“மங்கை இப்படி பேசுற பொண்ணே இல்ல தேவா.. ஏன் இப்படி பேசுனானே தெரியல? உனக்கு கல்யாணம் செய்தா குழந்தையை யார் வந்து கேட்பா?” என மங்கை பேசியதன் அர்த்தம் புரியாமல் பதட்டத்தோடு மகனை வினவினார் கற்பகம்.
“அவ விசயத்தை நான் பேசிக்கிறேன், எனக்கு கல்யாணம் செய்வேன்னு நீ எதுக்கு அவகிட்ட சொல்லிட்டிருந்த? இப்படி எண்ணம்வேற இருக்கா?” என தீயாய் முறைத்தான் அன்னையை.
திருமணம் பேசும் வாய்ப்பை நழுவ விடாமல்.. “ஆமா.. ஏன் என் எண்ணத்துல என்ன தப்பிருக்கு?” என்றார் நிமிர்வாக.
“ம்மா..” என்றான் பல்லை கடித்தபடி.
“உனக்கின்னும் முப்பதே ஆகல, கல்யாணம் கட்டிக்கிற வயசுல பொண்டாட்டியை பறிகொடுத்துட்டிருக்க மகனை அப்படியே விட்டுட முடியுமா? ஒரு பெத்தவளா என் இடத்துலயிருந்து யோசிச்சாதான் என் வேதனை புரியும்..” என்றார் வேதனையாக.
“இதே நான் செத்து ஷர்மி உயிரோடயிருந்திருந்தா அவளுக்காக இப்படி யோசிச்சிருப்பியா? அவளுக்கும் எனக்கும் ஒரே வயசுதான?” என்றான் கோபமாக.
சிறிதும் அசராமல்.. “நானா யோசிச்சிருப்பேனா தெரியாது.. ஆனா நான் உன் எதிர்காலத்தைப்பத்தி நினைக்கிற மாதிரி, சம்மந்தி மகளோட எதிர்காலத்தை நினைச்சி இன்னொரு கல்யாணத்துக்கு ஷர்மிளாவை வற்புறுத்துனாங்கனா, என் ஆதரவு கண்டிப்பா என் சம்மந்திக்குத்தான்..” என்றார் உண்மையாக.
அன்னையின் பேச்சுக்கு பதில் பேச முடியாமல் உள்ளே சென்றவன் அதீத கோபத்தோடு தலையில் கைவைத்து அமர்ந்துகொண்டான்.
அன்று வாடகைத்தாயைப் பற்றி பேசும்போது டோனர் யாரென தெரியாது, அதை அவங்களும் சொல்லிக்க விரும்பலனுதான ஷர்மிளா சொன்னா? இப்போ எப்படி இவ ஜெனடிக் அம்மாகிட்ட குழந்தை போயிடும்னு சொல்றா? அப்போ டோனர் யாருன்னு ஷர்மிளாக்கு தெரிஞ்சிருந்தும் என்கிட்ட மறைச்சிருக்கா.. என தேவேஷின் கோபம் தற்போது ஷர்மிளா மீது திரும்பியது.
அரைமணி நேரம் இறுக்கமாக அமர்ந்திருந்தவன்.. நான் கல்யாணம் செய்துக்கிட்டா குழந்தை ஜெனட்டிக் அம்மாகிட்ட போய்டும்னு இவ சொல்றானா.. அப்போ டோனர் யார்னு இவளுக்கும் தெரிஞ்சிருக்கனும்.. ஆனாலும் இத்தனை பெரிய ரகசியத்தை இவளோடு பகிர்ந்துகொள்ளும் அளவிற்கு ஷர்மிளா பழகமாட்டாளே.. என யோசித்தவன் மூளையில் மின்னலடிக்க..
வேகமாக மருத்துவமணை ஃபைலை எடுத்தான். அதில், டோனர் பெயர், விலாசம், மொபைல் எண் என எதுவும் இல்லை, ஆனால் டோனர் ஐ கலர், ஹேர் கலர், ஸ்கின் கலர், ஹைட், வெயிட், படிப்பு என மற்ற மருத்துவ தகவல்கள் இருக்க, அனைத்தும் மங்கையோடு ஒத்திருக்கவே.. டோனர் இவளாய் இருக்குமோ? அதனால்தான் குழந்தை மீது இத்தனை சிரத்தை எடுக்கிறாளோ என பெரிதாய் அதிர்ந்தான்.
