“ஷர்மிக்கு கும்பிடனும் வாடான்னு போன் செய்தா.. நீ கும்பிடு, நான் சாயங்காலம் வந்து கும்பிட்டுக்கிறேன், இப்போ வேலையிருக்குனு கட் பண்ணிட்டான்.
பேரன் முதல் பிறந்தநாளுக்கு ஒரு பாயசம் கேசரினு கூட எதுவும் செய்யில. அவன் ஷர்மிளாவை நினைச்சி வேதனையில இருக்கும்போது எது செய்யவும் எனக்கு மனசு வரல மங்கை.” என வருந்தினார்.
மங்கை.. “பரவால்ல விடுங்க ஆன்ட்டி.” என தேற்றினாள். ஒரு மணிநேரம் வரை பேசிக்கொண்டிருக்க, சஞ்ஜெய் எழுந்தான். அறிவைக்கண்டதும் வழக்கம்போல் ஒட்டிக்கொள்ள, புத்தாடை உடுத்தி, கேக் வெட்டும்போது, தந்தை சொல்லி கொடுத்ததை போல, “ஆப்பி பத்தே..” என கைத்தட்டி குழந்தை சிரிக்க, “ஹே.. ஸ்வீட் ஹார்ட் பாட்டெல்லாம் பாட ஆரம்பிச்சாச்சா.?” என அறிவு ஆச்சர்யப்பட, குழந்தையின் மழலையில் மங்கை மயங்கினாள்.
பிறகு ரிமோர் கார், பைக், என காண்பிக்க, இன்னும் ஒட்டிக்கொண்டான் மாமனிடம். மதிய உணவு சமைக்க கற்பகம் ஆயத்தமாக, “ரொம்ப டையர்டா இருக்கிங்க போல, நான் சமைக்கிறேன் ஆன்ட்டி.” என்றாள் மங்கை.
மங்கை சமைக்க கிளம்பவும் ஆராதனாவும் இணைந்து கொண்டாள். மதிய உணவுண்ட பின்னே, அறிவும் ஆராதனாவும் கற்பகம் அறையில் குழந்தையோடு விளையாடிக்கொண்டிருக்க, மங்கையை தனியே அழைத்தார் கற்பகம்.
மங்கை வரவும்.. தேவேஷ் அறைக்கு அழைத்துச்செல்ல, அங்கே புதிய கட்டில் இருக்கவும்.. தன்னை உணர்ந்து கற்பகம் வாங்கியிருப்பதாக நினைத்து.. “ஆன்ட்டி..” என ஆச்சர்யமாய் பார்த்தாள் மங்கை.
“சஞ்ஜெய் பிறந்த நாளுக்கு நீ வரன்னு சொன்னதை தேவாகிட்ட சொன்னேன், நேத்து இந்த கட்டிலை வாங்கிட்டு வந்து என் ரூம்ல போடறதா சொன்னான். நான்கூட குழந்தைக்காக இருக்குமோனு எதுக்குடா இன்னொரு கட்டில்? இதுல தனியா படுத்தா குழந்தை கீழ விழுந்துடுவான்னேன்.
இது சஞ்ஜெய்க்கு இல்ல, அவளுக்குன்னான். மங்கைக்கானு கேட்டா ஆமாம்ன்னான். அதை எதுக்கு என்ரூம்ல போடுறனு சண்டை பிடிக்கவும்.. குழந்தைக்கு அம்மான்னா குழந்தையோடதான் இருக்கனும், கட்டில் இங்கதான் இருக்கும், இனி அவ என் ரூம்க்குள்ள வரக்கூடாதுனு மல்லுக்கு நின்னான்.
என்னை கேட்டா தாலி கட்டின? உன் விருப்பத்துக்குதான கட்டன? அப்போ உன்ரூம்லதான் உன் பொண்டாட்டி இருக்கனும்னு எதேதோ பேசி இவன்ரூம்ல கட்டிலை போட வச்சேன்.. நைட் அவன் முன்னாடி நீயும் அங்க படுக்கமாட்டேனு மல்லுக்கு நின்னுடாத மங்கை.” என்றார் தன்மையாக.
