மங்கை அறிவை முறைக்க.. “ஹே.. உண்மையை சொன்னா முறைப்பியா?” என சிரித்தவன்.. “டிரெஸ் பண்ணிக்கிறது, பொண்டாட்டி செத்துட்டா எப்படி இருக்கனும்ன்றதெல்லாம் அவங்கவங்க விருப்பம்.. அதை விமர்சிக்க நாம யாரு?” என்றான்.
அறிவு சொல்வது உண்மைதான் என உரைத்தபோதும், முகம் இறுகியே காணப்பட்டாள். “காலைல என்னைப் பார்த்ததுலயிருந்து ஆன்ட்டி வரும்வரை நல்லாதான இருந்த? ஆன்ட்டி வந்ததுக்கப்புறம்தான் எதோபோல இருக்க!
குறிப்பா அவங்க மகனுக்கு கல்யாணம் செய்யனும் சொன்னதுக்கப்புறம் உன் முகமே சரியில்ல, அவங்க மகனுக்கு கல்யாணம் செய்ய நினைக்கிறதுல உனக்கென்ன பிரச்சனை?” என முறைத்தான்.
இம்முறை அறிவு கோபமாக கேட்கவே, பதில் சொல்லவில்லையென்றால் தன் மீது சந்தேகம் வந்திடுமோ என்ற பயத்தில்.. “புதுசா வரவங்க குழந்தையை கொடுமை பண்ணினா..” என்றாள்.
“இப்படிதான் அறிவு.. அந்த ஷர்மிளா பொண்ணு இறந்ததுக்கு இவ ரொம்ப அழுதா..” என அன்றிரவு குழந்தையை பார்த்துக்கொண்டதை சொல்லி.. “எதோ பக்கத்து வீடுன்னு அன்னைக்கு குழந்தையை பார்த்துக்கிட்டது கூட பரவால்ல..
அதுக்காக அவங்க பையன் கல்யாண விசயம் வரைக்கும் தலையிடுறதுக்கு நமக்கு என்ன உரிமையிருக்கு? அடுத்தவங்க விசயத்துல இந்தளவுக்கு இன்வால்வ் ஆகுறது தப்புன்னு எப்போதான் புரிஞ்சிப்பாளோ..” என்றார் ஆற்றாமையாக.
இவர்களின் பேச்சை கேட்டிருந்தாலும் கவனம் குழந்தை மீதும் இருக்க, டாக்சி வரவும் மூவரும் கிளம்புவதை பார்த்திருந்தாள்.
தவமணி.. “இத்தனை பேசுறனே, இனி அவங்க விசயத்துல தலையிடமாட்டேனு சொல்றாளா? இவ இஷ்டத்துக்கு வேலை பார்க்க விட்டுருக்கோம்ல? அதான் கண்டதையும் யோசிக்க தோணுது..
இவளுக்குனு எதவாது பொறுப்பிருந்தாதான் மத்தவங்க விசயம் நினைக்க நேரம் இருக்காது, இந்த முறை இவ கல்யாணம் முடிக்காம நீ கிளம்பக்கூடாது அறிவு..” என்றார் கட்டளையாக.
“அறிவு கல்யாணம் முடியாம நான் கல்யாணம் செய்துக்கமாட்டேன்..” என்றாள் திடமாக.
“நேத்து வரைக்கும் பையனை பிடிச்சிருந்தா உடனே கல்யாணம் செய்துக்குறேனுதான சொன்ன? உன் பேச்சை நம்பி தரகர்கிட்ட சொல்லிவச்சிருந்தேன், ஆறு பேர் உன்னை பிடிச்சருக்குனு கேட்டுருக்காங்க, அதுல மூனு பேர் ஜாதகம் உன் ஜாதகத்தோட பொருந்தி வருது..
மூனு பசங்க போட்டாவும் மொபைல்ல இருக்கு.. மூனு பேர்ல யாரை பிடிச்சிருக்குனு பாரு.” என தனது மொபைலை நீட்டினார் தவமணி.
“எனக்கு இப்போ கல்யாணம் வேணாம்.” என்றாள் மீண்டும்.
“யாரை லவ் பண்ற?” என்றார் சந்தேகப் பார்வையோடு.
அன்னை சொல்வதுபோல் தங்கை காதலிப்பாள் என்ற சந்தேகமெல்லாம் அறிவுக்கு இல்லை, ஆனால் திருமணம் வேணாம் என சொல்வதற்கு எதோ முக்கிய காரணம் இருக்கு எனவும், அது வெளிப்படுத்த வைக்கவேண்டும் என்றும் அன்னையின் கேள்வியை ஆமோதித்தபடி அமைதியாய் அமர்ந்திருந்தான்.
