மேலும் பத்து நாள் கடந்திருக்க, அறிவு புக் செய்திருந்த காரை வந்து எடுத்துக்கொள்ளுமாறு ஷோரூமிலிருந்து அழைப்பு வர.. விசயத்தை கற்பகத்திடம் சொல்லி அவரையும் அழைத்தாள்.
தேவாவின் தேவைக்காக தான் வீட்டில் இருப்பதுதான் சரிவரும் என கற்பகம் சொல்ல, மகன் டிரைவ் பண்ண விடுவானோ என்ற சந்தேகம் வர, தனியாகவே சென்றாள்.
தானாகவே திருமணத்திற்கும் கேட்டு, தற்போது தேவாவிடமிருந்து தள்ளியிருக்கும் மங்கை மீதும்.. தாலி கட்டிய மனைவியை புறக்கணிக்கும் மகன் மீதும் கோபத்தில் இருந்தார் கற்பகம்.
இருவரும் இருதுருவங்களாக இருக்க, புது கார் வந்தபோதும் கற்பகத்திற்கு பெரிதாய் மனம் லயிக்கவில்லை. தேவாவிடம் காரைப் பற்றி மகன் மழலையில் விளக்க.. அவனும் எந்த பாவனையும் காட்டவில்லை.
மேலும் பத்து நாட்கள் கடந்திருக்க, காலை டிபனோடு வந்த கற்பகம்.. “எங்க தேவா கிளம்பிட்டிருக்க? ஆஸ்பத்திரிக்கு போகனுமா?” என்க.. “இல்லம்மா.. கம்பெனிக்கு கிளம்பறேன்.” என்றான்.
“பட்ட கால்லையே படும்னு சொல்வாங்க.. திரும்ப எதாவது அடிப்பட்டா என்னடா செய்யிறது? வீட்டுலயிருந்து வேலை பார்க்குறதான? இன்னுமென்ன? என எத்தனை திட்டியும் கற்பகத்தின் மறுப்பு வேலைக்காகவில்லை.
தேவா வேலைக்கு கிளம்புகிறான் என்றதும் மங்கைக்குள் அத்தனை பரிதவிப்பு.. இன்னும் கொஞ்ச நாள் ஆகட்டும் என வாய் வரை வந்த வார்த்தையை முயன்று முழுங்கினாள்.
மங்கை காரில் செல்வானா என்ற ஆசையோடு, கார்சாவியை எடுத்த வந்து கற்பகத்திடம் கொடுத்தாள்.
“கார் வாங்கினதுலயிருந்து சும்மாத்தான் நின்னு கிடக்கு.” என கற்பகம் சாவியை நீட்ட.. அன்னையை முறைத்தவன் நிகிலிற்கு அழைத்து, குழந்தையை சமாதானம் செய்து, பின்னே நிகில் வரவும் அவனோடு கிளம்பினான்.
இந்த நொண்டி கால்ல பைக்ல போகலன்னாதான் என்ன? என் குழந்தை மட்டும் வேணும் என் கார் வேணாமாம்.. வேணாட்டி போடா..என பொறுமினாள் மனதில்.
உடல் சற்று பரவாயில்லையென்கவும் ரூமில் சாப்பிடுவதை விடுத்து, வழக்கம்போல் டைனிங்டேபிளில் சாப்பிட ஆரம்பித்தான். வழக்கம்போல் இரண்டே இட்லியோடு எழுந்தான்.
முன்னதான் ஒரே இடத்துல உக்காந்திருந்தான், அதனால பசிக்காது. இப்பவும் இரண்டே இட்லில எழுந்துட்டானே என மங்கை தவிக்க.. “ம்மா.. இனி நீ சமை, எனக்கு இந்த டேஸ்ட் ஒத்து வரல.” என்றான்.
குழந்தைக்கு ஊட்டிக்கொண்டிருந்த மங்கை முகம் சட்டென வாடிட.. “ம்.. இன்னும் உனக்கு பொங்கி போட்டுட்டு இருக்க எனக்கு இப்போதான் இளமை திரும்புது.” என நொடித்தவர்..
