“டியூட்டில இருக்கும்போது கூட போன் பார்க்கலனா ஆகறதில்ல..” என முனுமுனுத்தவாறு வயதான பெண்மணி ஒருவர் மங்கையை கடந்து சென்றார்.
ஆனால் அவளின் பணி நேரம் முடிந்த பின்னேதான் போன் பேசிக்கொண்டிருக்கிறாள் என அப்பெண்மணிக்கும் தெரியவில்லை.. செவிலியர் அறையில் அதீத சோர்வோடு அமர்ந்து பேசிக்கொண்டிருக்கும் மங்கையின் காதிலும் அவரின் பேச்சு விழவில்லை.. “ம்மா.. இன்னும் இரண்டு மாசத்துல எனக்கு படிப்பு முடிஞ்சிடும்.. அதுக்கப்புறம் என்ன செய்யிறது?” என தன் அன்னையோடு பேசிக்கொண்டிருந்தாள் மங்கை.
“அங்கையே எதாவது தனியார் ஹாஸ்பிட்டல்ல வேலைக்கு கேட்டு வை மங்கை.. படிப்பு முடிஞ்சதும் ஜாயின் செய்துக்கலாம்.” என்றார் தவமணி.
“கேப்பே விடாம திரும்பவும் ஹாஸ்பிட்டல் வாசமா? ஒரு இரண்டு மாசத்துக்கு நான் அங்க வரேனே..” என்றாள் கெஞ்சலாக.
“வேணாம் மங்கை.. என் ஃபிரண்டோட மகனுக்கு உன்னை பேசி முடிக்கலாம்னு இருக்கேன்.. பையன் பிஜி பண்ணிட்டிருக்கானாம்.. அவனுக்கும் படிப்பு முடிய போகுது..
“ம்மா.. வீணா ஆசைப்படாத.. டாக்டர் நர்ஸை கல்யாணம் செய்துக்கிறதே பெரிய விசயம்.. இதுல எம்.எஸ் பண்றவன் எப்படி என்னை கல்யாணம் செய்துப்பான்?” என எடுத்துரைத்தாள்.
“நர்ஸ்னா கேவலமா?” என அதட்டி.. “என் பொண்ணு அழகுக்கே பத்து பைசா வரதட்சணையில்லாம கட்டிட்டு போவானுங்க..” என்றார் பெருமையாக.
“எல்லா அம்மாக்களுக்கும் பெத்த பொண்ணு அழகுதான்.. அதை மத்தவங்க சொல்லனும்.. அப்படியே அழகிருந்தாலும் இந்த காலத்துல குணத்துக்காகவும் அழகுக்காகவும் நடக்குற கல்யாணத்தை விட பணத்துக்காக நடக்குற கல்யாணம்தான் அதிகம்.. அதுலயும் பலபேர் பணத்தோட சேர்த்து ஃபேமலி பேக்ரௌண்ட் பார்ப்பாங்க.. அப்படி பார்த்தா நாம ஜீரோல வந்து நிப்போம்.. நீ தேவையில்லாம ஆசையை வளர்த்துக்காத.. நீ நினைக்கிற மாதிரி ஃப்ரண்ட்ஸிப்க்காகலாம் யாரும் என்னை மருமகளாக்கிக்கமாட்டாங்க..” என்றாள் உறுதியாக.
“அபத்தமா பேசாத மங்கை..” என அதட்டி.. “நான் வைக்கிறேன்.. நீ நேரத்தோட ரூம்க்கு போ.” என இணைப்பை துண்டித்தார் தவமணி.
எத்தனை எடுத்துரைத்தாலும் புரிந்துகொள்ளாமல் தன் அன்னை இத்தனை கனவுகளோடு இருக்கிறார்களே.. தன் தந்தையின் நடவடிக்கைக்கு நம்மை மனிதர்களாக மதிப்பதே பெரிய விசஷயம்.. இதில் பெண்ணெடுப்பதெல்லாம் நடக்கும் காரியமா? என பெருமூச்சிழுத்தாள் மங்கை எனும் மங்கையர்கரசி.
மங்கையின் அப்பா தாமோதரன்.. தவமணி மூன்றாம் ஆண்டு மருத்துவம் பயின்றுகொண்டிருக்கும்போது தாமோதரனின் கண்ணில் பட்டார். அப்பொழுது சப்இன்ஸ்பெக்டராக பணிபுரிந்துகொண்டிருந்த தாமோதரன் தவமணியிடம் நாளை உனக்கும் எனக்கும் கல்யாணம் என முதல் சந்திப்பிலேயே தன் விருப்பத்தை தெரிவிக்க மிரண்டுபோனார் தவமணி.
