அதிகாலை ஐந்து மணிக்கு எழுந்த மங்கை தேவேஷைப் பார்க்க, உறங்கிக்கொண்டிருந்தான். ஆனால் ஆழ்ந்த உறக்கம்போல் இல்லை. முகம் சுருங்கியிருந்தது. வலிக்குமா இருக்கும் என பாத்ரூம் சென்று வந்தவள்..
எழுந்ததும் எப்படி பாத்ரூம் போவான்? அறிவை வர சொல்லலாமா என யோசிக்க, உள்ள தூக்கிட்டு வரதுக்கே இந்த நிலையிலயும் வேணாம்னு பந்தா பண்ணினான். இதுல அறிவோட பாத்ரூம் எப்படி போவான் என, திருமணத்தன்று நிகில் புகைப்படம் அனுப்பிய நம்பருக்கு அழைத்தபடி வெளியே வந்தாள்.
தூக்கத்தோடு நிகில் அழைப்பை ஏற்க.. “அண்ணா நான் மங்கை பேசுறேன்.” என்றதும்.. தூக்கம் மொத்தமாய் கலைந்திருக்க.. “சொல்லுமா? என்ன இந்த நேரத்துல?” என்றான்.
“உங்க வீடு பக்கமாண்ணா? நீங்க எங்க இருக்கிங்க?”
“பக்கம்தான்மா, இருபது நிமிஷத்துல வந்துடலாம், என்ன விசயம்?” என்றான் சிறு பதட்டத்தோடு.
“வீட்டுக்கு வரிங்களா? இப்போ காலைல மட்டும் ஹெல்ப் பண்ணுங்க, ஏழு மணிக்கப்புறம் வேற ஆள் ஏற்பாடு செய்துக்கிறேன்.” என்றாள் சங்கடத்தோடு.
நிகிலுக்கு விசயம் புரிய.. “தேவா எழுந்துட்டானா?” என்றான் சிறு புன்னகையோடு.
“இல்லண்ணா தூங்கிட்டிருக்கார். ஆனா முடிந்தவரை நீங்க சீக்கிரம் வாங்க.” என இணைப்பை துண்டித்தாள்.
ஆறு மணிபோல் நிகில் வர.. “நிகிலு.. என்ன இந்த நேரத்துக்கு வந்திருக்க?” என கற்பகம் கேட்க.. “மங்கை.” எனும்போதே குறுக்கிட்டு, “கம்பெனிக்கு போகும் முன்ன உங்க மகனை பார்த்துட்டு போலாம்னு வந்திருப்பார்.. ஆமாம்லண்ணா?” என்றாள்.
“ம்..” என ஆமோதிக்க.. “இன்னும் அவர் எழுந்துக்கல, டீ சாப்பிடுங்க.” என கிச்சன் சென்று டீயோடு வந்தாள்.
டீயை வாங்கியவன் மங்கையின் படிப்பு, வேலைப்பற்றி பேசிக்கொண்டிருக்க, ஆறரை மணிபோல் எழுந்த தேவேஷ் நிகிலின் குரல் கேட்டு.. “நிகில்.” என்றான்.
உள்ளே போனவனிடம்.. “என்னடா இந்த நேரத்துல?” என்றான்.
“ம்.. உனக்கு தாத்தா வேலை செய்ய வந்தேன்.” என்றான் சிரிப்போடு.
“என்ன?” என புரியாத பாவனை காட்டியவன்.. ஓ.. ஆயா வேலையைத்தான் ஆண் என்பதால் தாத்தா வேலை என்கிறான் என பின்னே புரிந்து.. “ஏண்டா? ஹாஸ்பிட்டலயிருந்து நேத்து சாயங்காலம் வந்தேன், காலைல வரைக்கும் போயிருக்கமாட்டனா?” என முறைத்து..
“நைட் பதினொரு மணிக்கும், காலைல நாலு மணிக்கும் போனேன். டீட்டெய்ல் போதுமா?” என விளக்கி, வந்துட்டான் காலங்காத்தால, மானத்தை வாங்கன்னே.. என மனதில் கடுகடுத்தான்.
