சிரிப்போடே சரியென்பதாய் தலையசைத்தான். ஆறு வருடத்தில் மங்கையும் சிலமுறைதான் வந்திருக்கிறாள் என்பதால், வீட்டிற்கு வந்ததும், தாத்தாபாட்டியின் பேரன் பேத்திக்கான விசாரிப்புகளும், திருமணப்பேச்சுக்களும் முடிவில்லாமல் நீண்டுகொண்டே போனது.
இரவு பத்து மணி ஆகவும்.. “ம்மா நாளைக்கு பொண்ணு பார்க்க போகனும், அவனை தூங்க விடுங்க..” என தவமணி அதட்டிய பின்னரே அனைவரும் உறங்கச் சென்றனர்.
தவமணி, தன் தாத்தா பாட்டியின் வற்புறுத்தலால் நீண்ட வருடங்களுக்கு பிறகு நன்றாக உடுத்தி தன்னை அலங்கரித்துக்கொண்டாள் மங்கை.
தரகர் ஐந்து பெண்களின் படங்களை காட்ட, அதில் தவமணி தனக்கு பிடித்த பெண்ணின் புகைப்படத்தை மகனிடம் காட்டினார். நல்ல லட்சணத்தோடிருந்த ஆராதனாவை அறிவுக்கும் பிடித்திட, இந்த பொண்ணையே பார்க்கலாம்.. பொண்ணுக்கு என்னை பிடிச்சிருந்தா பேசி முடிச்சிடுங்க.. என்றிருந்தான்.
இதோ கிளம்பி பெண்வீட்டிற்கு வந்திருந்தனர். ஆராதனா டீ கொடுக்கவும்.. “நிமிர்ந்து என் அண்ணனை பாருங்க ஆராதனா, அப்போதான மாப்பிள்ளையை பிடிச்சிருக்கா இல்லையானு சொல்ல முடியும்.?” என்றாள் மங்கை.
“வாலு..” என செல்லமாய் அதட்டினாலும், ஆராதனாவை தன்னை பார்க்க வைத்த மங்கையிடம்.. “இதுக்கு உனக்கு ஸ்பெஷல் ட்ரீட் இருக்கு..” என்றான் உல்லாசமாக.
ஆராதனா தனியே போய் நின்றிட.. “ம்மா.. எனக்கு ஆராதனாவை ரொம்ப பிடிச்சிருக்கு.. அங்க கேட்டுட்டு சொல்லுங்க.” என்றான் அவளையே பார்த்தபடி.
வெக்கச் சிரிப்பில் தன் சம்மதத்தை ஆராதனா தெரிவிக்க.. ஆராதனாவிடம்.. “ஃப்யூச்சர்ல இந்தியாவுல செட்டில் ஆகுற ப்ளான்தான்.. ஆனா இப்போதைக்கு ஃபாரின்லதான் இருப்பேன், எத்தனை வருசம் இருப்பேனும் உறுதியா சொல்ல முடியாது, கல்யாணத்துக்கப்புறம் நீயும் என்னோட வந்திடனும்.. யோசிச்சிக்கோ.” என்றான் நேரடியாக.
ஆராதனா அன்னையை பார்க்க.. “அம்மா நேத்தே எல்லாம் சொல்லிட்டாங்கப்பா. என் பொண்ணும் நேத்தே சம்மதம் சொல்லிட்டா, எங்களுக்கும் சம்மதம்.. எங்கயிருந்தாலும் சந்தோசமா இருந்தா போதும்.” என்றார்.
ஆராதனாவை மங்கைக்கும் பிடித்திட, ஒரே நாளில் தன் அண்ணனிற்கு பெண் கிடைத்த சந்தோசத்தில்.. “ஓய்.. தனியா பேசலாம் நான் ஒத்துக்கமாட்டேன்.” என வம்பிளுத்தாள் சிரிப்போடு.
“தனியா பேசுறதெல்லாம் அந்தகாலம்..” என தங்கையிடம் சொன்னவன்.. தன் கையிலிருந்த மோதிரத்தை கழற்றி ஆராதனாவின் கையில் அணிவித்தான்.
