திருமணம் குறித்து தேவா யோசித்ததிலேயே ஆசுவாசமான மங்கை.. தேவா இரட்டை அர்த்தத்தில் சொல்வது புரியாமல்.. “நான் வேலைக்குப் போறேன், என் செலவை நான் பார்த்துப்பேன்.. எதுக்கும் உங்ககிட்ட வந்து நிக்கமாட்டேன்..” என்றாள் ரோசமாக.
தேவாவின் வெளிப்படையான கேள்வியில், இப்படி திருமணம் தேவைதானா என அறிவின் முகம் வேதனைக்குள்ளாக.. அதை கவனித்த தேவா..
அறிவிடம்.. “உங்க தங்கையோட மெச்சூரிட்டி என்னனு இப்போ தெரிஞ்சிருக்குமே.. கூட்டிட்டு போய் நல்ல டாக்டரா பார்த்து கௌன்சிலிங் கொடுங்க.. தன்னால சரியாகிடுவா.” என நக்கலாக சொல்லி எழவும்தான் மங்கைக்கு தேவா கேள்வியின் அர்த்தம் புரிந்தது.
“அறிவு.. நீ போ.. நான் பேசிட்டு வரேன்.” என்றாள் உள்ளடக்கிய கோபத்தோடு.
அருகிலிருப்பவர்கள் பார்க்கவும்.. தன் முன்னாலே இப்படி பேசியவன், நான் சென்றபின்னே இன்னும் அசிங்கமாக பேசி தங்கையை அவமதித்தால் என்ன செய்வதென.. “இனி பேசறதுக்கு எதுவுமில்ல.. நீ முன்ன சொன்னமாதிரி இவர் வேற பொண்ணை கல்யாணம் செய்துக்கிட்டதும் லீகலா குழந்தையை வாங்கிக்கலாம்.. வா..” என்றான் கட்டளையாக.
என்னயிருந்தாலும் உடன் பிறந்தவன் அருகிலிருக்க தேவா பேசியது அத்தனை கோபத்தை வரவழைத்திருக்க, பதில் கொடுக்காமல் அவ்விடம் விட்டு மங்கையால் நகர முடியவில்லை.. “போகப்போறியா? இல்ல உன் முன்னாடியே பேசவா?” என்றாள் கோபமாக.
“எல்லாத்துலயும் பிடிவாதம்” என தங்கையை முறைத்து அவ்விடம் விட்டு நகர்ந்ததும்.. “என் குழந்தைக்கு அம்மாயில்லாம போய்டக்கூடாதுன்றது மட்டும்தான் என் எண்ணம்.. அதுக்காகத்தான் உங்களை கல்யாணம் செய்துக்க முடிவுசெய்தேன்..
ஆனா உங்களுக்கு அப்படியில்ல போல, குழந்தைக்கு அம்மா மட்டும் போதாது, உங்களுக்கு பொண்டாட்டியும் வேணும்ன்றதாலதான் என்னை மறுக்கிறிங்கனு இப்போதான் தெரியுது..
உங்க கீழ்த்தரமான எண்ணம் தெரியாம, நம்ம மகன் கல்யாணத்துக்கு சம்மதிக்கமாட்டானு ஆன்ட்டி தப்பு கணக்கு போட்டுருக்காங்க..” என முகம் சுழித்து சொல்ல.. “ஏய் வாயை மூடு.. இல்ல பொது இடம்னு கூட பார்க்கமாட்டேன்..” என பல்லை நெறித்தான் தேவேஷ்.
“எங்கண்ணன் முன்ன நீங்க அப்படி கேட்கலாம்.. அவனை அனுப்பிட்டு தனிப்பட்ட முறையில உங்களைப் பத்தின உண்மையை சொன்னதும் அப்படியே பத்திட்டு வருதா?
“எங்கண்ணன் என்னைத்தான் பார்த்திட்டிருப்பான்.. சீன் கிரியேட் பண்ணாம கையை விடுங்க..” என முறைத்தாள்.
இவளைப் பார்க்கும்முன் அறிவிடம் சொன்னதனைத்தும் மறைந்திருந்து கேட்டுக்கொண்டுதான் இருந்திருப்பாள்.. தற்போதும் குழந்தை மட்டும் போதுமா என கேட்டபின்னும் கூட, நம்மோடான திருமணம் வேண்டாம் என்று சொல்லாமல் பதிலுக்கு தன்னை அவமானப்படுத்தி நிம்மதியடைபவளிடம் என்ன சொல்லி புரிய வைப்பது? என கடுப்பாக நினைத்தவன்..