தவமணி ஏதோ சொல்ல வர, “ம்மா..” என கை நீட்டி அன்னையை தடுத்தவன்.. “எனக்கு யாரைவாது பார்த்து வச்சிருந்தா போட்டோ காட்டு. எனக்கு பிடிச்சிருந்தா அடுத்த பத்து நாள்ல என்கேஜ்மண்ட் வச்சிக்கலாம்..
இப்போ இருபது நாள்தான் லீவ் போட்டுட்டு வந்திருக்கேன், நெக்ஸ்ட் டைம் ஒன் மன்த் லீவ் போட்டுட்டு வரேன்.. அப்போ கல்யாணத்தை வச்சுக்கலாம்.. அதுக்குள்ள ஜாதகம் பொருந்தி வர இந்த மூனு பசங்கள்ல மங்கைக்கு யாரை பிடிக்குதோ அவங்ககிட்ட பேசுங்க.. என் கல்யாணத்தோட சேர்த்து மங்கை கல்யாணத்தையும் முடிச்சிடலாம்.” என்றான் இலகுவாகவே.
என்ன இத்தனை வேகம் காட்டுறான்? என மங்கை அதிர்வாக.. “அச்சோ இவளுக்கு பார்க்குற ஆர்வத்துல உனக்கு பார்க்காம விட்டுட்டனே.. நீ இப்படி தீடீர்ன்னு வருவ.. கல்யாணம் செய்துக்க கேப்பனு யாரு கண்டா?” என சந்தோசத்தோடு ஆர்பரித்து.. “இரு மங்கைக்கு சொன்ன தரகர்கிட்டயே கேட்கறேன்.” என உடனே தரகருக்கு அழைத்து சந்தோசமாக விசயத்தை சொன்னார் தவமணி.
“இதோ பாருங்க.. அவசரம்னு சும்மா எனோதானோனு இருக்க கூடாது, என் பையனுக்கு எப்படிபட்ட பொண்ணு வேணும்னு நான் முன்னவே சொல்லியிருக்கேன், வசதி பத்திலாம் பிரச்சனையில்ல, பொண்ணு நல்லா படிச்சிருக்கனும், என் மகனுக்கு பிடிக்கனும். அப்போதான் உடனே கல்யாணம்.” என கண்டிப்போடு பேசி இணைப்பை துண்டித்தார்.
“ம்மா… எனக்கு பொண்ணை பிடிச்சிருந்தா போதுமா? பொண்ணுக்கு என்னை பிடிக்க வேணாமா?” என்றான் செல்ல முறைப்போடு.
“என் மகனை பிடிக்கலன்னு சொல்ல கூட ஆளிருக்காங்களா? உன் போட்டோ பார்த்தாலே சொக்கிடுவாங்க, நேர்ல பார்த்தா கட்டினா உன்னைத்தான் கட்டுவேனு எத்தனை பேர் நிக்கறாங்கனு பாரு..” என்றார் பெருமையாக.
அன்னையின் அன்பில் கரைந்தவனாய்.. “அப்படியா?” என அறிவு சிரிக்கவும்.. “இல்லையா பின்ன?” என மீண்டும் பெருமையாக சொல்லி, “டின்னர்க்கு என்ன சாப்பிடற அறிவு?” என கேட்க.. “ம்மா.. இப்போதான ஃபுல்லா மீன் சாப்பிட்டேன்? எதாவது ஜுஸ் மட்டும் போதும்..”
மங்கை சரியாக சாப்பிடாததால்.. “உனக்கு தோசை ஊத்தறேன்.” என மங்கைக்கு தகவலளித்து.. “பாத்திரம் தேய்க்கனும், நான் கீழ போறேன்.. உன் தங்கைக்கு நல்லா புத்தி சொல்லி கூட்டிட்டு வா.” என கீழே போனார் தவமணி.
“அறிவு.. என்ன இப்படி பட்டுனு பொண்ணு பார்க்க சொல்லிட்ட? அம்மா ஒரே வாரத்துல பார்த்துடுவாங்க.” என்றாள் பதட்டமாக.
“பார்க்கட்டும், அம்மாக்கு நம்ம ரெண்டு பேர் கல்யாணமும் முடிஞ்சிடுச்சினா ரொம்ப ஹேப்பியா ஃபீல் பண்ணுவாங்க, பெரிய கடமை முடிச்ச நிம்மதியிருக்கும்.