தவமணியின் அழகு தாமோதரனை நிலைகுழையச் செய்ய தனக்கு பழக்கமேயில்லாத பொறுமையை கையாண்டு, அப்பாம்மாக்கு நான் ஒரே மகன்.. உன்னை பார்த்ததும் பிடித்ததால் கல்யாணத்துக்கு கேட்கிறேன்.. அந்த மரத்தடியில உக்கார்ந்து படிச்சிட்டிருந்த.. பத்து நிமிஷமா உன்னையேதான் பார்த்திட்டிருந்தேன்.. நான் மட்டுமில்ல, இங்க படிக்கிற நிறைய பசங்க உன்னத்தான் பார்த்திட்டிருக்காங்க..
அது எனக்கு சுத்தமா பிடிக்கல, இனி என்னைத்தவிர யாரும் உன்ன ரசிக்க கூடாது.. அதுக்கு உடனே நம்ம கல்யாணம் நடந்தாகனும்.. நானும் நல்ல குடும்பத்தை சேர்ந்தவன்தான்.. நாளை காலை அப்பாம்மாவோட பெண்பார்க்க வரேன்.. காலேஜ்க்கு லீவ் சொல்லிட்டு பத்திரமா வீட்டுக்கு போ..” என கண்டிப்போடு சொல்லிச் சென்றார்.
சொன்னதுபோல் அடுத்தநாள் காலை ஏழு மணிக்கெல்லாம் தவமணியின் வீட்டிற்கு தன் தாய் தந்தையோடு வந்தார் தாமோதரன்.
தாமோதரன் வரவை சற்றும் எதிர்பாராதவளிற்கு.. இவன் பேரென்னனு கூட நமக்கு தெரியாது.. சொன்ன மாதிரியே வந்துட்டானே.. இவனிற்கு எப்படி நம்ம வீடு தெரியும்.? நேற்று பார்த்ததிற்குள் இத்தனை அவசரமா? என பதட்டத்தோடு உள்ளிருந்தார் தவமணி.
இங்கே தவமணியின் பெற்றோரிடம் உங்க பொண்ணைத் தவிர யாரையும் என் மகன் கட்டிக்க மாட்டான்.. கல்யாணத்தை எப்போ வச்சிக்கலாம்.?” என தாமோதரன் பெற்றேர் கேட்க..
“இன்னும் பொண்ணையே பார்க்கல, அதுக்குள்ள கல்யாணம் வரைக்கும் போய்ட்டிங்க.. கட்டிக்கபோறவங்களை என் பொண்ணுக்கு பிடிக்கனும்.. அப்படியே பிடிச்சாலும் அவ படிப்பு முடியனும்.. கல்யாணமாகி பத்து வருசம் குழந்தையில்லாம தவமிருந்து பிறந்த பொண்ணுங்க என் பொண்ணு.. எங்க பொண்ணை டாக்டராக்குறதுதான் என் வாழ்நாள் சந்தோசம்.. படிப்பை முடிச்சதுக்கப்புறம் கல்யாணம் செய்யலாம்னாலும் ஜாதக பொருத்தம் பார்க்கனும்.. ஒருவேளை பொருத்தம் சரிவந்தாலும் எங்க வீட்டு பெரியவங்ககிட்ட கேட்கனும்..” என்றனர் தவமணியின் பெற்றோர்.
ஓ.. இத்தனை இருக்கிறதா என நினைத்த தாமோதரன்… “தவமணியும் நானும் நேத்தே பார்த்துட்டோம்.. கல்யாணத்துக்கும் சம்மதம் வாங்கிட்டேன்.. தவமணி ஜாதகம் கொடுங்க நாங்க பொருத்தம் பார்க்கிறோம்.. பார்த்துட்டு என் ஜாதகமும் தரேன்.. நீங்களும் பார்த்துக்கோங்க.. மதியம் வந்து ஜாதகம் வாங்கிக்கிறேன்.. இப்போ கிளம்பறோம்.. எனக்கு அர்ஜன்ட் வேலையிருக்கு..” என பெற்றோரை பார்க்க.. இருவரும் எழவே பெண் பார்க்கும் வைபவம் முடியாமலே கிளம்பியிருந்தனர்.
அடுத்தநாளே திருமணத்தை முடித்துக்கொள்ளலாம் என நினைத்த தாமோதரனிற்கு அடுத்தடுத்த வேலைகள் வரிசை கட்டி நிற்க.. தவமணியை பார்த்து வந்து ஒன்பது நாள் கடந்திருந்த நிலையில் அன்று கல்லூரி வளாகத்தில் மீண்டும் சந்தித்தான்.