அறிவின் சட்டென்ற செயலில் அனைவரும் சொல்வதறியாது தடுமாற.. “அறிவு.. இதெல்லாம் நல்லநாள் பார்த்து பெரியவங்க முன்ன போடனும்டா..” என தவமணி அங்கலாய்க்க..
அறிவு.. “பெரியவங்க முன்ன பெரிய நகையா போட்டுக்கலாம்மா.. ஃபர்ஸ்ட் டைம் பார்த்ததும் என்னை பிடிச்சிருக்குனு சொன்னதோட, பெத்தவங்களை பிரிஞ்சு என்னோட ஃபாரின்ல செட்டில் ஆகவும் சம்மதிச்சிருக்கா..
இது எவ்வளோ பெரிய விசயம்? பொண்ணுங்களுக்கு மட்டும்தான் இந்த கட்ஸ் இருக்கு.. அதுக்கே எதாவது ப்ரஸண்ட் பண்ணனும்ல? அதான் மோதிரம் போட்டேன்.” என விளக்கமளித்து..
ஆராதனாவிடம்.. “என்கிட்ட பேசனும், எதாவது கேட்கனும்னு தோணினா என் பயோடேட்டாவுல இருக்க நம்பருக்கு கால் பண்ணு.. அதான் என் நம்பர்..” என்றவன்.. “கிளம்பலாமாம்மா?” என்றான் அன்னையிடம்.
நீயா மூன்று வருடமாக திருமணம் வேணாம் என சொன்னது என தவமணி ஆச்சர்யமாய் பார்க்க.. “ம்மா.. இப்படி பார்த்து என்னை வெக்கப்பட வைக்காத.. வா போலாம். தாத்தா பாட்டி தனியா இருப்பாங்க.” என்றவன் வருங்கால மாமனார் மாமியாரிடம் தலையசைத்து விடைபெற்று, தன் தங்கையின் கையை பிடித்திழுத்தவாறு வெளியேறினான்.
“அறிவு இன்னும் பதினைஞ்சு நாள்தான் இங்க இருப்பான், இந்த இரண்டு வாரத்துல எந்த நாள் நாங்க வரதுனு போன் பண்ணுங்க.. பெரியவங்களோட வந்து உறுதி பண்ணிக்கறோம்..” என சம்மந்தியிடம் சந்தோசத்தோடு விடைபெற்று, ஆராதனாவிடம்.. “நிச்சயம் பண்ண வர அன்னைக்கு நாம நிறைய பேசலாம்.” என்று வெளியேறினார்.
அடுத்து வந்த நான்காம் நாளே நல்லநாள் என ஆராதனாவின் தந்தை சொல்ல, தவமணியின் தாய் வழி சொந்தங்கள் ஐம்பது பேர்வரை சென்று ஆராதனாவை அறிவுக்கரசுவிற்கு நிச்சயம் செய்து வந்தனர்.
அடுத்து வந்த வாரமும் அறிவும், மங்கையும் அன்னையோடே இருக்க, இப்படி திடீரென மகன் வருவான், திருமணத்திற்கு சம்மதம் சொல்வான், ஒரே நாளில் பெண் அமையும் என கனவிலும் நினைத்துப் பார்த்திராத தவமணி பெருமகிழ்ச்சியில் இருந்தார்.
தினமும் அறிவு ஆராதனாவோடு போனில் பேச, தனக்காக திருமணம் செய்யவில்லை, உண்மையில் மகனுக்கு ஆராதனாவை பிடித்திருக்கிறது என்ற சந்தோசமும் சேர்ந்துகொள்ள, மகன் மகளுக்கு பிடித்ததை செய்து கொடுத்து ஏழு நாட்களையும் ஏகாந்தமாய் கழித்தனர்.
“ம்மா.. இன்னைக்கு சென்னைக்கு கிளம்பறேன், நாளைக்கு சென்னையில காலேஜ்மேட் இரண்டுபேரை பார்க்கனும், நாளை மறுநாள் கிளம்பறேன்.” என்றான் அறிவு.
“அறிவு.. திரும்ப எப்ப வருவ?” என கண்கலங்கினார் தவமணி.
