட்டிங் இருப்பதாக சொல்லி உள்ளே செல்லவும்.. தேவேஷ் தீபக்கை பார்த்தான்.
“இப்போ எதுவும் யோசிக்காத, மதியத்துக்குள்ள ஒர்க் முடிச்சிடு, இல்ல.. இவ்வளோ நேரம் உன்னை புகழ்ந்தவன் அப்புறம் கடிக்க ஆரம்பிச்சிடுவான்.” என்று எம்.டி ரூமை கண்களால் காண்பித்து, தன் பணியில் கவனமானான் தீபக்.
வழக்கமாய் ஒரு மணிநேர வேலையை அரைமணி நேரத்தில் முடிப்பான் தேவேஷ். நேற்றெல்லாம் குழந்தையோடிருந்த தாக்கம்.. வழக்கத்திற்கு மாறாக இன்று வேலை நேரத்தில் குழந்தையின் நினைவு வரவே முகம் இறுக்கம் தளர்ந்து, வேலையும் ஆமை வேகத்தில் நகர்ந்தது.
அஞ்சு மாசம்தான் ஆகுது.. எத்தனை சேட்டை செய்யிறடா? சீரியல் பார்த்தோமா? கோவிலுக்கு போனோமானு நிம்மதியா இருந்த எங்கம்மாவை, இப்போ பத்து நிமிஷம் கூட உக்காரவிடாம பம்பரமா சுத்த விட்டுட்டிருக்க? என பெருமையாய் நினைத்தான்.
குழந்தை அழும் நேரம் அவனை இடுப்பில் வைத்துக்கொண்டு சமையல் செய்யும் அன்னையை நினைத்தவன்.. வாக்கர் இருந்தா அம்மா இவனை தூக்கி வச்சிட்டு வேலை செய்ய தேவையில்லை, என மொபைலில் அதனை ஆர்டர் செய்தான்.
ஷர்மி இருக்கும்போது கூட அம்மாக்கு அதிகம் தனிமைதான்.. ஆனா இப்போ நீ இருக்கிறதாலதாண்டா எல்லாத்தையும் மறந்து ரொம்ப பிஸியா இருக்காங்க, எங்கம்மாவை இப்படியே வச்சிக்கோ.. என மகனிடம் கோரிக்கை வைத்தான்.
ஹ்ம்.. அம்மா சொல்வதுபோல வாழும் மிச்ச வாழ்க்கைக்கு அர்த்தம் சேர்த்துட்டு போயிருக்கா.. என குழந்தைக்காக சிரத்தை எடுத்த மனைவியை நினைத்து நெகிழ்ந்தான்.
பிறகு எம்.டி அழைப்பதாய் தகவல் வர, அவரின் கேபினுக்கு சென்றான். “இன்னைக்கு ஒர்க் முடிச்சிட்டிங்களா?” என அவர் கேட்க.. இல்லையென்பதாய் இவன் தலையசைக்க.. “எனக்கு உங்க சுட்டிவேஷன் புரியுது, இதொன்னும் அர்ஜன்ட் ஒர்க் கிடையாது. ரிலாக்ஸாகிட்டு நாளைக்கு கூட பண்ணுங்க, இன்னைக்கெல்லாம் உங்க ப்ராஜக்ட் சக்ஸஸ் ஆனதை ஃப்ரண்ட்சோட செலிபிரேட் பண்ணுங்க..” என தேற்றினார்.
ஷர்மி விசயத்தில் யார் பரிதாபமும் பிடிக்காத தேவா.. உள்ள உக்கார்ந்துட்டு என்னையே உத்து பார்த்திட்டிருந்திருப்பான் போல என மனதில் கடிந்து.. “ஹம்..” என தலையசைத்து வெளிவந்தவன் மதியம் ஒரு மணிபோல் தன் வேலையை முடித்து கேண்டீன் சென்றான்.