இம்முறை காக்கி சீருடையில் இருக்கவும்.. அச்சோ இவன் போலீசா என விழிவிரித்தாள் தவமணி. “வா.. வெளில போகனும்..” என்றான்.
“இல்ல நான் மாட்டேன்.. நான் சம்மதம் கொடுக்காமலே எங்கப்பாம்மாகிட்ட நான் சம்மதிச்சதா சொல்லியிருக்கிங்க..” என தவமணி கோபத்தோடு மறுக்க.. “நீ வரலைன்னா காலேஜ்ல பர்மிஷன் கேட்டுட்டு கூட்டிட்டு போவேன்.. அப்புறம் எல்லாரும் எதோ குற்றவாளியை போல பார்ப்பாங்க..தேவையில்லாத பிரச்சனை வரும்.. இப்பவே நான் யுனிஃபார்ம்ல இருக்கிறதால சுத்தி எல்லாரும் எப்படி பார்க்குறாங்க பாரு..” என்றான் தன் கண்களை சுழற்றி.
தவமணி கண்கள் கலங்கவே.. “ச்சு.. எதுக்கு அழற? உன்ன ஒன்னும் பண்ணமாட்டேன் வா..” என முன்னே போனான். தவமணி பின்னே போக.. தனது புல்லட்டில் ஏறி ஸ்டார்ட் செய்ய.. இவள் மிரள.. “நீ எதுல வந்த?” என்றான்.
“நான் என்னோட டி.வி.எஸ் ல..” என்கவும்.. “சரி போய் எடுத்துட்டு வா.. நான் கேட்கிட்ட வெய்ட் பண்றேன்.” என வெளியேறினான்.
இத்தனை தைரியமாக உள்ளே வந்தவன்.. தற்போது நாம் போகவில்லையென்றால் விடமாட்டான் என்றுணர்ந்து.. வேறு வழியின்றி தன் வண்டியை எடுக்க போனார் தவமணி.
சற்று தூரம் சென்றதுமே அவனின் கன்ட்ரோலில் இருக்கும் ஸ்டேஷன் வர.. அதுவரை அவளிற்கு பின்னே மெதுவாக வந்துகொண்டிருந்தவன் தற்போது முந்திச் சென்று “வண்டியை நிறுத்து..” என்றான்.
“இங்க..” என தவமணி தடுமாற.. “நீ வர வேணாம்.. ஒரு இரண்டு நிமிஷம் வெய்ட் பண்ணு..” என உள்ளே சென்று வந்தவன்.. பின்னே கோவில் அழைத்து போனான்.
கோவிலுக்குள் செல்ல பணித்ததும் தவமணிக்கு இவனின் திட்டம் புரிய.. “அப்பாம்மாக்கு தெரியாம என்னால கல்யாணம் செய்துக்க முடியாது.” என்றாள் பதட்டமாக.
படிப்பை முடிச்சதும் கல்யாணம் செய்துக்குவதான? அதை இப்பவே செய்துக்கலாம்.. எனக்காக ஒன்னே ஒன்னை மட்டும் விட்டுடு.. அது உன் படிப்பு.. அங்க பசங்க உன்னை பார்க்கும் பார்வை எனக்கு பிடிக்கல..” என பேசிக்கொண்டிருக்க ஐயர் மாங்கல்யம் மாலையோடு வரவும்.. “எங்க சிரி..” என எதோ சாதாரண வேலைபோல் மாலை அணிவித்து, அவளின் கையை பிடித்து தனக்கும் மாலை போட்டுக்கொண்டு.. ஒரு சில நிமிடங்களில் தவமணியை தனது மனைவியாக்கியிருந்தான் தாமோதிரன்.
கோவிலில் இருப்பவர்களுக்கு கூட இங்கே ஒரு கல்யாணம் நடந்திருக்கிறது என அறியா வண்ணம் எந்த ஆர்பாட்டமும் இல்லாமல் தனது திருமணத்தை நடத்திக்கொண்டவன்.. அதன் பின்னே தனது புல்லட்டில் அமரச்செய்து நேரே தன் வீட்டிற்கு சென்றான்.
அங்கே சில வாக்குவாதங்கள் நடக்க.. “அப்பா இவங்கப்பாக்கு எனக்கு பொண்ணை கொடுக்க விருப்பமில்ல.. அதான் இப்படி.. விடுங்க.. ஒரு குழந்தை பிறந்த பின்ன அவங்க கோபம் குறைஞ்சி சமாதனமாகிடுவாங்க..” என்றான் சுலபமாக.
தவமணியை கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வந்திருக்கிறான் என தாமோதரன் பெற்றோருக்கு புரியவே மருமகளை எந்த குறையும் சொல்லாமல் ஏற்றுக்கொண்டனர். ஏற்றுக்கொண்டதோடு மகளைப்போல் பார்த்தும்கொண்டனர்.