எப்போன்னாலும் கல்யாணம் செய்துதான ஆகனும்? நீ வேற என் கல்யாணம் முடிஞ்சப்புறம்தான் நீ செய்துக்குவனு சொல்ற.. என் ஒருத்தனால உன் கல்யாணம், அம்மா சந்தோசம் இரண்டும் தடைபடக்கூடாதில்ல? அதான் பார்க்க சொன்னேன்.
உன் பேச்சுக்கு மதிப்பளிச்சு நான் கல்யாணம் செய்துக்க சம்மதிச்சமாதிரி, என் கல்யாணம் முடிஞ்சதும் நீயும் கண்டிப்பா கல்யாணம் செய்துக்கனும். புரிஞ்சதா?” என்றான் தீர்க்கமாக.
வேறு வழியின்றி மங்கை மண்டையை உருட்ட.. “நிகில் பத்தி எதாவது யோசிச்சியா?” என்றான்.
“போலீஸ் வேண்டாம் அறிவு.” என்றாள்.
“நிகில்க்கு இந்த சாக்கு, அம்மா பார்க்குற பையனுக்கு என்ன சொல்றன்னு பார்ப்போம்.” என முறைக்க.. “அறிவு..” என்றாள் பதட்டமாக.
“நீ யாரையும் லவ் பண்ணலன்னு தெரியும்.. இன்னைக்கு காலைல என்னை பார்க்கும் வரை கல்யாணத்துக்கு தயாராதான் இருந்த.. எதிர் வீட்டு ஆன்ட்டி வந்ததுக்கப்புறம்தான் உனக்குள்ள தடுமாற்றம் வந்தது. அவங்க வரதுக்கு முன்ன நிகிலைப் பத்தி சொல்லியிருந்தேன்னா, நிச்சயம் நிகிலை கட்டிக்க சம்மதிச்சிருப்ப..” என்றான் உறுதியாக.
“அறிவு..” என தடுமாற்றத்தோடு தலைகவிழ.. “இப்போதைக்கு எனக்கு இந்தியா வர ஐடியாவும் இல்ல, கல்யாணத்துலயும் பெருசா ஆர்வம் இல்ல..
நிகிலை கட்டிக்க சம்மதிப்பனு நம்பி வந்தேன், நிகில் உன்ன பார்க்க வரும்போது உன் முக ரியாக்ஷனை நேர்ல பார்க்கனும், என்னதான் வீடியோ கால்ல பேசினாலும், இப்படி சந்தோசத்தையெல்லாம் நேர்ல பார்த்தாதான் குட் மெமரிஸா லைஃப்லாங் மனசுல பதியும்.. இப்படி பல கற்பனையோட உனக்காகத்தான் இந்தியா வந்தேன்..
ஆனா நீ நான் கல்யாணம் செய்துக்கனும்னு சொல்ற..
ஓ.கே.. எனக்கு விருப்பம் இருக்க மாதிரி உனக்கும் சில விருப்பங்கள் இருக்கும்ல.. உன் விருப்பத்தை விட வேறொன்னும் எனக்கு பெருசில்ல… அதான் உடனே கல்யாணத்துக்கு சம்மதிச்சேன்.” என்றான் கண்களில் பாசத்தை தேக்கி.
“அறிவு..” என பெருகிய கண்ணீரோடு அண்ணனை அணைத்துக்கொண்டாள் தவிப்பாக.
மங்கையின் இறுக்கமான அணைப்பே சொன்னது அவளின் தவிப்பை. “ஹே.. மங்கை.. என்ன இது?” என முதுகை தடவிக்கொடுத்தவன்.. “இப்படி கண்ணீர் விடுற மங்கை என் தங்கையே இல்ல.. என் தங்கை எந்த பிரச்சனையானாலும் துணிஞ்சி நிக்குற வீர மங்கையாச்சே..” என தன்னிலிருந்து விலக்கி மங்கை முகம் பார்த்தான் பெருமையாக.
“அறிவு..” என தடுமாறியவள்.. அண்ணனின் கண் பார்க்க முடியாமல் தலைகவிழ்ந்தாள்.
“எந்த பிரச்சனையாயிருந்தாலும் உன்மேல தப்பிருக்காதுனு எனக்கு தெரியும்.. எங்கையாவது நல்லது செய்யப்போய்தான் எதோ பிரச்சனையாகியிருக்கும்.. அது சரியாகாம உன்னால கல்யாணம் செய்துக்க முடியலனு புரியுது.. எந்த பிரச்சனையாயிருந்தாலும் சரி செய்துக்கலாம்.” என மனபலம் கொடுத்தான் தங்கைக்கு.