எங்கடா திரும்ப கீழ படுக்க வச்சிடுவாளோனு கட்டில் வாங்கிட்டான்.. பரவால்ல.. என மனதில் மெச்சியவள்.. ஆனாலும் இவனோட ஒரு ரூம்லயா? என நினைக்க.. நாமதான் இன்னும் ஒரு மாசத்துக்கு இங்க இருக்கப்போறதில்லையே? இங்கேயே தங்கும் நிலை வரும்போது பார்த்துக்கொள்ளலாம், அதோடு தற்போது அறிவும் ஆராவும் இருப்பதால் இதுபற்றி வாக்கு வாதம் வேணாம் என மங்கை அமைதியாக.. கற்பகத்திற்கு அழைப்பு வந்தது.
வேலை நேரத்துக்கு நிகில் போன் பண்ணமாட்டானே, ஒருவேளை குழந்தையை பார்க்க வரானோ என்னவோ என்ற யோசனையோடு.. “வீட்டுலதான்ப்பா இருக்கேன்.” என்றார்.
“சரிங்கம்மா, நான் இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துடறேன். வீட்டுலயே இருங்க.” என இணைப்பை துண்டித்தான்.
அறிவு கிளம்புவதாக சொல்ல.. குழந்தை முகம் வெகுவாய் வாடிட, “ஹே.. லிட்டில் ஹார்ட், மாமாக்கு வேலையிருக்குடா..” என சமாதனம் செய்து கொண்டிருக்க அப்பொழுதும் அறிவை விட்டு கீழிறங்கவில்லை சஞ்ஜெய்.
“இன்னும் சித்த நேரம் மருமகனோட விளையாண்டுட்டுதான் போ அறிவு.. பிறந்த நாளதுவுமா குழந்தையை ஏமாத்தாத.” என கற்பகம் சொல்ல.. “ஓ.கே.” என சிரித்து ரிமோட் ரயிலை இயக்குவதறகாக தண்டவாளங்களை பொருத்த ஆரம்பித்தான்.
இரயில் ஓடுவதைப் பார்த்து குழந்தை பெரிதாய் ஆர்ப்பரிக்க.. “பொழுதன்னைக்கும் என் முகத்தை மட்டுமே பார்த்திட்டிருந்தவனுக்கு அத்தை மாமாலாம் இருக்கவும் கொண்டாட்டம்தான் என கற்பகமும் சந்தோசிக்க, மங்கை மனம் நெகிழ்ந்திருந்தது.
அனைவரும் குழந்தையோடு ஒன்றிருக்க, வீட்டின் முன் கார் வந்து நிற்க.. “பார்த்துடா தேவா.. பார்த்து..” என நிகிலின் குரல் கேட்டு திரும்பி கற்பகம்.. “அச்சோ என்னாச்சு என் மகனுக்கு?” என கலங்கியபடி வெளியே ஓடினார்.
“ஒன்னுமில்லம்மா, ஒன்னுமில்ல, சின்ன ஆக்ஸிடண்ட், ஒருமாசம் ரெஸ்ட் எடுத்தா சரியாகிடும்னு டாக்டர் சொன்னாங்க. நீங்க பதறாதிங்க.” என கற்பகத்தை தேற்றி.. காரிலிருந்து தேவா வெளியே வர உதவி செய்ய, மெல்ல நகர்ந்து அடிபடாத காலை ஊன்றி கீழிறங்கியவனால் என்ன முயன்றும் அடுத்த அடி எடுத்து வைக்க முடியாமல் போக, டேக்ஸி டிரைவரும் உதவினார்.
தேவாவின் முகம் வலியில் சிவந்துபோக.. “ஒரு வாரத்துக்காவது ஹாஸ்பிட்டல்ல இருக்கனும்னு சொன்னார், கேட்டாதான? இப்போ ஸ்ட்ரென் பண்ணி திரும்பவும் பிரச்சனையானா என்ன பண்றது?” என நிகில் திட்ட,
பேரதிர்ச்சியோடு வாசல் வந்த மங்கை செய்வதறியாது தவித்து நிற்க.. “ஆரா.. குழந்தையை பார்த்துக்கோ.” என வெளியே வந்தான் அறிவு.
“எப்படி நிகிலு ஆனுச்சு?” என கற்பகம் கண்ணீர் விட, “ரோடு க்ராஸ் பண்ணும்போது எந்த குழந்தையோ ஆட்டோவுல சிக்கிக்க இருந்திருக்கும்மா, குழந்தையை காப்பாத்தபோய் இவன் கீழ விழுந்திட்டான்..” என நிகில் தேவா சொன்ன பொய்யை உண்மையென நினைத்து விளக்கினான்.
