இத்தனை வேகமாக அனைத்தும் கண்டுபிடித்தவள்.. இனி எத்தனை வீடு மாற்றினாலும் பின்தொடர்வதை நிறுத்தமாட்டாள் என்றுணர்ந்து..
“நீ சொல்றதெல்லாம் உண்மைதான்.. ஆனா உனக்கு பயந்துட்டு வீட்டை காலி பண்ணல.. என் நிம்மதிக்காக காலி செய்தேன்.. இப்போ எனக்கிருக்க ஒரே நிம்மதி என் குழந்தை மட்டும்தான்.. அவன்தான் என் வாழ்க்கை..
எங்கம்மா நினைக்கிற மாதிரி நான் இன்னொரு கல்யாணம் செய்துக்கபோறதில்ல.. குழந்தையை சேவ் பண்றதா நினைச்சி முட்டாள்தனமா யோசிச்சிட்டிருக்க..
நான் அவ்வளோ ஈஸி கிடையாது, யாரோடவும் என்னால சட்டுனு ஒட்ட முடியாது, குழந்தைக்காகனு என்னை கல்யாணம் செய்துகிட்டா காலத்துக்கும் கஷ்டப்படனும்..
நீ சின்னப்பொண்ணு.. உங்கம்மா அண்ணன் சொல்றதை கேட்டு உனக்கான வாழ்க்கையை வாழப்பாரு..” என்று பொறுமையாக சொல்லி பைக்கை திருப்பினான்.
தேவாவின் பொறுமையில் அவன் மீதிருந்த கோபம் குறைத்து.. “நில்லுங்க..” என்றாள் தவிப்பாக.
தேவா பார்க்க.. “நீங்க திடமா இருந்தாலும், ஆன்ட்டியை நினைச்சா எனக்கு பயமாயிருக்கு, கல்யாணம் செய்துக்குவிங்களா மாட்டிங்களானு காலத்துக்கும் என்னால தவிச்சிட்டிருக்க முடியாது, எங்கண்ணனுக்கு கல்யாணம் முடிஞ்சதும் என்னை கல்யாணம் செய்ய ஃபோர்ஸ் பண்ணுவாங்க..
என் மகனுக்கு அம்மா இல்லைங்கும்போது, இன்னொரு வாழ்க்கையை ஏற்படுத்திக்கிட்டு என்னால நிச்சயம் சந்தோசமா வாழ முடியாது.
நீங்க குழந்தைக்கு அப்பாவா இருந்துக்கோங்க, நான் அம்மாவா இருந்துக்குறேன்.. எனக்கு அதுபோதும்.. குற்றவுணர்வில்லாத வாழ்க்கையை விட வேற சந்தோசம் என்ன இருக்கு?” என சற்று முன் தேவா பேசியதை போல தானும் பொறுமையாகவே சொன்னாள்.
“அப்படியே அறைஞ்சேனா.. ஒரு பல்லு வாயில இருக்காது..” என சிறு பிள்ளையை மிரட்டுவது போல மிரட்டியவன்.. “ஒருகாலத்துல என் பொண்டாட்டிக்கு உதவியவளாச்சேனு நானும் கிளிப்பிள்ளைக்கு மாதிரி பொறுமையா சொல்றேன்..
சொன்னதையே டிசைன் டிசைனா மாத்தி சொல்லுவியா?” என முறைத்து.. “நீ கல்யாணம் செய்தா செய்துக்கோ.. இல்ல எக்கேடோ கெட்டுப்போ.. எங்கம்மாக்கு கால் பண்றது, இல்ல வீட்டுப்பக்கம் வரதுனு வச்சிக்கிட்ட.. அசிங்கப்படுத்திடுவேன் ஜாக்கிரதை.” என எச்சரித்து கிளம்பினான் தேவேஷ்.
***** **** *****
தான் எச்சரித்து கிளம்பியதும், தன் கையில் உள்ள உணவு பார்சலை வீசியெறிந்த மங்கை.. அவ்வீட்டின் மதில்சுவர் மீது சாய்ந்தாள் பெருகிய கண்ணீரோடு.
