“ஹே மங்கை.. குழந்தை ஆ காட்டும்போது எப்படி கொடுக்காம இருக்க முடியும்? உன் கைப்பக்குவம் இவனுக்கு ரொம்ப பிடிச்சிடுச்சு போல..” என இன்னும் கொஞ்சம் ஊட்ட, சமத்தாய் வாங்கிக்கொண்ட குழந்தையை ஆச்சர்யமாய் பார்த்திருந்தாள் மங்கை.
“ம்.. பனியாரம் செம சாஃப்ட், செம டேஸ்ட்.. நல்லா வக்கனையாதான் செய்து சாப்பிடுவ போல..” என பாராட்டினான்.
ஐந்து மாதம் முன் இருந்ததை விட சற்று எடை போட்டிருந்தான். அவனின் இணைந்த புருவம் குழந்தையின் முகத்திற்கு மேலும் அழகைக் கூட்டியிருக்க, மகனை ரசித்துப் பார்த்திருந்தவளிற்கு அண்ணனின் பாராட்டு எங்கே காதில் விழந்தது?
சப்பு கொட்டி ருசித்து சாப்பிடும் குழந்தையின் அழகில் மயங்கியவளாய்.. “என் சமையல் அவ்வளோ பிடிச்சிருக்காடா?” என குழந்தையிடம் கேட்க.. “ங்க்க..” என சிரித்து மேலும் மயங்க வைத்தான் மங்கையை.
“அடேய்.. வாயில பனியாரத்தை வச்சிட்டு சிரிக்காதடா, பொறை ஏறிடப்போகுது.” என கற்பகம் அதட்ட.. பாட்டியை புறக்கணித்து வாட்டர் பாட்டிலை பார்த்து ஆர்ப்பரிக்க, “தண்ணி வேணுங்களா?” என தண்ணீர் புகட்டினான் அறிவு.
“அவனை என்கிட்ட கொடுத்துட்டு நீ சாப்பிடு தம்பி.. பாவம் பசியோட இருப்ப..” என் கற்பகம் கையை நீட்ட.. பாட்டியிடம் போக மறுத்தான் குழந்தை.
“அடேய் போக்கிரிப் பையலே.. இந்த மாமன் இரண்டு நாள்ல போய்டுவான், அப்புறம் என்கிட்டதான் வந்தாகனும்..” என செல்லமாய் அதட்டி குழந்தையை வாங்கியவர்.. “நான் வரேன் மங்கை.. உங்கண்ணன் ரொம்ப வருசம் கழிச்சி வந்திருக்கான்.. இன்னைக்கும் வேலைக்கு கிளம்பிடாத..” என அறிவுரை கூறி கிளம்பப் பார்க்க..
“ஆன்ட்டி..” என்றாள்.
“என்ன மங்கை?” என கற்பகம் கேட்க..
“உங்க மகன் ஷர்மிளாக்காவை மறக்கனும்னு ஏன் நினைக்குறிங்க? அஞ்சு வருஷம் அன்யோன்யமா வாழ்ந்திருக்காங்க, மறக்குறது கஷ்டம்தான?” என மனதிலுள்ளதை கேட்டாள்.
ஆனாலும் மகனை அப்படியே விடமுடியாதில்லையா? தேவாக்கு இப்போதான் இருபத்திஒன்பது வயசு.. இப்போ பொங்கிபோட நானிருக்கேன்.. என் காலத்துக்கப்புறம் அவனுக்குனு ஒரு துணைவேணும்ல?” என்றார் கற்பகம்.
“அப்போ இன்னொரு கல்யாணம் செய்து வைக்கப்போறிங்களா? இதுக்கு உங்க மகன் சம்மதிப்பாரா?” என்றாள் அதிர்வாக.