மகனின் பேச்சை சந்தோசமாய் ஆமேதித்த தவமணி.. “உன் தங்கைகிட்ட பேச சொன்னனே.. எதாவது வாய திறந்தாளா?” என்றார்.
“நீ நினைக்கிற மாதிரி மங்கை யாரையும் லவ் பண்ணல, ஆனா கல்யாணத்துக்கு இரண்டு மாசம் டைம் கேட்டுருக்கா, அதனால நான் சொல்ற வரைக்கும் மங்கையை கல்யாணத்துக்கு வற்புறுத்தாதிங்க..” என்றான்.
சரியென்பதாய் தவமணி தலையசைக்க.. அன்று மாலை மங்கையும் அறிவும் சென்னை கிளம்பினர். சென்னை வந்தும், எந்த பிரச்சனையானாலும் உன்னால ஃபேஸ் பண்ண முடியும்னு நான் நம்பறேன், ஒருவேளை முடியாத பட்சத்துல எனக்கு கால் பண்ணு.. ஓவர் கான்ஃபிடன்ஸ்ல பிரச்சனையை பெருசாக்கிக்காத என தங்கைக்கு எடுத்துரைத்து அடுத்த நாள் கிளம்பினான் அறிவுக்கரசு. **** ****** *****
அறிவு சென்று ஒரு வாரம் முடிந்திருக்க, என்ன யோசித்தும் குழந்தை விசயத்தில் மூளைக்கு எட்டிய தூரம்வரை எந்த தீர்வும் மங்கைக்கு தோணாமல் போக, அதீத மனஉளைச்சலில் இருந்தாள்.
மூன்று நாட்களுக்கு முன் அமெரிக்கா சென்றிருந்த தேவேஷ் வந்திருக்க, இன்னொரு பெண் வந்தால் குழந்தை மீது பாசம் காட்டமாட்டாள் என கற்பகத்திடம் பேசிப்பார்ப்போமா என யோசித்தவள்.. ரொம்ப டையர்டா இருப்பாங்க, இரண்டு நாள் போகட்டும் என நினைத்திருந்தாள்.
இரண்டு நாள் கழித்து பேச நினைத்தவளுக்கு எப்படி ஆரம்பிப்பதென தெரியாமல் போக யோசனையோடே மேலும் ஒரு வாரத்தை கடத்தியிருந்தாள்.
இன்று ஞாயிற்று கிழமையாதலால் மங்கைக்கு விடுமுறைதான். ஆனால் தேவேஷ் வீட்டிலிருப்பானே என யோசித்தபடி பால்கனியில் வந்து நிற்க, தேவேஷ் வெளியே கிளம்புவது தெரிய.. இதுதான் சமயம் என கிளம்பினாள் தேவேஷ் வீட்டிற்கு.
“ஆன்ட்டி..” என மங்கை குரல் கொடுக்க.. “மங்கை.. வா..வா.. என்ன ஆச்சர்யம்?” என இன்முகத்தோடு வரவேற்றார் கற்பகம்.
உள்ளே வந்த மங்கை அமைதியாக இருக்க.. “நானே வரனும்னு நினைச்சேன் மங்கை, நீ வீட்டுல இருக்க நேரம் இவன் தூக்க நேரமா போய்டுது, அதான் வரமுடியல.. உங்கண்ணன் கிளம்பிட்டானா? அம்மா நல்லாயிருக்காங்களா?” என விசாரித்தார்.
“எல்லாம் நல்லாயிருக்காங்க, அமெரிக்கா பயணம் உங்களுக்கு எப்படி போனுச்சு?” என்றாள்.
“நல்லகாலம் போனேன் மங்கை.. ஷர்மி இறந்ததுக்கப்புறம் இந்த பதினைஞ்சு நாள்தான் என் மகன் பேரனோடவும் என்னோடவும் சந்தோசமா இருந்தான்.
என் மகன் பெரிய புத்திசாலிபோல, அங்க அவனுக்கு என்ன மரியாதை தெரியுமா?” என மகனின் பெருமையை சொல்லி,
“எங்கண்ணனுக்கு பொண்ணு முடிவாகிடுச்சு ஆன்ட்டி.. எனக்கு பிடிச்ச மாதிரி இன்னும் மாப்பிள்ளை அமையல.” என்றாள்.