“மங்கை சமைக்க ஆரம்பிச்சதுக்கபுறம்தான் உன் மகன் ஆர்பாட்டமில்லாம சாப்பிடறான். என் சமையல் அவனுக்கு பிடிக்கிறதில்ல. அதனால இனி உன் பொண்டாட்டிதான் சமைப்பா..” என்றார் திட்டவட்டமாக.
பொண்டாட்டி என்ற வார்த்தைக்கு அன்னையை முறைத்தவாறு அறைக்குள் சென்றான்.
தேவேஷ் முகம் இறுகியதும்.. “ஆன்ட்டி.. அவர்கிட்ட எதுக்கு பொண்டாட்டிலாம் சொல்றிங்க?” என கோபித்தாள்.
“தாலி கட்டினவனுக்கு நீ பொண்டாட்டி இல்லாம வேற என்ன?” என மங்கையையும் கடுகடுத்தார்.
அடுத்த நாளிலிருந்து காலையில் குழந்தையோடு நேரத்தை கழித்து, கம்பெனிக்கு செல்பவன், இரவு எட்டு மணிக்கு மேல்தான் வருவான். மீண்டும் குழந்தையோடு சற்று நேரம் விளையாண்டு, உண்டு, அறைக்குள் சென்றிடுவான். பத்து மணிக்கு மேல் தேவா தூங்கிய பின்தான் அறைக்குள் வருவாள் மங்கை.
இப்படியாக மேலும் பத்து நாள் முடிந்திருக்க, திருமணத்திற்கு முன் சொன்னது போலவே மனைவி எனும் உரிமையெடுக்காமல், தேவேஷ் தன்னிடம் காட்டிய பாரமுமே அவன் மீது நன் மதிப்பை உண்டாக்க, மெல்ல மெல்ல மங்கையை ஈர்த்துக்கொண்டிருந்தான்.
ஆனால் தேவேஷ் மனதில்.. அன்னையின் ஆதரவு இருந்தபோதும்.. தன்னிடம் உரிமையெடுக்காமல் குழந்தை மட்டும் போதும் என சொன்னது போலவே விலகி நிற்பவளை நினைக்க..
அவளின் பிடிவாதத்திற்காக திருமணம் செய்திருந்தாலும், சிறு பெண்ணின் எதிர்கால கனவுகளையும், வாழ்வையும் கெடுப்பதாய் தோன்ற, மங்கை மீதிருந்த கோபம்போய் தற்போது வேதனையே அதிகமானது.
இந்நிலையில்.. அரசு வேலைக்கான பரிட்சையில் நல்ல மதிப்பெண்களில் மங்கை தேர்வாகியிருந்தாள். ஒரு வாரம் கழித்து வேலைக்கு செல்லவேண்டியிருக்க.. கற்பகத்திடம் விசயத்தை சொல்லவும்,
“அப்போ இங்க இருக்கமாட்டியா? தேவாதான் நிறைய சம்பாதிக்கிறானே.. அவன் பணம் உனக்கு வேண்டாமென்றாலும், உன் அண்ணன் பணம் கொடுக்கிறான்தானே? வேலைக்கு போயே ஆகனுமா?” என கற்பகம் கவலையாய் வினவ..
குழந்தையை விட்டு பிரிய நேர்வதை நினைத்த மங்கைக்கும் கவலையாகத்தான் இருந்தது. ஆனால் வேலை கிடைக்க எத்தனை உழைத்தோம் என்பதோடு, தனக்கென வருமானமும் அடையாளமும் வேண்டும் என யோசிக்க, வேலையை விடவும் மனமில்லை.
சென்னையில்தான் வேலை கிடைத்திருந்தது. ஆனால் வீட்டிலிருந்து மருத்துவமணை செல்ல, இரண்டு மணிநேரத்திற்கு மேல் ஆகும் என்பதால், வழித்தடங்கள் பழகும் வரை சிறிது நாளைக்கு விடுதியில் தங்கிக்கொள்ள முடிவெடுத்தாள்.
விடுதியில் தங்கிய முதல் நாளே.. இரவு தேவா தூங்கிய பின்னே தினமும் அவன் கை கால்களை ஆராய்வதும், விதவிதமாய் சமைத்து இன்றாவது ஒரு இட்லி சேர்த்து உண்கிறானா எனப் பார்ப்பதும் நினைவிற்கு வர,
குழந்தையை விட்டு பிரிந்திருப்பது சிரமம் என நினைத்திருந்தவளுக்கு, இங்கே வந்த பிறகுதான் மனம் வெகுவாய் தேவாவை தேடுவதை உணர்ந்தாள்.