தேவாவின் கோபம் புரிந்து.. “நானா வந்தேன்னு நினைச்சே இவ்வளோ கோபப்படுறியே.. தூங்கிட்டிருந்தவனை அஞ்சு மணிக்கு எழுப்பி வர சொன்னது தெரிஞ்சா எவ்வளோ கோபம் வரும்?” என தனது மொபைலில் மங்கையின் அழைப்பை காண்பித்தான் சிரிப்போடு.
“இவளை என்னதான் பண்றது?” என பல்லை நெறித்தான் ஆத்திரத்தோடு.
“இப்போ எதுக்கு இவ்வளோ கோபம்?” என நிகில் முறைக்க.. “அன்னைக்கு அவ பேசுன பேச்சுக்கு எதோ ஆத்திரத்துல தாலி கட்டிட்டேன். என்னவோ கத்திக்கோ, எப்படிவேண்ணா நினைச்சிக்கோன்னு நான் பாட்டுக்கு வந்திருக்கனும்.” என தன்னைத்தானே நொந்துகொண்டான்.
“அதானே.? ஏன் தாலி கட்டின?” என்றான் முறைப்பாக. எல்லாம் தெரிந்து கேட்கும் நண்பனை தேவாவும் முறைக்க.. “எப்படியோ தாலி கட்டிட்டயில்ல? இனி யோசிச்சு பிரியோஜனம் இல்ல..
குழந்தைக்காக கல்யாணம் செய்துக்கிட்ட பொண்ணு, இப்போ உன்னை விரும்ப ஆரம்பிச்சிட்டாங்கனு நான் சொல்லித்தான் தெரியனும்னு இல்ல, நேத்து எனக்கு புரிஞ்ச அதேநேரம் உனக்கும் புரிஞ்சிருக்கும்னு எனக்கு தெரியும். ஒழுங்கா மங்கை உன் பொண்டாட்டின்றதை மனசுல வை.” என்றான் அதட்டலாக.
தான் கட்டிய மாங்கல்யம் அவள் கழுத்தில் உரிமையாய் உறவாடிக்கொண்டிருக்க, நேற்று தனக்காக மங்கை தவித்தது தேவாவை மொத்தமாய் நிலைகுலையச் செய்தது. இன்றைய தவிப்பு நாளைய காதலாக மாறிடுமோ என அதிர்ந்தவன்..
அச்சோ.. தன்னால் உன்னோடு வாழ முடியாது பொண்ணே, உதவி செய்த ஒரு காரணத்திற்காக எதற்கு இத்தனை சிரமத்தை சேர்த்துக்கொள்கிறாய் என இரவெல்லாம் தவித்திருந்தவன்.. “சின்னப்பொண்ணுடா..” என முனுமுனுத்தான் வேதனையோடு.
ஒத்த வயதுடைய ஷர்மிளாவோடு வாழ்ந்தவனுக்கு, மங்கை சிறு பெண்ணாய் தெரிகிறாள்.. அதனால்தான் தயங்குகிறான் என நினைத்து.. “இதான் உன் பிரச்சனையா.?” என்ற நிகில் கண்கள் மின்னியது.
“டேய்.. நான் அந்த மீனிங்ல சொல்லலை..” என முறைக்க..
“வேற எந்த மீனிங்ல சொல்ற?” என நம்பாத பார்வை பார்த்தவன்.. “உனக்கென்னடா வயசு? இருபத்தொன்பது? இல்ல முப்பது இருக்குமா? மங்கைக்கும் இருபத்தி நாலு வயசாகுது.. அஞ்சு வருசம்தான் வித்தியாசம்.. சொல்லப்போனா நீங்கதான் சரியான மேட்ச்.” என்றான் மகிழ்வோடு.
