எழுந்து குளித்து வந்தவன்.. தனக்கான உடையை எடுத்து வழக்கம்போல் கட்டில்மேல் போட, அங்கே மங்கையின் பை இருந்தது.
மேல் ஃபோர்சனும் போனமாசம்தான் குடிவந்தாங்க, ச்ச.. இப்படினு தெரிஞ்சிருந்தா நமக்கே பேசியிருக்கலாம் என நினைத்தபடி அவசரமாய் உடைமாற்றி வெளியே வர.. அனைவரும் சந்தோசமாய் அரட்டை அடித்துக்கொண்டிருந்தனர்.
தேவேஷை பார்த்ததும்.. “வாங்க தேவா.. என்ன இந்நேரத்துக்கே கிளம்பிட்டிங்க?” என விஜயன் கேட்க.. தன் ப்ராஜக்ட் விசயத்தை சொன்னவன்.. “ம்மா சாப்பிட எதாவது இருக்கா?” என்றான்.
“எப்பவும் ஒன்பதரைக்குதான் சாப்பிடுவனு பேசிட்டிருந்திட்டேன் தேவா.. சித்த உக்காரு, பத்து நிமிஷத்துல சட்னி அரைச்சி தோசை ஊத்திடறேன்..” என அவசரமாய் கிச்சனுள் நுழைய.. “இல்லம்மா நேரமாகிடும், நான் கேண்டீன்ல பார்த்துக்கிறேன்.” என கிளம்பப்போக..
“நேத்து நைட் நாங்க தூங்கினதுக்கப்புறம் வந்த, இப்போவும் ஒத்த வார்த்தை பேசாம கிளம்புற?” என வருந்தி கோபித்தாள் அபிராமி.
“என்னோட கட்டில் எங்க?” என்றான் முறைப்போடு.
“அது.. உனக்கு அண்ணி நியாபகம் வரும்னு வித்துட்டேன்.” என்றதுதான்.. “பொண்டாட்டி நியாபகம் கட்டில்ல இல்ல, இங்க இருக்கு..” என தனது நெஞ்சைத் தொட்டு காட்டி கத்தியவன்.. அதற்குமேல் நின்றால் அபிராமியை வேறெதுவும் சொல்லிடுவோம் என கிளம்பியிருந்தான்.
**** **** *****
கம்பெனிக்கு சென்றவனுக்கு மாலை ஆறு மணிக்குத்தான் வேலை ஓய்ந்தது. இடையிடையே டீ யை மட்டும் அருந்தி வேலை செய்ததால் மிகவும் சோர்வாக உணர்ந்தான்.
பர்கரோடு வந்த நிகில்.. “சாப்பிடு தேவா..” என முன்னே வைக்க.. மறுப்பின்றி சாப்பிட்டான். பின்னே டீயும் குடிக்க, சற்று தெம்பு வந்தார் போல் உணரவும்.. பிறகுதான் மதியம் விஜயன் நான்கைந்து முறை அழைத்தது நினைவு வர.. விஜயனுக்கு அழைத்தான்.
“ஊருக்கு கிளம்பனும்னு சொல்லத்தான் போன் செய்தேன் தேவா.. நாங்க செங்கற்பட்டு வந்துட்டோம்..” என்க.. “ஓஹ்..” என தலையில் தட்டிக்கொண்டவன்.. “சாரி விஜய்.. ரியலி சாரி, டைட் ஒர்க்.. அதான் அட்டன் பண்ண முடியல..” என வருந்தினான்.
“பரவால்ல விடுங்க தேவா..” என்க.. காலையில் அபிராமியிடம் கத்தியதற்கு மிகவும் வருந்தியிருப்பாள் என.. “அபிகிட்ட கொடுங்க.” என்றான்.
“ஹம்..” என நிம்மதிப்பெருமூச்சிழுத்தவன்.. “சரிங்க விஜய்.. நான் வீட்டுக்கு போய்ட்டு கால் பண்றேன்.” என இணைப்பை துண்டித்தான்.
நிகில்.. “நேத்து ஏன் ஃபோன் எடுக்கல?” என்றான் முறைப்பாக.
“ஒருமுறை எடுக்கலனா திரும்ப கால் பண்ணக்கூடாதுன்ற சென்ஸ் இருக்கனும்..” என பதிலுக்கு முறைத்தான் தேவேஷ்.