ஆனாலும் திருமணமாகாத பெண்கள் சினைமுட்டை தானம் செய்யலாமா? என்றும் யோசிக்கலானான்.
கற்பகம் உள்ளே வந்தார்.. தலைமீது கைவைத்து அமர்ந்திருந்த மகனிடம் பேசத் தயங்கி நின்றிருக்க, குழந்தையின்.. “ப்ரூ..” என்ற சத்தத்தில் முகம் நிமிர்த்தினான்.
திருமணம் பற்றி பேசியதால் சண்டையிடுவான் என கற்பகம் நினைத்திருக்க, குழந்தையைப் பார்த்ததும்.. “ம்மா.. குழந்தை நம்மளை விட்டு எங்கையும் போகமாட்டான், அவ பேசுனதை நினைச்சேது நீ பயந்துட்டு இருக்காத..” என்றான் இலகுவாக.
“அதெல்லாம் நீ விடமாட்டனு எனக்கு தெரியும் தேவா.. ஆனா மங்கை எதுக்கு அப்படி பேசினா? நீ கல்யாணம் பண்ணிக்கிறதுல அவளுக்கு என்ன கஷ்டம்? இப்படி குரூரமா நினைக்கிற புள்ளையும் இல்ல தேவா.. இன்னைக்கு மாதிரி என்னைக்குமே என்கிட்ட பேசினதில்ல.. எத்தனை சிரிச்சி பேசினாலும் மரியாதையாதான் பழகுவா.” என்றார் குழப்பத்தோடும் கவலையோடும்.
உண்மையில் தற்போது மங்கை மீதிருந்த கோபம் தேவாவிற்கு குறைந்திருந்தது. குழந்தை பிறந்த அன்று மருத்துவமணையில் இருந்தது, அவ்வப்போது அன்னைக்கு குழந்தைக்கான மாத்திரைப் பற்றி விளக்குவது என நினைத்தவன்..
தான் திருமணம் செய்துகொண்டால் குழந்தையின் எதிர்காலம் கேள்வியாகிடும் என்றுதான் பைத்தியம்போல் பிதற்றி சென்றிருக்கிறாள் என நினைத்தபடி வெளியே வந்தவன் அவளின் வீட்டைப் பார்க்க.. வீடு பூட்டியிருந்தது.
மகன் மங்கை வீட்டை நோட்டமிடவும் பயந்த கற்பகம்.. “மங்கைகிட்டயேது கோபமா பேசிடாத தேவா.. என் மகன் விசயத்துல தலையிடறது தப்பு, இனி இப்படி பேசக்கூடாதுனு நானே அவகிட்ட பொறுமையா எடுத்து சொல்லிக்கிறேன்.. அவங்கம்மா எனக்கு நல்ல பழக்கம், என்னை நம்பித்தான் அவங்க நிம்மதியா இருக்காங்க.” என்றார்.
“என்ன பேசப்போற? என் மகனுக்கு இன்னொரு கல்யாணம் செய்து வைப்பேன்.. நீ தலையிடாதனு சொல்லுவியா?” என முறைத்தவன்.. “நீ பேசினாலும் அவ பிரச்சனை செய்யத்தான் போறா..” என கடுகடுத்து..
“எனக்கு கல்யாணம் செய்யும் கனவை மறந்துடு.. இந்த ஜென்மத்துல அது நடக்காது.” என மிரட்டி.. “இனி அவகிட்ட பழகாத, குழந்தை விசயத்துல திரும்ப எதாவது பிரச்சனை செய்தாள்னா என்கிட்ட சொல்லு, அவகிட்ட நான் பேசறேன்..” என்றான்.
தேவாவிற்கு மங்கையோடு சண்டையிடுவதில் நாட்டமில்லை என்பதோடு, குழந்தையின் ஜெனடிக் அம்மா ஷர்மிளா இல்லை என வெளியே தெரிவதில் விருப்பமில்லை.. எனவே மங்கையிடம் தன் அன்னை சொல்வதுபோல் நான் திருமணம் செய்துகொள்ள போவதில்லை என பொறுமையாகவே எடுத்துரைக்கலாம் என முடிவெடுத்தான்.