கோபத்தோடு தேவா எதோ சொல்ல வர.. கற்பகம் காபியோடு உள்ளே வரவும் அமைதியானான். “வலி பரவால்லையா தேவா?” என கேட்க.. “ம் பரவால்லம்மா. சஞ்ஜெய் எழுந்துட்டானா?” என்று காபியை வாங்கினான்.
அதெல்லாம் வலிக்கும்.. நேத்து ஆப்ரேசன் செய்து இன்னைக்கு எப்படி வலி இல்லாம இருக்கும்? ஸ்ட்ரென் பண்ணினா கிரிட்டிக்கல் ஆகிடுமேனு பார்த்தா ரொம்பத்தான் திமிரு.. என தேவேஷை மனதில் வறுத்தெடுத்தவள்.. “சரிங்கண்ணா.” என்றாள்.
நிகில் கிளம்பிட, காலை டிபன் முடித்து ஒன்பது மணிபோல் முன்பு வேலைசெய்த மருத்துவமணைக்கு அழைத்தவள்.. “சார்.. நான் இனி வேலைக்கு வரமாட்டேன்.”
“ஏன் மங்கை? என்னாச்சு? எக்ஸாம் ரிசல்ட்ஸ் கூட இன்னும் வரலையே.” என கவலையாய் கேட்டார் மருத்துவர்.
“அது வரலைதான் சார்.. எனக்கு கல்யாணம் ஆசிடுச்சு. அதனாலதான் வரமுடியல.” என்றாள் சிறு தயக்கத்தோடு.
“என்ன மங்கை.. அதிர்ச்சிக்கு மேல அதிர்ச்சியா கொடுக்குறிங்க? ஒரு இன்விடேஷன் கூட இல்ல?” என்றார் அதிர்ச்சியாக.
“சாரிங்க சார்.. திடீர் கல்யாணம்.” என்றாள் சன்னக்குரலில்.
“ஓஹ்..” என கவலையானவர், “கல்யாணமானா என்ன மங்கை? வேலைக்கு வரலாமே? ஹஸ் சென்னையா? இல்லை வேற ஊரா?” என கேள்விகளை அடுக்க, இடையிட்டவள்..
“ஸார்.. எப்படினாலும் கவர்மண்ட் ஜாப் கிடைச்சா அங்க ரிசைன் பண்ணத்தான் போறேன்? அதை கொஞ்சம் சீக்கிரம் பண்றமாதிரி ஆகிடுச்சி..
சென்னைலதான் இருக்கேன், ஆனா இப்போதைக்கு வேலைக்கு வர ஐடியா இல்லைங்க சார்.. இப்படி சடர்னா சொல்றதுக்கு சாரி சார்..” என்றாள் உறுதியாக.
“ஓ.கே.” என குரலிறங்கியவர், “கங்ராட்ஸ்.. அன்ட் ஹாப்பி மேரீட் லைஃப்.” என வாழ்த்தி இணைப்பை துண்டித்தார்.
உள்ளிருந்து மங்கை பேசுவதை கேட்டுக்கொண்டிருந்தவன்.. “என்னத்துக்கு வேலைக்கு போகலன்றா? வீட்டுல இருந்து என் உயிரை எடுக்கவா? என நினைத்தான் கடுப்போடு.
கற்பகம் மொபைல் அடிக்க.. தவமணியா? திருமணத்திற்கு பிறகு முதல் அழைப்பு என்பதால் சந்தோசத்தோடு ஏற்க.. “நல்லாயிருக்கிங்களா?” என நலம் விசாரிக்க.. “நல்லா இருக்கேன் தவமணி.” என்றார் நெகிழ்வாக.
“தேவாக்கு அடிபட்டுடுச்சாமே, இப்போதான் அறிவு சொன்னான்.. மங்கைக்கு ஃபோன் செய்தா பிஸினு வந்தது. என்னவோ ஏதோனு உங்களுக்கு செய்தேன்.” என்றார் கவலையாக.