நிகில்.. “சென்ஸ் மட்டுமா? மானம் ரோசம்னு இப்படி ஐட்டம்ல எதாவது ஒன்னு இருந்தாலும் உன்னோட ஃப்ரண்ட்ஸிப் வச்சிக்க முடியுமா? உன் ஃப்ரண்ட்ஸிப்பா? மானரோசமானு யோசிச்சேன்.. மானரோசத்தை தூக்கி போட்டுட்டு ரொம்ப பிரில்லியண்ட்டா யோசிச்சு உன்னை செலக்ட் செய்துட்டேன். ” என்றான் கோபம் குறைத்து.
தேவேஷ் முகமும் சற்று இலகுவாக.. “அந்த பொண்ணு கம்ப்பெல்ல தாலிகட்டனங்குறதெல்லாம் என்னால ஏத்துக்க முடியாது.” என விசயத்திற்கு வந்தான் நிகில்.
“இப்போ என்ன? அவதான் என் குழந்தைக்கு அம்மானு உனக்கு தெரிஞ்சிடுச்சு.. அதான?” என சிடுசிடுக்க.. “அதுவும்தான்.. அதேநேரம் இந்த கல்யாணம் மங்கை கட்டாயத்துனால மட்டும் இல்லங்கிறதும்..” என்றான் முறைப்பாக.
“பின்ன எதுக்காகனு நினைக்கிற?” என தேவா முறைக்க.. “நீயும் இரண்டு மூனுமுறை சொல்லிபார்த்த.. மங்கை கேட்குற மாதிரியில்லனும், அம்மாவும் இரண்டாம் கல்யாணத்துக்கு வற்புறுத்தவும் தாலிகட்டிட்ட..” என்க.. தேவா அமைதியாக இருக்க..
குழந்தைக்காக பெரிய உதவி செய்த பொண்ணு வாழ்க்கை வீணாகிடக்கூடாதுனு பொறுமையா சொல்லி பார்த்திருக்க, ஆனாலும் உன்னோடான கல்யாணத்துல மங்கை உறுதியா இருக்கவும், பட்டாதான் புத்திவரும்னு தாலிகட்டியிருக்க..
உன்னோட வாழமுடியாம கூடிய சீக்கிரம் பொட்டிய கட்டிருவாங்கனு தப்பு கணக்கு போட்டிருக்க தேவா.. எத்தனை வருசம் ஆனாலும் குழந்தையை விட்டு மங்கை போகமாட்டாங்க.” என்றான் உறுதியாக.
கிராதகன்.. எல்லாம் கண்டுபிடிச்சிட்டான் என நினைத்தவன்.. “என்னோட வாழ முடியாதுனு எவ்வளோ சீக்கிரம் புரிஞ்சுக்கிறாளோ அது அவளுக்குத்தான் நல்லது.” என்றான்.
“என்ன நல்லது? உன்னைவிட்டு போனதுக்கப்புறம் இன்னொரு கல்யாணம் செய்துக்குவாங்கனு நினைச்சிட்டிருக்கியா.?” என முறைக்க.. “அது அவ இஷ்டம்..” என்றான் அலட்சியமாக.
“குழந்தை விசயத்துல மங்கை எவ்வளோ ஸ்ட்ராங்கா இருக்காங்கனு அவங்களோட இருந்த அரைநாள்லயே எனக்கு தெரிஞ்சுடுச்சி..
அன்று தான் நிராகரித்தபோது, ரோசத்தோடு சாப்பாடை வீசியடித்தது, ரெஸ்டாரண்ட்டில் தன்னையே வாயடைக்க வைத்தது.. நேற்றிரவு கட்டிலுக்காக வாதிட்டது அனைத்தும் நினைத்து பார்க்க மங்கையின் குணம் தேவாவிற்கும் தெரிந்துதான் இருந்தது. அதற்காக காலம் பூரா இம்சையோடா வாழ முடியும் என கடுப்பாக நினைத்தவன்.. “அப்புடியா?” என்றான் பயந்தவன்போல்.
“தேவா..” என நிகில் மீண்டும் எதோ சொல்ல வர.. “ப்ச் அவ பேச்சை விடுறியா?” என கடுகடுத்து, “அபியை வேற காலைல திட்டிட்டேன், நான் போறவரைக்கும் சாப்பிடமாட்டா.. நாளைக்கு காலைல ஏழு மணிக்கெல்லாம் வந்திடு.” என கட்டளையிட்டு கிளம்பினான் தேவேஷ்.
