கற்பகம்.. “தேவா..” என பதறி மகனின் கையைப் பிடித்து இழுத்தவர், “சின்ன பொண்ணு, குழந்தை மேலஉள்ள அக்கறையில புரியாம பேசுறா, நீ போ, நான் மங்கைகிட்ட பேசிட்டு வரேன்..” என்றார் தணிவாக.
“அக்கம்பக்கம் யார்கிட்டயும் வச்சிக்காதனு சொன்னா கேக்குறியா? எல்லாம் உன்னாலதான், நீ இவளோட பழக்கம் வச்சிக்கவும்தான் ஷர்மிளாவும் பழகியிருப்பா..” என அன்னையை கடுமையாய் சாடியவன்..
மங்கையிடம்.. “உனக்கு சொல்லவேண்டியதெல்லாம் சொல்லிட்டேன், நான் கல்யாணம் செய்துக்குவேன், குழந்தை கஷ்டப்படுவானு உன் கற்பனைக்கெல்லாம் என்னால ரியாக்ட் பண்ணிட்டிருக்க முடியாது..
குழந்தைக்காக என்னை கல்யாணம் செய்து தியாகியாகலாம்னு வீண்முயற்சி செய்யாத.. அது நடக்கவே நடக்காது.. இனி எங்கம்மாவோட பேசுறதைப் பார்த்தேன்.. அவ்வளோதான்.!” என எச்சரித்து அன்னையோடு வீடு வந்தான் தேவேஷ்.
மங்கை தன்னை திருமணம் செய்துகொள்ள கேட்டதை நினைத்தவன்.. ஓவம் டொனேட் செய்ததிலேயே அவளின் உதவும் மனப்பான்மையை புரிய, அருகில் குடியிருப்பவளுக்கே இத்தனை பெரிய உதவி செய்திருப்பவள், தற்போது ஷர்மிளா இறந்திருக்கவும், குழந்தையின் எதிர்காலம் குறித்து மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறாள், அதனாலேயே தன்னை திருமணம் செய்ய சிறிதும் யோசிக்கமல் முடிவெடுத்திருக்கிறாள்..
தான் இங்கு இருந்தால் தன்னை திருமணம் செய்யும் எண்ணமும் வலுவாகும், ஆகவே வீட்டை காலி செய்திடலாம் என முடிவெடுத்தான்.
ஷர்மி இறந்த பின்னே திரும்பிய பக்கமெல்லாம் ஷர்மிளாவின் நினைவே கண்முன் தோன்ற, தனக்கே இப்படியென்றால் மகன் எத்தனை வேதனையடைவான் என மகன் நலன் குறித்து, அந்த மாதம் வாடகை வாங்க வந்த வீட்டு ஓனரிடம் வீட்டை காலி செய்யப்போவதாக கற்பகம் தெரிவித்தார்.
துக்கம் நடந்து ஒரு மாதம் கூட ஆகவில்லை, இப்போ காலி செய்தா யார் குடிவருவாங்க? ஒரு வருடமாவது ஆகாமல் காலி செய்யக்கூடாதென வீட்டு ஓனர் திட்டவட்டமாக கூற..
ஷர்மிளா இல்லையென்றாலும் அவளின் நினைவு இங்கே தவிர வேறு எங்கும் கிடைக்காதென.. அவரே காலி செய்ய சொன்னாலும் நான் இங்கேதான் இருப்பேன். என அன்னைக்கு சொல்லியிருந்தான் தேவேஷ்.
“ஆதரவில்லாம எத்தனை குழந்தைகள் இருக்காங்க.. அவங்கள்ல உனக்கு பிடிச்ச குழந்தையா பார்த்து தத்தெடுத்துக்கலாம்னு எத்தனை சொன்னேன்.? என் குழந்தையேதான் வேணும்னு பிடிவாதம் செய்து, டோனர்,ஸரோகேஸி என அனைத்தும் ஏற்பாடு செய்து, குழந்தை பிறந்ததும்..
டோனரை போல குழந்தையிருந்தா உன்மேல எனக்கு காதல் குறைஞ்சிடும்னு நீயா நினைச்சிட்டு, எனக்கும் தேவையில்லாத தொல்லைய இழுத்துவிட்டுட்டு நீ பாட்டுக்கு போய்ட்டியே.. இதுதான் காதலாடி? என மனைவியை நினைத்து வெறுப்பான தேவேஷ்..
உன்னோடு வாழ்ந்த நினைவுகளை கூட விட்டு வைக்காமல் வீட்டை காலி செய்யும் நிலைக்கு கொண்டு வந்துட்டியே என வேதனையடைந்தவன்.. தன் கம்பெனி அருகேயே குடிபெயர்ந்திடலாமா என யோசித்திருந்தான்.