ஒரு வாரம் கடந்திருக்க, “மங்கை முன்னமாதிரி என்கிட்ட பேசறதில்லைங்க, போன் செய்தாலும் எடுக்கமாட்டுக்கிறா..” என மகன் திருமணம் குறித்து மங்கை பேசியதை வருத்தத்தோடு தவமணியிடம் பகிர்ந்தார் கற்பகம்.
“அச்சோ..” என தலையில் தட்டிக்கொண்ட தவமணி.. “என் மகளுக்காக நான் உங்ககிட்ட மன்னிப்பு கேட்டுக்கிறேன் கற்கம்மா..” என வருத்தத்தோடு சொல்லி, “இன்னொருத்தி வந்துட்டா குழந்தையை கொடுமைப் படுத்துவானுதான் அப்படி பேசியிருப்பா..
ஏனோ தெரியல, உங்க பேரன்மேல ரொம்ப பாசமா இருக்கா, அதுக்காக உங்க மகன் விசயத்துல தலையிடறது சுத்த பைத்தியக்காரத்தனம், அதுக்கு உனக்கு உரிமையும் இல்லனு என் பொண்ணுக்கு புரிய வைக்கிறேன்.” என்றார் கெஞ்சலாக.
“சரிங்க, நான் வைக்கிறேன்.” என இணைப்பை துண்டிக்க அங்கே தேவேஷ் நின்றிருந்தான்.
“மங்கை பேசினதுக்கு அவங்கம்மா என்ன செய்வாங்க?” என வருந்தி, “அவங்களுக்கு மங்கை இப்படி பேசினது தெரிஞ்சாதான மகளுக்கு புத்திமதி சொல்வாங்க.. அதான் சொன்னேன்.” என்றார்.
“இதை சொல்லனும்னா அன்னைக்கேயில்ல சொல்லியிருப்ப? ஒரு வாரம் கழிச்சி திரும்ப எதுக்கு இந்த பேச்சு வந்தது? நான் இல்லாதப்போ திரும்பவும் வந்து பிரச்சனை செய்தாளா?” என்றான் சந்தேகப் பார்வையோடு.
“ரொம்ப நல்லது.” என பாராட்டி, “அவ உன்கிட்ட பேசவிரும்பலையில்ல? இனியாவது அவகிட்டயிருந்து தள்ளியிரு.” என எடுத்துரைத்து, மகனை வாங்கியவன் மாடிக்கு சென்றான்.
கடந்த இரண்டு மாதங்களாக.. தன் தலைமீது அமரவைத்து தேவேஷ் நடைபயில்வதால், உயர அமர்ந்திருக்கும் குழந்தை.. அவனின் பாஷையில் தந்தையிடம் தன் சந்தோசத்தை வெளிப்படுத்துவான்.
மகன் தன்னோடு பேசுவதில் அனைத்து மன பாரங்களையும் மறந்து மகனோடு லயித்திருப்பான் தேவேஷ். இன்றும் அதுபோல் இருக்க, பால்கனியில் நின்றபடி யாரிடமோ சண்டையிடுவது போன்று பேசிக்கொண்டிந்த மங்கையின் தோரணையில் தேவேஷின் சந்தோசம் பறிபோனது.
அன்னையிடம்தான் பேசுகிறாளோ என தேவேஷ் கீழிறங்க.. தந்தை கீழறங்குவதை விரும்பாத குழந்தை அழவே.. குழந்தையின் அழுகுரலில் மகன் வந்துவிட்டான் என கண்டுகொண்ட கற்பகம்.. “அப்புறம் பேசுறேன் கார்த்தி.” என இணைப்பை துண்டித்தார் அவசரமாக.
தேவேஷ் வெளியே எட்டிப்பார்க்க, பால்கனியில் நின்று பேசிக்கொண்டிருந்த மங்கையும் உள்ளே போயிருக்க, இன்று இதற்கு முடிவுகட்டியாக வேண்டுமென, “ம்மா.. இவனை பிடி, ஒரு சின்ன வேலை..” என குழந்தையை கொடுத்தவன்.. சாட்ஸ் மாற்றி லோயர் அணிந்து வெளியேறினான்.
உண்மையில் கற்பகம் தேவா திருமணம் குறித்து மங்கையின் அன்றைய செயலை மகளோடு பகிர்ந்துகொண்டிருந்தார். மங்கை அண்ணனிடம் பேசிக்கொண்டிருந்தாள். ஆனால் இவர்கள் இருவரும் சண்டையிட்டுக் கொள்வதாக நினைத்தான் தேவேஷ்.