“இப்போதைக்கு இல்லனாலும், சமயம் கிடைக்கும்போது இன்னொரு கல்யாணம் செய்துக்கனும்னு சொல்லத்தான் போறேன்.. நிச்சயம் தேவா ஒத்துக்க மாட்டான்.. ஆனா எப்படியாவது ஒத்துக்க வைக்கனும்.. நான் கும்பிடற ஆண்டவன் என்னை கை விடமாட்டான்..” என உறுதியாய் சொல்லி..
“சரி மங்கை.. என்னை விட்டா நாளெல்லாம் மகன் புராணம் பேசுவேன், நீ உங்கண்ணனை பாரு.. நாம இங்கதான இருக்கப்போறோம். ஆறஅமர பேசிக்கலாம்.” என வெளியேற.. சிரித்த முகத்தோடு தன் பாட்டியோடு போகும் மகனையே பார்த்திருந்தாள்.
இன்னொருத்தி வந்தால் மகனை பாசத்தோடு பார்ப்பாளா? அப்படியே பார்த்தாலும் அவர்களுக்கென ஒரு குழந்தை பிறந்த பின்னேயும் அது நீடிக்குமா? என மங்கை மனம் தவித்திருக்க..
“மங்கை..” என்ற அண்ணனின் குரலில் கவனம் கலைந்தவள்.. “சட்னி வேணுமா அறிவு..” சட்னி வைத்தாள்.
“ம்..” என மங்கை ஆமோதிக்க.. வேகமாய் சாப்பிட்டு முடித்தவன்.. “ம்.. நம்ம விசயத்துக்கு வருவோம்..” என ஹாலுக்கு வந்தான்.
“இப்படி வந்து உக்காரு மங்கை..” என தங்கையை அருகமர்த்தியவன்.. “நிகிலுக்கு இரண்டு அக்கா, பெரிய அக்காக்கு கல்யாணம் ஆகி வெல் செட்டில்ட்.. இன்னொரு அக்காதான் பிரச்சனை.. கல்யாணமாகி இரண்டு மாசத்துலயே அவங்க ஹஸ்பண்ட் இறந்துட்டாங்களாம்..
இன்னொரு கல்யாணத்துக்கு சம்மதிக்க வைக்கவே இரண்டு வருசம் ஆகிடுச்சாம், ஓ.கே சொன்னதுக்கப்புறம் நிறைய இடத்துல மாப்பிள்ளை பார்த்திருக்காங்க, ஆனா அமையல.. அக்காவை வச்சிக்கிட்டு என்னால கல்யாணம் செய்துக்க முடியாது, கொஞ்சம் வெய்ட் பண்ணுனு லவர்கிட்ட சொல்லியிருக்கான்..
இரண்டாவது கல்யாணம் செய்துக்குறதுக்கு உங்கக்காக்கு இத்தனை அவசரமானு கேவலமா பேசிட்டாங்களாம்.. அதை கேட்க நீ யாருனு இவனும் கத்தியிருக்கான், வாக்கு வாதம் ஆகி ஒரு வருசம் முன்ன ரெண்டு பேருக்கும் ப்ரேக்கப் ஆகிடுச்சு..
ஒரு வழியா நிகிலோட அக்காக்கு ஆறு மாசம் கல்யாணம் முடிஞ்சிடுச்சி, அதுக்கப்புறம் இவனுக்கு பொண்ணு பார்க்க ஆரம்பிச்சிருக்காங்க.. வேற பொண்ணை கட்டிக்க மனசு வராம லவ்வரை சமாதனப்படுத்த பார்த்திருக்கான்.
அக்கா தங்கைன்னு எந்த பிரச்சனையுமில்லாத இடத்துல என்னை கேட்டுருக்காங்க, எனக்கும் பையனை பிடிச்சிருக்கு, நான் அவனைத்தான் கட்டிக்க போறேன்னு அந்த பொண்ணு சொல்லிடுச்சாம்.
