“தேவா.. தேவா..” என கற்பகம் குரல் கொடுக்க.. “ம்மா.. நான் அப்புறம் வரேன். என்னை கொஞ்சம் தனியா விடு.” என்றான்.
நேற்று அத்தனை சொல்லியிருக்க, இன்று வீட்டிலிருந்தும் குழந்தையோடில்லாமல் ரூமிற்குள் அடைந்திருக்கும் மகன்மேல் கோபம் வர.. “உன்னை என்னைக்குமே நான் புடிச்சி வச்சதில்ல.. ஒரு நிமிஷம் வெளில வா.. நீ சொன்னதா ஒருத்தன் குழந்தைக்கு நடவண்டி கொண்டு வந்திருக்கான். வந்து என்னனு பாரு..” என்றார் கடுப்பாக.
வெளியே வந்தவன்.. வாக்கரை வாங்கி உள்ளே வைக்கவும்.. “இதை எதுக்கு வாங்கின?” என்றார் முறைப்பாக.
“அதான? நான்கூட குழந்தைமேல பாசம் வந்து வாங்கிட்டியோனு ஒரு நிமிஷம் சந்தோசப்பட்டேன்..” என ஆதங்கப்பட்டு.. “எனக்கு கஷ்டமா இருக்குனு நான் சொன்னேனா?” என்றார் கடுப்பாக.
“ப்ச் ம்மா..” என்றான் சலிப்பாக.
தேவேஷ் மனநிலை சரியில்லை என உணர்ந்து தன் கோபம் குறைத்தாலும், “நேத்து அத்தனை சொல்லியும் இன்னைக்கு அவ நினைப்புல கொளுத்துற வெயில்ல நின்னுட்டிருக்க.. நீ இப்படி செய்தா போனவ திரும்பி வந்திடுவாளா? செத்தவளை நினைச்சிட்டு இன்னும் எவ்வளோ நாள்டா என் பேரனை தள்ளி வைப்ப?” என்றார் ஆதங்கமாக.
“ம்மா.. என்ன பேச்சு இது? நானெங்க தள்ளி வச்சேன்?” என பதறியவன்.. “அவன் என் குழந்தைம்மா.. அவனை தள்ளி வச்சிட்டு நான் யாருக்காக இருக்கப்போறேன்?” என அன்னையிடம் பணிந்து.. “பல நேரம் அவனை தூக்கி வச்சிட்டுதான் வேலை செய்யிற.. உனக்கும் கை வலிக்கும்ல? அதான் வாங்கினேன்.” என்றான் சமாதனமாக.
கற்பகம் அறையிலிருந்த சத்தம் கேட்க.. மகனோடான சண்டையை தற்காலிகமாக நிறுத்தி.. “பால் குடிச்சிட்டு டப்பாவை வீசிட்டான், இன்னும் சித்த நேரத்துல போகலன்னா கத்த ஆரம்பிச்சிடுவான்.” என பேசியவாறு அறைக்கு சென்று குழந்தையை தோளில் போட்டு தட்டியபடி வெளியே தூக்கி வந்தவர்.. “நனைச்சிட்டியாடா?” என அவனின் செல்ஃபிலிருந்து உடையெடுத்து மாற்றிவிட்டு..
“இனி பால் குடிச்சதும் பாட்டிலை விசிறியடிச்ச.. அப்புறம் சங்கடைலதான் பால் ஊத்துவேன்..” என பேசிக்கொண்டே, கீழே படுக்க வைத்து உள்ளே சென்று அவன் நனைத்த மெத்தை விரிப்பை எடுத்து மிஷினில் போட்டார்.
நேரே படுத்திருந்தவன் குப்புற கவிழ்ந்து, கற்பகத்தின் குரல் வரும் திசையில் தலையை திருப்ப.. தேவேஷ்.. “ம்மா உன்ன தேடுறான்..” என்றான் ஆச்சர்யமாக.
கற்பகம் அமைதியாக இருக்க.. கற்பகத்திடம் செல்ல முயன்றபடி குழந்தை அவ்விடத்திலேயே சுற்றிக்கொண்டிருந்தான். கற்பகம் பேச்சு நின்ற அடுத்த நொடி குழந்தை அழ ஆரம்பிக்கவே..
சில நிமிடம் கழித்து வந்த கற்பகம் குழந்தையை தூக்கி நிறுத்த, கண்ணில் கண்ணீர் ததும்பி நின்றபோதும்.. “ங்கு..” என சிரித்தான் சந்தோசத்தோடு.
