பிறகுதான் தன்னிலைக்கு வந்த தேவேஷ் அதிர்வாய் பார்க்க.. இப்படி நடந்துக்க அசிங்கமா இல்லையா என கேட்க வந்ததை முழுங்கி.. “என்னை விரும்ப தகுதியில்லன்னு சொன்னிங்கள்ல? அப்புறம் எந்த தைரியத்துல இப்படி செய்திங்க?” என்றாள் கோபமாக.
அவளின் அனுமதியில்லாமல் தான் செய்தது தவறு என புரிந்தாலும்.. “உன் காதல் கொடுத்த தைரியம்.” என்றான் அமைதியாக.
நேற்று வரை தன்னை நினைத்திராதவன், சட்டென இப்படி செய்வான் என எதிர்பார்க்காததால்.. “அப்போ ஷர்மிளாக்காவோடான காதல்லாம் காத்தோட போயாச்சா?” என்றாள் குற்றப்பார்வையோடு.
ஷர்மிளா என்றதும் முகம் இறுகி, கண்கள் சிவக்க.. “அது தோல்வியில முடிஞ்சிடுச்சி.” என வெளியேற எத்தனிக்க.. “இருங்க..” என கட்டளையாய் சொன்னவள், “காதலிச்சவங்க செத்துட்டா காதலும் செத்துடுமா?” என்றாள் விடாமல்.
“காதல் செத்ததுனாலதான் காதலிச்சவ செத்தா.” என பல்லை நெறித்தபடி சொன்னவன், “இதுக்கு மேல இதைப் பத்தி பேச வேணாம், நான் அப்படி செய்தது பிடிக்கலனா இனி செய்ய மாட்டேன்.. அன்ட் நீயும் பாதபூஜை அது இதுன்னு என்கிட்ட உளறக்கூடாது.” என்று வெளியேறினான்.
விதி வந்து போய்ட்டா காதல் செத்ததா ஆகிடுமா? என கோபம் வந்தபோதும் தேவேஷ் சொன்னவிதம் எதோ நடந்திருக்கிறது என்று தோன்ற..
என்ன நடந்திருக்கும்? குழந்தை விசயத்தில் இவர்களுக்குள் சண்டையேது வந்திருக்குமா? அந்த வேதனையில் கவனக்குறைவாக ரோடை க்ராஸ் பண்ண நினைச்சிருப்பாங்களோ? அதனால ஆக்ஸிடன்ட் ஆகியிருக்குமோ? அதைத்தான் இப்படி சொல்றானா? என யோசித்திருந்தவள்.. ப்ச் கிளம்பிட்டானா? என வெளியே வந்தாள்.
ஆறு மாதத்திற்கு பிறகு இன்றுதான் கணவனைப் பார்க்கிறாள் மங்கை, அன்னைக்கு போல இன்னைக்கும் எதாவது சொல்லி மங்கையை மகன் அழ வைத்திடுவானோ என்ற பதட்டத்தில் கற்பகம் இவர்கள் அறையையேதான் நோட்டமிட்டுக் கொண்டிருந்தார்.
இன்னைக்குத்தான் பகல்ல கால்மணி நேரம் பக்கம் இரண்டு பேரும் உள்ள இருக்காங்க, சமாதானம் ஆகவில்லையென்றாலும், தேவா மங்கையை புரிந்து கொண்டாலே போதுமானது என கடவுளை வேண்டிக்கொண்டிருந்தார் கற்பகம்..
இறுகிய முகத்தோடு தேவேஷ் வெளியே வரவும்.. அடக்கடவுளே. நினைச்ச மாதிரியே சண்டையாகிடுச்சு போலயே.. என்னைக்குத்தான் மங்கையைப் புரிஞ்சிக்குவானோ? இன்னைக்கு என்ன சொல்லி தொலைச்சானோ என்ற பரிதவிப்போடு தானும் வெளியே வந்தவர் மங்கையைக் காண மகன் அறையருகே போக.. மங்கையும் வெளியே வந்தாள்.
“சம்பளப்பணம் கொடுக்க இன்னைக்கு வருவனு எனக்கு தெரியும், ஆனா இவன் வருவானு சத்தியமா தெரியாது, எதாச்சம் தப்பா சொன்னானா?” என்றார் தவிப்பாக.