இப்படி பொண்ணையா காதலிச்சோம்னு ரொம்ப உடைஞ்சிட்டான், என்னை கட்டிக்கப்போறவ எங்கக்காவோட பாசமா இல்லனாலும் பரவால்ல, என்னையும் அவங்ககிட்டயிருந்து பிரிச்சிடாத பொண்ணா பார்க்கனும்னு பொண்ணு தேடிட்டிருக்கான்.
நிகில் இடத்துல வேற ஒருத்தரா இருந்தா லவ்வரை பழிவாங்க கிளம்பியிருப்பாங்க, ஆனா இவன் அப்படிப்பட்டவன் இல்ல, என் இடத்துல இன்னொருத்தனை எப்போ நினைச்சிட்டாளோ, அதுக்கப்புறம் அவளை பார்க்க கூட பிடிக்கலனு விலகிட்டேன்னான்..
நிகிலை பத்தியும், அவனோட ஃபேமலிபத்தியும் எனக்கு ரொம்ப நல்லா தெரியும், எல்லாருமே நல்ல டைப்.. அவனை கட்டிகிட்டா உன் வாழ்க்கை நிச்சயம் சந்தோசமா இருக்கும்..
ஃபோட்டோவை உனக்கு சென்ட் பண்றேன்.. பிடிச்சிருக்கா பார்த்து சொல்லு..” என்றான்.
மங்கையின் செவிகள் அறிவு சொல்வதை கேட்டிருந்தாலும், மனம் குழந்தையை சுற்றியே வட்டமிட, பேரமைதியோடு அமர்ந்திருந்தாள்.
“இதுல அம்மாக்கு பிடிக்காம போக என்னயிருக்குனு யோசிக்கிறியா?” என்றவன்.. “மங்கை..” என தங்கையின் கவனம் கலைத்தான்.
“ஹான்..” என அண்ணனின் கேள்வியை ஆமோதிக்க.. “இன்ஸ்பெக்டருக்கு உன்னை கட்டிக்கொடுக்க அம்மா நிச்சயம் சம்மதிக்கமாட்டாங்க, ஆனா உனக்கு நிகிலை பிடிச்சிருந்தா அம்மாவை நான் கன்வின்ஸ் பண்ணிடுவேன்..” என்றான்.
போலீஸ் என்றதும் மங்கை முகம் அதிர்வாக.. “எல்லா போலீசும் நம்ம அப்பா மாதிரி இருக்கமாட்டாங்க, நிகில் நேர்மையான போலீஸ் அதிகாரி மட்டுமில்ல, ரொம்ப ரொம்ப நல்லவன்.” என்றான்.
“நிகில் பர்சனாலிட்டி பிடிக்கலன்னா கூட பரவால்ல, நான் இவ்வளோ சொல்லியும் அவன் ஃபோட்டாவை கூட பார்க்காம இப்படி கண்மூடித்தனமா போலீஸ் வேணாம் சொல்றது சுத்த அபத்தம் மங்கை.” என்றான் கடுப்பாக.
“இல்ல அறிவு.. உன் கல்யாணம் முடிஞ்சதுக்கப்புறம் நான் பண்ணிக்கறனே..” என்றாள் கெஞ்சலாக.
“போன வாரம் கூட மனசுக்கு பிடிச்ச பையன் அமைஞ்சா உடனே கல்யாணம் பண்ணிக்கிறேனுதான சொன்ன?” என்றான் முறைப்பாக.
பதில் சொல்ல முடியாமல் மங்கை தடுமாற.. “சரி விடு..” என்றவன்.. “உனக்கு வாங்கி வந்த டிரெஸ், ஜுவல்ஸ்லாம் பிடிச்சிருக்கா பாரு..” என ப்ரீப்கேஸை திறந்து காண்பித்தான்.
“என்ன அறிவு.. இவ்வளோ நகை?” என்றாள் வியப்பாக.
“எல்லாம் உன் கல்யாணத்துக்காக வாங்கினேன்.. பிடிச்சிருக்கா?” என்றான் ஆவலாக.
