வீடு பார்க்க சென்றவன் அங்கேயே தாமதமானதால் அன்னைக்கு அழைத்து கம்பெனிக்கு செல்வதாகவும், வெளியில் சாப்பிட்டுக்கொள்வதாகவும் சொன்னதால், கற்பகம் விசயத்தில் மங்கை நினைத்தது தற்போது நடக்கவில்லை.
ஆனால் தவமணி விசயத்தில் மங்கை நினைத்தது போலத்தான் நடந்தது. மகன் மங்கைக்கு எடுத்துரைப்பான் என்ற நம்பிக்கையோடு அறிவுக்கு அழைத்து தவமணி புலம்ப.. “குழந்தை விசயத்தை மங்கை என்கிட்ட சொன்னாம்மா, நானும் இப்படி எதிர்பார்க்கவேயில்ல..
யார்கிட்டயும் சொல்லாம மங்கை செய்தது ரொம்ப தப்புதான்.. ஆனா நடந்தது நடந்துடுச்சி, அந்த குழந்தை நம்ம மங்கையோடதுனு தெரியும் முன்னவே என்னை மயக்கிட்டான், இப்போ என் தங்கை குழந்தைனு தெரிந்த பின்ன எனக்கே அவனை பார்க்கனும்போல இருக்கு..
மங்கை எடுத்த முடிவு அவளைப் பொறுத்தவரை சரிதான்.. ஆன்ட்டிகிட்ட சடர்னா சொல்லியிருந்தாலும், மங்கை நேத்து என்கிட்ட பேசினதை வச்சுப்பார்த்தா குழந்தை விசயத்துல ரொம்ப யோசிச்சிதான் முடிவெடுத்திருக்கானு தோணுது.
ஆனா மங்கையை கல்யாணம் செய்துக்க தேவாவுக்கு விருப்பம் இருக்கனும். அவர் விருப்பம் இல்லாம குழந்தையை சாக்கா வச்சி கம்ப்பல் பண்றதுதான் தப்புன்னு தோணுது.
இந்த விசயத்துல மங்கைக்கு எதிரா திங்க் பண்றதை விட்டுட்டு, ஆன்ட்டிகிட்ட மங்கை தேவேஷ் கல்யாணத்தைப் பத்தி பேசிப்பார்க்குறதுதான் எனக்கு சரின்னு படுதும்மா.. என்றிருந்தான் அறிவுக்கரசு.
இவ்விசயத்தில் மகனை நம்பி பிரியோஜனம் இல்லையென மங்கைக்கே அழைத்தார் தவமணி. அவள் அழைப்பை ஏற்றால்தானே? அவள்தான் சைலன்ட்டில் போட்டுவிட்டு மருத்துவமணையில் பரபரப்பாக வேலை பார்த்துக்கொண்டிருக்கிறாளே.
இனி போனில் பேசி லாபமில்லையென சென்னை கிளம்பினார் தவமணி. திங்கள்கிழமை பெரும்பாலும் கூட்டம் அதிகமிருக்கும்.. இன்றும் அப்படியிருக்க, கடைசி நோயாளியை பார்த்து முடிக்க மணி மூன்றரை ஆகியிருந்தது. அங்கேயே மதிய உணவை முடித்து அரைமணிநேரம் ஓய்வெடுத்தவள், மீண்டும் மாலைநேரப் பணிநேரம் வரவே.. பணியில் மூழ்கினாள்.
ஐந்து மணிபோல் வீட்டிற்கு வந்த தவமணிக்கு கற்பகத்திடம் சாவிவாங்க செல்ல சங்கடமாக இருக்கவே, பால்கனியிலேயே காத்திருந்தார் மகளுக்காக.
மாலை ஆறு மணிபோல் வழக்கம்போல் குழந்தையோடு மாடிக்கு வந்த கற்பகம், தவமணியைப் பார்க்க.. மீண்டும் கீழிறங்கியவர் சாவியை எடுத்துக்கொண்டு மங்கை வீட்டிற்கு சென்றார்.
“எப்போ வந்த தவமணி? சாவி கேட்காம ஏன் வெளில உக்கார்ந்திருக்க?” என சாவியை நீட்டினார் கற்பகம்.
