கிச்சனுள் சென்றவள்.. “லவ் பண்றது இவனுக்கு வேற தெரிஞ்சி தொலைச்சிடுச்சே.. குழந்தைக்கு அம்மா மட்டும் போதும்ன? இப்போ என்னாச்சுனு எகுறுவானே.. என்ற தவிப்போடு பாலை காய வைத்துக்கொண்டிருந்தாள் மங்கை.
தேவா தனதறை சென்றிட, தேவாவிற்காக காபியை வழக்கம்போல் கற்பகத்திடம் நீட்டினாள். “நீ கொடுத்தா கொடு, இல்ல விடு, இனி ரூம்க்குள்ள போய் கொடுக்கிற வேலையை நான் செய்யமாட்டேன்.” என்றார் திட்டவட்டமாக.
“ஆன்ட்டி ப்ளீஸ்..” என இவள் கெஞ்ச.. இப்படி கெஞ்சும் ஆளில்லையே என கற்பகம் சந்தேகத்தோடு மங்கையைப் பார்க்க.. “டையர்டா இருப்பார்.. நான் உள்ள போனா டென்ஷன் ஆவார்..” என்றாள் கெஞ்சலாகவே.
வெளியில் சென்று வரும் மகன் வீட்டிற்கு வந்ததும் காபியை தேடுவான் என்றாலும்.. “அப்படி எத்தனை நாள் நீ உள்ள போய் அவன் டென்சன் ஆகியிருக்கான்? கல்யாணம் ஆனபின்ன உங்கண்ணன் கல்யாணத்துக்கு போனவ ஒருமாசம் கழிச்சிதான் வந்த..
அப்புறம் ஒருமாசம் இங்கயிருந்த வரைக்கும் நைட் தூங்கறதுக்கு ரூம்க்குள்ள போறதோட சரி, அப்போவும் அவன் டென்சனாகி கத்தினமாதிரி எனக்கொன்னும் தெரியலையே.. நீ உள்ள போனா அவன் டென்சனாவானு நீயா முடிவு பண்ணாத.” என்றார் சிடுசிடுப்பாக.
அன்றைய நாட்களும் இன்றும் ஒன்றில்லை என இவருக்கு எப்படி புரிய வைப்பதென தவித்தவள்.. “காபி ஆறியே போயிடுச்சி போங்க.” என கோபித்து காபியை டைனிங் டேபிளில் வைத்து சோபாவில் அமர்ந்துகொண்டாள்.
இங்கே அறையினுள் தந்தையோடு வந்தவன், அவனுடன் சேர்த்து இன்னொரு குளியல் போட்டான் குதூகலத்தோடு. குழந்தைக்கு உடலை துவட்டி இடுப்பில் துண்டை கட்டிவிட்டவன்.. “அம்மாகிட்ட போய் டிரெஸ் மாத்திக்கோ.” என அனுப்பி விட.. “ம்மா டெஸ் போட்டு.” என குழந்தை கற்பகத்திடம் வர.. எப்படியும் மகன் காபிக்கு வருவான் என.. “வாடா பட்டு..” என தனதறைக்குள் அழைத்து சென்றார்.
அன்னை வெளியே இருப்பார் என நினைத்து, “ம்மா காபி.” என்றான் உள்ளிருந்து.
தேவேஷ் குரல் கற்பகத்தை வந்தடைந்ததும், எதோ ஒன்று போட்டுக்கொண்டு அப்பாவிடம் செல்ல குழந்தை தவித்தபோதும்.. இந்த உடை வேணுமா? இல்ல இதுவா? என பேரனிடம் மாற்றி மாற்றி கேட்டுக்கொண்டிருந்தார்.
பத்து நிமிடமாகியும் காபி வராததால், தேவேஷ் காபிக்காக வெளியே வர.. தேவேஷ் காபி கேட்டபோதே மீண்டும் காபி தயாரித்து வைத்திருந்த மங்கை.. “ஃப்ளாஸ்க்குல இருக்கு. ஊத்திக்கோங்க.” என்றாள் டி.வி.யில் கவனம் வைத்தபடி.
“ம்மா.. அப்பாட்ட.” என குழந்தையின் குரல் கேட்க, கற்பகம்.. “அப்பா ஊசி போடப்போறான், போய்ட்டு வந்ததும் போலாம். இப்போ அம்மா கதை சொல்வனாம்.” என கற்பகம் சமாதானம் செய்வது புரிய..
ஃப்ளாஸ்கில் இருந்த காபியை ஊற்றி நின்றபடியே அருந்தி, மங்கையிடம் வந்தவன்.. “உன்கிட்ட கொஞ்சம் பேசனும். மேல வா.” என மாடிக்கு போனான்.