திருமணத்திற்கு பின் தவமணியின் படிப்பிற்கு முட்டுக்கட்டை போட்ட தாமோதரன் மீது கோபம் இருந்த போதும்.. வேறெந்த குறையுமில்லாமல் அவர்களின் வாழ்க்கை செல்லவே காலப்போக்கில் தவமணியின் பெற்றோருக்கும் மருமகன் மீதிருந்த வெறுப்பு குறைந்தது.
வருடங்கள் போகப்போக தாமோதரனின் செல்வசெழிப்பு அதிகமாகவே.. தவறான வழியில் செல்கிறாயா? என தாமோதரனின் பெற்றோரும் தவமணியும் சந்தேகித்தனர்.
இல்லாதவங்க்கிட்டயோ, யாரையும் வற்புறுத்தியோ வாங்கல.. கொடுக்கிறதெல்லாம் ரொம்ப பெரிய இடம், மறுத்தா எனக்கு டிரான்ஸ்ஃபரோட தேவையில்லாத தொல்லைகள் வரும்.. எதை எப்படி செய்யனும்னு எனக்கு தெரியும்.. வேலை விசயத்துல தலையிடாதிங்க என முடித்துக்கொண்டார் தாமோதரன்.
மங்கை பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது கணவன் தவறான வழியில் பணம் சம்பாதிக்கிறார் என்றும், பெரிய இடத்துல பணம் வாங்கிட்டு அப்பாவி பசங்களோட வாழ்க்கையை நாசமாக்குறார் என தவமணிக்கு ரகசிய தகவல் வரவும்..
தன்னிடம் மிகுந்த அன்போடும், பிள்ளைகளிடமும் மாமனார் மாமியாரிடமும் அக்கறையோடும் இருக்கும் கணவனை.. முகம் தெரியாதவன் சொல்வதற்காக தவமணியால் சந்தேகிக்க முடியவில்லை. அதோடு வேலைவிசயத்தை பற்றி கேட்டால் கணவனிற்கு பிடிக்காதென தாமோதரனிடமும் இவ்விசயத்தை கொண்டுசெல்லவில்லை.
ரகசிய தகவல் வந்த அடுத்த மாதம் தாமோதரன் விபத்தில் இறந்திட, ஒரு வாரம் கழிந்து தாமோதரனின் தந்தை எண்ணிற்கு அழைத்தவன்.. உங்கள் மகனின் சாவு விபத்து அல்ல, விபத்துபோல் திட்டமிட்டு செய்த கொடூரக்கொலை என்க அனைவரும் பேரதிர்ச்கிகுள்ளாகினர்.
மேலும் தாமோதரன் இறப்போடு பிரச்சனை முடிய வாய்ப்பில்லை, உங்க மகனை ஃபாரின்லயே இருக்க சொல்லுங்க.. உங்க குடும்பத்தையே கருவறுக்க காத்திருக்காங்க என எச்சரித்து சென்றார் கான்ஸ்டபிள்.
எத்தனை பெரிய மனிதர்களோடு பழக்கம் என மகன் சொல்லியிருக்க.. அவனை இழந்த துக்கத்தை அனுசரிக்க ஒருசிலர் மட்டும்தான் வந்திருந்தனர் என பிறகுதான் யோசித்தனர் தாமோதரனின் பெற்றோர்.
நாட்கள் செல்ல செல்ல தாமோதரனைப் பற்றி கசியும் தகவல்கள் தாமோதரனின் பெற்றோரை பேரதிர்ச்சிக்குள்ளாக்க.. இரண்டு மாசம் முன்ன எனக்கும் ஒரு போன் வந்ததென அன்றைய தெலைபேசி உரையாடலை விவரித்து வேதனையடைந்தார் தவமணி.
மனைவி மக்கள் மீதும், பெற்றோர் மீதும் தன்னை சார்ந்தவர்கள் மீதும் அன்போடு நடந்து கொண்ட தாமோதரனிற்கு வேறொரு அகோர முகமும் இருக்கிறதென மகனின் இறப்பிற்கு பின்னேதான் ஒவ்வொன்றாய் தெரியவர குன்றிப்போனார்கள் தாமோதரனின் பெற்றோர்.
தாமோதரன் இறந்த இரண்டாம் மாதம் அவரின் பெற்றோரும் விபத்தில் இறந்திட, மாமனார் மாமியார் உண்மையில் விபத்தில் இறந்தார்களா? அல்லது முகம் தெரியா நபர் சொன்னது போல கணவன் செய்த பாவம் நம்மை துரத்துகிறதா என தவமணிக்கு பெரும் பயம் உண்டானது.