“என் பொண்ணு செய்த வேலைக்கு எந்த முகத்தை வச்சிட்டு உங்க வீட்டுக்கு வரது? நான் வரும்நேரம் உங்க மகனேது வந்துட்டா அசிங்கமாகிடும்னுதான் சாவி வாங்கிக்க கூட வரல.” என்றார் வேதனையாக.
காலையில் மங்கை பேசிய பின்னே மங்கை சிறு பெண் என்ற தயக்கம் எல்லாம் விடைபெற்றிருந்தது.. பேரனுள் ஓடுவது மகன் ரத்தம் மட்டுமல்ல, மங்கையினதும்தான் என்ற உண்மை புரிய, மங்கை தவிர்த்து வேறு பெண் பார்க்கும் எண்ணமே வரவில்லை கற்பகத்திற்கு.
தேவா வந்ததும் அவனின் மனநிலை ஆராய்ந்து, தக்க தருணத்தில் மங்கையைப் பற்றி பேச வேண்டும் என கற்பகம் நினைத்திருந்தால்.. “மங்கை நல்ல எண்ணத்துலதான் உதவியிருக்கா, என் மருமக செத்துபோனதாலதான் இப்படி யோசிச்சிருக்கா.” என மங்கைக்கு ஆதரவளித்து, தன் மகனுக்கு மங்கையை தர விருப்பம் கொள்வாரா என தவமணியின் முகத்தை ஆராய்ந்தார்.
தவமணிக்கு விருப்பம் இல்லை என்பதை அவரின் முகம் காட்ட.. நம் மகனின் சம்மதம் கிடைத்தாலாவது பேசிப்பார்க்கலாம். திருமணம் செய்துகொள்ள மாட்டேன் என பிடிவாதம் செய்பவனை வைத்துக்கொண்டு, இவர்களிடத்தில் என்ன பேசுவது? நேரம் அமைந்தால் பார்த்துக்கொள்ளலாமென.. “சரிங்க, தேவா வரும்நேரம்.. நான் கிளம்பறேன்.” என கிளம்பினார்.
கற்பகம் கடைசி படியில் இறங்கும் தருணம் தவமணி குழந்தையைப் பார்க்க.. கற்பகத்தின் கம்மலில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தையின் மலர்ந்த முகத்தில், சற்றே மனம் சறுக்கியது தவமணிக்கு.
கதவைத் திறந்து உள்ளே போன தவமணிக்கு மகள் தன் கூற்றை ஏற்பாள் என்பதில் துளியும் நம்பிக்கையில்லை.. ஆனால் இப்படி இரண்டாந்தாரமாய் பெண் கொடுத்தால், அப்பன் செய்த பாவம் என வாய்க்கு வந்தபடி பேசுவார்கள்.. அதோடு தேவா மீது பெரிதாய் அபிப்பிராயம் இல்லாததால் மகள் விருப்பம் பற்றி தவமணியால் யோசிக்கவே முடியவில்லை.
“என்ன பார்க்குற?” என கடிய.. “அந்த குழந்தை என் மகன்னு தெரிஞ்சும் எப்படிம்மா உன்னால இப்படி யோசிக்க முடியுது?
நீ நினைக்குற மாதிரி வேற ஒருத்தனை கல்யாணம் செய்துக்கிறேனே வச்சுக்குவோம்.. தேவாவும் இரண்டு மூனு வருசத்துக்கப்புறம் வேற கல்யாணம் செய்துக்கிறார்னு வை.. என்னை விடு, குழந்தை எப்படியிருக்கானோன்ற குற்றவுணர்வு உனக்கு வருமா வராதா?” என்றாள்.
“தப்புதான்.. நான் ஒன்னு நினைச்சி பண்ணினேன்.. ஆனா கடவுள் ஒன்னு நினைச்சிட்டார்.. அதுக்காக இன்னொரு வாழ்க்கைக்கு நான் தயாராகிட்டேனா எந்த உரிமையில என் மகனைப் பார்ப்பேன்?”
