எட்டு மணிக்கு மருத்துவமணையில் இருக்கவேண்டும் என்பதற்காக ஏழு ஐம்பதுக்கு வீட்டினை அவசரமாகப் பூட்டி மங்கை திரும்ப.. தேவேஷ் வீட்டின் கேட்டிற்கு உள்ளே மினி லாரி நின்றிருக்க, அதன் பக்கத்தில் நின்றிருந்த இரண்டுபேரில் ஒருவன் போனில் யாருடனோ பேசிக்கொண்டிருந்தான்.
குழந்தைக்கு பெயர்சூட்டும் விழாயேது வைக்கிறாங்களா? ஊர்லயிருந்து சொந்தங்கள்லாம் லாரியில வந்திருப்பாங்களோ.. என்ற யோசனையோடு சில நொடி நின்றாள்.
அச்சோ இன்னும் பத்து நிமிஷத்துல ஹாஸ்பிட்டலுக்கு போகனுமே எனப் பதறியபடி மடமடவென கீழே இறங்கினாள்.
நாம நினைச்சமாதிரி ஏதும் ஃபங்சன் இல்ல போலயே.. வீடு பூட்டியிருக்கு.. அப்போ லாரி எதுக்கு வந்திருக்கும் என்ற யோசனையோடு வேகமாக நடந்தபடி கற்பகத்திற்கு அழைக்கவே சுவிட்ஆஃப் என வந்தது.
மீண்டும் மீண்டும் அழைக்க அப்படியே வரவும்.. அச்சோ ஆன்ட்டிக்கு எதாவது என நினைக்க, மங்கையின் நடை தன்போல் நிற்க தேவேஷ் வீட்டை திரும்பிப்பார்த்தாள்.
சற்றுமுன் லாரியோடு நின்றிருந்தவன் தற்போது கேட்டிற்கு வெளியே நின்று சிகரெட் பத்த வைக்கவும் வேகமாய் அவனிடம் வந்தவள்.. “அண்ணா லாரி எதுக்கு வந்திருக்கு? இங்க யாருக்கும் உடம்பு சரியில்லையா?” என்றாள் பதட்டமாக.
“உடம்பு சரியில்லனா லாரி எதுக்குமா வரப்போவுது? ஆம்புலன்ஸ்தான வரும்?” எனக்கேட்டவன், எதோ பெரிய ஜோக் அடித்ததுபோல் சிரிக்க.. அடக்கிரகமே.. என உள்ளுக்குள் திட்டியவள்..
அந்த சிடுமூஞ்சன் வரதுக்குள்ள இவன்கிட்ட விசயத்தை வாங்கியாகனுமே என.. “ஆமாம்ல ண்ணா.. எனக்கு தோணல பாருங்க..” என வரவழைத்த சிரிப்பை உதிர்த்து.. “அப்போ எதுக்கு அண்ணா லாரி வந்திருக்கு?” என்றாள் காரியத்தில் கண்ணாக.
“வீடு காலி பண்றாங்கம்மா, சாமான் எடுக்க வீட்டு ஓனர் ஒத்துக்கமாட்டுக்குறாராம்.. தேவா சார் ஓனர் வீட்டுக்கு போயிருக்கார்..” என்றான்.
“இல்லண்ணா.. உங்க தேவா சாரோட குழந்தையை எனக்கு ரொம்ப பிடிக்கும்.. காலி பண்ணிட்டாங்கனா குழந்தையைப் பார்க்க முடியாதில்ல? அதான் கேட்டேன்.” என்றாள்.
“அப்போ தேவா சார்கிட்டயே கேட்டுக்கலாமே?” என சந்தேகமாய் பார்த்தவன்.. “ஒருவேளை நீங்க சார்க்கு ஆகாதவங்களா இருந்து அட்ரஸ் சொல்லிட்டேன்னா, தேவா சார் என்னை ஒருவழியாக்கிடுவார்..
எனக்கெதுக்குமா வம்பு? ஹவுஸ்ஓனர் வீடுவேற இங்க பக்கத்து தெருதானாம், இரண்டு நிமிஷத்துல வரேன்னுட்டு போயிருக்கார். நீ கிளம்புமா..” என மங்கையை அதட்டி, லாரியருகே போய் நின்றான்.
“வண்டி நம்பரை தனது மொபைலில் போட்டோ எடுத்தவள்.. “நீங்க சொல்லலைன்னா இந்த ஏஜன்சிக்கு போன் செய்து எப்படியாவது அட்ரஸ் வாங்கிடுவேன்..