மங்கை வீட்டிற்கு செல்ல விருப்பமில்லையென்றாலும், குழந்தையின் ஜெனடிக் அம்மா யாரென்ற விசயம் அன்னைக்கு தெரியாமலிருக்க, மங்கை வீட்டிற்கு செல்ல முடிவெடுத்து எதிர் வீட்டின் மாடிப்படிகளில் ஏற.. “ஏன் அறிவு இப்படி திட்டுற.? நான் அவ்வளோ கெட்ட பொண்ணா?” என கேட்டாள் அழுகையோடே.
எந்த சூழலில் ஓவம் டொனேட் செய்தேன் என்று அறிவுக்கரசிடம் மங்கை சொல்லியிருக்க.. “கெட்ட பொண்ணில்ல.. வடிகட்டின முட்டாள்.” என்றான் கோபமாக.
“அறிவு..” என கமற..
“எவ்வளோ பெரிய விசயத்தை அம்மாகிட்ட கூட சொல்லாம செய்வியா நீ? சரி ஆனதுதான் ஆச்சு, அங்க வந்தப்போ எத்தனை முறை உன் பிரச்சனை என்னனு கேட்டேன்.. சொன்னியா? இவ்வளோ பெரிய விசயத்தை மறைக்க எப்படி மனசு வந்தது?” என்றான் கோபத்தோடு.
பேச வார்த்தையின்றி மங்கை அழுதுகொண்டிருக்க.. “இப்பவும் மகனுக்கு கல்யாணம் செய்யக்கூடாதுனு தேவேஷ் அம்மாகிட்ட பிரச்சனை பண்ணிட்டு வந்து என்கிட்ட சொல்ற.. அதுவும் நானா போன் செய்ததுக்கப்புறம்.” என்றான் கடுப்பாக.
“ஷர்மிளாக்காக்கு இப்படி ஆகும்னு நான் நினைச்சே பார்க்கல அறிவு.. அவங்க உயிரோட இருந்திருந்தா குழந்தையை நல்லா பார்த்திருப்பாங்க, இப்படி பிரச்சனை வந்திருக்காது..” என்றாள் பாவமாக.
“அப்படியேனாலும் நீ கொடுத்தது தானம்.. தானம் கொடுத்ததை யாராவது திரும்ப கேட்பாங்களா?” என கடுகடுத்து..
“குழந்தையை பிரிக்கனும்ன்ற எண்ணம் எனக்கில்ல, ஆன்ட்டி அவங்க மகனுக்கு இன்னொரு கல்யாணம் செய்து வைப்பேனு சொல்றாங்க அறிவு.. வரவளுக்குனு ஒரு குழந்தை வந்துட்டா, அவளைப் பொறுத்தவரை என் குழந்தை தேவையில்லாதவனாகிடுவான்தானே..
இப்படி சூழல்ல நான் எப்படி கல்யாணம் செய்துட்டு நிம்மதியா இருக்க முடியும்? நிச்சயம் என்னால முடியாது அறிவு.. இதுக்கு என்ன பண்றதுனும் தெரியல..” என்றாள் கவலையோடு.
“முதல்ல அது உன் குழந்தை இல்லைன்றதை மனசுல வை. அவன் என் குழந்தை..” என கர்ஜித்தான் தேவேஷ்.
கம்பீரக் குரலோடு வாசலிலும் நிழலாடுவது புரிந்து சட்டென திரும்பினாள் மங்கை. அங்கே கோபத்தில் சிவப்பேறிய கண்களோடு நின்றிருந்தான் தேவேஷ்.
குழந்தை பற்றி கவலைகொள்ள வேணாம் என தன்மையாய் எடுத்துரைக்க வந்தவனுக்கு, மங்கையின் என் குழந்தை என்ற சொல்லில் கோபம் வர.. மங்கையை முறைத்தவாறு நின்றிருந்தான்.