இவளுக்கெல்லாம் பட்டாத்தான் புத்தி வரும் என முடிவெடுத்து.. “தொடாம எப்படி தாலி கட்டுறது?” என முறைப்போடு கேட்டு அவளின் கையை விடுத்து முன்னே நடக்க..
என்ன? கல்யாணம் செய்ய சம்மதிச்சிட்டானா? என தேவேஷ் பேசியதை மீண்டும் ஒருமுறை மங்கை மனதினுள் கொண்டுவர.. அறிவு உள்ளே வந்தான்.
அறிவிடம்.. “கல்யாண விசயம் பேச எங்கம்மா உங்களை பார்க்கனுமாம்.. அவங்க வர ஒரு மணிநேரமாகும். அதுவரை இங்க பக்கத்துல ஒரு சிவன் கோவில் இருக்கு, உங்களுக்கு ப்ராப்லம் இல்லனா அங்க வெய்ட் பண்ண சொன்னாங்க..” என்று கோவில் இருக்கும் திசை சொல்லி, நிகிலிற்கு அழைத்தான்.
“ம் அர்ஜண்ட்தான்.. வீட்டுக்கு போய் அம்மாவையும் குழந்தையையும் அழைச்சிட்டு.” என தானிருக்கும் இடம் சொல்லி.. “இங்க ஒரு சிவன் கோவில் இருக்கு தெரியும்ல? அங்க வந்திடு. முடிந்தவரை சீக்கிரம் வா.. உன் பைக்ல வேணாம், ப்ரதீப்போட காரெடுத்துட்டு போடா.” என்றான்.
“ஏதும் பிரச்சனையில்லையே.” என நண்பன் பதற..
“பிரச்சனைதான்.. ஆனா நீ சந்தோசப்படுவ.. எல்லாம் இங்க வந்ததுக்கப்புறம் தெரிஞ்சிக்கலாம், சீக்கிரம் அம்மாவை அழைச்சிட்டு வா.” என இணைப்பை துண்டித்து, அருகில் நகைகடை இருக்கிறதா ஆராய்ந்தபடி பைக்கை மெதுவாக செலுத்தினான்.
முக்கால் மணி நேரத்தில் நிகில் கற்பகத்தோடு வந்தான். மகனைக் கண்டதும்.. “என்ன தேவா? அப்போதான் சஞ்சய் தூங்க ஆரம்பிச்சான், எழுப்பவும் ஒரே அழுகை, கார்ல உக்கார்ந்ததும்தான் கொஞ்சம் மட்டுப்பட்டு திரும்ப தூங்கினான்.
அவசரமா கூட்டிட்டு வர சொன்னியாம்.. என்ன விசயம் தேவா?” என பதட்டத்தோடு கேட்க.. “என்னோட முதல் கல்யாணத்தையே நீ பார்க்கல, இரண்டாம் கல்யாணத்தையாவது பார்க்கனும்ல? அதான் கூப்பிட்டேன்..” என்க..
“என்ன தேவா சொல்ற?” என கற்பகமும் நிகிலும் ஒரு சேர கேட்க.. “உள்ள வா..” என மங்கையும் அறிவும் இருக்கும் இடத்திற்கு அழைத்துப்போனான்.
இவளை திருமணம் செய்ய முடிவு செய்தபின்னே, வீட்டில் தெரிவித்தால், பெண்பார்ப்பது, நிச்சயம், என அனைத்தும் முறைப்படி செய்ய திட்டமிடுவார்கள்..
மங்கையின் அன்னைக்கு இத்திருமணத்தில் நிச்சயம் விருப்பமிருக்காது, அவர்களின் எண்ணம் தவறுமல்ல.. ஆனாலும் இவளின் பிடிவாதத்திற்காக அவர்களை சமாதனம் செய்து, விமரிசையாக திருமணம் செய்யும் அளவிற்கு இப்பந்தம் நீண்ட நாள் தொடரப்போவதில்லை..
இரண்டு வருடம் காதலித்து, ஐந்து வருடம் ஈருடல் ஓருயிராய் தன்னோடு வாழ்ந்தவளே தன்னை புரிந்து கொள்ளாமல் உயிரை விடத்துணிந்துவிட்டாள்.. இவளெல்லாம் எம்மாத்திரம்? ஐந்து மாதமோ, ஒரு வருடமோ..