அடி மானங்கெட்ட மங்கையே.. போயும் போயும் இந்த சிடுமூஞ்சி கருவாயனையா உனக்கு பிடிச்சிருக்கு? உன் ரசனை ஏன் இவ்வளோ கேவலமா இருக்கு? என நினைக்க முகம் புன்னகை பூத்தது.
ம்.. பிடித்தமோ, பிடித்தமில்லையோ, இந்த ஜென்மம் இவனோடுதான் என்றபோது குழந்தை மட்டுமே நிம்மதியை கொடுத்தான்.
தற்போது பிடித்தம் என புரிந்த பின்னே நிம்மதியோடு சந்தோசமும் சேர்ந்துகொள்ள, ம்.. நம்ம வாழ்க்கை கூட ஸ்வாரஸ்யமாத்தான் இருக்கும்போலயே என நினைத்தபடி.. தனது மொபைலிலுள்ள திருமண புகைப்படத்தை எடுத்துப் பார்த்தாள்.
கருவாயன்லாம் இல்ல, மாநிறமா நல்லா ஷைனிங்கா இருக்கான் என ரசித்தவள்.. ஆனாலும் இவன் மீதான பிடித்தத்தை காட்டிக்கொள்ளக் கூடாது. தெரிஞ்சிட்டா.. குழந்தை மட்டும் போதும்னு சொன்னனு பேயாட்டம் ஆடுவான் என தன்னைத்தானே எச்சரித்துக்கொண்டாள்.
வேலைக்கு சேர்ந்த முதல்வாரம் ஞாயிற்றுக்கிழமை மங்கைக்கு டியூட்டி இருப்பதால், காலை ஏழு மணிவரை நைட்ஷிஃப்ட் பார்த்தவள், குளித்து தயாராகி வீட்டிற்கு வர பத்து மணியாகியிருந்தது.
மங்கை வருவதற்குள் தேவா கம்பெனிக்கு கிளம்பியிருந்தான். மனம் சப்பென உணர குழந்தையோடு நேரத்தை போக்கி, இரண்டு மணி நேரம் தூங்கி எழுந்தவள், மாலை ஆறு மணிக்கு டியூட்டி என்பதால், தேவா வரும்வரை காத்திருக்க முடியாமல் நான்கு மணிக்கெல்லாம் கிளம்பியிருந்தாள்.
நாம் இத்தனை தேடினால் அவன் கண்டுபிடித்திடுவானே என அடுத்த முறையிலிருந்து தேவா இல்லாத நேரத்தை கணக்கிட்டே வீட்டிற்கு வந்து போனாள்.
இப்படியாக ஆறு மாதம் கடந்திருக்க.. கற்பகம் மங்கைக்கு அழைத்தார். தேவேஷ் ப்ராஜக்ட் விசயமாக வெளியூர் சென்றிருப்பதால், குழந்தைக்கு என்னவோ என்ற பதட்டத்தோடு அழைப்பை ஏற்க.. “தேவாவும் வீட்டுல இல்ல, காரையும், பைக்கையும் பார்த்து குழந்தை ஏமார்ந்து போறான்.. ஒரு இரண்டு நாள் லீவ் போட்டுட்டு வரக்கூடாதா?” என்றார் கோபம் போல்.
“உங்க மகன் எப்போ வரார் ஆன்ட்டி?” என்க.. “அவன் வர இன்னும் இரண்டு நாள் ஆகுமாம். இப்போதான் போன் பண்ணினான். அதான் உன்னையாவது வர சொல்லலாம்னு போன் போட்டேன்.” என பொய்யுரைக்க அது நன்றாக வேலை செய்தது.
“சரிங்க ஆன்ட்டி, இன்னைக்கு நைட் டியூட்டி, காலைல வரேன்.” என்றாள்.
அடுத்தநாள் பத்து மணிக்கெல்லாம் வந்த மங்கைக்கு, தேவா இல்லாததால் பெரிதாய் சமைக்க தோன்றாமல் போகவே, சமையல் வேலையை கற்பகத்திடம் ஒப்படைத்து குழந்தையோடு விளையாடிக்கொண்டிருந்தாள்.