“கண்ணு முன்ன உக்கார்ந்திருக்க, ஆனா உன் மகன் உன்னைத் தேடலை.. இதைப் பத்திலாம் யோசிக்க உனக்கெங்க நேரமிருக்கு? போய் மொட்டை மாடி வெயில்ல நில்லு..” என விட்டதை தொடர்ந்தார் ஆற்றாமையாக.
தேவேஷ்.. “ம்மா..” என தலைமீது வைக்கவும்.. “இன்னும் உன் குரல்கூட அவனுக்கு பழக்கப்படல, அதனாலதான் உன் குரல் கேட்டும் அவன் அழறதை நிறுத்தல..” எனப் பொறுமி.. “இந்த நடைவண்டி ஒன்னுதான் இவனுக்கு குறைச்சலா போய்டுச்சி… பெருசா வாங்கி வந்துட்டான்.” என்றார் கோபமாக.
“சரி அதை யூஸ் பண்ணாத.” என தானும் கோபமாக சொல்லி எழப்பார்க்கவும்.. “உடனே உள்ள போய்டாத, என்னோட சண்டையாவது போடு, உன் குரலாவது இவனுக்கு பழக்கப்படட்டும்.” என்றார் கட்டளையாக.
இவர்களின் சண்டையில் குழந்தைக்கு என்ன புரிந்ததோ.. அழ ஆரம்பிக்கவும்.. “உங்கப்பன் உனக்கு தேவையில்லாததை வாங்கிட்டு வந்துட்டான்டா.. அதான் திட்டினேன். அதுக்கே உனக்கு பொத்துக்கிச்சா?” என குழந்தையை செல்லமாய் அதட்ட, தன் அழுகையை நிறுத்தி, வாயில் எச்சில் வழிய ஏதேதோ உளறினான்.
குழந்தையின் செய்கையில் கற்பகம் முகம் சமன்பட்டிருப்பதை உணர்ந்தவன்.. “ம்மா.. இதுல உக்கார வச்சா இவனை தூக்கி வச்சிட்டே இருக்க தேவையில்லமா. இவனும் வீட்டுக்குள்ளயே ஜாலியா ரௌண்ட் அடிச்சட்டு இருப்பான்.” என தன்மையாய் சொன்னவன்.. “ஒரு மணிநேரத்துல வந்துடறேன்..” என கிளம்பினான்.
ஒரு மணி நேரத்தில் வருகிறேன் என கிளம்பியவன் நள்ளிரவுதான் வந்தான். தன்னிடம் உள்ள சாவியை எடுத்து கதவை திறந்து உள்ளே வர கற்பகம் சோபாவில் அமர்ந்திருந்தார்.
“ம்மா.. மணி இரண்டாகப்போகுது, ஏன் இன்னும் தூங்கல?” என்றான் அக்கறையாக.
“குடிச்சிட்டேது வருவியோனு பார்த்தேன்.. பரவால்ல இன்னும் அந்தளவுக்கு போகல போல..” என பொய்யாய் மெச்சினார் உள்ளடக்கிய கோபத்தோடு.
“ப்ச் ம்மா..” என சலிக்க, “சாப்பிட வா.. எனக்கு பசிக்குது.” என ஹாட்பாக்சிலிருந்து இட்லியை எடுத்து வைத்தார்.
“அச்சோ ஏன்மா இன்னும் சாப்பிடல? நீ கூட என்னை புரிஞ்சிக்கமாட்டியா?” என்றான் வேதனையாக.
“உன்னை புரிஞ்சிக்கிட்டதாலதான் மருமக செத்து ஆறு மாசம் ஆனபின்னும் மத்த அம்மா மாதிரி உனக்கு இன்னொரு கல்யாணம் பண்ணிவைக்கும் யோசனையே இல்லாம இருந்தேன். ஆனா அது எவ்வளோ தப்புனு இன்னைக்குத்தான் புரிஞ்சது.” என்றார் அழுத்தமாக.
“ம்மா..” என தேவேஷின் முகம் அதிச்சியைக்காட்ட, “அஞ்சி வருசம் ஒன்னா வாழ்ந்த உனக்கே இப்படியிருக்குனா.. நாற்பது வருசம் ஒன்னா வாழ்ந்த எனக்கு எப்படியிருக்கும்? உங்கப்பா செத்ததுக்கப்புறம் உன்ன மாதிரி நானும் வெளில போய்ட்டு இப்படி நடுராத்திரியில வந்திருந்தா நல்லாயிருந்திருக்குமா” என்றார் கோபமாக.