மங்கை மேலே வர.. “குழந்தைக்காகவும், நமக்கு கல்யாணம் ஆகிடுச்சின்றதாலயும் என்னை பிடிச்சிருக்கிறதா நீயா நினைச்சிட்டிருக்க,
இரண்டு பேருக்கும் பிடிச்சி நடக்குற கல்யாணமே, நிறைய பேருக்கு தோல்வியில முடிஞ்சிடுது.. குழந்தைக்காகவும், என்ன சொன்னாலும் புரிஞ்சிக்கமாட்றாளேன்ற கோபத்துலயும் நடந்த கல்யாணம் எப்படி நிலைக்கும்?
காதல்ன்ற உணர்வும் நம்பிக்கையும் எனக்கு ஷர்மியோடவே போய்டுச்சி.. இரண்டு வருசமோ மூனு வருசமோ கழிச்சி, நிச்சயம் என்னோடான வாழ்க்கை உனக்கு பிடிக்காமத்தான் போகும். நீ வாழ வேண்டிய பொண்ணு.. என்னோட இருந்து உன் வாழ்க்கையை பாழாக்கிக்காத..” என்றான் மிக மிக பொறுமையாக.
முனுக்கென கண்ணீர் வெளிவர தேவாவிற்கு எதிர் திசையில் திரும்பியவள்.. “என்னை பிடிக்கலன்றதை நேரடியா சொல்லவேண்டியதுதான? எதுக்கு இப்படி சுத்தி வளைக்குறிங்க?” என்றாள்.
மங்கையின் கண்ணீர் மனதை பிசைய.. “ப்ச் நான் என்ன சொல்ல வரேனு உனக்கு புரியவேயில்லையா?” என்றான் வேதனையோடு.
மனதை திடப்படுத்தி தேவேஷ் புறம் திரும்பியவள்.. “ஏன் புரியாம?” என தீர்க்கமாய் பார்த்து.. “ஷர்மிளாக்காவை இன்னும் லவ் பண்றிங்களா?” என்றாள்.
ஷர்மியின் பிரிவை தாளமுடியாமல் வேதனையில் உழன்றவன், அவளின் இறப்பு விபத்தல்ல தற்கொலை என தெரிந்த நாளிலிருந்து இன்று வரை ஷர்மிளாவின் துரோகத்தை ஏற்க முடியாமல் தவிக்கிறானே அன்றி பழைய காதல் இருக்கிறதா என அவனே அறியான்.
மங்கையின் கேள்விக்கு ஆமாம் என சட்டென சொல்ல வராமல் போனாலும்.. மங்கையின் வாழ்வில் மாற்றம் வரவேண்டும் என்பதற்காக.. ஆமாம் என்பதாய் தலையசைத்தான்.
“குட்..” எனப் பாராட்டியவள்.. “இனி அவங்களோட வாழ முடியாதுனு தெரிஞ்சப்புறமும் லவ் பண்றிங்க ரைட்..” என கேட்க.. தேவேஷ் அமைதியாக.. “ஸோ.. லவ்க்கும் ஃபிஸிக்கல் டச்சுக்கும் சம்மதமேயில்ல.. சரியா?” என்றாள் உறுதியான பார்வையோடு.
என்ன சொல்ல வருகிறாள் எனப்புரிந்தவன்.. “நான் அவளோட அஞ்சு வருசம் வாழ்ந்திருக்கேன்..” என கோபமாய் ஆரம்பிக்கவும்..
“உங்களை டிஸ்டர்ப் பண்ணக்கூடாதுனு சொல்ல மட்டும்தான் உங்களுக்கு ரைட்ஸ் இருக்கு, நான் எப்படி வாழனும்? எனக்கு என்ன தேவைனு சொல்ல நீங்க யாரு?” என கோபமாக இடையிட்டவள்..
“ஷர்மிளாக்காவை நினைச்சிட்டு வாழ உங்களுக்கு வேண்ணா அவங்களோடான அஞ்சு வருச வாழ்க்கை தேவைப்படலாம்.. எனக்கு அதுமாதிரி எதுவும் தேவையில்லை.” என நிமிர்வாய் சொல்லி..
மஞ்சள் கயிற்றை தொட்டுக் காட்டியவள்.. “ஆன்ட்டி உங்களுக்கு இன்னொரு கல்யாணம் செய்து வைக்காம இருக்கத்தான் இதை கட்டும்போது அமைதியா இருந்தேன். இனியும் அதுக்காக மட்டும்தான் இது என் கழுத்துல இருக்குனு நினைச்சிக்கோங்க..” என்று மளமளவென கீழிறங்கினாள்.