சமையல் முடித்த கற்பகம் நாடகம் பார்க்க டி.வியை ஆன் செய்து சேனலை மாற்ற, “ம்மா.. அல மத்தி.. அல மத்தி..” என ஹல மத்தி ஹபி.. என்ற விஜய் பாடலை வைக்க கத்தவே..
“ஒரு நிமிஷத்துல எப்படித்தான் கண்டு பிடிப்பானோ?” என பேரனை நொடித்தவாறு அவன் விரும்பிய பாடலை வைத்து விட..
“இவன் யாரோ சிக்க வச்சானே..
என் மனசுக்குள்ள குழந்த போல கொஞ்சிக்கிட்டானே..
லவ்வு வச்சானே..
இவன் யாரோ கிக்க வச்சானே..
என் வயசுக்குள்ள முதல் மழைய ஃபீல வச்சானே..” என குழந்தையோடு மங்கையும் ரசித்துப் பாடியவள், உக்கார்ந்தபடி ஆடியும் கொண்டிருக்க.. வீட்டிற்கு வந்த தேவேஷ் அதிர்ந்து நின்றான்.
இவனும் மங்கையைப் பார்த்தே ஆறுமாதம் ஆகியிருக்க, இப்படியே போனால் அவள் வாழ்வு என்னாவது என.. எனக்கும் உன்மீது பிடித்தம் இல்லை, உனக்கும் என்மீது பிடித்தமில்லை. இப்படியிருக்க உன் வாழ்வை ஏன் வீணாக்கிகொள்ள வேண்டும்?
இனி என் வாழ்வில் யாரும் வரப்போவதில்லை. குழந்தைக்காகத்தான் உயிரோடிருக்கிறேன். நிச்சயம் அவனை நல்லா பார்த்துப்பேன்.. என்னைவிட்டு விலகி உன் வாழ்வைப் பார்.. என அதட்டி மிரட்டியெல்லாம் இல்லாமல் கெஞ்சலாய் எடுத்துரைக்க வேண்டுமென நினைத்திருந்தான்.
ஆனால் தற்போது மங்கையின் கண்ணில் அத்தனை காதல் இருக்க, நேரெதிரே தான் நிற்பதையும் மறந்து ரசித்து பாடிக்கொண்டிருந்தவளைப் பார்த்து பேரதிர்ச்சியோடு வாயிற்படியிலேயே நின்றான்.
“அப்பா..” என குழந்தை ஓட்டமாய் தேவேஷிடம் செல்ல.. பிறகுதான் தேவாவைப் பார்த்து அதிர்ந்தவள் சட்டென முகத்தை திருப்பிக்கொண்டாள்.
அச்சோ கண்டுபிடிச்சிட்டானே என நினைத்தவள், தன்னிடம் பொய்யுரைத்த கற்பகத்தை முறைத்தாள். உன் முறைப்புக்கெல்லாம் நான் அசருவனா என நினைத்தவர்.. “காலைல டிபன் செய்ததே அலுப்பா இருக்கு, தேவாக்கும் எனக்கும் காபி வை.” என்றார் அதட்டலாக.
இவன் முறைப்பை பார்ப்பதற்கு கிச்சன் எத்தனையோ பரவாயில்லை என எழ.. “எனக்கு காபி வேணாம்.” என மங்கை முன் தேவா வேதனையோடு நிற்க..
அவனின் முகம் பார்க்காமல் தலைகுனிந்திருந்தவள்.. எப்படியும் முறைத்துக்கொண்டுதான் இருப்பான் என.. “எனக்கு பிடிச்சதை நான் பாடினேன்..” என்றவள்.. நிமிர்ந்து அவன் முகம் பார்த்து.. “உங்களையேது டிஸ்டர்ப் பண்ணினேனா?” என நியாயம் கேட்டு..
“வேண்ணா.. மயிலே உனை நான் மயக்கவும் இல்லை.. னு நீங்க பாடிக்கோங்க.. உங்க வாய்ஸ் கர்ண கெடூரமா இருந்தாலும் நான்லாம் கோப்பட மாட்டேன்.” என பெரிய மனதோடு சொல்லி கிச்சனுக்குள் விரைந்தாள்.