தேவா சென்று பத்து நிமிடத்தில் அவனிடம் வந்த தீபக்.. “தேவா..” என்றான்.
“உனக்கான பத்து நிமிஷத்தை இன்னொருநாள் தரேன், இப்ப கிளம்பு.” என்றான் அவன் முகம் பாராமல்.
அமெரிக்கா செல்வதற்குள் இவனின் ஷர்மிளா பைத்தியத்தை தெளிய வைக்க வேண்டும் என முடிவெடுத்தவன்.. “எனக்கு இன்னைக்கே வேணும்.” என்றான் பிடிவாதமாக.
கேமரா முன்ன பேச முடியாதளவுக்கு என்னவாயிருக்கும் என யோசித்தபடி தேவேஷ் அமர்ந்திருக்க.. சாப்பாடு வரவும், தீபக்.. “ரொம்ப யோசிக்காத தேவா, முதல்ல சாப்பிடு. மதியம் இரண்டு மணிக்கு ஆஜராகலனா எம்.டி பேயாட்டம் ஆடுவான்.” என சாப்பிடலானான்.
ஷர்மிளா இறந்தது தாளமுடியாத வேதனை என்றாலும், அதை என்றும் அலுவலகத்தில் காட்டிக்கொள்ளமாட்டான் தேவேஷ். ப்ராஜக்ட் விசயமாக சந்தேகம் கேட்பவர்களுக்கு வழக்கம்போல் சொல்லிக் கொடுப்பான். மற்றபடி தீபக், சுதீப் தவிர, பொதுவாகவே யாரிடமும் அதிகம் பேசாதவனாதலால், முகம் இறுகியிருந்தாலும் வேலையில் கவனத்தை செலுத்தவே, அனைவரும் ப்ராஜக்ட் டென்ஷன் என்றுதான் எண்ணினர்.
வழக்கத்திற்கு மாறாக இன்று குழந்தை நினைப்பு வந்ததோடு, அமெரிக்க பயணம் எல்லாம் சேர்த்து அகத்தின் வேதனை முகத்தில் வெளிப்பட்டுவிட்டது.
காலையில் எம்.டியின் ஆறுதல் பேச்சை நினைத்த தேவேஷ்.. நம் முகத்தில் வாட்டமிருக்கவும்தானே அவருக்கு தெரிந்தது.. இனி இயல்பாய் இருக்கவேண்டும் என நினைத்ததால், அமெரிக்கா செல்ல தன்னுடன் ஷர்மி இல்லையே என்ற வேதனையை தன்னுள் புதைத்து, மீட்டிங்கில் இயல்பாகவே இருந்தான்.
மூன்று மணிபோல் மீட்டிங் முடிந்திருக்க.. அஃபிசியல் வேலை முடித்து மேலும் மூன்று நாட்களுக்கு அமெரிக்காவில் தங்க ஏற்பாடு செய்ததாலும், அனைத்தும் கம்பெனி செலவென்பதாலும் தேவாவின் கீழ் வேலை செய்த அத்தனை பேரின் முகத்திலும் சந்தோஷம் தாண்டவமாடியது.
தேவேஷ் முகத்தில் சந்தோசமும் இல்லை, காலையிலிருந்த வேதனையும் இல்லை. நேற்று இந்த நேரம்தானே தூக்கத்திற்கு அழுதுகொண்டிருந்தான் என குழந்தையின் நினைவு வர,
ஆஃப்டர் லன்ச் செலிபரேஷன் என எம்.டி சொல்லியிருக்க, வீட்டிற்கு செல்ல நினைத்து வெளியேறினான்.
“டேய்.. எஸ் ஆகுறான்டா..” என சுதீப் தீபக்கிடம் சொல்ல, “வாடா..வாடா..” என இருவரும் அவசரமாய் வெளியேறி அவனின் கையிலிருந்த பைக் சாவியை பிடுங்கினர்.