மங்கையின் அதிரடியில் அதிர்ந்த கற்பகம், குழந்தை விசயத்தில் ஏன் இத்தனை சிரத்தை எடுக்கிறாள் என்ற யோசனை வர.. அரைமணி நேரம் வரை இருவரும் வெவ்வேறு சிந்தனையில் அமைதியாக இருந்தனர்.
வேலைசெய்யும் பெண்ணின் மேற்பார்வையில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தை அழ ஆரம்பிக்கவே.. அடடடே கண்ணா.. நீ வர காரணமானவளைத்தான் திட்டினேன்.. உன்னை ஒன்னும் சொல்லலைடா..
இனி நீதாண்டா என் வாழ்க்கை.. நீயும் என் மனசை புரிஞ்சிக்காம உடனே ரோசப்பட்டு அழுவியா? என மனதோடு பேசியபடி குழந்தையை தூக்கியவன்.. “என் பட்டுகண்ணா, சிங்கம்லாம் அழக்கூடாதுடா..” என எடுத்துரைக்க.. குழந்தை இன்னும் கத்தினான்.
மங்கையின் பேச்சிற்கு, தன்னிடம் சண்டையிடுவான் என கற்பகம் நினைத்திருக்க.. தற்போது குழந்தையிடம் இயல்பாய் பேசும் மகனை ஆச்சர்யமாய் பார்த்து.. “அழற குழந்தைக்கு இப்படிதான் சமாதனம் செய்வியா?” என மகனின் அறியாமை நினைத்து தலையில் தட்டிகொண்டவர்.. குழந்தையை தேவாவிடமிருந்து வாங்கி.. “உங்கப்பனுக்கு இன்னும் சமாதனமே செய்ய தெரியல, இதுல உன்னை அவனே பார்த்துப்பானாம்..” என்றார் கிண்டலாக.
தன்னை ஜாடை பேசிய அன்னையை தேவேஷ் முறைக்கவே.. “போடா.. போடா.. நீ முறைச்சி அஞ்சாறு ஆச்சு..” என அசால்ட்டாய் சொல்லி.. “நீ வாடா சஞ்சய்..” என குழந்தையோடு கிச்சன் செல்ல..
“ம்மா இதென்ன சஞ்சய்ங்கிற? பேரு யார் செலக்ட் பண்ணினது? என்கிட்ட சொல்லாம நீ எப்படி சஞ்சய்னு கூப்பிடலாம்?” என்றான் கோபமாக.
இதென்ன? மங்கை பேசினதுக்கு ஒரு வாரத்திற்காவது கச்சேரி களைகட்டும்னு பார்த்தா, என்னவோதான் பேரு வச்சதுக்கு பொங்கிட்டிருக்கான் என அதிசயமாய் நினைத்து.. “போன வெள்ளிகிழமை குழந்தைக்கு ஏழாவது மாசம் பிறக்குதேனு கோவில்க்கு போயிருந்தேன், குழந்தை பேர் கேட்டாங்க, இன்னும் வைக்கில, நீங்களே ஒரு நல்ல பேரா வைங்கன்னு சொல்லி ராசி நட்சத்திரத்தை சொன்னேன்..
சஞ்சய்னு பேர் வைங்க, இவன் ராசி நட்சத்திரத்துக்கு பொருத்தமா இருக்கும்னு ஐயர் சொன்னார். பேரு நல்லாயிருக்கவும் இரண்டு நாளா சஞ்சய்னுதான் கூப்பிடறேன்.. இந்த பேருக்கென்ன குறைச்சல்? உனக்கு பிடிக்கலனா பள்ளிகூடம் சேர்த்தும்போது பிடிச்சபேரா வச்சிக்கோ.” என்றார் கற்பகம்.
“சஞ்ஜய் பேரே நல்லாத்தான் இருக்கு..” என பாராட்டியவன்.. “ம்மா.. அந்த பொண்ணு பேசினதை மறந்துட்டு சகஜமா இருக்கானே, எப்படியும் கல்யாணத்தை பண்ணிவச்சிடலாம்னு திட்டம் போடாத.. கல்யாண விசயத்துல நீ நினைக்கிறதும் நடக்காது, அந்த பொண்ணு நினைக்கிறதும் நடக்காது..”என உறுதியாக சொல்லி, வாடகை வீடு குறித்து நண்பனிடம் விசாரிக்க தனதறைக்குள் சென்றான்.
அன்றெல்லாம் மகன் வீட்டிலிருக்கவும் பேரனோடு பொழுதை கழித்தார் கற்பகம்.. அடுத்தநாள் தேவா அதிகாலையிலேயே கிளம்பவும்.. “என்ன தேவா இந்நேரத்துக்கே கிளம்பிட்ட? இரு டீ வைக்கிறேன்..” என்றார்.