தேவா உள்ளே நுழைந்ததுதான்.. “ஹும்.” என முகம் திருப்பினாள் அபிராமி.
என்னயிருந்தாலும் அபிராமி கட்டிலை மாற்றியதுமில்லாமல், அதனை விற்றுவிட்டேன் என்றது மீண்டும் கோபத்தை வரவழைக்க, “என்னை கேட்காம கட்டிலை எதுக்கு வித்த?” என்றான் முறைப்பாக.
காலையில் தேவா கிளம்பியதும், கட்டிலை வாங்கிகொள்ள முன்னமே கார்திகா ஏற்பாடு செய்திருந்த ஆளை வரசொல்லி, உண்மையாகவே விற்றுவிட்டாள் அபிராமி.
“அந்த கட்டில் அவ்வளோ முக்கியம்னா எதுக்கு இன்னொரு கல்யாணம் செய்துகிட்ட? கல்யாணமே செய்துகிட்டியே.. கட்டிலை மாத்தினா திட்டமாட்டனு நினைச்சி வித்தேன்.. இது ஒரு தப்பா?” என்றாள் தானும் முறைப்பாக.
தேவா மீண்டும் முறைக்க.. தனக்காக இனி தேவாவை கஷ்டப்படுத்தக்கூடாது என காலையில் மங்கை சொன்னது நினைவு வர.. “நீ கல்யாணம் செய்தது தப்பில்லைனா, நான் கட்டிலை மாத்தினதும் தப்பில்லை..
ஆக, தப்பு ரெண்டு பேர்மேலயும் இருக்கு.. ஸோ ரெண்டு பேரும் பழம் விட்டுக்கலாம். இப்படி கோபமா ரொம்ப நேரம் மெயிண்ட்டைன் பண்ணமுடியல. வயிறும் வேற பசியில கத்துது.” என்றாள் பாவமாக.
“வாயாடி.” என தங்கை தலையில் வலிக்காதபடி குட்டியவன்.. “பசிச்சா சாப்பிடறதுக்கென்ன?” என முறைத்து.. “முதல்ல சாப்பிடு, நான் ஃப்ரஸ்ஸாகிட்டு வரேன்..” என உள்ளே போக, மங்கையில்லை.
ஹாலில் இல்லாதபோதே உள்ளேயேது இருப்பாளோ என கடுப்போடுதான் வந்தான். தற்போது இல்லையென்றதும் மனம் நிம்மதியாய் உணர.. நாளைக்கு மீட்டிங் முடிஞ்சதும் இவளுக்கு ஒரு பேபி கட்டில் வாங்கி அம்மா ரூம்ல போடனும்.
ஆழாக்கு உயரத்துக்கு அதுபோதும் என நினைத்தபடி முகம் கழுவி வெளியே வந்தவன்.. “ஈவ்னிங் பர்கர் சாப்பிட்டேன், இப்போ பசியில்ல, நீங்க சாப்பிடுங்க.” என்று கார்த்தி அபிராமியோடு பேசிக்கொண்டிருந்தான்.
“அண்ணா மங்கைக்காக வெய்டிங்கா? அவங்க வர இன்னும் ஒருமாசம் பக்கம் ஆகும்..” என மங்கை அவளது அண்ணன் திருமணத்திற்கு சென்றிருக்கும் விசயத்தை விளக்கினாள் அபிராமி.
“ம்ம்.” என முடித்துக்கொண்டு.. “இன்னைக்கு ரொம்ப டையர்ட்.. காலைல பேசிக்கலாம் அபி.. எனக்கு பால்மட்டும் கொடு..” என்று படுக்கப்போனான் தேவேஷ்.
*** **** ****
பத்திரிக்கை வைக்கும் பணியினை தானே ஏற்பதாக சொன்ன அறிவு அனைத்து இடங்களுக்கும் மங்கையையும் அழைத்து சென்றான். மங்கை கழுத்தில் மின்னும் மஞ்சள் கயிற்றைப் பற்றி கேட்பவர்களிடம்.. மனைவியிழந்த ஒருவனை மங்கை விரும்புவது அம்மாக்கு பிடிக்கல..