நீங்க சொன்னிங்கனா என் அலைச்சலை மிச்சம் பண்றதுக்கு ஆயிரம் ரூபா தரேன்.” என தனது ஹேன்பேகிலிருந்து இரண்டு ஐநூறு ரூபாய் தாள்களை வெளியே எடுத்தாள் மங்கை.
“இதென்னம்மா வம்பா போச்சு?” என சலிப்போடு.. “இந்த பொண்ணு தேவாசாரோட புது அட்ரசை கேட்குதுப்பா.. தேவா சாருக்கு வேண்டியவங்கனா அவர்கிட்டயே கேட்டுக்கலாமில்ல?” என்றான் மற்றொருவனிடம்.
மற்றொருவன்.. “நாம சொல்லலைன்னாலும் இந்த பொண்ணு எப்படியாவது அட்ரசை கண்டுபிடிக்கத்தான் போகுதுபோல.. அதுக்கு நாமளே சொல்லிட்டா ஆளுக்கு ஐநூறுரூபா தேறும்.” என்று முணகி..
“நான்தான் சொன்னேனு சொல்லிடாதிங்கம்மா..” என தேவாவின் புது விலாசம் சொல்லி, மங்கை கையிலிருந்த பணத்தை பார்க்க.. விலாசத்தை தனது உள்ளங்கையில் கிறுக்கிக்கொண்டவள்.. “தேங்க்ஸ் ண்ணா..” என அவனிடம் ஆயிரம் ரூபாயை கொடுத்து மருத்துவமணை விரைந்தாள்.
அனைத்து நோயாளிகளையும் பார்த்து முடிக்க மதியம் இரண்டாகவே.. மதிய உணவிற்கு மெஸ்ஸில் பிரியாணி பார்சல் ஆர்டர் கொடுத்தவள்.. அபிராமிக்கு அழைத்தாள்.
“ஹலோ..” என்ற குரல் தயங்கி வர.. “நான் மங்கை பேசுறேன்ங்க.. கற்பகம் ஆன்ட்டி வீட்டு எதிர்வீட்டுல இருக்கேனே.. அந்த மங்கை.” என்றாள்.
இன்று காலையில்தான் தேவா வீடு மாற்றியது, நம்பர் மாற்றியது என அனைத்தும் சொல்லி, “உங்க நம்பர் எதாவது இருந்தா கூட மங்கை உங்களுக்காவது போன் பண்ணுவா, அவகிட்ட என் நம்பரைத்தவிர யார் நம்பரும் இல்லை..” என மகளிடம் புலம்பினார் கற்பகம்.
தற்போது மங்கை தனக்கு அழைக்கவும்.. “ஹான்.. எப்படியிருக்க மங்கை? என் நம்பர் எப்படி கிடைச்சது?” என்றாள் ஆச்சர்யமாக.
நம்பர் எப்படி கிடைத்த்து என விளக்கியவள்.. “ஆன்ட்டியோட புது நம்பர் கொடுங்க.” என்றாள் உரிமையாக.
“அச்சோ தேவாக்கு தெரிஞ்சா திட்டுவான் மங்கை.” என அபிராமி தயங்க.. புது வீட்டின் விலாசத்தை சொன்னவள்.. “அன்னைக்கு உங்க நம்பர் மட்டும் எடுக்கல, உங்க தங்கை, தேவாவோட நம்பர்லாம் கூட என்கிட்ட இருக்கு.” என தேவா நம்பரையும் சொல்லி..
“நீங்க கொடுத்தா ஆன்ட்டிகிட்ட சொல்லிட்டு என் மகனைப் பார்க்க வீட்டுக்கு போவேன், கொடுக்கலனா சொல்லாம போய் நிற்பேன்.” என்றாள் சிரிப்போடு.
பிரியாணி பார்சல் வந்திட, வாங்கி பணத்தை கொடுக்கும் வரை அபிராமியிடம் பேசாதிருக்கவே.. “என்ன மங்கை? இவ்வளோ தயங்குற? அப்போ குழந்தைக்காகத்தானா எல்லாம்.?” என முன்பு கேட்டதையே மிகுந்த ஏமாற்றத்தோடு கேட்டாள்.
மங்கை.. “என்ன கேட்டிங்க? நான் மெஸ்ல இருக்கேன், பிரியாணிக்கு பணம் கொடுக்கும் கவனத்துல நீங்க கேட்டது சரியா கேக்குல..” என்றாள்.
சிறு கோபத்தோடு, “வரப்போறவ குழந்தையை சரியா பார்த்துக்கலனாலும் எங்கம்மா, நான்லாம் இருக்கோம்னு சொன்னேன்..” என்றாள் அபிராமி.