தேவா முன் தெளிவாய், பிடிவாதமாய், பொறுமையாய் என பல பாவனையில் திடமாய் பேசினாலும்.. அவன் கிளம்பிய பின்னே, பிடித்தமில்லாதவனை திருமணத்திற்கு கெஞ்சும் தன் நிலையை நினைத்து கலங்கியவளின் மனவலியை அவளின் கண்கள் உணர்த்த.. தேவாவின் பைக் கண்ணாடி அதனை தெளிவாய் காட்டியதில்..
தான் எத்தனை எடுத்துரைத்தாலும் சிறு பிள்ளையாய் பிடிவாதம் செய்யும் மங்கை மீது, நினைத்த காரியத்தை இறுதி வரை செயல்படுத்தும் துணிவில்லாமல், அவளின் இன்னுயிரையும் மாய்த்துக்கொண்டு, தன்னையும் இந்நிலைக்கு ஆளாக்கிய ஷர்மிளா மீது, மனைவி இறந்த பின்னே, தன் மனம் உணராமல், மறுமணம் பற்றி மங்கையிடம் பேசிய அன்னை மீதென அனைவர் மீதும் கோபம் வர.. அத்தனை கோபத்தோடு வீட்டினுள் நுழைந்தான் தேவேஷ்.
தேவேஷின் கோபம் புரியாமல்.. “தேவா.. மங்கைக்கு புது நம்பரும் தெரிஞ்சிடுச்சிடா, கொஞ்சம் முன்ன போன் செய்தா..
குழந்தையை பார்க்கனும்னு எப்போ தோணினாலும், எனக்கு ஃபோன் செய்துட்டு வீட்டுக்கு வருவேனு சொல்றா தேவா.” என்றார் ஆச்சர்யமாக.
தேவேஷ் அன்னையை முறைக்க.. “சத்தியமா நான் நம்பர் கொடுக்கலடா.” என்றார் பாவமாக.
“இல்ல தேவா, நானும் கொடுத்தில்ல, அவளும் கேட்டதில்ல..” என்று கற்பகம் மறுக்க.. அன்னையின் பேச்சு பொய்யில்லை எனப்புரிய, மருத்துவமணையில் மங்கை கட்டிய பணத்தை கொடுத்தனுப்பியபோது, அபிராமியிடமேது நம்பர் வாங்கியிருப்பாளோ?
தற்போது வீடு காலிசெய்வது தெரிந்ததும் அபிக்கு அழைத்து தன் எண்ணை வாங்கியிருப்பாளோ? என சந்தேகம் வந்தாலும், என் அனுமதியில்லாம அபி நம்பரை கொடுக்காதே.. என்ற எண்ணமும் தோன்ற.. குழப்பத்தோடே அபிக்கு அழைத்தான்.
“ம்.. எல்லாம் அவங்களையே அடுக்க சொல்லிட்டேன், எதெது எங்க வைக்கனும்னு அம்மா சொல்லவும், அதுபோலவே ஒரு மணிநேரத்துல அடுக்கிட்டாங்க..” என விளக்கமளித்து, “அன்னைக்கு பணம் கொடுக்க போனப்ப அந்த பொண்ணுகிட்ட உன் நம்பர் கொடுத்தியா?” என்றான்.
“நான் கொடுக்கல தேவா, ஆனா..” என மங்கையிடம் எப்படி அனைவர் நம்பரும் சென்றது என ஒருமணி நேரம்முன் மங்கை சொன்னதை விளக்கினாள்.
அபிராமியிடம் பேசி முடித்தவன்.. “யாரானாலும் பெட்ரூம் வரை வர அனுமதிப்பியா?” என முறைத்தான் கற்பகத்தை.
“பெட்ரூம்க்குள்ள யார் வந்தா.?” என யோசிக்க, நியாபகம் வந்தவராய்.. “இரண்டு நாள் முன்ன மங்கைதான் வந்தா தேவா.. சஞ்ஜய்க்கு குளிக்க வச்சிட்டிருக்கும்போது, என் போன்லயிருந்து நம்பர் எடுத்துட்டாளா?” என்றார் மெச்சுதலாக.
