ஐந்து மணிக்கு எழுந்தவள் முதலில் அறிவுக்கு அழைத்தாள். நான்காவது முறை அழைத்தபோதுதான் அழைப்பை ஏற்றான். “கும்பகர்ணா.. எத்தனை முறை போன் பண்றது?” என திட்ட.. “மூனு மணிக்கு மேலதான் தூங்கினேன்.. இப்போ மணி என்ன?” என பார்த்தவன்.. “எதுக்கு இப்போ கால் பண்ணின?” என கடுகடுத்தான்.
தேவாவோடு சண்டையாகியிருக்கும் என்ற தவிப்பில் அண்ணன் தூங்காமல் இருந்திருக்கிறான் என தானாய் நினைத்துக்கொண்டு.. “ப்ச் அறிவு.. நானென்ன சின்ன பிள்ளையா? என்னை நினைச்சு இந்தளவுக்கு அலட்டிக்க வேணாம்.” என்றாள் பெருமையாக.
“எதே.. உன்னை நினைச்சி தூங்காம இருந்தேனா? நல்ல ஜோக்..” என பெரிதாய் சிரித்தவன்.. “உன்னை யார் நினைச்சா? என் பொண்டாட்டியோட பேசிட்டிருந்ததுல நேரம் போனதே தெரியல, அவ சோர்வா பேசவும் டைம் பார்த்தா மூனுமணி.
இன்னும் நிறைய பேச வேண்டியது இருந்தாலும், அவளுக்கு தூக்கம் வந்துடுச்சேனு மனசே இல்லாம கட்பண்ணினேன்.” என பாவமாக சொல்லி, “என் தூக்கத்தை கெடுக்கன்னே ஃபோன் செய்தியா?” என்றான் கோபம்போல்.
“விடிய விடிய ஆராவோட அரட்டையடிச்சிட்டு, தூக்கம் போச்சேனு என்னை திட்டுறியா?” என பொய்யாய் கடிந்தவள்.. “இன்னும் ஒரு மணிநேரத்துல இங்க வர.. இல்ல, நானே கிளம்பிடுவேன்.” என்றாள் உண்மை மிரட்டலாக.
“ஹே.. மங்கை, ஒரு மணி நேரத்துல வரனும்னா எப்படி? இங்கயிருந்த அங்க வர ட்ராவல் டைமே ஒரு மணிநேரத்துக்கு மேல ஆகும், நான் ரெடியாகனும்.. ஒரு எட்டு மணிபோல வரேன்.” என்றான்.
“முடியாது, இப்போ மணி அஞ்சு, ஆறரைக்கெல்லாம் நீ வந்திடனும், என்னை கூட்டிட்டு போனதுக்கப்புறம் குளிச்சிக்கலாம். முகம் கழுவிட்டு கிளம்பு.” என இணைப்பை துண்டித்தாள்.
மங்கைக்கு தேவேஷ் எழுவதற்குள் கிளம்பியாகவேண்டும் என்ற எண்ணம். நிச்சயம் வன்மமில்லை. எப்படியாகினும் தன் வற்புறுத்தலால் நடந்த திருமணம்.. மனதில் மனைவி இருக்கும்போது அவனின் அறையில் நான்.. கஷ்டம்தானே என தேவேஷை புரிந்திருந்தாள்.
ஆனாலும் தேவேஷ் கோபத்தில் வார்த்தையை விட்டால் நம்மாலும் பதில் கொடுக்காமல் இருக்க முடியாது. எனவே முடிந்தவரை அவனிடமிருந்து தள்ளியிருக்க வேண்டுமென நேற்றிரவே முடிவெடுத்திருந்ததால் அவன் எழுவதற்குள் கிளம்ப நினைத்தாள்.
அன்னை கொடுத்தனுப்பிய பையை திறக்க, மாற்றுடை மட்டுமல்லாது பேஸ்ட், சோப், என அவளுக்கு தேவையான அனைத்தும் அதிலிருக்க சூப்பர்ம்மா.. என மனதில் கொஞ்சி தேவையான உடைமைகளை எடுத்துக்கொண்டு குளியலறை நுழைந்தாள்.
குளித்து வந்த பின்னே தலைவாற தனது சீப்பை எடுத்து டிரஸ்ங்டேபிள் முன் நிற்க, அங்கே மாய்ஸ்ட்ரைஸர், மேபிலின் ஃபௌண்டேசன், மேக்கப் ரிமூவர், ஃபேஸ்க்ரீம் என நிறைய இருக்க.. அதனை எடுத்துப்பார்த்தவள்.. அடப்பாவி நான்கூட ஷர்மிளாக்கா யூஸ் பண்ணினது, அவங்க நியாபகமா வச்சிருப்பானு பார்த்தா.. எல்லாம் மென்ஸ் ப்ராடக்ட்டா இருக்கே..