“ம்.. செம கலெக்ஷன்.. நல்ல ரசனைக்காரன்தான் நீ..” என பாராட்டியவள்.. “எனக்காக பார்த்து பார்த்து வாங்கியிருக்க, பிடிக்காம போகுமா.?” என்றாள் நிறைவாக.
பிறகு அன்னைக்கு தாத்தா பாட்டிக்கு என அனைத்தையும் ஆவலோடு மங்கை பார்த்திருக்க.. “சரி.. எனக்கு தூங்கனும்.. ஒரு முறை நிகில் ஃபோட்டோவைப் பாரு.. உனக்கு பிடிக்கலனா வேற பையன் பார்க்கலாம்.” என பெட்ரூம் சென்றவன்..
மீண்டும் வெளியே வந்து.. “மதியத்துக்கு சமைச்சி கஷ்டப்பட்டுட்டு இருக்காத, வெளில ஆர்டர் பண்ணிக்கலாம்.. கதவை தாழ் போட்டுட்டு நீயும் வந்து கொஞ்ச நேரம் படு.” என உள்ளே போனான்.
கடை பரப்பிய அனைத்தும் ஒதுங்க வைத்து, அறிவருகே அமர்ந்தவள்.. தந்தை இறந்த பிறகு தன் விருப்பம் அனைத்திற்கும் உறுதுணையாய் இருக்கும் அண்ணனையே அன்போடு பார்த்திருந்தாள்.
நீ இவ்வளோ தூரம் நிகில் பத்தி சொல்லும்போது, நிகிலை மறுக்க எனக்கு எந்த காரணமும் இல்லை அறிவு.. ஆனா இப்போ எனக்கு கல்யாணம் செய்துக்க பயமாயிருக்கு.. கொஞ்சநாள் பொறுத்துக்கோ, அந்த தேவேஷ் கல்யாணத்துக்கு சம்மதிக்கிறாங்களா இல்லையானு தெரிஞ்சிக்கிட்டு என் முடிவை சொல்றேன் என நினைக்க..
எவ்வளோ நாள் வெய்ட் பண்ண முடியும்? ஒருவேளை இப்போ கல்யாணம் வேணாம்னு சொல்லிட்டு, என் கல்யாணம் முடிஞ்சு நாலஞ்சு வருசம் பொறுத்து தேவேஷ் கல்யாணம் செய்துக்கிட்டார்னா? குழந்தை சித்தி கொடுமையை அனுபவிப்பானே.. என நினைக்கும்போதே மங்கையின் மனம் பதறியது.
அறிவு அருகிருக்கவும், வெளியே வந்தவள்.. “ஷர்மிக்கா.. ஏன் செத்திங்க? இப்படிலாம் ஆகும்னு நான் யோசிக்கவேயில்லையே..” என கமறியவளுக்கு குழந்தையின் எதிர்காலமே மனதில் சுழன்றது.
மாலை ஐந்து மணிபோல் தவமணி வரவும்.. “ம்மா..” என கட்டிக்கொண்டாள் அன்னையை.
“ஏய்.. என்ன முகமெல்லாம் சிவந்திருக்கு? உங்கண்ணன் எவளையாவது கூட்டிட்டு வந்துட்டானா?” எனப் பதறினார் தவமணி.
வெளியே வந்தவன்.. “என்னை நம்பலயில்ல? அடுத்த முறை கண்டிப்பா இது நடக்கப்போகுது.” என்றான் முறைப்பாக.
“அறிவு..” என மகனை கண்களில் நிரப்பி ஆரத்தழுவிக்கொண்டார் தவமணி.
“எல்லாம் பொய் வேஷம், வந்ததும் நான் எப்படியிருக்கேனு கேட்காம என்னை சந்தேகப்பட்டுட்டிங்கள்ல?” என்றான் பொய் கோபமாக.