“அப்பா இப்போ வந்துருவார்.” என கண்ணீரோடே குழந்தையை சமாதானம் செய்து அறைக்குள் நுழைந்து, தனது மொபைல் ஹேண்ட்பேகை எடுத்துக்கொண்டு வெளியே வந்தவள்.. “நான் கிளம்பறேன் ஆன்ட்டி.. லீவ் கிடைக்கும்போது வரேன்.” என வெளியேற..
கற்பகம்.. “நில்லு மங்கை.” என வேகமாய் மங்கையருகே வர.. தலைகுனிந்தாள் மங்கை.
“நாளைக்குத்தான கிளம்பறதா இருந்த? என்ன சொன்னான்? ஏன் அழற?” என்றார் தவிப்பாக.
“அவர் எதுவும் சொல்லலை ஆன்ட்டி, ஹாஸ்பிட்டல்ல கூப்பிட்டாங்க. குழந்தையோட இருக்க முடியலயேனு அழ வந்திடுச்சி. பாய் ஆன்ட்டி.” என்றாள்.
மகன் எதோ சொல்லியிருக்கான், மங்கை பொய் சொல்கிறாள் எனப்புரிய.. “குழந்தையோட இருக்க முடியலன்னு அழுதுட்டா மட்டும் பிரச்சனை தீர்ந்திடுமா? நீ வேலைக்கு போறதே எனக்கு பிடிக்கல, ஆனாலும் உன் விருப்பத்துக்காக அமைதியா இருக்கேன்.
கார்ல போனா இங்கயிருந்து ஒன்றரை மணி நேரத்துல ஹாஸ்பிட்டல் போய்டலாம்தான.? உன் வசதிக்குத்தான உங்கண்ணன் கார் வாங்கிக் கொடுத்தான்? குழந்தைமேல அக்கறை இருக்குனா இனி இங்கயிருந்து வேலைக்குப் போ.” என்றார் கோபமாக.
“இங்கயிருந்து யார் மனசையும் கஷ்டப்படுத்த விரும்பல ஆன்ட்டி, எனக்கு எப்போ டைம் இருக்கோ அப்போ வந்து என் குழந்தையைப் பார்த்துப்பேன்.” என நான்கடி முன்னே நடந்தவள்.. மீண்டும் வந்து.. “ப்ளீஸ் ஆன்ட்டி.. உங்க மகன் வீட்டுல இல்லனு பொய் சொல்லி இனி என்னை வரவைக்காதிங்க..” என கிளம்பினாள்.
மங்கை பேசியதனைத்தும் கேட்டுக்கொண்டிருந்த தேவேஷின் மனம் நிலைகொள்ளாமல் தவிக்க.. மகனைக் கண்ட கற்பகம்.. “என்னடா சொன்ன அவகிட்ட?” என்றார் கோபமாக.
“ம்மா.. அது வந்து.” என தயங்கி நிற்க.. “மங்கை விசயத்துல நீ இப்படி தயங்குற ஆளும் இல்ல, நீ பேசுறதுக்காக மங்கை அழற புள்ளையும் இல்ல, இன்னைக்கு இரண்டும் நடக்குற அளவுக்கு என்னடா சொல்லித் தொலைச்ச?” என்றார் பரிதவிப்பாக.
“ப்ச்.. ம்மா, அவ நல்லதுக்குத்தான் பேசினேன். நான் பார்த்துக்கிறேன் விடு..” என்றான் கோபமாக.
இதற்கு மேல் மங்கை பற்றிய விசயங்களை கேட்க விரும்பாமல் தேவேஷ் தனதறைக்குள் சென்றிட.. “ப்பா.. மங்கா போத்தா.” என அழுதுகொண்டே வந்தான் குழந்தை.
தேவேஷ் மனமும் தவிப்பில் இருக்க.. “அப்பா வெளில கூட்டிட்டு போறேன்.” என தன்னையும் சமன் செய்ய குழந்தையோடு வெளியே சென்றான்.
கடற்கரைக்கு அழைத்து வரவும் குழந்தை பெரும் சந்தோசத்தில் திளைத்தான்.
குழந்தையிடம் சிரித்து மகிழ்ந்தாலும்.. ஷர்மியோடான உன் ஐந்து வருட வாழ்க்கைப்போல, தன் காதல் நியாபகத்திற்கு எதுவும் தேவையில்லை என மங்கை சொன்ன வார்த்தையே மனதில் ரீங்காரமிட்டது.
வாழ்வின் இறுதி நாட்கள் வரையிலும் அவளிடமிருந்து ஒதுங்கியிருந்தாலும் இந்த பந்தத்திலிருந்து நிச்சயம் மங்கை விலகப்போவதில்லை என்பது அவளின் உறுதியான வார்த்தையில் தெரிய.. தேவேஷ் மனம்தான் நிலைகொள்ளாமல் தவித்தது.