அடேய் கருவாயா.. அதான் இவ்வளோ பளபளப்பா இருக்கியா? உன்னை பார்த்து ரசிக்க வேண்டியவங்களே உயிரோட இல்ல, அப்புறம் எதுக்கு இத்தனை மேக்கப் கிட்? என கீழே தூங்கிக்கொண்டிருந்தவனைப் முறைத்தாள்.
அழகு சாதனப் பொருள்கள் மட்டுமல்ல, தேவேஷ் உடை, ஷுஸ், வாட்ச், கூலர் என பெல்ட் வரை பிராண்டடாக பார்த்து பார்த்து வாங்குவாள்.. இவ்வளோ காஸ்ட்லியா எதுக்கு? தேவையில்லாம பணத்தை வேஸ்ட் பண்ணக்கூடாது என தேவேஷ் சொன்னால், வேலை செய்யும் இடத்தில் யாருக்கும் குறைந்து இருக்கக்கூடாதென அதற்கும் விளக்கம் கொடுப்பாள்.
ஷர்மிளா இறப்பிற்கு பின்னே தேவேஷ் இதெல்லாம் பயன்படுத்துவதில்லை, உண்மையில் அவளின் நியாபகமாகத்தான் வைத்திருந்தான்.
இடுங்கிய நீண்ட புருவங்கள் அவனின் தூக்கத்தை விட, துக்கத்தையே அப்பட்டமாக வெளிப்படுத்த.. தூங்கும்போது இந்த சிடுமூஞ்சனை பார்த்தா பாவமா இருக்கே என நினைத்து சட்டென் திரும்பிக்கொண்டாள்.
தலைவாறியபடி, அறையை நோட்டமிட, நம்ம கட்டிலை கொண்டு வந்தா இந்த ரூம்ல போடமுடியாது போலயே.. இருக்கிறது இரண்டே பெட்ரூம்.
ஒன்னுல ஆன்ட்டி படுத்துக்குவாங்க, ஹால்ல படுத்தா நமக்கு தூக்கம் வராது, இந்த சிடுமூஞ்சனை படுக்க சொன்னா பேயாட்டம் கத்துவான்.. ஆனாலும் இவனோடு ஒரே அறையில் தினமும் எப்படியிருப்பது? பழைய வீடு மாதிரி பெருசா பார்த்திருக்க மாட்டான்? என திட்டியவாறு தலைபின்னி முடித்து வெளியே வந்தாள்.
ஹாலில் விஜயன் உறங்கிக்கொண்டிருக்க, கற்பகம் அறையில் கார்த்திகா, அபிராமி, அவளின் கைக்குழந்தை, சஜ்ஜெய் அனைவரும் உறங்கிக்கொண்டிருந்தனர்.
மணி பார்க்க ஆறுதான் ஆனது. அங்கே டேபிளில் சாவி இருக்கவும் எடுத்து கதவைத் திறந்தாள். அந்த சத்தத்தில் கற்பகம் விழித்துக்கொள்ள.. “மங்கை..” என குரல் கொடுத்தார். “ஆன்ட்டி..” என நின்றாள்.
எழுந்தவர் அறையில் இருந்தபடியே.. “இந்நேரத்துக்கே குளிச்சிட்டியா? இரு நான் முகம் கழுவிட்டு வரேன்.” என பத்து நிமிடத்தில் வெளியே வந்தார்.
“வா மங்கை, நம்ம குலசாமியை வணங்கிக்கோ.” என பூஜையறை முன் நிற்க, விளக்கேத்தி மங்கை வணங்கவும், “டீ வைக்கவா?” என்றார்.
“நான் வச்சிக்கிறேன் ஆன்ட்டி.. எல்லாம் எங்கயிருக்குனு மட்டும் சொல்லுங்க.” என்றாள். கற்பகம் சொல்லவும் டீ வைத்தவள் எடுத்துக்கொண்டு ஹாலுக்கு வர, இருவரும் குடிக்கவும்.. கார்த்திகா, அபிராமி, விஜயன் அனைவரும் ஒவ்வொருவராக எழவே.. அபிராமி.. “அண்ணி அண்ணா நைட் சண்டை போட்டுச்சா?” என்றாள் தவிப்பாக.
“சண்டை போடலனா அது உங்க அண்ணனில்லையே..” என்றவள்.. “நானும் சும்மா விடல, பதில் கொடுத்துட்டுதான் தூங்கினேன்.” என்றாள் நிமிர்வாக.