குழந்தையோடான தனது பந்தத்தையும், எத்தனை வருடம் தன்னோடு வாழ்ந்தாலும் என் மனம் அவளை நாடப்போவதில்லை என்ற உண்மையும் புரியும் நேரம் தன்னை விட்டு தன்போல் விலகிடுவாள்..
இப்படி திருமண பந்தத்திற்கு இந்தளவு ஏற்பாடு போதும் என இன்றே திருமணம் செய்ய முடிவெடுத்தான் தேவேஷ்.
அறிவையும் மங்கையையும் கண்ட கற்பகத்தின் மனம் ஆனந்த கூத்தாட.. “மங்கை..” என உள்ளார்ந்து அழைத்தார்.
இன்றே திருமணம் செய்வான் என தெரியாத அறிவு.. “நல்லா இருக்கிங்களா ஆன்ட்டி?” என சம்பிரதாயத்திற்கு விசாரித்தவன்.. “என்கிட்ட கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லாம, மங்கைகிட்ட கல்யாணம் செய்துக்கிறதா சொல்லியிருக்கிறார், உங்ககிட்ட என்ன சொன்னார் ஆன்ட்டி?” என்றான் அறிவு.
இவர்களின் ஆர்பாட்ட பேச்சில் குழந்தை விழித்திட.. மங்கையை கண்டதும் பேந்த விழித்த குழந்தை, அறிவைக் கண்டதும் “ப்பா..” என தாவ.. “ஹே ஸ்வீட் ஹார்ட்.. என்னை தெரியுதா? ஹௌ ஸ்வீட்.. கொஞ்சம் வளர்ந்துட்டிங்க போலயே.. ப்பாலாம் சொல்றிங்க..” என அதிசயித்தவன்..
“அப்பா இல்ல, மாமா சொல்லனும்.” என விளக்கிக்கொண்டிருக்க.. குழந்தையை கண்களால் தழுவிக்கொண்டிருந்த மங்கையிடம் வந்தான் தேவேஷ்.
இன்றே இப்படியான நிகழ்வை எதிர்பார்க்காத மங்கை.. “அறிவு..” என அண்ணன் கைப்பிடிக்க.. “ஏண்டா? சுவாமி முன்ன வச்சாவது தாலி கட்டியிருக்கலாமில்ல? ஆசிர்வதிக்க கூட கையில் ஒன்னுமில்லையே..” என ஆனந்த கண்ணீரோடு மகனை கடுகடுத்த கற்பகம் அருகிலிருந்த துர்கையம்மன் பாதத்திலிருந்து மஞ்சள் குங்குமம் எடுத்து வந்து மங்கைக்கு இட்டுவிட பணிக்க..
“கல்யாணம்னா தாலி கட்டுறது மட்டும்தான் புதுசு.. அதை கட்டிட்டேன், மஞ்சள் குங்குமம்லாம் பொண்ணுங்க யூசுவலா வச்சிக்கிறத்தான்.. அவளையே வச்சிக்க சொல்லு. ” என்றான்.
“சரி அதை மங்கையே பார்த்துப்பா, மெட்டி நீதான் போடனும்.. போட்டு விடு.” என்றார் முறைப்பாக.
நிகிலிடம்.. “தம்பி கோவிச்சிக்காம பக்கத்துல எங்கயாவது கடையிருக்கானு பார்த்து ஒரு ஜோடி மெட்டி வாங்கி வரியா?” என்றார் கெஞ்சலாக.
“இதோ பத்து நிமிஷத்துல வாங்கிட்டு வரேன் ம்மா..” என சந்தோசத்தோடு நிகில் கிளம்பியதும், “சஞ்சய் குட்டி, மாமாகிட்ட சமத்தா இரு, இந்தா வந்துடறேன்.” என்று வெளியேறிய கற்பகம் கோவிலுக்கு வெளியே உள்ள பூக்கடையில் இரண்டு மாலைகளை வாங்கியவர், மங்கைக்கு மல்லிப் பூவை தேடினார்.
தேவாவிடம் தன் மங்கை நிலையை எடுத்துரைத்து, இருவரின் சம்மதத்தோடு திருமணம் செய்யலாம்.. ஆடம்பர திருமணத்தில் தேவாவிற்கு விருப்பமில்லையென்றாலும், அவர் விருப்பம்போல் எளிமையாகவும் நெருங்கிய சொந்தங்களின் ஆசிர்வதத்தோடும் திருமணம் நடத்தலாம் என திட்டமிட்டிருந்தான் அறிவுக்கரசு.