ஷர்மிளா இறைப்பை கூட விதியென நினைத்து, அவளின் நினைவோடு வாழ்ந்து, வேலையில் கவனம் செலுத்தி தன்னை நிரூபித்தவனால், ஷர்மிளாவின் தற்கொலையை ஏற்கவே முடியவில்லை.
அவளோடு சேர்த்து தன் காதலையும் சேர்த்தல்லவா சாகடித்திருக்கிறாள் என நினைக்க நினைக்க மனமும் ஆறவில்லை, அதிலிருந்து மீளவும் முடியவில்லை தேவேஷிற்கு.
“இருபத்தி ஒன்பது வயசுதான் ஆகுது.. காலம் இன்னும் எவ்வளவோ இருக்கு.. குழந்தைக்கு விபரம் வரும்முன்ன உன் மகனுக்கு கல்யாணத்தை பண்ணுனு எத்தனையோ பேர் சொன்னாங்க..
ஆனா நான் யார் பேச்சையும் கேட்கல, உன் உணர்வுக்கு மரியாதை கொடுத்து அமைதியா இருந்தேன். அது எவ்வளோ பெரிய தப்பு, முட்டாள்தனம்னு இன்னைக்குத்தான் புரியுது.” என்றார்.
பசியென்ற ஒன்று இல்லாத போதும், கற்பகத்திற்காக சாப்பிட அமர்ந்தான். இரண்டு இட்லிதான் சாப்பிட்டிருந்தார் கற்பகம்.
குழந்தை அழவும், எழுந்தவர் அவனின் ஈர உடையை மாற்றி, தோள்மீது போட்டுக்கொண்டு, “இல்லடா..இல்லடா..” என பேச்சுக்கொடுத்தவாறு கிச்சன் சென்றவர் பாலை மிதமாக சூடாக்கி, பால்டப்பாவில் ஊற்றி, தனதறைக்கு சென்று குழந்தைக்கு பால்கொடுத்து, அவனின் பாஷையில் பேசியபடி தட்டிக்கொடுக்க, கால் மணிநேரத்தில் குழந்தை உறங்கியிருந்தான்.
“ம்மா வந்து இன்னும் இரண்டு இட்லி சாப்பிடு.” என்றான்.
“இதுக்குமேல சாப்பிட்டா செமிக்காது தேவா.. நீ சாப்பிட்டு படு.” என்றார்.
அன்னை அறைக்கு வந்தவன்.. “தொட்டில்ல படுக்க வைக்கிறதில்லையாம்மா?” என்றான்.
“தொட்டில்ல போட்டா, இப்போலாம் முழிப்பு தட்டியதும் இறங்க முயற்சி பண்றான், நான் அசந்த நேரம் கீழ விழுந்துடுவான்னு நைட்ல மட்டும் என்னோடவே தூங்க வச்சிக்குவேன்.. நான் பக்கத்துலயிருந்தா இவனுக்கு தொட்டிலே தேவைப்படறதில்ல.” என பேரனை கொஞ்சி கண்மூடினார்.
தற்போதே அதிகாலை மூன்று மணியாகியிருக்க, குழந்தை தூங்கும் நேரம்தான் அன்னையும் தூங்கமுடியுமென வெளியேறி ஹாலிலுள்ள சோபாவில் படுத்தவன்.. இனி முடிந்தவரை வீட்டிற்கு சீக்கிரம் வரவேண்டும், வீட்டிலிருக்கும்போது குழந்தையோடு ஒன்றவேண்டும்.
அவனிற்கு தன்னை பழக்கப்படுத்த வேண்டும், அம்மா தனியாளாக சிரமப்படுகிறார்கள் என ஷர்மி இறந்த பின்னே முதல்முறையாக இன்று அவளின் நினைவை தவிர்த்தான். மேலும் பல சிந்தனைகள் வலம் வர தன்னை மறந்து உறங்கியிருந்தான்.
காலை ஆறு மணிபோல் எழுந்த கற்பகம், ஹாலில் உறங்கிக்கொண்டிருக்கும் மகனை பார்த்ததும்.. மனைவியை பரிகொடுத்து தனியாய் இருக்கும் வயதா இது? என நினைக்க இதயம் கணத்தது.