“ப்ச்.. தீபக்..” என சலித்தவன்.. “சாவியைக் கொடுடா, எனக்கு என் மகனோடு இருக்கனும்.” என்றான் கட்டளையாக.
“மகனோட..? நீ இருக்கபோற? நம்பிட்டேன், நம்பிட்டேன்..” என்றான் எள்ளலாக.
தேவேஷ் முறைக்கவே.. “குழந்தையைப் பத்தி கேட்கும்போதெல்லாம் நல்லா இருக்கானு சொல்வியே தவிர, ஒரு நாளாவது ஆசையா இப்படி பண்றான், அப்படி சேட்டை பண்றானு எதாவது ஒன்னு சொல்லியிருக்கியா? இன்னைக்கென்னவோ உடான்ஸ் உடற..” என்றான் நம்பாமல்.
உன்கிட்ட சொல்லலைனா என் குழந்தையை எனக்கு பிடிக்கலனு அர்த்தமா? என கோபம் வர.. “சாவிய கொடுக்குறியா, கேப் புக் பண்ணி போகட்டா?” என்றான் கோபமாக.
“உன்னை யாரும் பிடிச்சி வைக்கப்போறதில்ல, ஒரு பத்து நிமிஷம்தான கேட்குறேன்..” என முறைத்து.. “அங்க மரத்தடிக்கு போலாம் வா.” என முன்னே நடந்தான் தீபக்.
“என்னதான் இவன் பிரச்சனை?” என சுதீப்பிடம் கடுகடுக்க.. “இத்தனை சொல்றோமே.. முக்கியமானதாதான் இருக்கும்னு உனக்கு தோணவேயில்லையாடா?” என ஆதங்கப்பட்டவன்.. “பத்து நிமிஷம் கூட வேணாம், அந்த வீடியோ நாலு நிமிஷம்தான். வந்து பார்த்துட்டு போய்ட்டேயிரு..” என தேவேஷின் கைப்பிடிக்க..
“விடு, நானே வரேன்.” என தீபக்கிடம் சென்றான்.
மனதை திடப்படுத்து என்பதுபோல் எதாவது அறிவுரை சொன்னால் கடுப்போடு கிளம்பிடுவான் என.. “நான் காட்டப்போறது நாலு நிமிஷ வீடியோதான். முழுசா பார்க்கனும்.” என கட்டளையோடு தனது மொபைலை எடுத்தவன்.. தேவேஷ் முன் பிடித்து, வீடியோவை ஆன் செய்தான்.
இதென்ன நம்ம ரோடு போல இருக்கே, என நினைக்கும்போதே ஷர்மிளா காட்சிக்குள் வர.. சற்றும் எதிர்பார்க்காத தேவேஷ்.. வீடியோவிலிருந்து பார்வைவை தீபக்கிடம் திருப்பி.. “ஏண்டா என்னை உயிரோட கொல்றிங்க? இதை பார்க்க நினைச்சிருந்தேனா என்னால பார்க்க முடியாதா? நம்ம கம்பெனி சி.சி.டி கேமராவில பதிவாகியிருக்கும்னு எனக்கு தெரியாதா?” என்றான் வேதனையோடு.
“தேவா..” என தவித்தவன்.. “உன்னை கஷ்டப்படுத்த இதை காட்டல, இதுல ஒரு மெஸேஜ் இருக்கு, அதை சொன்னா நீ ஒத்துக்கவும்மாட்ட, நம்பவும்மாட்ட.. ஷர்மி இல்லாம நீ படற வேதனையை பார்த்து சொல்லாம இருக்கவும் முடியலடா.. எங்ளுக்காக இல்லனாலும் உன் குழந்தையோட எதிர்காலத்தை நினைச்சும், உங்கம்மாவை நினைச்சும் மனசை திடப்படுத்திக்கிட்டு இதை பாருடா.