ஆனா மங்கைக்கு தேவேஷைதான் பிடிச்சிருந்தது. அதனால நானே கல்யாணம் செய்து வச்சிட்டேன். அம்மாக்கு விருப்பமில்லாத நடந்த கல்யாணம்ன்றதால தேவேஷ் வரல, கொஞ்ச நாள் கழிச்சி அம்மா கோபம் குறைந்ததும் மச்சான் வருவார்.” என மங்கையின் திருமணத்தை விளக்கினான்.
பதினேழு நாட்கள் முடிந்து திருமண நாளும் நெருங்கிட, அறிவுக்கு நலங்கு வைப்பது, திருமண சடங்குகளின் சமயத்திலும், மகளுக்கு இப்படி நடக்கலையே என வேதனையடைந்தார் தவமணி.
தேவாவிற்கு பிடிக்காதென்றும், அம்மா கற்பகத்தோடு சரியா பேசமாட்டார்கள் என்றும், அனைத்திற்கும் மேலாக அனைவர் முன்னும் அன்னை குழந்தையை புறக்கணித்தால் தன்னால் தாளமுடியாதென்றும்.. குழந்தைக்கு அலைச்சல் வேண்டாம் என மகனை காரணம் சொல்லி, கற்பகம் வர மங்கை மறுத்திருந்தாள்.
அபிராமியும் கார்த்திகாவும் இவர்களின் வசதி பாரத்து பிரம்மித்ததோடு, எதையும் காட்டிக்கொள்ளாமல் எத்தனை எளிமையாய் இருந்திருக்கிறாள் என மங்கையை பெருமையாய் நினைத்தனர்.
திருமணம் இனிதே முடிந்திருக்க, ஒவ்வொரு வைபவத்தையும் ரசித்து அனுபவித்தான் அறிவுக்கரசு. ஆராதனாவை தன் வீட்டிற்கு அழைத்து வந்த ஒரு மணிநேரத்தில் கார்த்திகா அபிராமி குடும்பம் கிளம்பியிருந்தனர்.
திருமணம் முடிந்து மூன்று நாட்கள் ஆகியிருக்க, தான் கிளம்புவதாக சொன்னாள் மங்கை. இன்னும் பத்துநாளில் அறிவு கிளம்பயிருப்பதால் அதுவரை இங்கேயே இருக்கப் பணித்தான் அறிவு.
மங்கை.. “இல்ல அறிவு… நாளை மறுநாள் சஜ்ஜெய்க்கு பர்த்டே.. நான் கிளம்பனும்..”
“மகன் மேல ரொம்பதான் அக்கறை.. நீ அவனை தூக்கி நான் பார்த்ததேயில்ல.”
“தூக்கலனா அக்கறையில்லனு அர்த்தமா?” என முறைத்தவள்..
“அவங்க எதிர் வீட்டுல இருக்கும்வரை, என் லன்ச் டைம் தான் அவனுக்கு மதிய தூக்க நேரம்.. டியூட்டி முடிஞ்சி வீட்டுக்கு வர எட்டு ஒன்பது மணி ஆகிடும். நான் தேவாவை கல்யாணம் செய்ய கேட்டதும் வீட்டை காலி பண்ணிட்டாங்க..
அப்புறம் எங்கயிருந்து அவனைப்பார்க்குறது? தூக்குறது? அதோட சட்டுனு உன்கிட்ட ஒட்டிக்கிட்ட மாதிரி என்கிட்ட ஒட்டமாட்டுக்கிறான், நான் என்ன பண்ண?” என்றாள்.
தங்கை சொன்னதை ஏற்றவன்.. “சரி இன்னைக்கு வேணாம், நாளைக்கு நான் ஆரா எல்லாருமா போலாம்.” என்றான்.
“ப்ச்.. இன்னும் பத்து நாள்ல கிளம்பிடுவ.. நீ ஆராவோட இரு.. அமெரிக்கா கிளம்ப இரண்டு நாள் முன்ன ஆராவை கூட்டிட்டு வா.. இப்போ நான் போறேன்.” என்றாள்.
“இல்ல அங்க வீட்டை காலி செய்யனும்.. உன் திங்க்ஸெல்லாம் இங்க இருக்க, அங்க எதுவுமில்லாம என்ன பண்ணுவ? ஊருக்கு போறதுக்குள்ள உனக்கு தேவையானதை முடிச்சிட்டு போனாதான் நிம்மதியா இருக்கும், அதனால நாளைக்கு எல்லாருமா போலாம்.” என்றான் பிடிவாதமாக.