இல்லையென்பதாய் இவள் தலையசைக்க.. சம்பளம் பற்றி கற்பகம் பேசவும்.. “எங்கம்மாவை மிரட்டி எதுக்கு பணம் கொடுக்குற?” என முறைத்தான் மங்கையை.
“பொறுமையா சொல்லும்போதே வாங்கியிருந்தா நான் எதுக்கு மிரட்டப்போறேன்?” என்றாள் அசால்ட்டாக.
இவளின் தோரணையில் மேலும் கோபம் வர.. “இனி பணமேது கொடுத்த.. குடுக்குற கையை உடைச்சிடுவேன்.” என மிரட்ட..
மங்கை ஏதோ சொல்ல வர.. “குழந்தை எழுந்துட்டான், சண்டை வேணாம் மங்கை.” என கெஞ்சலாய் சொல்லி தனதறைக்கு சென்று சஞ்ஜெய்யை தூக்கி வந்தார்.
இந்த நேரத்தில் இருவரையும் எதிர்பாராதவனாய்.. “ப்பா.. மங்கா..” என நேரே தேவேஷிடம் போனான்.
சஞ்ஜெய் தூங்கிய பின்தான் மங்கை வந்தாள். தன் குரல் கேட்டு குழந்தை தூக்கம் கெட்டுவிடக்கூடாதென்றும், நைட் டியூட்டி பார்த்ததால், குழந்தை எழுவதற்குள் தானும் சற்று உறங்கலாம் என அறைக்குள் வர, ஆராதனா அழைக்கவும் அவளுடன் பேசிக்கொண்டிருந்தாள்.
“மங்கா.. அப்பா தூக்கி போட்டு.” என குழந்தை முகம் சுருக்க.. “ஓ.. வரமாட்டியா? அப்போ உங்கப்பாவை தூக்கி போட சொல்லி விளையாடு.. நான் கிளம்பறேன்.” என அறைக்குள் சென்று தனது ஹேண்ட்பேகை எடுத்து வர..
“மங்கா..” என குழந்தை தேவாவிடமிருந்து இறங்க முயற்சிக்க.. “சும்மா நசநசன்னுட்டு.. போகட்டும் விடுடா.” என்றான் குழந்தையிடம்.
மங்கைக்கு தேவாவிடம் பேச வேண்டியிருக்க.. எங்கே குழந்தை தேவா பேச்சு கேட்டிடுவானோ என.. “நான் காரெடுத்துட்டு போறேன்.” என உள்ளே போய் வந்தவள்.. கார் சாவியை ஒற்றை விரலில் சுழற்றியபடி வர.. “ப்பா.. மங்கா.. காரு.. ஐஸ்கீம்.. விதுப்பா..” என தேவாவிடமிருந்து இறங்க பலமாய் போராடினான்.
ஓ.. என்னோட விடமாட்டிங்களா? என கோபத்தோடு தேவாவிடம் வந்த மங்கை.. “குழந்தையோட நான் வெளில போகனும்.. வந்து டிரைவ் பண்ணுங்க..” என்றாள் கட்டளையாக.
தேவா முறைக்க.. “என்ன முறைக்கிறிங்க? நீங்க எனக்கு அடிமைன்னு சொன்னது உண்மைதான?” என கற்பகத்திற்கு கேளா வண்ணம் முனுமுனுக்க.
அறைக்குள் பேசியதை வெளியே கொண்டு வந்த கோபத்தில் “இவளை.” என தேவா பல்லை நெறிக்க.. அவன் கோபத்தை புறம்தள்ளி.. “கேக்குறேன்ல?” என அசால்ட்டாய் அதட்டினாள்.
“அது ரூம்க்குள்ள..” என்றான் முறைப்பாக.
“சொல்லும்போது அப்படி சொல்லலையே.. பொதுவாத்தான சொன்னிங்க.. அதனால நான் சொல்றதை கேட்டுத்தான் ஆகனும்.. “வந்து வண்டியை எடுங்க.” என சாவியை அவனருகே வைத்தாள்.
முடியாது என்பதுபோல் தேவேஷ் குழந்தையோடு பேசிக்கொண்டிருக்க.. “உங்கள்ட்ட தனியா பேசலாம்னு நினைச்சேன், ஆனா அதுக்கு நீங்க சரிப்படமாட்டிங்க போல.. ஆன்ட்டி முன்ன கேக்குறதுல எனக்கொன்னும் இல்ல..” என தேவேஷிற்கு நேரெதிரே சேரை போட்டு அமர்ந்தாள்.