அவள் நம்பர் எடுத்ததை விட, அதை அன்னை பாராட்டுதலாய் சொன்னது இன்னும் கோபத்தை உண்டாக்க முகம் சிவக்க முறைத்தான் கற்பகத்தை.
இதுக்கே இப்படி முறைக்கிறானே.. மங்கை போன் செய்தபோது, இனி புது இடத்துல எப்படியிருக்கப்போறேன்? குழந்தைக்கு மருந்து கொடுக்க சந்தேகம் வரும்போது யார்கிட்ட கேட்பேன்னு புலம்பும்போது..
நான்தான் உங்க நம்பர் கண்டுபிடிச்சிட்டேன்ல? என்மகனுக்கு எதாவதுன்னா உடனே எனக்கு போன் செய்ங்க என தேற்றி.. எப்பவும் உங்க பிரச்சனையையே யோசிக்காதிங்க ஆன்ட்டி..
வீடு காலி பண்ணினதும் நல்லதுதான், அப்போதான் உங்க மகனுக்கு ஷர்மிளாக்கா நியாபகம் குறையும், அதுதான் எனக்கும் என் மகனுக்கும் நல்லது.. இந்த புதுவீடு, உங்க மகனுக்கு புதுவாழ்க்கைகான ஆரம்பம்னு நினைச்சிக்கோங்கனு எனக்கே புத்தி சொன்னது..
முக்கியமா என் பேரன் என்றது போய் வார்த்தைக்கு வார்த்தை என்மகன்னு சொன்னது எல்லாமும் தெரிஞ்சா என்ன பண்ணுவானோ என கலவரமாய் நினைத்தவர்.. மகனின் முறைப்பிற்கு வழக்கம்போல் பதில் கொடுக்காமல்.. கிச்சன் சென்று வந்து.. “புது வீடுனு கேசரி செய்தேன்.. சாப்பிடு தேவா.” என கேசரியை நீட்டினார்.
ஆஹா.. மங்கை சொன்னது சரிதான் போல, புது வீட்டுக்கு வந்ததும் மங்கையை நினைக்கிறானே என கற்பகம் மனதினுள் ஆச்சர்யப்பட, அன்னையின் முகத்தை பார்த்தவன்.. “நீ சந்தோசப்படுற அளவுக்கு நான் இப்போ என்ன சொல்லிட்டேன்?” என்றான் முறைப்பாக.
“நான் சந்தோசப்படுற அளவுக்கு நீ என்னைக்குடா நடந்திருக்க? பேசியிருக்க?” என தானும் முறைத்து.. “மங்கை நினைக்கிறதுல ஒரு தப்பும் இல்ல.. தவிர, குழந்தைமேல அவளுக்கும் உரிமையிருக்கு..” என்றதுதான்.. “ம்மா..” என கத்தினான் ஆத்திரத்தோடு.
“இத்தனை வயசுலயும் உங்க மகனுக்காக நீங்க பார்க்கும்போது, என் குழந்தையை எப்படி என்னால விடமுடியும்னு கேக்குறவகிட்ட எனக்கு பதில் சொல்ல தெரியல தேவா..
அதோட மங்கையை சுலபமா நினைக்காத.. உன்னை கல்யாணம் செய்துக்கிறதுல ரொம்ப உறுதியா இருக்கா, புத்திமதி சொல்லி ஊருக்கு அழைச்சிட்டு போக வந்த அவங்கம்மாவையே என் குழந்தை என் வாழ்க்கை, இதுல நீ தலையிடாதனு நியாம்பேசி அனுப்பி வச்சிட்டாளாம்.
வீட்டை காலி செய்து ஒருநாள் ஆகல, அதுக்குள்ள என் புது நம்பர், நாம எங்க குடி வந்திருக்கோம்ன்ற வரைக்கும் கண்டுபிடிச்சிட்டா, இதுல நான் போன்ல பேசலைனா மட்டும் உடனே அவ நினைப்பை மாத்திக்கப்போறாளா?” என மங்கையின் உறுதியை மகனுக்கு விளக்கினார்.