“உன் தங்கை மூஞ்சு இப்படியிருந்தா நான் என்னனுடா நினைப்பேன்?” என நியாயம் கேட்டவர், பின்னே மகனை சமாதனப்படுத்தி.. மகன் வாங்கி வந்ததை ஆசையாய் ஆராய்ந்து, பாராட்டி.. “மதியம் என்ன சாப்பிட்டிங்க?” என விசாரித்தார்.
“எதுவும் சாப்பிடலமா, அறிவு இப்போதான் எழுந்தான். இதோ ஆர்டர் பண்றேன்.” என்க.. “அதெல்லாம் ஒன்னும் வேணாம்.. மீன் வாங்கி வந்துருக்கேன், பத்து நிமிஷத்துல சமைச்சிடறேன்.” என வாங்கி வந்த மீனை சுத்தம் செய்ய ஆரம்பித்தார் தவமணி.
ஆறு மணிக்கு சாப்பிட்டு முடித்ததும், “ம்மா.. வாயேன் மாடிக்கு போலாம்.” என அறிவு அழைக்க.. மூவரும் மாடிக்கு சென்றனர்.
மகனிற்காக தான் பார்த்து வைத்த பெண்களின் புகைப்படங்களை காண்பித்து, “இதுல எந்த பொண்ணும் உனக்கு பிடிக்கலயா? என கோபித்து.. “தங்கைக்கு மாப்பிள்ளை பார்த்தியா?” என ஒரு மணிநேரம் வரை கல்யாண பேச்சை மட்டுமே பேசியிருந்தார் தவமணி.
இரவு ஏழு மணிபோல், கற்பகம் தேவேஷ், குழந்தை மூவரும் வெளியே வர.. “குழந்தை அழகா இருக்கான்.. கற்பகம்மாவை நாளைக்கு பார்க்கலாம்னு நினைச்சேன், எங்கையோ வெளில கிளம்புறாங்க போல.” என்றார் யோசனையாக.
கற்பகம் அமெரிக்கா செல்வதை விவரித்தவள் கண்கள் அவ்வப்போது தேவேஷையே நோட்டமிட்டது. ம்.. இத்தனை நாள் தாடியோடிருந்தவன்.. இன்று எத்தனை மிடுக்காய் ஷேவ் செய்து கிளம்பிட்டான்.. பொண்டாட்டி செத்த துக்கமெல்லாம் ஆறு மாசத்துக்குத்தானா?
ஆன்ட்டியோட ஆசை ஈசியா நிறைவேறிடும் போலயே.. நல்லா ஹேன்ட்ஸமா இருக்கான், கல்யாணமான மாதிரியே தெரியலை.. நல்ல வேலையில இருக்கான்.. அதுக்காகவே இவனை கட்டிக்க போட்டிபோட்டு வருவாங்களே.. அப்போ குழந்தை நிலமை..?? என சிந்தனை தறிகெட்டு ஓட.. தேவாவின் மிடுக்கான தோற்றம் ஆத்திரத்தை கிளப்பியது.
“புருசன் செத்து ஆறு மாசத்துல பொண்டாட்டி மட்டும் நல்லா டிரெஸ் பண்ணிடக் கூடாது, பூ வைக்க கூடாது, பொட்டு வைக்க கூடாதுனு ஆயிரம் சம்பிரதாயம் இருக்கு.. அதையும் மீறி வச்சா அதை குத்தம் சொல்றதுக்காகவே பல ஜென்மங்கள் இருக்காங்க.
ஆனா பொண்டாட்டி செத்தா மட்டும், ஒரு வருசம் கூட முடிஞ்சிருக்காது.. அதுக்குள்ள புருசன்காரன் புதுமாப்பிள்ளை ஆகிடறான்..” என தன்னை மறந்து வாய்விட்டே கூறினாள் ஆத்திரமாக.
தங்கையின் பார்வை சென்ற திசையைப் பார்த்தவன்.. “மங்கை..” என அவளின் கவனம் கலைத்து.. “உன் பிரச்சனைதான் என்ன?” என முறைத்தான் தங்கையை.