முறைத்தாலும் மங்கையின் பேச்சிற்கு மகன் அமைதி காக்கிறான்.. அதுவே பெரிய விசயம்தான், அன்று போல் ஓடாமல் மங்கையும் இன்றுதான் பேச நினைக்கிறாள் என.. “கோவிலுக்கு போய் ரொம்ப நாளாகுது.. நான் போய்ட்டு வரேன்.” என நல்லதே நடக்கும் என்ற நம்பிக்கையோடு.. யார் பதிலையும் எதிர்பார்க்காமல் கற்பகம் கிளம்பினார்.
“அம்மா முன்ன இப்படித்தான் பேசுவியா?” என முறைத்தான்.
“ஷர்மி பேச்சு வேணாம்னுதான் வந்தேன். இனியும் பேசாத.”
“சரி அவங்க பேச்சு பேசல.. ஆனா உங்க காதல் எப்படி செத்ததுனு தெரிஞ்சாகனும்.” என்றாள் பிடிவாதமாக.
“ப்ச்.. இப்போ தெரிஞ்சு என்ன பண்ணப்போற?”
“ஷர்மிக்கா உங்களை எவ்வளோ விரும்பினாங்கனும், உங்க ரத்தபந்தம்தான் உங்களுக்கு வாரிசா வரனும்னு எவ்வளோ ரிஸ்க் எடுத்தாங்கனும் உங்களை விட எனக்குத்தான் தெரியும். அவங்களாலதான் சஞ்ஜெய் வந்தான்.. அப்படிபட்டவங்க லவ் எப்படி செத்துப்போகும்?” என்றாள்.
“சரி விடு.. நான்தான் பொய் சொல்றேன்.” என்று குழந்தையை தூக்கிக்கொண்டு தனதறை சென்று பைக் கீ எடுத்து வெளியே போக.. “நான் பேசிட்டிருக்கேன்.. நீங்க பாட்டுக்கு போறிங்க.” என கோபமாக அவன் முன்னே நின்று முறைக்கவும்..
“உன் பேச்சுக்கு என்னால விளக்கம் கொடுக்க முடியாதுனு அர்த்தம்.! நகரு.” என்றான் கடுப்பாக.
“நீங்க சொல்லலைனா ஆன்ட்டிகிட்ட கேட்பேன்.” என பயமுறுத்த.. “கேட்டுக்கோ.” என பைக்கில் அமர்ந்து குழந்தையை முன்னே அமரவைத்தான்.
“சரி போங்க.. நான் நிகில் அண்ணாக்கு கால் பண்றேன்.” என்க.. “இவளை…” என கோபமாய் கீழிறங்க.. “ப்பா.. வாப்பா..” என குழந்தை அழ.. இப்போ வெளில போகலனா சஞ்சுவை சமாளிக்க முடியாது என கண்மூடி பொறுமையை வரவழைத்தவன்.. “உன் விருப்பம்.” என கிளம்பியிருந்தான்.
மணிவேற ஒன்னாகப் போகுது.. எப்போ வருவாங்கனு தெரியலையே என நினைக்க.. கற்பகம் வந்தார்.
“இரண்டு பேரும் எங்க போய்ட்டானுங்க மங்கை?”
“சஞ்சு வெளில போயாகனும்னு ஒரே அழுகை, இரண்டு பேரும் ரௌண்ட்ஸ் போயிருக்காங்க ஆன்ட்டி.” என்றாள்.
ஷர்மிளா இருக்கும்போதே அறைக்குள் நடக்கும் பிரச்சனைகளில், மகனிற்கு பிடிக்காதென கற்பகம் தலையிடமாட்டார். தற்போதும் மங்கையிடம் எதாவது சொல்லி மனதை காயப்படுத்திட்டானா? என கேட்க நினைத்தாலும், “கோபமா போனானா மங்கை?” என்றார் தவிப்பாக.
“கொஞ்சம் கோபம்தான், ஆனா சீக்கிரம் சமாதானம் ஆகிடுவார் போல, நீங்க கவலைப்படாதிங்க ஆன்ட்டி.” என்றாள் சின்ன சிரிப்போடு.