அவள்தான் சின்னப்பெண் புரியாமல் இருக்கிறாள் என்றால், என்னை நன்குணர்ந்த அன்னையும் திருமணத்தில் உறுதியாய் இருப்பது கோபத்தை அதிகரிக்க.. “கல்யாணத்துக்கு நீயும் அவளும் நினைச்சிட்டா போதுமா? நான் நினைக்க வேணாமா? எத்தனை வருசத்துக்கு இப்படி உளறிட்டிருக்கப் போறிங்கனு பார்த்துடறேன்.” என்றான் சவாலாக.
அட போடா, நீயும் உன் சவாலும் என நினைத்து.. “இங்கயிருந்து உன் கம்பெனிக்கு போக எவ்வளோ நேரமாகும்? காலைல எத்தனை மணிக்கு டிபன் ரெடி பண்ணனும்? நாம இருக்க தெரு பேரென்ன? இங்கையாவது மார்கட் பக்கத்துல இருக்கா? இல்ல அங்கபோல நீ வாங்கி வரதைதான் சமைக்கனுமா?” என்றார்.
தன் கோபத்தை பொருட்டாக நினைக்காத அன்னையை முறைத்தவன்.. “மார்கெட் பக்கத்துலதான் இருக்கு, ஆனா குழந்தையை வச்சிக்கிட்டு நீ போக வேணாம், என்ன வேணும்னு சொல்லு, நானே வாங்கி தரேன்.
இங்கயிருந்து கம்பெனிக்கு பத்து நிமிஷத்துல போய்டலாம்.. நான் லேட்டா கிளம்புவேனு டிபன் லேட்டா செய்யாத, வழக்கம்போல எட்டரைக்கு செய்து சாப்பிடு. எனக்கு ஆறினாலும் பரவாயில்ல.” என முறைப்போடே சொல்லி, முக்கிய ஆவணங்களை எடுத்து வைக்க அறைக்குள் சென்றான்.
*** *** ***
குழந்தை அருகிலிருக்கும்போது மகனை பெரிதாய் கொஞ்சியதோ, அவனிற்காக நேரம் செலவிட்டதோ கிடையாது. ஆனால் கற்பகம் காலிசெய்த பின்னே குழந்தையைக் காண தவித்துப்போனாள் மங்கை.
கற்பகத்திடம் இருப்பதும் பட்டன் கைப்பேசி என்பதால் வீடியோகாலுக்கும் வழியில்லை. குழந்தையை காண செல்லலாம் என்றால்.. நான் வரும்போது நிச்சயம் தேவாவிடம் பேசுகிறேன், அதுவரை திருமணம் குறித்து தேவாவிடம் பேசுவதோ, அவரை காண முற்படுவதோ கூடாது, அது இன்னும் சிக்கலை உண்டாக்கும் என அறிவுறுத்தியிருந்தான் அறிவுக்கரசு.
அண்ணனின் ஆணைக்கிணங்கி தேவா வீட்டிற்கு செல்வதில்லையென்றாலும், தினமும் போனில் கற்பகத்திடம் குழந்தையின் நலத்தையும், அவனின் புதுப்புது செய்கைகளையும் விசாரிப்பாள்.
மதிய நேரம்தான் மங்கைக்கு ஓய்வுநேரம் என்பதால் அப்பொழுதுதான் கற்பகத்திற்கு அழைப்பாள். பத்து நிமிட பயணத்தில் வேலைசெய்யும் இடமென்பதால் தற்போதெல்லாம் மதிய உணவிற்கு தேவா வீட்டிற்கு வரவே, சில நேரம் தேவா வரும்போது அவசரமாக இணைப்பை துண்டிப்பார் கற்பகம்.
அதிலேயே அவளோடுதான் பேசுகிறார் எனப்புரிந்த தேவா.. மங்கையை பயமுறுத்துவதற்காக, குழந்தை குறித்து விளக்கி, வக்கிலிடம் ஆலோசனை செய்தான்.