“உனக்கு கல்யாணம் ஆன பின்ன ஷர்மிளா இறந்திருந்தா என்ன செய்திருப்ப?” என முறைத்தவர்.. “அவங்க மகனை அவங்க பார்த்துப்பாங்க, வேலையை ரிசைன் பண்ணிட்டு என்னோட ஊருக்கு வா.” என்றார் கட்டளையாக.
எனக்கு கல்யாணம் ஆனபின்ன ஷர்மிளாக்கா இறந்திருந்தா என்ன செய்வனெல்லாம் இப்போ என்னால சொல்லமுடியாது.
இப்போ அவங்க உயிரோட இல்ல.. என் மகனை அம்போனு விட்டுட்டு என் சந்தோசம்தான் முக்கியம்னு என்னால இருக்க முடியாது.. வேற கல்யாணம் செய்துக்கிறதென்ன? முதல்ல இந்த வீட்டை விட்டே நான் வரமாட்டேன்.” என்றாள் திடமாக.
“உன்னை பிடிக்காத பையனை அடாவடியா கல்யாணம் செய்துக்க நினைக்கிறியே.. உனக்கு அசிங்கமாயில்ல?” என முகம் சுழித்தார் தவமணி.
“அசிங்கமாத்தான் இருக்கு.” என ஒப்புக்கொண்டவள்.. “ஆனா பிடிக்காத கல்யாணம்னாலும், தேவாவை கல்யாணம் செய்துகிட்டு என் மகனுக்கு அம்மாவா சந்தோசமாவும் நிம்மதியாவும் இருப்பேன்.
அதை விட்டுட்டு, நீங்க சொல்ற மாதிரி என்னை பிடிச்சவனை கல்யாணம் செய்து, என் மகன் கண்டவங்ககிட்ட கஷ்டப்படுத்துறதை பார்த்துகிட்டு, அவனை காப்பாத்த முடியாத குற்றவுணர்வுலயும், என்னைய கல்யாணம் செய்தவங்களோட நிம்மதியையும் சந்தோசத்தையும் கெடுக்கிறதுக்கு பதிலா.. தேவாவை கல்யாணம் செய்துக்கிறது எவ்வளவோ மேல்..” என்றாள் நிமிர்வாக.
“சரி.. கல்யாண விசயம் பொறுமையா யோசிக்கலாம்.. வேலையை ரிசைன் பண்ணிட்டு நாளைக்கு என்னோட ஊருக்கு வா.. இங்கயிருந்து எந்த நேரம் என்ன பிரச்சனையை கொண்டு வருவியோனு என்னால தவிச்சிட்டிருக்க முடியாது.” என்றார்.
“படிக்கும்போது ஸ்ட்டி லீவ்ல வந்து இரண்டு நாள் வந்து தங்கறேன்னாலே, நம்ம அப்பா பகையாளிங்க எவனாவது என்னை எதாவது பண்ணிட்டான்னா என்ன பண்றதுனு அப்படி பதறுவ.. இப்போ எப்படி ஊருக்கே மொத்தமா வந்திட சொல்ற?” என்றாள் கோபமாக.
“அப்போ நீ சின்ன பொண்ணு, எங்கையாவது சிக்கிடுவனு பயம்.. இப்போதான் பெரிய்ய இவளாகிட்டியே.. அப்புறம் வரதுக்கென்ன?” என்றார்.
“நீ எப்படி கூப்பிட்டாலும் நான் வரமாட்டேன், ஒரு நாளைக்கு கூட ஹாஸ்பிட்டலுக்குகூட லீவ் போடமாட்டேன்.. இனி என் மகனுக்காக நிறைய சம்பாதிக்கனும்.. கவர்ன்மண்ட் வேலைக்கு அப்ளை பண்ணப்போறேன்.. அதுக்கு என்னை ப்ரிப்பேர் பண்ணனும்..
இப்படி எனக்குனு நிறைய ரெஸ்பான்ஸிபிலிட்டிஸ் இருக்கு.. தேவையில்லாம என்னை தொல்லை செய்யிறதை விட்டுட்டு ஊருக்கு போய் தாத்தா பாட்டியை பார்த்துக்குற வேலையைப் பாரு.” என அதிகாரமாக சொல்லி.. குளியலறைக்குள் புகுந்து, தன்னை சுத்தம் செய்துவந்தவள் சமைக்க ஆரம்பித்தாள்.