டேக்ஸிக்கு கொடுத்து அனுப்பிய அறிவு.. நிகிலிடம்.. “நீங்க காலை பிடிச்சிக்கோங்க..” என தேவாவை தூக்க வர, தேவா மறுக்க, “ரிலாக்ஸ்.. யாரோ ஒருத்தரை காப்பாத்த போய்தான இப்படி ஆகியிருக்கு?
இப்போ என்னை யாரோ ஒருத்தனா நினைச்சிக்கோங்க.” என தன்மையாக எடுத்துரைத்து தேவாவை கையில் ஏந்த.. நிகில் தேவாவின் காலை பிடித்துக்கொள்ள.. தேவேஷின் அறையில் கட்டிலில் மெல்ல படுக்க வைத்தனர்.
“ப்பா..” என குழந்தை அழவே.. “ம்மா சஞ்ஜெய்யை பாரு.” என்றவன், யாரிடமும் பேசப்பிடிக்காமல் கண்மூடிக்கொண்டான்.
தேவாவை நோட்டமிட, புருவத்தை ஒட்டியபடி ஒரு ரூபாய் சைசிற்கு காட்டனால் மூடப்பட்டிருக்க, வலது கையில் நிறைய சிராய்ப்பிருக்க, நன்றாக வீங்கியிருந்தது. காலிலுள்ள கட்டை பார்த்த மங்கை.. நிகிலிடம்.. “ஆப்ரேசன் செய்திருக்காங்களா?” என்றாள்.
“ஆமாம்மா.. எலும்பு முறிஞ்சிடுச்சாம், ஆப்ரேசன் செய்திருக்காங்க..” என்றான்.
“அப்புறம் எதுக்கு டிஸ்சார்ஜ் செய்திங்க?” என மங்கை தவிக்க.. “பையன் பிறந்தப்பவும் நான் பக்கத்துல இல்ல, இன்னைக்கு முதல்வருடப் பிறந்தநாள், நான் அவனோடதான் இருக்கனும்னு பிடிவாதமா நிக்கிறான். என்ன பண்றது ம்மா.?” என்றான் கோபமாக.
இவர்களின் உரையாடலை கேட்க சகிக்காமல்.. “நிகில் கம்பெனிக்கு போ.. நிறைய ஒர்க் இருக்கு.” என்றான் கண்மூடிய நிலையிலேயே.
கற்பகம்.. “ஆப்ரேசனே முடிஞ்சிருக்குனா.. எப்போ அடிபட்டது?” என்க.. “காலைல ஒன்பது மணிக்கே அடிப்பட்டுடுச்சிம்மா. அடிப்பட்டதும் மயக்கமாகிட்டான், கால் லாக்ல என் நம்பர் முதல்ல இருக்கவும் எனக்கு கால் பண்ணாங்க..
சொன்னா பயந்துடுவிங்கனு ஆப்ரேசன் முடிஞ்சப்புறம், மயக்கம் தெளியவும் உங்களுக்கு கால் பண்ணலாம்னு இருந்தேன். மயக்கம் தெளிஞ்சதும், அம்மாக்கு சொல்லாத, வீட்டுக்கு போய்டலாம்னு பிடிவாதம் செய்து வந்தாச்சு.” என்றான்.
“நா.. நான் இங்கயே இருக்கேன் அறிவு..” என்ற தங்கையைப் பெருமையோடு பார்த்தவன்.. “உனக்கு இங்க மாத்திக்க டிரெஸ் இருக்கா?” என்க.. “ம்.. அம்மா அன்னைக்கு கொடுத்து விட்டது இருக்கு.” என்றாள்.
“இன்னும் நாலஞ்சு நாளைக்கு சென்னையிலதான் இருப்போம்.. எதாவதுனா கால் பண்ணு.” என்று கிளம்பினான்.
அறிவு, ஆராதனா கிளம்பியதும்.. நிகிலிடம்.. “சர்ஜரி பண்ணிருக்காங்க, இவர் சொன்னா டிஸ்சார்ஜ் செய்திடுவாங்களா? எந்த ஹாஸ்பிட்டல்ல பார்த்திங்க? டாக்டர் பேரென்ன?” என மங்கை கோபத்தோடு விசாரிக்க..