“எங்கண்ணனை திட்டினதுமில்லாம என்ன தைரியம் இருந்தா என்கிட்டயே சொல்விங்க.?” என அபிராமி பொய்யாய் முறைக்க,
“ஓ. உங்களுக்கு பயப்படனுமா? முன்னமே சொல்லியிருக்கலாமில்ல?” என தானும் பொய்யாய் வருந்தி.. “இனிமே போடற சண்டையை கார்த்திக்காக்காகிட்ட மட்டும் சொல்றேன்.” என இலகுவாய் சொல்லி.. “அண்ணிலாம் கூப்பிடவேணாம், மங்கைனே சொல்லுங்க.” என்றாள்.
“அவர் ஷர்மிளாக்காவை மறக்கனும்னு நான் நினைக்கவேயில்ல.” என்றவளுக்கு நேற்றிரவு கட்டிலுக்காக தேவேஷ் சண்டையிட்டது நினைவு வர.. “நீங்களும் எனக்காகனு எதாவது செய்து அவரை கஷ்டப்படுத்தாதிங்க.” என சன்னக்குரலில் என்றாலும் கட்டளையாய் சொன்னாள்.
அம்மாவே பொண்ணு பார்த்திருந்தா கூட, இவ்வளோ மெச்சூரிட்டியா யோசிக்கமாட்டாங்க, குழந்தைக்காக என்றாலும் திருமணம் என ஆனபின்னே என் புருசன் எனதான் எந்த பெண்ணிற்கும் தோன்றும்..
தேவா இருக்கும் நிலையில் மனைவிக்கான ஆசைகளோடும் கனவுகளோடும் மனைவி இருந்திருந்தால் நிச்சயம் பெருத்த ஏமாற்றமும் சங்கடமும்தான் எஞ்சும்.
“அரசியா?” என மங்கை விழிக்க, “மங்கையர்கரசின்னு பேருக்கேத்த மாதிரி கட்டளையிடற மாதிரி பேசினா நாங்க அடிபணியத்தானே வேணும்.” என்றாள் மலர்ந்த சிரிப்போடு.
“அச்சோ.. என் டோன் அப்படியா இருந்தது?” என வியந்தவள்.. “இல்லைக்கா.. பிடிக்காத கல்யாணம் செய்திருக்கார், அவர் நிலையிலயிருந்து யோசிக்கனும்ல? அதான்..” என குரலிறங்கி சொல்ல..
தற்போதும் தன் தம்பிக்காகவே மங்கை யோசிப்பது பெருத்த நிம்மதியைத் தர.. “சொல்லிட்டயில்ல? என் தம்பி விசயத்துல இனி உன்னை கேட்காம எதுவும் பண்ணமாட்டேன்.” என்றாள் கார்த்திகா.
“க்கா..” என மங்கை முகம் சுருக்கி சிணுங்க.. “நிஜமா மங்கை, நீ இப்படி யோசிக்கிறது, இனி தேவாவை பார்த்துக்க நீ இருக்கன்ற நிம்மதியை கொடுக்குது. எங்களுக்கு இது எவ்வளோ பெரிய விசயம் தெரியுமா?” என்றாள் உள்ளார்ந்து.
மங்கை முகம் இயல்பாக, தன் தம்பியின் குணம் பற்றி அரைமணி நேரம்வரை சகோதரிகள் விளக்கிக்கெண்டிருக்க, அறிவுக்கரசு வந்தான்.
அபிராமி.. “டீ போடறேன்.” என எழ.. “வேண்டாம்மா.. வீட்ல குடிச்சிட்டுதான் வந்தேன்.” என்க.. தேவா எழுவதற்குள் கிளம்ப நினைத்த மங்கை.. “நான் ரெடிதான் அறிவு கிளம்பலாம்.” என கிசுகிசுத்தாள்.
“ம்.. டென் மினிட்ஸ்..” என தங்கை போலல்லாமல் சத்தமாகவே சொல்லி.. “ஆன்ட்டி.. என் கல்யாணத்துக்கு பத்திரிக்கை மட்டும்தான் அடிச்சிருக்கு, மத்த எல்லா வேலையும் நான் வந்ததுக்கப்புறம்தான் ஆரம்பிக்கனும்னு அம்மா பிடிவாதமா இருந்துட்டாங்க.
ஊருக்கு போனா கல்யாணம் முடியறவரைக்கும் எங்கையும் நகர முடியாது. மங்கை கல்யாண டென்ஷன்ல அம்மாவும் பத்திரிக்கை எடுத்துட்டு வர மறந்துட்டாங்க..