“உன் குணத்துக்கு தங்கமான பையனா கிடைப்பான்..” என வாழ்த்தி.. “ஹ்ம்.. என் மகனுக்கும் பார்க்க ஆரம்பிக்கனும், அதுக்கு முன்ன அவன்கிட்ட இன்னொரு கல்யாணம் எதுக்குனு புரிய வைக்கனும்.. அதுக்கு நான் சரிப்பட மாட்டேன், என் பொண்ணுங்களை வரவச்சிதான் பேசனும்.” என்றார் வாடிய முகத்தோடு.
மங்கையின் முகம் இறுகிட.. “என்ன மங்கை அமைதியாகிட்ட? குழந்தையை காணோம்னு யோசிக்கிறியா? இப்போதான் தூங்கினான். தூக்கத்துல எழுப்பினா அழுதுட்டே இருப்பான், சாயங்காலம் முழிச்சிட்டிருக்கும்போது வீட்டுக்கு தூக்கிட்டு வரேன்.” என்றார்.
“உங்க பொண்ணுங்க சொன்னா உங்க மகன் இன்னொரு கல்யாணம் செய்துக்குவாரா ஆன்ட்டி?” என்றாள்.
மங்கையின் இறுகிய குரலை அறியாத கற்பகம்.. “ஆரம்பத்துல ஒத்துக்கமாட்டான்தான்.. எப்படியாவது பேசிதான் சம்மதிக்க வைக்கனும்.. காலம் எங்கையோ கிடக்கு, அப்படியே விட்டுட முடியுமா?” என்றார் மகனின் நினைவில்.
“வரவங்க குழந்தையை சரியா கவனிக்லனா?” என்றாள்.
“நானெதுக்கு மங்கை இருக்கேன்? என் பேரனை நான் பார்த்துபேன்..” என்றார்.
“ஆக.. இன்னொரு கல்யாணம் செய்தே தீருவிங்க.. அப்படித்தான?” என்றாள்.
இம்முறை மங்கையின் குரல் மாற்றம் புரிய.. “பொண்டாட்டி இருக்கும்வரை அவளுக்கு எந்த குறையும் இல்லாமதான் தேவா பார்த்துக்கிட்டான், எதோ விதி வந்து போயிட்டா, அதுக்கா என் மகனை இப்படியே விட்டுட முடியுமா?
பொண்டாட்டியை இழந்து தனியா நிக்குற வயசா இது? ஒரு பெத்த தாயா என் மனசு படுற வேதனை எனக்குத்தான் தெரியும்.” என்றார் வேதனையாக.
ஓ.. நானில்லாத நேரம் வீட்டுக்கு வர அளவுக்கு அம்மா இடம் கொடுத்திருக்கிறார்ளா? தன்னைப் பற்றி இவளிடம் எதற்கு சொல்ல வேண்டும் என்ற கோபத்தில் தேவேஷ் நின்றிருக்க,
தேவேஷ் வந்ததையறியாத கற்பகம் மகனின் எதிர்கால வேதனையிலிருக்க, கற்பகத்தின் கூற்றை ஏற்க முடியாத மங்கைக்கும் தேவேஷ் வந்தது தெரியாமல் போக.. “உங்க மகனுக்கு இன்னொரு கல்யாணம் செய்து வச்சா, உங்க பேரன் உங்களோட இருக்கமாட்டான் ஆன்ட்டி.” என்றாள் திடமாக.
“என்ன மங்கை சொல்ற?” என கற்பகம் பேரதிர்ச்சியை காட்ட, “ஆமாம் ஆன்ட்டி.. உண்மையைதான் சொல்றேன்.. உங்க மகனுக்கு இன்னொரு கல்யாணம் செய்து வச்சா, உங்க பேரன் அவனோட அம்மாகிட்ட போய்டுவான்.” என்க.. “ஏய்..” என அதீத கோபத்தோடு வந்த தேவேஷ் மங்கையை முறைக்க..