“அறிவு.. நா..நான் அப்புறம் பேசுறேன்.” என இணைப்பை துண்டித்தவளுக்கு.. நிலைவாசலின் என்பது சதவிகித உயரத்தை ஆக்ரமித்தபடி நின்றிருந்த தேவேஷின் உயரமும், மாநிறம்தான் என்றபோதும் அவனின் காதும் மூக்கின் நுனியும் கோபத்தில் சிவந்திருக்க, அகன்ற கண்களின் முறைப்போடு தேவேஷ் நின்றிருந்த தோரணை பயத்தை வரவழைத்தபோதும்.. “இல்ல.. குழந்தை மேல எனக்கும் ரைட்ஸ் இருக்கு..” என்றாள் வரவழைத்த தைரியத்தோடு.
இவள்தான் டோனர் என தற்போது தெள்ளத்தெளிவாக.. “ஓ.கே.. உனக்கு ரைட்ஸ் இருக்குனே வச்சிப்போம், குழந்தையை என்கிட்டயிருந்து வாங்கிட்டு நீ கல்யாணம் செய்துகிட்டா, உன் புருசன் என் குழந்தையை பார்ப்பானானு உன்னைப்போல எனக்கும் யோசிக்க ரைட்ஸ் இருக்குல்ல?” என்றான் துளைக்கும் பார்வையோடு.
மங்கை அதிர்ந்து விழிவிரிக்க.. “இல்ல.. குழந்தையை என்கிட்டயிருந்து வாங்கிட்டு கல்யாணம் செய்துக்காமலே இருக்க போறியா? அதுக்கு உன் வீட்டுல சம்மதிப்பாங்களா?
ஒருவேளை உன் பிடிவாதத்துக்கு உங்க வீட்டுல உனக்கு கல்யாணம் செய்து வைக்காம இருந்தாலும், அக்கம் பக்கம் இருக்கவங்களும், உங்க சொந்தபந்தமும், குழந்தைக்கு அப்பா யாருன்னு கேட்டா, ஒவ்வொருத்தருக்கும் இவன் எப்படி பிறந்தானு விளக்கிட்டிருப்பியா?
நீ விளக்கினாலும் எல்லா காலகட்டத்துலயும் நீ சொல்றதையே மத்தவங்க நம்புவாங்கனு என்ன நிச்சயம்? கல்யாணமாகாத பொண்ணு ஒரு குழந்தைக்கு அம்மாவானு வேறமாதிரி யோசிச்சாங்கனா அது உனக்கும் அசிங்கம், எனக்கும் அசிங்கம்.. குழந்தை வளர்ந்த பின்ன அவனுக்கும் அசிங்கம்.. நான் சொல்றது புரியுதா?” என்றான் கோபத்தோடே.
உண்மையில் மங்கை இத்தனை விசயங்களை யோசிக்கவேயில்லை. தேவேஷ் விளக்கியதும் பயத்தில் உறைந்து நின்றிருக்க.. மங்கையின் முகமே அவளின் மனதை விளக்க.. தேவேஷின் கோபம் தன்போல் குறைந்தது.
“ஸீ.. உன்னோட சண்டை போட நான் வரல, எங்கம்மா சொல்றதை போல இன்னொரு கல்யாணம் கண்டிப்பா நான் செய்துக்கப்போறதில்ல..” என திடமாய் சொன்னவன்..
சற்றுமுன் போனில் அவளின் திருமணம் குறித்து அண்ணனோடு பேசியதை மனதில் வைத்து.. “என் குழந்தையை எனக்கு பார்த்துக்க தெரியும். ஸோ குழந்தைப்பத்தி கவலைப்படாம உன் வாழ்க்கையைப் பாரு.” என்றான் பொறுமையாக.
மங்கையின் முகம் பெருத்த நிம்மதியைத் தத்தெடுக்க.. அந்நிம்மதி சில நொடிதான் நிலைத்தது. அங்கே வந்த கற்பகத்தின் தோரணைப் பார்த்ததும் மீண்டும் பதட்டமானாள்.
தேவேஷ் பின்னே பார்க்க.. “உன்னை யாரு வரசொன்னா? நீ போ. நான் பேசிட்டு வரேன்.” என்றான் அன்னையிடம்.
தான் திருமணம் செய்துகொள்ள போவதில்லை என தேவேஷ் சொல்லும்போதுதான் கற்பகம் வந்தார். மகனின் வார்த்தையில் மங்கை முகத்தின் நிம்மதியை கண்டவருக்கு, ஆக தற்போதும் தன் மகனை திருமணம் செய்ய கூடாதென்றுதான் வற்புறுத்தியிருக்கிறாள், அதை சொல்ல இவள் யார் என்ற கோபத்தில் மங்கையை முறைத்தபடி நின்றிருந்தார்.