வீடு பார்க்க போவது தெரிந்தால் அன்னை மங்கைக்கு சொல்வார் என்பதால், “ஃப்ரண்டை பார்க்க போறேன்ம்மா.. டீ குடிக்கலாம் டைம் இல்ல, ஒன்பது மணிபோல வந்துடுவேன், சாப்பிட்டுதான் கம்பெனிக்கு கிளம்புவேன்..” என கிளம்பியிருந்தான்.
இதுதான் சமயம் என தவமணிக்கு அழைத்தார் கற்பகம்.
தவமணி அழைப்பை ஏற்கவே.. நேற்று நடந்ததை விளக்கி.. “என் மகனுக்கு கல்யாணம் செய்யனும்னு நினைச்சேன்தான் தவமணி.. ஆனா மங்கையை போல சின்னபொண்ணை பண்ணி வைக்கனும்னு பேராசை படல, எங்கஊர் பக்கம் முப்பது வயசாகியும் கல்யாணம் அமையாத பொண்ணுங்க.. சின்னவயசுலயே விதவையான புள்ளைங்கனு நிறைய பேர் இருக்காங்க..
இப்படி புள்ளைங்களைத்தான் என் மகனுக்கு இரண்டாந்தாரமா பார்க்கலாம்னு இருக்கேன், என்னை நம்பி விட்டுட்டு போயிருக்க.. உனக்கு துரோகம் செய்ய என்னைக்கும் நினைக்கமாட்டேன்..
மங்கையை இனி இங்க விடறது அவ்வளோ நல்லதில்லைனு என் மனசுக்கு படுது.. இன்னைக்கோ நாளைக்கோ உனக்கு தோதிருக்க நேரம்பார்த்து வந்து உன்னோடவே அழைச்சிட்டு போயிடு, என் மகன்கிட்டயேது திரும்பவும் கல்யாணத்தை பத்தி பேசிட்டாள்னா பெரிய வம்பாகிடும்.. தேவா ஒரு நேரம் போல ஒரு நேரம் இருக்கமாட்டான்.” என இணைப்பை துண்டித்தார் கற்பகம்.
*** *** ****
“ஆன்ட்டி..” என அழைத்துக்கொண்டே உள்ளே வந்தாள் மங்கை.
கற்பகம் குழந்தையை குளிக்கவைத்துக்கொண்டிருக்க, மங்கையின் அழைப்பு கேளாமல் போகவே, “அவ்வளோதான், அவ்வளோதான்டா..” என கற்பகத்தின் குரல் கேட்டு அவரின் பெட்ரூமிற்குள் நுழைந்தாள்.
கட்டிலில் கற்பகத்தின் மொபைல் இருக்கவே, அதனை எடுத்தவள் தேவேஷ், கார்த்திகா, அபிராமி ஆகிய மூவரின் எண்ணையும் தனது மொபைலில் பதிவு செய்து, ஐந்து நிமிடம்வரை கற்பகத்தின் வரவிற்காக காத்திருந்தாள்.
பாத்ரூமிலிருந்து வெளியே வந்த கற்பகம்.. “மங்கை..” என பெரிதாய் அதிர்ந்து.. “இங்க எதுக்கு வந்த?” என்றார்.
“அச்சோ.. அப்படியில்ல மங்கை.. நீ சின்ன பொண்ணு, உனக்கு என் மகனைவிட ரொம்ப நல்ல புருசன் கிடைப்பான்.. முதல்ல கிளம்பு..” என்றார் விரட்டும் தோரணையில்.
“நான் யாருக்கும் பொண்டாட்டி ஆகவேணாம் ஆன்ட்டி.. என் குழந்தைக்கு அம்மாவானா போதும்.” என்றாள் கமறலாக.
“என்ன? உன் குழந்தையா?” என அதிர்ந்தவர்.. “குழந்தை மேல உள்ள அக்கறையில என்ன பேசறதுனு தெரியாம உளறாத..” என்றார் கோபமாக.
“நான் உளறல ஆன்ட்டி, உங்க பேரன் உடம்புல ஓடுறது தேவா ரத்தம் மட்டும் இல்ல, என் ரத்தமும்தான்.. உங்க மகனுக்கும் அது தெரியும்.” என்றாள்.
“என்ன மங்கை சொல்ற?” என கற்பகம் அதிர.. “ண்ன்ன..” என அவனின் பாஷையில் குழந்தை பாட்டியை அழைக்க.. “சொல்றேன் ஆன்ட்டி, முதல்ல குழந்தைக்கு துவட்டுங்க.. இல்ல சளிபிடிச்சிக்கும்.” என்றாள் அக்கறையாக.