“நீ சொல்றது ஹண்ட்ரட் பர்சன்ட் உண்மை, நல்லவங்களுக்குத்தான் நல்லது செய்ய நினைச்சேன், செய்தேன்.. உன்கிட்ட சொல்லக்கூடாதுனு இல்ல அறிவு.. இது ரொம்ப சென்ஸிட்டிவான விசயம்.. எனக்கு கொஞ்சநாள் டைம் கொடு, என்னால முடியலன்னா உன்கிட்ட சொல்றேன்.” என்றாள் பாவமாக.
“எவ்வளோ நாள்.?” என்றான்.
“அது.. அது..” என திணறியவள்.. ஆன்ட்டி அமெரிக்காவில இருந்து வந்த்தும் இதுப்பத்தி பேசிடலாம் என அவசர முடிவெடுத்து.. “ஒரு இரண்டு மாசத்துல..” எனும்போதே இடை புகுந்தவன்..
“என்ன பிரச்சனையில மாட்டியிருக்கனு எனக்கு தெரியாது, அதனால அதிக நாள் டைம் கொடுத்து பிரச்சனையை பெருசாக்க நான் விரும்பல, ஸோ.. உனக்கு ஒரு மாசம் டைம் தரேன், அதுக்குள்ள நீயே உன் ப்ராப்லத்தை ஸால்வ் பண்ணிடனும்.. ஒன் மன்த்துக்குள்ள உன்னால சால்வ் முடியலனா உன் பிரச்சனை என்னனு உடனே என்கிட்ட சொல்லனும்.. சரியா?” என்றான் கட்டளையாக.
“ஒரு மாசத்துலயா?” என்றாள் பாவமாக.
“ஒரு மாசத்துக்குள்ள உன்னால சால்வ் பண்ண முடியலனா என்கிட்ட விசயத்தை சொல்றதுக்கு இந்த டைம் போதாதா?” என்றான் கோபமாக.
“ம்..” என்றாள் அரைமனதாக.
மங்கையின் முகபாவனை பாவமாக இருக்க.. “பத்தாவது படிக்கிற வரைக்கும், காலைல எழுப்பிவிட, டிபன் ஊட்டிவிட, லன்ச் பேக் பண்ண, உனக்கு ஷுஸ் எடுத்து கொடுக்கனு உன்னை ஸ்கூல் கிளப்பறதுக்கே நாலு பேர் வேலை செய்யனும்..
அப்பா இறக்கும்வரை அம்மாப்பா நிழல்லையே வளர்ந்த நீ.. அவர் இறந்ததுக்கப்புறம் உனக்கு பிடிக்கலன்னாலும் அம்மா சொன்னாங்கனு ஆறு வருசமா ஹாஸ்டல்லையே தங்கி படிச்சது, அத்தனை வசதி வாய்ப்போடவும் அதிகாரத்தோடவும் வளந்ததெல்லாம் மறந்து, சமத்தா வேலைக்கு போய்வரது, உன் வேலையை நீயே செய்துட்டிருக்க என் தங்கைதான் எனக்கு ரோல் மாடல்..
காலேஜ் முடிக்கிறவரைக்கும் அம்மாப்பா பேச்சு கேட்டு நல்ல பையனா வளர்ந்திருந்தாலும், ஒரு வயசுக்கப்புறம்.. என் தங்கையோட நேர்மை, ரோஷம்லாம்தான் என்னை எந்த தப்பும் செய்யவிடாம அக்மார்க் நல்லபையனா இருபத்திஒன்பது வயசு வரைக்கும் கொண்டு வந்திருக்கு..
அப்படிபட்ட தங்கை நிச்சயம் தப்பா எதையும் செய்திருக்கமாட்டா, இனியும் செய்யமாட்டான்ற நம்பிக்கை எனக்கு நிறைய இருக்கு.. ஸோ.. டென்ஷன் இல்லாம எப்பவும் போல நிமிர்வா இரு..” என ஊக்கமளித்து.. “வா அம்மாகிட்ட போலாம்..” என அழைத்து வந்தான்.
இரண்டு நாள் முடிந்திருக்க.. அறிவு.. “ம்மா இன்னைக்கு தாத்தா பாட்டிய பார்க்க போலாமா?” என்றான்.
“போலாம் அறிவு.. அப்படியே நம்மூர் பக்கத்து ஊருல ஒரு பொண்ணு சொல்லியிருக்காங்க, நாளைக்கே பொண்ணு பார்க்க போலாம்.” என்றார் ஆர்வமாக.