“டாக்டர் பேரைக் கேட்டு என்னம்மா செய்யப்போற? அவர் அனுப்பவே மாட்டனுதான் சொன்னார். இங்க ட்ரீட்மண்ட் பார்க்குற அளவுக்கு என்கிட்ட பணமில்ல, கவர்ன்மண்ட் ஹாஸ்பிட்டல்ல பார்த்துக்கிறேன்னு, அதையும் மீறி என்னை அனுப்பலைனா பணம் கட்டமாட்டேன்னு பேசுறவனை எப்படி வச்சிருப்பாங்க?” என்றான் கோபமாக.
உண்மையில் பணமில்லையோ என மங்கை முகம் சுருங்க.. அதை அறிந்த நிகில்.. “உன் புருசன் மூனு லட்சத்துக்கு மேல சம்பளம் வாங்குறான்.” என தேவா காது படவே சொல்லி,
“இப்போவும் ஒன்னும் கெட்டு போகல, நீ நர்ஸ்தான? பார்த்துக்கோ..” என்று சொல்லி, அழுதுகொண்டிருந்த கற்பகத்திடம், “கொஞ்ச நாள் நடக்க வேணாம்னு சொல்லியிருக்காங்கம்மா, மத்தபடி பெரிய பிரச்சனை ஒன்னும் இல்ல. அழாதிங்க.” எனத் தேற்றி கிளம்பினான்.
தந்தையின் பெரிய கால் கட்டைப் பார்த்து குழந்தை அழவே, ஷர்மிளா இறந்த தினமே மகனுக்கு இப்படி ஆகியிருக்கே என கற்பகம் பயத்தோடு கண்ணீர் வடிக்க.. “ப்ச்.. ம்மா.. நல்லாத்தான் இருக்கேன். கால் மட்டும்தான் கொஞ்சம் வலிக்குது.” என சிடுசிடுக்க.. “ப்பா..” என குழந்தை இன்னும் பெரிதாய் அழவே..
“அப்பாக்கு ஒன்னுமில்லடா.. இங்க வா, நாம ரயில் ஓட்டலாம்.” என மங்கை குழந்தையை தூக்க.. “அப்பா..” என குழந்தை தேவாவையேப் பார்க்க..
கற்பகம்.. “அவங்கப்பன்கிட்ட போனாலாவது அழுகை நிறுத்தறானோ என்னவோ.. அவனை தேவா பக்கத்துல இறக்கிவிடு மங்கை, கட்டிலைப் பிடிச்சிட்டு நிற்பான்.” என்றார்.
கட்டிலருகே மகனை இறக்கிவிட, அழுகையை நிறுத்தியவன்.. “ப்பா.. ஊ..” என வலிக்கும் பாவனை காட்ட, “அப்பாக்கு வலிக்கலடா, தொட்டு பாரு..” என குழந்தையின் கையை எடுத்து கால்கட்டு மேல் வைத்துவிட, “ப்பா ஊ..” என கையை உருவினான்.
தேவேஷ்.. “அப்பாக்கு முத்தா கொடு, வலி போய்டும்.” என குழந்தையைத் தேற்ற.. மகன் தந்தை கன்னத்தை தொட எம்பியும் எட்டாமல் போக, அடிப்பட்ட கை, கால் பக்கம் குழந்தை நின்றிருக்க, உடலை திருப்ப முடியாமல் போகவே, மகனை தூக்கிக்கொடு என்பதாய் தேவேஷ் அன்னையைப் பார்க்க.. “மங்கை.. பார்த்துக்கோ.” என கற்பகம் வெளியேறினார்.
குழந்தையை தூக்கி அடிபடாத பக்கம் அமர வைத்தாள் மங்கை. கணக்கில்லா முத்தம் பதித்தவன் தந்தை நெஞ்சிலேயே சாய்ந்து கொள்ள, மகனை தடவிக் கொடுத்தவாறு கண்மூடினான் தேவேஷ்.
(காலையில் கிளம்பியவனின் மனமெல்லாம் ஷர்மிளாவே ஆட்கொண்டாள். ஆனால் காதலால் அல்ல..கோபத்தால்..
இப்படி குழந்தை எனக்கு பிடிக்கலனு எத்தனை சொன்னேன்? கேட்டியா? பிடிவாதம் செய்து குழந்தையை வரவச்சிட்டு, எங்கே உன்னை கீழ நினைச்சிடுவனோனு நீயா கற்பனை செய்துட்டு போய்ட்டியே.. கடைசிவரை என்னை உன்னால புரிஞ்சிக்கவே முடியலயா?