மனைவி இருக்கும் பட்சத்தில் டோனருக்கு எவ்வித உரிமையுமில்லை, ஆனால் ஷர்மிளா தற்போது இல்லையென்பதாலும், அன்னை உங்களை மறுமணம் செய்ய வலியுறுத்துவதாலும், குழந்தை மீது அப்பெண்ணிற்கும் உரிமை உண்டு.
ஆனாலும் நாம ஜெயிச்சிடலாம் என ஒரு சில முக்கிய விசயங்களை சொன்னார் வக்கீல்.. ஆனால் வெற்றிக்காக வக்கீல் சொன்ன விசயங்களை வைத்துப் பார்க்க, குழந்தையின் ஜெனட்டிக் அம்மா மங்கை என்பதும், ஷர்மிளாவிற்கும் குழந்தைக்கும் எவ்வித சம்மதமும் இல்லையென்பதும் வெட்ட வெளிச்சமாகிடும் என்றும் சொல்ல, சட்டப்படி மங்கையை பயமுறுத்த நினைத்ததையும் கைவிட்டான் தேவேஷ்.
இப்படியாக மூன்று மாதங்கள் கழிந்திருக்க, தன் திருமணத்திற்காக தாய்நாடு வந்தான் அறிவுக்கரசு. இம்முறையும் அன்னையிடம் செல்லாமல் தங்கை தங்கியிருக்கும் வீட்டிற்குதான் வந்தான்.
மங்கையின் கலையிழந்த முகமே குழந்தைக்கான அவளின் தவிப்பை எடுத்துரைக்க.. ஆராதனாவை பார்க்கும் ஆவலை தள்ளி வைத்து முதலில் தேவேஷை பார்க்க முடிவெடுத்து, தங்கையிடம் தேவேஷின் எண்ணை வாங்கி அவனிற்கு அழைத்தவன், தன்னை அறிமுகம் செய்து, வீட்டிற்கு வரேன், உங்க்கிட்ட நேர்ல பேசனும்.” என்றான்.
மங்கை சிறு பெண், இவனிடம் தன்னிலையை எடுத்துரைக்கலாமென அறிவை சந்திக்க முடிவெடுத்தான் தேவேஷ். ஆனால் அன்னை முன்பு பேசினால் சரிவராதென, மங்கை வீட்டிற்கும், தான் இருக்கும் இடத்திற்கும் இடைப்பட்ட இடத்திலுள்ள ரெஸ்டாரண்டில் சந்திப்பதாக சம்மதம் தெரிவித்தான்.
அறிவு.. “மங்கை.. நீ ஹாஸ்பிட்டல் போ, நான் தேவேஷை பார்த்துட்டு வரேன்.” என்று சொல்ல.. “நீ அவர்கிட்ட பேசு, நான் குழந்தையை பார்த்துட்டு ஆன்ட்டிகிட்ட பேசிட்டிருக்கேன்.” என்றாள் கெஞ்சலாக.
அறிவு.. “ப்ச்.. அவர் வீட்டுக்கு வரசொல்லலை, ரெஸ்டாரண்ட்க்கு வர சொல்லியிருக்கார், தேவா தனியாதான் வரார், நீ இருந்தா ஃப்ரீயா பேசமுடியாது. கண்டிப்பா குட்நியூசோடதான் வருவேன். தைரியமா ஹாஸ்பிட்டல் போ.” என அன்பு கட்டளையிட்டான்.
சரியென சமத்தாய் தலையசைத்த மங்கையாவது இன்று மருத்துவமணைக்கு செல்வதாவது.. “எந்த ரெஸ்ட்டாரண்ட் போறனு சொல்லு, அங்க என்ன டிஸ் நல்லாயிருக்கும்னு சொல்றேன்.. வரும்போது குட்நியூசோட குட் ஃபுட்டும் வாங்கி வருவியாம்.” என்றாள் சலுகையாக.
அறிவு.. “திண்ணிமூட்டை..” என சிரித்தவன், ரெஸ்ட்டாரண்ட் பெயரை சொல்லி, மங்கைக்கான மெனுவையும் கேட்டுச்சென்றான்.