மகனின் நலனறிய அழைத்திருக்கிறார் என்றதும் இன்னும் சந்தோசம் கூடிட.. “நல்லா இருக்கான் தவமணி..” என ஆரம்பித்தவர் பத்து நிமிடம் வரை உரையாடினார்.
கற்பகத்தின் உற்சாகமான பதிலிலேயே தன் நலம் விசாரிக்க அழைத்திருக்கிறார்கள் எனப்புரிய.. நேற்று அறிவு தன்னை தூக்கி வந்ததையும் நினைக்க.. மீள முடியாத பந்தத்தில் சிக்கிக்கொண்டோமோ என பெரும் அவஸ்த்தைக்குள்ளானான் தேவேஷ்.
தவமணி பேசிய சந்தோசத்தோடு, மகனுக்காக மங்கை வேலையை விடுகிறாள் என்ற நினைப்பு மேலும் சந்தோசத்தை உண்டாக்க.. மகளுக்கு அழைத்து விசயத்தை சொன்னார்.
“அச்சோ சாமி.. எங்களுக்கும் பொழப்பிருக்கு, இருப்பிருக்கு, முக்கியமா மானரோசம் இருக்கு.. நாங்க எதுக்கு அங்க வரப்போறோம்?” என சந்தோசத்தோடே இணைப்பை துண்டித்தாள் கார்த்திகா.
அடுத்த வாரம் முழுதும் மங்கை சமையல், குழந்தையைப் பார்த்துக்கொள்ள, தேவாவிற்கு உணவு, மாத்திரை என அனைத்திற்கும் கற்பகத்தையே அனுப்பிவைத்தவள்.. இரவு படுப்பதற்கு மட்டுமே அறைக்குள் நுழைவாள்..
இவள் உள்ளே வந்தால் தேவா லேப் பார்த்துக்கொண்டிருப்பான், அல்லது தூக்கம் வரவில்லையென்றாலும் கண்களை மூடிக்கொள்வான். இவளும் அவனை கவனியாமல் படுத்துக்கொள்வாள்.
அதிகாலை மங்கை எழும்போது தேவேஷ் நல்ல உறக்கத்தில் இருப்பான், அந்தநேரம் சிராய்ப்புகளில் சீழ் பிடிக்கிறதா? கை வீக்கம் குறைந்திருக்கிறதா? என கவனித்துப் பார்ப்பாள்.
அறிவு அமெரிக்கா கிளம்புவதால் தங்கையிடம் விடைபெற வந்திருந்தான். வழக்கம் போல் சஞ்ஜெய் மாமனிடம் ஒட்டிக்கொள்ள, மூன்று சக்கர சைக்கிளைக் கண்டதும் குதூகலித்தான் குழந்தை.
“அப்பாவை பார்த்துட்டு சைக்கிள் ஓட்டலாம்.” என தேவேஷ் அறைக்குள் சென்றான்.
அலுவலக வேலை முடிக்க இரவு மூன்று மணிக்கு மேல் ஆகியிருக்க, தற்போது தூங்கிக்கொண்டிருந்தான் தேவா.
இருவரும் வெளியே வர.. “அறிவு.. இவன் இன்னும் தனியா நடக்கவே ஆரம்பிக்கல, எதையாவது பிடிச்சிட்டுதான் நடப்பான். அதுக்குள்ள சைக்கிளா?” என மூன்று சக்கர சைக்கிளை ஆர்வமுடன் பார்தாள் மங்கை.
“இன்னும் கொஞ்ச நாள்ல நடக்க ஆரம்பிப்பான், அப்போ நான் இங்க இருக்க மாட்டேன்ல? அதான் இப்போவே வாங்கிட்டேன்.” என்றான்.
குழந்தையை சைக்கிளில் அமர்த்தி அழகு பார்த்து.. சற்று நேரம் பேசியிருந்து.. “டைம் ஆகுது மங்கை, ஆரா தனியா இருக்கா..” என தங்கையின் செலவிற்கு பணம் கொடுத்து, விடைபெற்றான் அறிவு.