“ஓ.கே.. இரண்டு பேரும் சீக்கிரம் ரெடியாகுங்க போலாம்.” என்றான்.
“அறிவு.. எனக்கு ஹாஸ்பிட்டல் போகனும்.” என்றாள் மங்கை.
தங்கையை முறைக்க.. “இல்ல அறிவு.. குழந்தைங்க டாக்டரை பார்க்கத்தான் நிறைய கூட்டம் வரும்.. நான் இல்லனா கொஞ்சம் கஷ்டம்.” என்றாள் குரலிறங்கி.
“நான் இந்தியாவுல இருக்கும்வரை நீ வேலைக்கு போக கூடாது.. டாக்டர் ஒத்துக்கலைன்னா வேலையை ரிசைன் பண்ணு..”
“அறிவு..” என தயங்க.. “நாளைக்கு பொண்ணு பார்க்க போலாம்னு அம்மா சொல்றாங்க, நீ இல்லாம எப்படி? பொண்ணு எனக்கு சூட் ஆவாளானு எனக்கு ஹெல்ப் பண்ண நீ வேணும்.. நீயும் வரதுனா பொண்ணு பார்ப்பேன், இல்ல கல்யாணத்தை தள்ளி வச்சிடுவேன்.” என்றான் கோபமாக.
“அறிவு..” என பதறிய தவமணி.. “நீயும் கல்யாணம் பண்ணிக்கமாட்ட, என் மகனையும் பண்ணவிடமாட்டியா? இருபது நாள்தான் இருக்க போறான், அதுக்குள்ள பொண்ணை பார்த்தாதான ஆச்சு?” என்றார் கோபமாக.
“சரிம்மா.. நான் டாக்டருக்கு போன் செய்து சொல்லிடறேன்.” என மொபைலை எடுக்க போக, “எல்லாம் நேத்தே சொல்லிட்டேன்.” என்றான் அறிவு.
“எப்போ?” என இவள் அதிர்வாக..
“காலைல நீ குளிச்சிட்டிருக்கும்போது கால் வந்தது.. ஆறு வருசம் கழிச்சி இந்தியா வந்திருக்கேன், இருபது நாள்தான் இந்தியாவுல இருக்கப்போறேன், அதுவரை மங்கை வேலைக்கு வரமாட்டானு சொன்னேன்.. டாக்டரும் ஓ.கே சொல்லிட்டார்.” என்றான் சிரிப்போடு.
“உன்ன..” என அறிவின் முதுகில் செல்லமாய் குத்தியவள்.. அண்ணனிற்கு பெண்பார்க்கும் ஆவலில்.. “சரி கிளம்பலாம்.” என்றாள் உற்சாகத்தோடு. ஒருமணி நேரத்தில் கிளம்பினர்.
கணவர் இறப்பிற்கு பின் மாமனார் மாமியாரும் ஒருவர் பின் ஒருவராக இறந்திட, வருடம் இருமுறை அவர்கள் இறந்த நாளன்று பெரியவர்களை வணங்க மட்டுமே கணவன் வீட்டிற்கு செல்வார் தவமணி.
ஏனோ தானும் மங்கையும் வாழ்ந்த வீட்டை பார்க்கும் ஆவல் வர.. “ம்மா.. நம்ம வீட்டுக்கு போய்ட்டு தாத்தா பாட்டியை பார்க்க போலாமா?” என்றான் அறிவு.
“வேணாம் அறிவு.. அங்க போனாலே இன்ஸ்பெக்டர் பையனுக்கு இன்னும் கல்யாணம் ஆகலையானு சிலரும்.. எப்படியாகும்? இவங்களுக்கு பொண்ணு கொடுக்கும் தைரியம் யாருக்கிருக்கு? அப்பன் ரத்தத்துல கொஞ்சம் கூடவா மகன் உடம்புல ஓடாது? பொண்ணை கொடுத்துட்டு யார் அவஸ்த்தை படறதுன்னு பலபேர் பலமாதிரி பேசுவாங்க..
ஆறு வருசம் கழிச்சி வந்திருக்க.. திரும்பவும் மனக்கசப்போட போக வேண்டாம்.. சந்தோசமா பொண்ணு பார்க்கறோம்.. பேசி முடிக்கிறோம், அடுத்த முறை நீ வரும்போது கல்யாணத்தை ஜாம்ஜாம்னு நடத்தறோம்.” என்றார் உற்சாகமாக.