“நகரு.. நான் சமைக்கிறேன்.” என்றார் தவமணி.
“ஒன்னும் வேணாம், இவ்வளோ நேரம் சமைக்க தோணலையில்ல?” என்றாள் ரோசமாக.
“மங்கை.. தேவாவும் ஷர்மிளாவும் வாழ்ந்ததை பத்தி கற்பகம்மா நிறைய சொல்லியிருக்காங்க, கற்பகம்மாக்காக இன்னொரு கல்யாணம் செய்துக்கிட்டாலும், கட்டிக்கிறவளோட சந்தோசமா வாழ்வானாங்கிறது சந்தேகம்தான்.
அந்த தேவா சரியான சிடுமூஞ்சன், இங்க குடி வந்து ஒரு வருசம்கிட்ட ஆகுது, நானும் எத்தனையோ முறை அவன் வீட்டுல இருக்கும்போதே போயிருக்கேன், வாங்கன்ற மாதிரி ஒரு பார்வை கூட பார்க்கமாட்டான்.
உன் கல்யாணத்துக்கப்புறம் காலப்போக்குல மனசு மாறினாலும் அது காலத்தின் கட்டாயமாத்தான் இருக்கும். இப்படியொரு வாழ்க்கை உனக்கு தேவையா?” என்றார் கெஞ்சலாக.
“நான் கல்யாணம் செய்துக்க போறது தேவாவை இல்ல, என் குழந்தையோட அப்பாவை.. அப்போ என் கல்யாண வாழ்க்கை எப்படியிருக்கும்னு எனக்கு தெரியாதாம்மா? எல்லாம் தெரிஞ்சுதான் இந்த முடிவெடுத்தேன்.
தேவாவை கட்டிக்கிட்டு சந்தோசமா வாழ்வேனா தெரியாது, ஆனா எந்த குற்றவுணர்வும் இல்லாம நிம்மதியா வாழ்வேன். தேவா வேணாம்னு நீ எத்தனை டிசைனா சொன்னாலும் என் முடிவுல மாற்றம் இருக்காது.” என்றாள் தன்மையாகவே.
அப்படியே அவங்கப்பன் பிடிவாதம் என உள்ளுக்குள் கோபமாக நினைத்தவர்.. “நீ கேட்டாலும் அவன் உன்னை கட்டிக்க சம்மதிப்பானா?” என்றார் முறைப்பாக.
“நீ பண்ற அழிச்சாட்டியத்துக்கு சாப்பாடு ஒன்னுதான் குறைச்சல்..” என முறைத்தார் தவமணி.
“பசிக்கும்போது சாப்பிடு.” என தோளைக் குலுக்கியவள் நன்றாக சாப்பிட்டு உறங்க சென்றாள்.
அடுத்தநாள் காலை மங்கை வழக்கம்போல் வேலைக்கு கிளம்பியிருக்க.. தவமணி மீண்டும் மகனிடம் பேசிப்பார்த்தார். “நம்ம விருப்பப்படி ஆட்டிவைக்க மங்கை ஒன்னும் சின்னபிள்ளை கிடையாது. அப்பா இறந்ததுக்கப்புறம் அவர்மேல தப்பிருக்கவும் எத்தனை ரோசமா ஆறு வருசமா தணிச்சி இருக்கா.
அதை பெருமையா நினைச்சதான? இப்போ அவ மகன் விசயத்துல மட்டும் அவ எடுக்குற முடிவை ஏன் ஏத்துக்கமாட்ற? உனக்கு பிடிக்கலனா விடு.. மூனு மாசம் கழிச்சி இந்தியா வரும்போது தேவாகிட்ட நான் பேசிக்கிறேன்.” என்றான்.
அன்று மதியம் உணவிற்கு வரும்போது தவமணி இருக்கவும் மகனை பார்க்கபோகவில்லை மங்கை. மதிய உணவு சாப்பிட்டு ஹாஸ்பிட்டலுக்கு கிளம்பவும் தவமணியும் ஊருக்கு கிளம்பினார்.