மூன்று மணிநேரம் கடந்திருக்க, கற்பகம் அழைக்கவும் அழைப்பை ஏற்றான். “குழந்தைக்கு பசிக்கும்டா.. இன்னும் கொஞ்ச நேரத்துல தூக்கத்துக்கு அழுவான்.” என்க.. “ஒருமணி நேரத்துல வந்திடறேன்ம்மா.” என கிளம்பினான்.
அன்னை சொன்னது போலவே.. பாதி தூரம் வந்ததும் உறக்கத்திற்கு மூக்கையும் கண்ணையும் குழந்தை தேய்க்க.. “சஞ்சு குட்டி, பைக்ல போகும்போது தூங்க கூடாது, அடிபட்டுடும், எங்க.. அப்பாக்கு கதை சொல்லு பார்ப்போம், அப்போதான் நாளைக்கும் பீச்சுக்கு கூட்டிட்டு வருவேன்.” என குழந்தையிடம் பேச்சு கொடுத்தபடி பைக்கை ஓட்ட..
“ப்பா.. மங்கா கார்ல தூங்க.. அதி படாது” என குழந்தை எடுத்துரைக்க.. “கார்ல தூங்கினா அடிபடாதா? தூக்கம் வரவரைக்கும் அப்படி எங்கடா சுத்துவிங்க?” என கேட்க.. தேவேஷ் கேட்டது குழந்தைக்கு புரியவில்லையென குழந்தை முகத்தில் தெரிய..
மங்கை பேச்செடுத்ததும் குழந்தையின் தூக்கம் கலைந்திருந்ததை உணர்ந்தவன்.. “அம்மா வேலைக்கு போகனும்தான?” என குழந்தைக்கு எடுத்துரைக்க.. “ப்பா.. அம்மா இல்ல, அவ மங்கா..” என தந்தைக்கு தெரியாத விசயத்தை எடுத்துரைத்த சந்தோசத்தோடு பலமாய் சிரித்தான் குழந்தை.
“அவ சொல்லக்கூடாது சஞ்சு..” என கண்டிக்க.. “ப்பா.. மங்கா ப்பா..” என முகம் சுருக்கினான்.
கொஞ்சம் பெரியவனானதும் திருத்துவோம் என நினைத்தவன்.. “மங்கா உனக்கு என்ன தருவா?” என்றான்.
“மங்கா தோசா தருவா.. தேஸ்த்தா..” என தன்னிரு புருவம் உயர்த்தி சொன்னவன்.. “நா மங்கா தான்ஸ், ஜிக்குபுக்கு விய்யாடி.” என்றான் கூடுதல் தகவலாக.
“ஓ.. டான்ஸ்லாம் வேற ஆடுவிங்களா?” என சிரித்தவன்.. “ஜிக்குபுக்கு, அப்புறம் வேற என்ன விளையாடுவிங்க?” என்றான் ஆர்வமாக. குழந்தையும் ஆர்வத்தோடு விளக்க.. மங்கையைப் பற்றி பேசியவாறே வீடு வந்திருந்தனர்.
“ம்மா..” என ஆர்வமாய் கீழிறங்க.. “டேய்.. குளிக்கனும்டா, இல்ல அரிக்கும்.” என பாத்ரூம் அழைத்து போனவன் குளிக்க வைத்து.. “அம்மாட்ட போய் டிரெஸ் பண்ணிக்கோ, அப்பா குளிச்சிட்டு வரேன்.” என துண்டை கட்டி அனுப்பி வைத்தான்.
பின்னே தேவேஷ் குளித்து வர.. லோயர் எடுக்க கபோர்டை திறந்தவனுக்கு, இவளின் உடைகளை எங்கே வைக்கிறாள் என இன்றுதான் யோசனை வர கண்களை சுழற்றினான்.
திருமணத்தன்று அவள் எடுத்து வந்த சிறிய ப்ரீப்கேஸ் போலுள்ள பை கண்ணில் பட, அதனை தவிர்த்து அந்த அறையில் அவளின் உடைமை என வேறெதுவுமில்லை எனத் தெரிந்தது.
ம்.. மேக்கப் கிட் கூட பேக்லயே வச்சிருப்பா போல என நினைத்தவாறு வெளியே வந்தான்.
“எதாவது சாப்பிட கொடுத்தியா தேவா? துணி மாத்திவிட்டு சாப்பாடு எடுத்து வரதுக்குள்ள தூங்கிட்டான்.” என்றார்.