பத்திரிக்கை வைக்கலன்னு தவறா நினைக்காம, கல்யாணத்துக்கு வந்துடுங்க ஆன்ட்டி. கல்யாணம் எங்க சொந்த ஊர் வெல்லூர்ல..” என தன் விலாசத்தை சொல்லி.. கார்த்தி, அபிராமி விஜயனையும் திருமணத்திற்கு அழைத்து.. “தேவா எழுந்துக்கலையா ஆன்ட்டி?” என்றான்.
கற்பகம்.. “இருப்பா எழுப்பறேன்.” என எழவே..
மங்கை.. “எழுப்ப வேணாம் ஆன்ட்டி.. அறிவு சொன்னாலும் நிச்சயம் அவர் கல்யாணத்துக்கு வரப்போறதில்ல. எதுக்கு தேவையில்லாம அவரை டென்சன் செய்துட்டு? உங்களுக்கு விருப்பமிருந்தா நீங்க எல்லாரும் வாங்க.. அதுபோதும்.” என்றாள் அனைவரையும் பார்த்தவாறு.
மங்கை சொல்வது உண்மையென அனைவருக்கும் தெரிந்ததே.. அறிவும் மரியாதை நிமித்தமாகத்தான் கேட்டான் என்பதால் சில நொடி அமைதியில் கழிய.. “நீ சொல்றமாதிரி அவன் வரலைனாலும் அறிவு கல்யாணத்துக்கு நாங்க வரோம் மங்கை.” என்றார் கற்பகம்.
குழந்தையைப் பார்க்கும் ஆர்வம் எழுந்தபோதும், சஞ்ஜெய் உறங்கிக்கொண்டிருப்பதால்.. “ஓ.கே ஆன்ட்டி, டைம் ஆச்சு, நாங்க கிளம்பறோம்.” என அறிவு எழவே.. “பத்து நிமிஷம் இருங்க, டிபன் செய்யிறேன் சாப்பிட்டு போவிங்க.” என்றாள் கார்த்திகா.
“ஏழு மணிதான் ஆகுது.. இந்த நேரத்துல இரண்டு வாய் கூட என்னால சாப்பிட முடியாதுமா.. மங்கையை விட வரும்போது பெரிய விருந்தா ரெடி பண்ணுங்க. என் பொண்டாட்டியோட வந்து சாப்பிடறேன்.” என கார்த்தியிடம் தன்மையாகவே மறுத்து அனைவரிடமும் விடைபெற்று மங்கையை அழைத்து சென்றான்.
எட்டு மணிபோல் தேவாவின் மொபைல் அடிக்க, அதிகாலை மூன்று மணிவரை விழித்திருந்தவன் தற்போது அசந்து தூங்கிக்கொண்டிருந்ததால் இரண்டு முறை அழைத்து ஓய்ந்து மூன்றாம்முறை அழைப்பு வரவும்தான் முயன்று விழித்து.. “ஹலோ..” என்றான் யாரெனப் பாராமலே.
“எங்கடா இருக்க? வீட்டுக்கு போனியா இல்லையா? நேத்து சாயங்காலத்துலயிருந்து நைட் பத்து மணிவரை எத்தனை முறை ஃபோன் செய்தேன்? எடுக்கிறதுக்கென்ன?” என காய்ந்தான் நிகில்.
“ப்ச்.. வீட்டுலதான் இருக்கேன்.. இன்னும் அரை மணிநேரத்துல கம்பெனிக்கு வந்துடறேன்.. திரும்ப கூப்பிடாத.” என எரிச்சலாக சொல்லி இணைப்பை துண்டித்து சோர்வாய் எழுந்தமர்ந்தான்.
கடந்த ஒரு மாதமாக புது ப்ராஜக்ட் வேலை நடந்துகொண்டிருந்தது. அனைத்தும் சரியாக வந்திருக்கிறதா என அறிய நேற்றே அனைவரும் தேவேஷ் வரவை எதிர்பார்த்திருந்தனர்.
இப்படியான நேரத்தில் தேவேஷ் ஒருநாளும் விடுப்பெடுத்ததில்லை. வழக்கத்திலில்லாமல் நேற்று தேவேஷ் கம்பெனிக்கு செல்லாமலிருக்கவும்.. இன்றாவது வருவானா? நாளை மீட்டிங் இருக்கே என காலை ஆறு மணியிலிருந்து அனைவரும் நிகிலை படுத்தியெடுத்தனர்.
அதன் தாக்கமும், நேற்று மங்கையை வார்த்தையால் வதம் செய்திருப்பானென்ற தவிப்பும் சேர்ந்து கொள்ள நண்பனுக்கு அழைத்தான். நிகில் எதற்கழைப்பான் எனத்தெரிந்து மங்கையைப் பற்றி கேட்கும் முன்னே, கம்பெனிக்கு வருகிறேன் என முடித்துக்கொண்டான் தேவேஷ்.