*** **** ****
நேற்றிரவே நண்பன் வீட்டிற்கு நாளை பூஜைக்கு செல்லவேண்டும் என கற்பகத்திடம் சொல்லியிருந்தான் தேவா.
அடுத்த நாள் காலை நாலுமணிக்கெல்லாம் எழுந்த தேவா.. கற்பகம் அறைக்குள் வர, குளித்து தயாராய் இருந்தவர்.. “என்ன தேவா.? நாலு மணிக்கெல்லாம் கிளம்பனும்னு என்னை சொல்லிட்டு நீ குளிக்காம வந்து நிக்கிற?” என்றார்.
“நீ எழுந்திட்டியானு பார்க்க வந்தேன்ம்மா.. இரண்டு மணிநேரத்துக்கு ஆகுறமாதிரி சஞ்சய்க்கு தேவையானதை எடுத்து வச்சிக்கோ.. நான் பத்து நிமிசத்துல குளிச்சிட்டு வரேன்.” என தனதறைக்குள் சென்றான்.
தூங்கிக்கொண்டிருந்த மகனை தூக்கிக்கொண்டவன்.. அன்னையோடு டாக்ஸியில் கிளம்பினான். வரும் வழியில் டாக்ஸியை நிறுத்தி பால் வாங்கவே.. “பால் எதுக்கு தேவா?” என்றார்.
“ஃப்ரண்ட் வாங்கி வர சொன்னான்ம்மா.” என வாங்கினான். ஒரு மணிநேர பயணத்திற்கு பிறகு வீட்டையடைந்தவன், வீட்டின் பூட்டை திறக்க.. “ஃப்ரண்டு வீடுனு சொன்ன? இதென்ன நீ கதவைத் திறக்குற?” என்றார் சந்தேகமாக.
“உள்ள வாம்மா..” என கிச்சனுக்கு அழைத்து சென்று.. “சாமி கும்பிட்டுட்டு பால் காய்ச்சும்மா.. இந்த வீட்டுலதான் இனி குடியிருக்கப்போறோம்.” என்றான்.
“என்ன தேவா சொல்ற?” என கற்பகம் அதிர்வாக.. “அந்த மங்கைபொண்ணு நம்ம பக்கத்திலேயே இருந்தா குழந்தைமேல இன்னும் ஒட்டுதல் அதிகமாகும். அது அவ எதிர்காலத்துக்கு நல்லதில்ல.
என் முன்னவே உன்கிட்ட என்னை கல்யாணம் செய்துக்க கேட்டவ, நிச்சயம் அவங்கம்மாகிட்டயும் சொல்லியிருப்பா. இப்படி கல்யாணத்துல அவங்களுக்கு பிடித்தம் இருக்காது, நான் வேணாம்னு எடுத்து சொல்லி அவங்கம்மா அவளை சரி பண்ணிடுவாங்க.
அவங்கம்மாகிட்ட பிடிவாதம் செய்தாலும், எவ்வளோ நாள் குழந்தைக்காகவும் என் சம்மதத்துக்காகவும் பார்ப்பா? ஆறு மாசமோ ஒரு வருசமோ காத்திருந்துட்டு யாரையாவது கல்யாணம் செய்ய முடிவெடுப்பா..
அதுக்கு முக்கியமா நீயும் குழந்தையும் அவ பக்கத்துல இருக்கக்கூடாது, அதுக்காகத்தான் வீட்டை காலி செய்ய முடிவெடுத்தேன்.” என்றான்.
“இது தப்பு தேவா, பிடிக்கலனா நேரடியா சொல்லனும். இப்படி சொல்லாம கொள்ளாம வரலாமா?” என வருந்தியவர், “எப்படினாலும் போன்லயாவது பேசுவா..” என்றார்.
“உனக்கு வேற சிம் வாங்கி, நேத்து நைட்டே மாத்திட்டேன். பழைய நம்பர் இனி சுட்ச் ஆஃப்னு வரும். மணி அஞ்சரை ஆகிடுச்சு, ஆறுமணிக்குள்ள முதல்ல பாலை காய்ச்சு, மத்தது அப்புறம் பேசிக்கலாம்.” என்றான்.