நேற்று மாடியில் கண்ணீரோடு தேவேஷைப் பார்த்ததும் கலங்கிப்போனவர், இரவும் வர தாமதமானதும், அவனிற்கென ஒருத்தி வீட்டிலிருந்தால் இப்படி வருவானா?
ஷர்மிளாவை நினைத்து வேதனையிலிருப்பனை தேற்றாமல், நாமும் அவளின் நினைவோடு உழன்று மகனின் வாழ்வை கடினமாக்குகிறோமா? என யோசித்திருந்தார்..
மறுமணம் தவிர்த்து இதற்கு மாற்று வழியே இல்லை என தீர்மானித்து.. சற்று காலம் சென்றதும் தக்க சமயம் பார்த்து மறுமணம் குறித்து பேச வேண்டும் என்றும் முடிவெடுத்திருந்தார்.
உறங்கிக்கொண்டிருக்கும் மகனின் முகத்தில் அனைத்தும் பரிபோன உணர்விருப்பதுபோல் தோன்ற, பரிவாய் பார்த்தவர்.. உன் மனசுக்கு கடவுள் நிச்சயம் மாற்று வழி வைத்திருப்பார், என தனக்குள் சொல்லிக்கொண்டு சத்தமின்றி தன் வேலைகளை துவக்கினார்.
எட்டு மணிபோல் குழந்தை அழும் சத்ததில் கண்விழித்தவன்.. அதிகாலை ஐந்து மணியிருக்கும் என நினைத்து.. “இந்நேரத்துக்கெல்லாம் எழுந்துக்குவானாம்மா?” என்றான்.
“எப்பவும் அஞ்சு மணிக்கெல்லாம் எழுந்துக்குவான்.. இன்னைக்கு பார்த்து ஏழு வரை தூங்கினான். இப்ப பசிக்கு அழறான்.” என பால் சூடு பண்ண ஆரம்பித்தார்.
“இப்ப மணி என்ன?” எனப் பார்க்க, “எட்டாகிடுச்சா.?” என தனதறைக்குள் சென்று குளித்து வந்தவன்.. “ம்மா கொஞ்சம் வெளில போய்ட்டு வந்திடறேன்.” என கிளம்பப்பார்க்க..
“ம்மா.. அந்த கடைக்கு போகவே ஒரு மணிநேரமாகிடும்.. அங்கதான் ஃபர்னிச்சரும் நல்லாயிருக்கும். விலையும் குறைவா இருக்கும்.” என்றான் கிளம்பியாகவேண்டும் என்ற தோரணையில்.
“குழந்தைக்கு இடம் போதலன்னா உன் மார்மேல படுக்க வைக்கனும்டா.. அதைவிட்டுட்டு பெரிய கட்டில் வாங்கக்கூடாது.” என்றார் கோபத்தோடு.
“ம்மா.. ஏன் இவ்வளோ கோபப்படுற.?” என தேவேஷ் குரலிறங்க..
“குழந்தை இப்போதான் நகர ஆரம்பிச்சிருக்கான்.. இனி மெல்ல முட்டிபோட்டு தவழ நினைப்பான்.. அப்புறம் நிக்க, நடக்கனு மெல்ல மெல்ல முயற்சிப்பான்..
அதையெல்லாம் ரசிக்கிறதை விட்டுட்டு, அவனையும் முயற்சி செய்ய விடாம நடைவண்டி வாங்கி வந்துருக்க.. அந்தந்த வயசுக்கேத்த மாதிரி நடந்தாதான் குழந்தைக்கு நல்லது. உக்காரவே பழகாத குழந்தை ஓடனும்னு நினைக்காத.. அது குழந்தைக்கு நல்லதில்ல..
அவனுக்கு தேவை அன்பும் அரவணைப்பும்தான்.. பெரிய கட்டிலும் நடைவண்டியுமில்ல..” என்றார் முறைப்போடு.
“ம்மா.. அவன் என்கிட்ட சடர்னா வரமாட்டானுதான் இதெல்லாம் வாங்க நினைச்சேன்.” என்றான் சமாதனமாக.
தன் கோபத்திற்கு கோபப்படாத மகனிடம் தானும் சமாதனமாகி.. “பார்த்ததும் பயந்துக்கிற மாதிரி எந்நேரமும் மொகரையை உர்ருனு வச்சிட்டிருந்தா குழந்தை எப்படி வருவான்?” என்றார் சின்ன சிரிப்போடு.
“ம்மா..” என நீண்ட நாட்களுக்குப் பிறகு மனம்விட்டு சிரித்தான்.