“அத்தை, மாமாலாம் சொந்தக்காரங்களாதான் இருக்க முடியும்.. என் மகனோட படிப்பு, நடத்தைனு எல்லாமும் பக்கத்துலயிருந்து சொல்லிக்கொடுக்க அம்மாவாலதான் முடியும்..” என்றாள் மங்கை.
அபிராமி அமைதியாகிட.. “ஹலோ..” என்றாள்.
“ம்..” என்றாள் ஆர்வமின்றி.
மங்கை.. “ஆன்ட்டி நம்பர் கேட்டேனே.”
“குழந்தைக்காகத்தான் கல்யாணம்னா என் தம்பியை விட்டுடு.” என்றாள் ரோசமாக.
அக்கா தம்பி பாசம் நினைத்து சிரித்தவள்.. “சரி விடுங்க, ஆன்ட்டி நம்பரை வீட்டுக்கு போய் நேர்லயே வாங்கிக்கிறேன்.” என இணைப்பை துண்டித்தாள்.
அடுத்த நொடியே அபிராமியிடமிருந்து அழைப்பு வர.. மங்கை ஏற்கவும்.. “தேவா வீட்டை காலி செய்ததுல உனக்கு வருத்தமேயில்லையா? பிரியாணி வாங்கிட்டு போற.?” என்றாள் கவலையாக.
உண்மையில் தனக்கு பயந்து தேவா வீட்டை காலி செய்ததும், எங்கு செல்கிறான் என இன்றே கண்டுபிடித்ததும் ஒரு வித சந்தோசத்தை கொடுக்க, அதை கொண்டாடவே மங்கை பிரியாணி வாங்கினாள். அபிராமி இப்படி கேட்கவும்.. “அடடா… என்னைப் பொறுத்தவரை வருத்ததுக்கும் வயித்துக்கும் சம்மதமேயில்ல..” என்றாள் சிரிப்போடு.
அபிராமி.. “குழந்தைக்காக கல்யாணம்னாலும், எங்க தேவாவோட வருங்கால பொண்டாட்டிக்கிட்ட பகைச்சிக்க முடியுமா?” என நொடித்து அன்னையின் புது எண்ணை சொன்னாள் கோபத்தோடே.
கற்பகத்தின் எண்ணை குறித்துக்கொண்டவள்.. “ஹா..ஹா.. எங்கடா நம்பர் வாங்க வீட்டுக்கே போய்டுவாளோ? நம்ம தம்பி நிம்மதி பறிபோய்டுமோனு பயந்து நம்பரை கொடுத்துட்டு, எனக்கு பயந்தமாதிரி பேசுறிங்க.” என்றவள்.. சிறு இடைவெளி விட்டு.. “நீங்க அரேன்ஜ் மேரேஜா? லவ் மேரேஜோ?” என்றாள்.
“அரேன்ஜ் மேரேஜ்.” என்றாள் அபிராமி.
“ம்.. அப்போ அண்ணா உங்களை பார்க்க வரவரைக்கும் அவரைப்பத்தி எதுவும் தெரியாது.. ரைட்?” என்றாள்.
“பின்ன ஆகமாட்டோமா?” என அபிராமி சிறு வெக்கத்தோடு சொல்ல, “உங்க கல்யாணம் போலத்தான் உங்க தம்பியோடான என் கல்யாணமும்.. எங்க கல்யாணத்துல என்ன ஒரு வித்யாசம்னா.? என் வருங்கால கணவரை நானே அரேன்ஜ் பண்ணிக்கிட்டேன்.. அவ்வளோதான்.!
எதிரில் தேவா வந்துகொண்டிருக்க.. “நான் அப்புறம் பேசுறேன்.” என இணைப்பை துண்டிக்க, சற்று தூரத்தில் வந்துகொண்டிருந்தவன் தற்போது இருபதடி தூரத்திற்கு நெருங்கியிருக்க.. அவனின் வண்டியை வழிமறைப்பதுபோல் போக்கு காட்டினாள்.
வலப்பக்கம் இடப்பக்கம் என தடுமாறியவன் வேறு வழியின்றி பைக்கை நிறுத்தி மங்கையை முறைக்க.. “ஹா..ஹா..” என சிரித்தாள் வெற்றிப்பார்வையோடு.
இவன் வண்டியை திருப்ப முயல.. மீண்டும் வழிமறைத்தவள்.. “பச்.. இருங்க தேவா..” என்றதும், “ஏய்.. என்ன தைரியம் இருந்தா என் பேரை சொல்லுவ?” என முறைத்தான் அதீத கோபத்தோடு.