நீ போய்ட்டா என் நிலைமை என்னாகும்னு சாக ஒரு நிமிஷம் முன்ன யோசிச்சிருந்தா, அத்தனை பெரிய லாரி முன்ன அப்படி திடமா நின்னுருப்பியா?
ஆக.. உனக்கு என்னைப்பத்தி எந்த கவலையும் இல்ல, அடுத்தவ குழந்தையை விட நீ கீழ போய்டக்கூடாது, அதுக்காக உயிரையும் விடுவ.. இதுக்கு பேர்தான் காதலா?
என ஷர்மிளா மீதுள்ள கோபத்தோடு வண்டி ஓட்டிக் கொண்டிருந்தவன் கண்முன் ஷர்மிளா தற்கொலைக்கு நின்ற தருணம் கண்முன் வர.. நடு ரோட்டில் சட்டென தன்னை மறந்து பைக்கை நிறுத்தவும்.. பின்னே வந்த இருசக்கர வாகனம் இவன் பைக்கின் மீது மோத சுதாரிக்க முடியாமல் கீழே விழுந்திருந்தான். ஆனால் நிகிலிடம் மாற்றி சொல்லியிருந்தான்.)
தற்போது மகன் நெஞ்சில் சாய்ந்திருக்க, பிஞ்சு குழந்தைக்கு என்மேல இருக்க இரக்கம் கூட உனக்கில்லாம போச்சே..
உன் அர்த்தமற்ற மன உளைச்சலுக்காக, என் கஷ்டத்தை உணராம போன உன்னை விட, என் காயத்துக்கு மருந்தா இருக்க என் குழந்தை போதும்டி எனக்கு.. என பெரிய ஆதரவு கிடைத்தாற்போல் குழந்தையை அணைத்தவாறு தூங்கியிருந்தான்.
தேவேஷ் தூங்கியதும் மாத்திரை கவரை வெளியே எடுத்து வந்திருந்தாள். இரவு எட்டு மணிபோல் இரவிற்கு எந்தெந்த மாத்திரை கொடுக்க வேண்டும் என தனியே எடுத்து வைத்து, “ஆன்ட்டி இந்த மாத்திரையை கொடுங்க.” என கற்பகத்திடம் நீட்ட..
“எடுத்துதான் வச்சிட்டியே, அதை அப்படி கொடுக்கிறதுக்கென்ன? வயசான காலத்துல எனக்கு வேலை வாங்கிட்டு..” என நொடித்தவாறு தண்ணீர் கொண்டு வந்தவர் மகனிடம் நீட்ட, வாங்கி மாத்திரை குடித்தவன்.. “சஞ்செய் தூங்கிட்டானாம்மா?” என்றான்.
“மதியம் உன்னோட தூங்கிட்டானில்ல? அவன் மாமன் வாங்கி வந்த காரை ஓட்டிட்டு இருக்கான். அவன் விளையாடிட்டு இருக்கும்போதே ஊட்டி விட்டுடறேன்.” என்று வெளியேறினார்.
இரவு உறங்குவதற்காக மங்கை வர.. காயத்தோடு தன்னைப் பார்த்ததும் தவித்தது, வீட்டிற்கனுப்பிய டாக்டர் மீது கோபப்பட்டது, என நினைத்தவன்.. “என்னைப் பார்த்துக்க எனக்கு தெரியும். இந்த பரிதாபப்படுறது, மாத்திரை எடுத்து கொடுக்கிற வேலையெல்லாம் வேணாம்.” என்றான்.
தேவேஷ் முன்வந்து.. “ஓ.. நான் உங்களுக்காக செய்யிறேனு நினைச்சிங்களா? அந்த நினைப்பு வேற இருக்கா?” என முறைத்தவள்..
“நான் ஒன்னும் இதை வேண்டி விரும்பி செய்யல.. ஆன்ட்டி கேட்கவும் செய்தேன்.. நீங்க என் மகனுக்கு அப்பா. அதுக்காக சில சங்கடங்களை சகிச்சிட்டுதான் ஆகனுமேன்னு மாத்திரை எடுத்துக்கொடுத்தேன்.. அவ்வளோதான்..
தேவையில்லாம நீங்களா ஒரு கற்பனை செய்துக்கிட்டு எதையாவது உளறி வச்சிங்க.. மாத்திரையை மாத்தி கொடுத்து மாசக்கணக்குல ரெஸ்ட் எடுக்க வச்சடுவேன்..” என எச்சரித்து மாற்றுடை எடுத்துக்கொண்டு குளியலறை நுழைந்தாள்.