“ப்ச் அறிவு.. நாளை மறுநாள் சஞ்ஜெய்யோட பர்த்டே மட்டும் இல்ல, ஷர்மிளாக்காவோட இறந்த நாளும்தான்.. அங்க தேவா ரொம்ப வேதனையில இருப்பார். வீட்டை காலி பண்றதெல்லாம் அடுத்த வாரத்துல நானே பார்த்துக்கிறேன்.. இப்போ நீ அங்க வந்தா சரியா இருக்காது. நான் மட்டும் கிளம்பறேன்.” என்றாள் முடிவாக.
“தேவாண்ணாப் பத்தி உங்கண்ணா சொன்னார். நீ விரும்பிய கல்யாணம்தான்னாலும் பிடிக்காதவரோட எப்படி இருக்கப்போற மங்கை? அதுவும் இந்த டைம்ல போனா உங்களை அதிகமா காயப்படுத்துவாரே..” என ஆராதனா வருந்த..
“நீங்க நினைக்கிற அளவுக்கு தேவா கெட்டவர் கிடையாது ஆரா.. ஷர்மிளாக்கா இறந்ததுக்கப்புறம் அவங்க தம்பி ஷர்மிளாக்கா நியாபகமா அவங்க காரை கேட்டுருக்காங்க, அக்கா தம்பி அன்பை புரிஞ்சு ஆசையாசையாய் பொண்டாட்டி வாங்கின காருனு கூட பார்க்காம கொடுத்துட்டார்னு ஆன்ட்டி சொல்லியிருக்காங்க..
அந்தளவுக்கு ஷர்மிளாக்காவை இன்னும் நேசிக்கிறார், அதனாலதான் என்மேல கோபமா இருக்கார். இப்போ என்மேல கோபமா இருந்தாலும், எதுக்காக இப்படி கல்யாணத்துக்கு வற்புறுத்தினேனு போகப்போக புரிஞ்சிப்பார்.” என தேவாவை விட்டுக்கொடுக்காமல் நீண்ட விளக்கம் கொடுத்தாள்.
“வாழ வேண்டிய வயசுல வாழாம பின்னால புரிஞ்சிக்கிட்டா மட்டும் இழந்த சந்தோசம் கிடைச்சிடுமா?” என ஆதங்கப்பட்டார் தவமணி.
அன்னை எதைப் பற்றி யோசிக்கிறார் எனப்புரிய.. தன்மேலுள்ள கோபத்தில் பழிவாங்க நினைத்து அன்றிரவு தன்னை நாடியிருந்தால் நம் நிலைமை என்னவாகியிருக்கும் என யோசிக்க மங்கைக்கு சித்தம் கலங்கியது..
ஆனால் தேவா அப்படியில்லை என்பது பெருத்த ஆசுவாசத்தை கொடுக்க.. “என்கிட்டயிருந்து தேவா விலக நினைக்கிறதுதான் எனக்கு பிடிச்சிருக்கு.. பெருமையாவும் இருக்கும்மா.” என்றாள் உள்ளார்ந்து.
தங்கையை பெருமையாய் நினைத்த அறிவு..”அப்போ இனி தேவா கோபமா பேசினாலும் கொஞ்சம் அனுசரிச்சி போ.” என எடுத்துரைத்தான் இலகுவாக.
“அதெல்லாம் முடியாது, என்னை அசிங்கப்படுத்துற மாதிரி பேசினா பதில் கொடுத்தேதான் தீருவேன்.” என சிரிப்போடு சொன்னாலும் வார்த்தை உறுதியாக வந்தது.
“அதனா பார்த்தேன்.. நீயாவது அடங்குறதாவது..” என முறைத்து.. “சரி நாளைக்கு எல்லாருமா போலாம்.. உன்னை உன் வீட்டுல விட்டுட்டு, நானும் ஆராவும் பழைய வீட்டுக்கு வந்திடறோம்.
இன்னும் பத்துநாள்ல அமெரிக்கா கிளம்பியாகனும், அதுவரைக்கும் இங்கையே இருக்குறதைவிட அங்க வந்தா உனக்கு தேவையானதையும் வாங்கிடலாம், எங்களுக்கும் சென்னையை சுத்தி பார்த்த மாதிரி இருக்கும்.” என்றான்.
இதற்குமேல் மறுத்தாலும் அறிவு விடமாட்டான் என சம்மதமாய் தலையசைத்தாள் மங்கை.