“மங்கை..” என ஆரத்தழுவிக்கொண்டார் கற்பகம். “அச்சோ விடுங்க ஆன்ட்டி, உங்க மகன், இல்ல.. இல்ல.. என் மகன் வரதுக்குள்ள சமைக்கனும்.” என மலர்ந்த முகத்தோடு கிச்சன் சென்றாள். “காரம் கம்மியா போடு.” என செல்லமாக அதட்டி விலகினார்.
சமைத்து முடித்த பின்னும் இருவரும் வராமல் போகவே.. மணியும் இரண்டு ஆகியிருக்க.. “ஆன்ட்டி போன் செய்யுங்க.” என்றாள்.
கற்பகம் அழைக்கவும்.. “ம்மா.. நாங்க வர லேட்டாகும்.” என இணைப்பை துண்டித்தான்.
மங்கைக்கு பசியெடுக்க, “வாங்க ஆன்ட்டி நாம சாப்பிடலாம்.” என அழைக்கவும், கோபமாக சென்றிருக்கிறான் என்றாலும் தன் அழைப்பை ஏற்று இயல்பாய் பதில் சொன்னதும், மங்கையின் கனிந்த முகமும் பெருத்த நிம்மதியை தர.. “எல்லாம் தயாரா இருக்கும்போது நாம எதுக்காக பசியோட இருக்கனும்? அவனுங்க எங்கையாவது மொக்கிட்டுதான் வருவானுங்க. நீ வா நாம சாப்பிடலாம்.” என்றவாறு சாப்பிட அமர்ந்தார்.
மங்கையும் கற்பகமும் உண்டு முடித்து ஒன்றரை மணி நேரம் வரை காத்திருக்க இருவரும் வரவில்லை, மணிவேறு முன்றரை ஆகவும்.. நாலு மணிக்கு கிளம்பினாத்தானே ஆறு மணிக்கு ஹாஸ்பிட்டலுக்கு போக முடியும் என முகம் கை கழுவி தயாரானாள்.
ஆறு மணிபோல் தேவேஷ் வர.. “ம்மா மங்கா..” என குழந்தை முகம் சுருக்கவும்.. “மங்கா வேலைக்கு போய்ட்டா. நாளைக்கு வர சொல்லலாம்.” என கற்பகம் சமாதானம் செய்ய.. அழுகையை பெரிதாக்கினான் சஞ்ஜெய்.
“எப்ப வந்தாலும் கார்ல ஒரு ரௌண்ட் அடிக்காம போகமாட்டா, இன்னைக்கு கிளம்பவும் ரொம்ப அழறான்.. நீயும்தான் கொஞ்சம் சீக்கிரம் வந்திருந்தா என்ன?” என மகனை நொடித்தார் கற்பகம்.
வெளியில் சென்ற ஒரு மணிநேரத்திலேயே ப்பா.. மங்காப்பா, கார்ல போயிப்பா.. என கேட்க ஆரம்பித்திருந்தான் குழந்தை. அவளின் அண்ணியிடம் தன்னை காதலிப்பதாக சொன்னவள்.. முத்தம் கொடுத்தது பிடிக்கலனா.. பிடிக்கலனு சொல்லியிருக்கலாம்.. அதற்கேன் ஷர்மியோடான காதலை ஒப்பிடனும் என்று கோபம் வரவே கிளம்பியிருந்தான்.
திருமணமாகி ஆறுமாதங்களுக்கு மேலாகியிருக்க, நேற்றுவரை பேசாதிருந்து, இன்று சட்டென முத்தமிடவும் இப்படி யோசித்திருக்கிறாள் என மங்கையைப் புரிந்திருந்தான்.
இரவு ஒன்பது மணிபோல் மங்கையிடமிருந்து அழைப்பு வர.. ஷர்மிளாவைப் பற்றித்தான் கேட்பாள் என அழைப்பை ஏற்கவில்லை தேவேஷ்.
தேவேஷ் வீட்டிலிருப்பான் என எப்பொழுதும் ஞாயிற்றுக்கிழமையில் வீட்டிற்கு வராத மங்கை இந்த வாரம் வந்திருந்தாள். தேவேஷ் சாப்பிட்டுக் கொண்டிருக்க.. “மங்கா..” என்ற குழந்தையின் அழைப்பில் வாசல் பார்த்தான்.
“போன் செய்தா எடுக்க மாட்டிங்களா?” என்றாள் உக்கிரமாக.