“என் மகனுக்கு கல்யாணம் செய்யக்கூடாதுனு சொல்ல நீ யாரு? இனி என் குடும்ப விசயத்துல தலையிட்ட அசிங்கமாகிடும் பார்த்துக்க.. இவளோட உனக்கென்ன பேச்சு? நீ வா தேவா.” என்றார் கோபமாக.
தேவேஷ்.. “ப்ச் ம்மா.. நீ போ நான் பேசிட்டு வரேன்..” என மீண்டும் அன்னையையே விரட்டவும்..
“யார் வீட்டுப் படியையும் மிதிக்காத என் மகன் உன் வீட்டுக்கு வந்திருக்கன்னா, வேற எதோ முக்கிய காரணமிருக்குனு புரியுது.. என்ன காரணமா இருந்தாலும் என் மகன் விசயத்துல தலையிடறதுக்கு உனக்கு எந்த உரிமையும் கிடையாது மங்கை. உங்கம்மா முகத்துக்காகவும், என் பேரன் பிறந்தப்ப நீ செய்த உதவிக்காகவும் ரொம்ப தன்மையா சொல்றேன்.
என் மகன் விசயத்துல தலையிட்டு நீயே உன் மரியாதையை குறைச்சிக்காத..” என வன்மையாய் எச்சரிக்க.. “நிஜமா கல்யாணம் செய்தே தீருவிங்களா ஆன்ட்டி.?” என்றாள் கமறலோடு.
“எங்கம்மா சொன்னாலும் கல்யாணம் செய்துக்கமாட்டேனு நான்தான் சொல்றேன்ல?” என மங்கையை அதட்டிய தேவேஷ்.. “ம்மா வா போலாம்..” என அன்னையின் கைப்பிடிக்க..
தான் அக்கம் பக்கம் பேசினாலே பிடிக்காது, இதில் தன் சொந்த விசயத்தில் மங்கை தலையிட்டும், தேவே தன்னை துரத்துவதில் குறியாய் இருக்கிறான் என்றால் என யோசிக்க.. தன் மகன் இத்தனை நிதானம் கொண்டவன் இல்லையே.. ஏதோ சொல்லி பணிய வைத்திருக்கிறாள் என முடிவிற்கு வந்த கற்பகம்.. “விடுடா என்னை..” என கையை உதறி.. “இப்பவும் தேவா உன்கிட்ட தன்மையா பேசிட்டிருக்கான்னா எதோ காரணம் இருக்கு…
ஆனா என்ன காரணமாயிருந்தாலும் என் முடிவுல மட்டும் மாற்றமே இல்ல.. இப்போ இல்லனாலும் இரண்டு மூனு வருசம் கழிச்சி கூட என் மகனுக்கு இன்னொரு கல்யாணம் செய்தேதான் தீருவேன்.. உன்னால ஆனதை பார்த்துக்கோ..” என உறுதியாய் சொல்லி..
“தம்மாத்துண்டு பிள்ளை நீ.. எனக்கே சவால் விடுறியா? வாழவேண்டிய பையனை அம்போனு விட்டுட்டு நானும் ஷர்மிளா மாதிரி போய்ட்டேனே என் கட்டை வேகுமா?” என அங்கலாய்த்தபடி கிளம்ப்பார்க்க..
“ஆன்ட்டி..” என கற்பகம் முன்னே போய் நின்றாள் தவிப்போடு.
கற்பகம் முகம் வெறுப்பை காண்பிக்க.. அறிவு கூறிய அறிவுரைகள், குழந்தை தன்னோடு இருந்தால் சந்திக்கக்கூடிய பின்விளைவுகளைப் பற்றி சற்றுமுன் தேவேஷ் விளக்கியது அனைத்தும் நினைத்துப்பார்த்து.. “உங்க மருமகளா வர என்னை செலக்ட் செய்விங்களா?” என்றாள்.
“ஏய்..மங்கை..” என கற்பகம் அதிர்வாக.. “லூசா நீ.. அப்படியே அறைஞ்சேனா..” என அதீத கோபத்தோடு கையை உயர்த்தினான் தேவேஷ்.