தற்போது தன் திட்டம் அனைத்தும் மாறியிருக்க, ஒரு அண்ணனாக அறிவுக்கரசிற்கு இத்திருமணம் சந்தோசத்தை கொடுக்கவில்லை.
இப்படி திருமணம் தேவைதானா என அறிவின் முகம் அதீத வேதனையில் இருக்க.. அண்ணனின் வேதனை தாளமுடியாமல்.. “இனி தேவா யாரை கல்யாணம் செய்துப்பாரோன்ற டென்சன் இல்லாம நிம்மதியா இருப்பேன் அறிவு.. இந்த கல்யாணத்துல எனக்கு சந்தோசம்தான்..” என்றாள்.
“அம்மாக்கு எப்படி சொல்றது?” என அறிவுக்கரசு முறைக்க.. மங்கையின் கண்கள் கலங்கிக் கவிழ்ந்தது.
மங்கையிருக்கும் நிலையில் நாமும் கோபத்தை காட்டவேணாம் என.. “ஹேய்.. விடு, அம்மாவை நான் சமாளிச்சுக்கிறேன்.” என தங்கையின் கண்ணீர் துடைக்க.. “அறிவு..” என கட்டிக்கொண்டு பெரிதாய் அழுதாள் மங்கை.
ஐந்தடி இடைவெளியில் இருந்தபோதும், தங்கையின் அழுகையில் சிறிதும் அசராமல் யாரோபோல் போனில் கவனமாக இருக்கும் தேவேஷை பார்த்தவாறு.. “எத்தனை நாளைக்கு மச்சான் விறைப்பாவே சுத்தப்போறார்.? விடு பார்த்துக்கலாம்.” என சிகையை வருடிக்கொடுத்தான்.
பூவோடும் மாலையோடும் கற்பகம் வர, “ம்மா..” என சஞ்சய் கற்பகத்திடம் போக கீழிறங்க முயற்சிக்க, “கொஞ்சநேரம் மாமாகிட்ட இருடா குட்டி..” என சந்தோசத்தோடு சொல்லி, மங்கைக்கு பூ வைக்க எத்தனிக்க.. “எதுக்கு ஆன்ட்டி..?” என மங்கை தடுமாற.. “கல்யாணமான பொண்ணு பூ இல்லாம இருக்கக்கூடாது.” என சூடிவிட, மெட்டியோடு நிகில் வந்தான்.
மங்கையிடம் ஒரு மாலையை கொடுத்து.. “தேவா.. வந்து மாலை மாத்திட்டு, மெட்டி போட்டுவிடு.” என மகனை அழைக்க.. “ம்..” என வந்தவன்.. “இந்த வேலையோட கல்யாணம் முடிஞ்சது.. இன்னும் எதையாவது இழுத்து விடாதம்மா, எனக்கு கம்பெனிக்கு டைம் ஆகுது.” என அன்னையிடம் பேசியவாறே மாலை அணிவித்து, மங்கையிடமிருந்த மாலையை பறித்தவன்..
“உனக்கு என் உயரம் எட்டாது.” என்று தானே போட்டுக்கொண்டான்.
தந்தையின் செயிலில் குழந்தைக்கு என்ன தெரிந்ததோ.. “ப்பா..” என மங்கையையும் தேவாவையும் மாறி மாறி பார்த்திருந்தான் சஞ்சய்.
மங்கை கழுத்தில் மாங்கல்யம் அணிவித்தபோது, இது மங்கைக்கான தண்டனை, பட்டால்தான் இவளுக்கு புத்திவரும் என்ற கோபத்தோடு இருக்கவும் அந்த நொடி ஷர்மிளா நினைவிற்கு வரவில்லை.
ஆனால் தற்போது தானே போட்டுக்கொண்ட மாலையென்றாலும், தன் கழுத்தில் மாலை ஏறியதும் ஷர்மிளாவோடான திருமணம் நினைவில் வர, குழந்தையின் அழைப்பு கூட தேவாவின் கவனத்தில் இல்லை..
“மெட்டி போட்டுவிடு தேவா..” என்று கற்பகம் மெட்டியை நீட்ட, தேவா முகத்தின் வேதனையறிந்த நிகில்.. “தேவா போட்டு விடுடா..” என்றான் கெஞ்சலாக.