மங்கையின் பேச்சில், தேவா வருவான், மங்கையை பார்த்தால் திட்டுவான் என்பதெல்லாம் கற்பகத்திற்கு மறந்தே போனது. “மங்கை.. நீ பொய்யேதும் சொல்ல்லையே.” என்றார் பதட்டமாக.
“நானெதுக்கு ஆன்ட்டி பொய் சொல்லப்போறேன்? அதுவும் இந்த விசயத்துல எந்த பொண்ணாவது பொய் சொல்வாங்களா?” என்றவள்.. “முதல் முறை குழந்தை ஏற்பாடு செய்த போது கரு வளரலையில்ல? அதுக்கப்புறம்..” என ஆரம்பித்தவள் பத்து நிமிடம் வரை கற்பகத்திற்கு புரியும்படியாக பொறுமையாக நடந்ததை விளக்கினாள்.
“நான் சொல்றது உங்களுக்கு எந்தளவுக்கு புரிஞ்சதுனு தெரியல ஆன்ட்டி, ஆனா உங்க மகனுக்கு நல்லாவே தெரியும், உங்க பொண்ணுங்ககிட்டயும் நான் சொன்னதை சொல்லி விளக்கம் கேட்டுக்கோங்க..
“ஷர்மிளாக்கா இருந்திருந்தா நிச்சயம் குழந்தை விசயத்தை நான் யார்கிட்டயும் சொல்லியிருக்கவே மாட்டேன், இப்படி குழந்தைக்காக யோசிக்காம நான் பாட்டுக்கு நிம்மதியா கல்யாணம் செய்துட்டு சந்தோசமா வாழ்ந்திருப்பேன்.
இப்போ ஷர்மிளாக்கா இறந்துட்டாங்க, உங்க மகனுக்கு இன்னொரு கல்யாணம் செய்தே தீருவனு நீங்க சொல்றிங்க.. நான் எல்லா பொண்ணுங்ளையும் குறை சொல்லலை, ஆனா என் மகனுக்கு வர சித்தி நல்லவளா வாய்க்கலைன்னா..” என கண்ணீர்விட்டவள்..
“இத்தனை பெரிய மகனுக்கே பொங்கிபோட ஆள்வேணும்னு கல்யாணம் செய்து வைக்கிறன்றிங்க.. இப்படித்தான என் குழந்தைக்கும் நான் யோசிப்பேன்.” என்றாள் நியாயம் கேட்கும் தோரணையில்.
“மங்கை..” என்றவருக்கு பேச்சு வரவில்லை.
“எத்தனை வருசமானாலும் கல்யாணம்னு ஒன்னு நடந்தா அது உங்க மகனோடதான். யாரை நம்பியும் என் மகனை என்னால விட முடியாது.
எங்கம்மா இன்னைக்கு வரன்னாங்க, வீட்டை காலி செய்து அங்க ஊருக்கே கூட்டிட்டு போறன்னு சொன்னாங்க, ஆனா அது நடக்காது. என் குழந்தை இருக்கும் இடத்துலதான் நானும் இருப்பேன். மதியம் லன்ச் டைம்ல இனி தினமும் வந்து என் மகனைப் பார்ப்பேன்.. உங்க மகனே நினைச்சாலும் என்னை தடுக்க முடியாது.” என உறுதியாய் சொல்லி.. “இப்போ ஹாஸ்பிட்டலுக்கு டைம் ஆச்சு.. நான் கிளம்புறேன் ஆன்ட்டி..” என கிளம்பினாள் மங்கை.
கற்பகம் தன் தரப்பின் நியாயத்தை உணர்ந்திருப்பார்.. தான் பேசியதை தேவாவிடம் சொல்வார், தேவா மறைக்க நினைத்தாலும் அவரின் முகம் ஆன்ட்டிக்கு உண்மையை விளக்கும்.
இனி மகனிற்கு பெண் பார்த்தால் தன் நியாபகம் நிச்சயம் வரும். தேவாவிடம் தனக்காக பேசுவார் என்ற நம்பிக்கை வர, சற்று தெம்பு வந்தார்போல் உணர்ந்தாள்.
அன்னை அறிவுக்கு அழைத்து விசயத்தை சொல்லி புலம்புவார். என் அண்ணன் என்நிலையை புரிந்து அன்னையிடம் எனக்காக பேசுவான் என்ற நம்பிக்கையும் இருக்க.. மருத்துவமணைக்கு சென்றவள் கடந்த வாரம் போல் இல்லாமல் சற்று தெளிவாகவும், பழைய சுறுசுறுப்போடும் இருந்தாள்.