“என் குழந்தைக்கு அப்பாவை அண்ணானு கூப்பிட முடியாது.. சார்னு சொல்லறதுக்கு நீங்க ஒன்னும் என் பாஸ் கிடையாது, அப்போ பேரை சொல்லித்தான் பேசனும்?” என நியாயம் கேட்டவள்..
“தெருவுல இப்படி போக்கு காட்டுறது நல்லாவா இருக்கு? ஒரு இரண்டு நிமிஷம் தைரியமா என் முன்ன நில்லுங்க..” என கட்டளையிட… “யாருக்குடி தைரியமில்ல?” என முறைத்தவன்..
“உன்ன பார்க்கக்கூட பிடிக்காமத்தான் அவாய்ட் பண்றேன்.. இதுகூட புரியாம இரிட்டேட் செய்துட்டிருக்க?” என திட்டி மங்கையின் கைப்பிடித்து சற்று பலமாக தள்ளி.. வேகமாய் பைக்கை கிளப்ப..
தேவா தள்ளியதில் தடுமாறி கீழே விழந்தவளுக்கு அடிபடவில்லையென்றாலும், தன்னை தள்ளிவிட்டதில் கோபமடைந்தவள் அவனின் எண்ணிற்கு அழைத்தாள்.
வண்டி ஓட்டியபடி மொபைலை எடுத்து பார்த்தான். புது எண்ணாக இருக்கவே அழைப்பை துண்டித்து மொபைலை பாக்கட்டில் போட, மீண்டும் அழைத்தாள்.
பைக்கின் வேகத்தை குறைத்து.. “ஹலோ..” என்க.. தேவாவின் புது வீட்டு விலாசம் சொல்லி… கற்பகத்தின் கைப்பேசி எண்ணையும் சொல்ல.. தேவா அதிர்வோடு திரும்பிப்பார்க்க.. “ஐ ஜஸ்ட் டிட் இட்..” என கோபத்தை உள்ளடக்கி, வெற்றிபெற்ற தோரணையோடு கூலாக சொன்னாள்.
காலையில்.. வீட்டை காலி செய்கிறேன் என சொல்தற்காக எட்டு மணிக்கு ஓனர் வீட்டிற்கு சென்றான். வீட்டினுள் இருந்தவாறே.. வெளியில் இருக்கிறேன், வர ஒரு மணிநேரமாகும், நான் போன் செய்தபின்ன வாங்க.. என்று என அழைப்பை துண்டித்த வீட்டு ஓனர்.. இரண்டு மணிநேரம் கழித்து வீட்டிற்கு வர சொல்லியிருந்தார்.
பத்து மணிபோல் ஓனர் வீட்டிற்கு தேவா செல்ல, துக்கம் நடந்த வீட்டுல ஒரு வருசமாவது இருக்கனும்னு சொல்லியிருக்கேன்தான? உங்க பொண்டாட்டி செத்து ஏழுமாசம்தான ஆகுது? இப்படி திடீர்னு காலி செய்தா என்ன அர்த்தம்? என்னால அட்வான்ஸ் கொடுக்க முடியாது, என காலி செய்யக்கூடாதென வீட்டு ஓனர் பிடிவாதம் செய்ய..
ஏதேதோ சொல்லியும் வீட்டை காலி செய்ய ஓனர் மறுக்கவே, வேறுவழியின்றி.. ஆறு மாசம் வரைக்கும் யாரும் வாடகைக்கு வரலைனா அதுவரை நானே வாடகை கொடுத்துடறேன் என ஒப்புதல் அளித்து.. சாமான் எடுக்க இந்நேரம் ஆகியிருக்க..
விட்டது தொல்லையென கிளம்பும் நேரம்.. அரைநாளில் தன் திட்டம் அனைத்தையும் தவிடு பொடியாக்கியிருந்தவளின் மீது கட்டுக்கடங்கா கோபம் வர.. அத்தனை வேகத்தோடு பைக்கை திருப்பியவன் கண்ணிமைக்கும் நேரத்தில் மங்கையை நெருங்கியிருந்தான்.
நிமிர்வாய் எழுந்து நின்றவள்.. “ஆக.. குழந்தைக்காக நான் யோசிக்கிறதும், உங்களை கல்யாணம் செய்துக்க முடிவெடுத்ததும் நியாம்தான்னு உங்க மனசாட்சிக்கு நல்லா தெரியுது.. அதனாலதான எனக்கு பயந்து ஆன்ட்டி நம்பரை மாத்தி, வீட்டையும் காலிசெய்திருக்கிங்க?” என்றாள் குற்றம் சுமத்தும் பார்வையோடு.