“அவ துடிதுடிச்சிப் போறதை பார்த்துதான் அந்த கடைசி மெஸேஜை தெரிஞ்சிக்கனும்னா அப்படிபட்ட மெஸேஜ் எனக்கு தெரியாமலே இருக்கட்டும்டா.. ப்ளீஸ் என்னை விட்டுடுங்க” என எழுந்தவனை பிடித்து நிறுத்தினான் சுதீப்.
மனதை கல்லாக்கியவனாய்.. “உன் அன்புக்கு ஷர்மிளா தகுதியானவங்களானு இந்த வீடியோவைப் பார்த்தாதான் உனக்கு புரியும்..” என்றான் சவாலாக.
ஷர்மிளாவை குறைவாய் பேசியதும் கோபம் வர.. “சுதீப்..” என தேவேஷ் பல்லைக்கடிக்கவே.. அவனின் கோபத்தை புறக்கணித்து.. “உன் பொண்டாட்டி மேல உனக்கிருக்க அன்பு எங்களுக்கு தெரியாதா? அவங்க சாகறதை பார்க்க வைக்கனும்னு எங்களுக்கு மட்டும் வேண்டுதலா? ஆதரத்தை கையில வச்சிட்டு இத்தனை சொல்றோம்.. ஒரே ஒரு முறை பாரேன்டா.” என்றான் மன்றாடலாக.
அப்பொழுதும் அதை காண சகியாமல்.. “சரி அதுல அப்படி என்ன விசயமிருக்குனு நீயே சொல்லு.” என்றான்.
தீபக்.. “உன் பொண்டாட்டி விபத்துல சாகல, தற்கொலை செய்திருக்காங்க.” என்றான் பட்டென.
“போடா முட்டாள்.. நான் கூட எதோ முக்கியமான விசயம் போலனு நினைச்சிட்டேன்.” என நம்பாதவனாய் எழப்பார்க்க..
“நாங்க சொன்னா நம்பமாட்டனு நல்லா தெரியும். அதனாலதான் உன்னையே பார்க்க சொன்னேன்.. இதை பார்த்தாதான் நாங்க சொல்றது உண்மைனு உனக்கு புரியும்.. ஒரே ஒரு முறை பாரு.. செத்துட மாட்ட..” என கோபமாக வீடியோவை ஆன் செய்து தேவேஷ் முன் நீட்டினான்.
சிக்னலில் காவலர் நிற்க சொல்லி சொல்ல, போன் பேசியவாறு ஷர்மிளா நின்றிருந்தாள். சில நொடிகளில் பேசி முடித்து மொபைலை தன் பேகில் வைத்தாள். மற்றவர்கள் சிக்னலுக்காக காத்திருக்க இவள் மட்டும் பித்து பிடித்தாற்போல் சாலையை கடக்க மெல்ல நடந்தாள்.
இவளோடு நின்றிருந்தவர்கள் போகாதே எனக் கத்த.. யார் சொல்லுவதையும் கவனத்தில் கொள்ளாமல் எதோ முனகியபடி அந்த இரண்டு வழிச்சாலையை மெல்ல கடந்து கொண்டிருந்தவள்.. நூறடி தூரத்தில் வரும் லாரியைப் பார்த்ததும் திடமாய் நின்றாள்.
லாரி வருவதை பார்த்த காவலர் ஷர்மிளாவை இந்தபுறம் வருமாறு பதறி சொல்ல, பெருகிய கண்ணீரோடும், திடமான முகத்தோடும் லாரியை எதிர்த்து நின்றிருந்தாள் ஷர்மிளா.
லாரி ஓட்டுனரும் இவளின் செய்கை புரிந்தவனாய் வேகத்தை குறைத்திருப்பதும், ஒரே ஒரு அடி நகர்ந்திருந்தாலும் சிறு அடிகூட படாமல் உயிர் தப்பியிருக்கலாம் என்பதையும், அவ்வீடியோ தெளிவாய் விளக்க அதிர்ச்சியின் உச்சத்திற்கு சென்றான் தேவேஷ்.