இவன் ஏதும் பேசாமல் சாப்பிடுவதில் கவனம் செலுத்த.. “ஷர்மிளாக்கா காதலும் பொய்யில்லனு தோணுது, நீங்க பேசினதும் பொய்யில்லனு தோணுது. எனக்கு மண்டையை பிச்சிக்கனும்போல இருக்கு..
அன்னைக்கு சஞ்ஜெய் முன்ன நாம சண்டை போட்டது போல இனி நடக்க கூடாது. நான் போனதுக்கப்புறம் ரொம்ப அழுதானு ஆன்ட்டி சொன்னாங்க.. நம்ம குழந்தைக்காகவாவது உங்க மனசுல இருக்குறதை என்கிட்ட சொல்லலாமில்ல?” என்றாள் ஆற்றாமையாக.
எப்பொழுதும் என் குழந்தை என்பவள்.. தற்போது நம்ம குழந்தை என்றது சிறு உற்சாகத்தை கொடுக்க.. “உள்ள போ.. வரேன்.” என கை கழுவி எழுந்தான்.
“மங்கா.” என குழந்தை மங்கையிடம் வர.. குழந்தையோடு உள்ளே போனாள் மங்கை. “சின்னப்புள்ளைடா.. எதாவது நறுக்குனு சொல்லி வைக்காத.” என அறிவுறுத்தி டி.வி.யை ஆன் செய்து அதில் கவனமானார் கற்பகம்.
உள்ளே வந்தவன்.. “நம்ம குழந்தைனு சொல்ற? நீதான் கஷ்ட்டப்பட்டு பெத்தியா?” என்றான் கோபம்போல்.
சுமக்காகததால் இப்படி கேட்கிறான் என கோபமானவள்.. “இவனுக்காக நீங்க மட்டும் கஷ்டப்பட்டிங்களா என்ன? கஷ்டப்படறதென்ன? முதல்ல இஷ்டப்படவேயில்ல.. உங்க விருப்பமில்லாம உங்களுக்கு தெரியாமத்தான இவன் உருவானான்?” என குற்றம் சுமத்தினாள் கோபமாக.
சற்று சத்தமாகவே சிரித்தவன்.. “பாத பூஜை செய்ததுக்கே பதறிட்ட.. இதுல எங்க இஷ்ட்ட்ட்டப்பட்ட்டு.. கஷ்ட்ட்டப்பட்ட்ட்டு குழந்தை பெத்துக்கிறது?” என்றான் தலைசாய்த்து.
இப்பொழுதுதான் அவன் எந்த அர்த்தத்தில் பேசுறான் எனப்புரிய.. பதில் பேச வார்த்தையின்றி தடுமாறியவள் கோபமாக முறைக்க.. “என்ன? பேச்சு வரலையா?” என்றான் இலகுவாக.
“பச்.. மனசு உறுத்திட்டே இருக்கு.. உங்க காதல் எப்படி செத்துச்சுனு சொல்லுங்க?” என்றாள் கெஞ்சலாக.
மனதில் மெச்சியவன்.. “ஷர்மிளா ஆக்ஸிடண்ட்ல சாகல, சூசைட் பண்ணிக்கிட்டா.” என்றான் அதிராமல்.
“என்ன? எ.. என்ன?” என்றாள் பேரதிர்ச்சியாக.
“ம்.. சூசைட்தான் செய்துகிட்டா.. அவ செத்து நாலஞ்சு மாசம் கழிச்சிதான் எனக்கு தெரியும்.” என வீடியோ விசயத்தை விளக்கியவன்.. “குழந்தை உன்ன மாதிரி பொறந்துடுவானோன்ற கவலை.. அவளை விட எனக்கு குழந்தைமேல பாசம் அதிகமாகிடும்னு அவளா நினைச்சிக்கிட்டு, அப்படி வாழ்றதுக்கு உயிரை விடறதே மேல்னு சூசைட் பண்ணிக்கிட்டா.” என்றான் உணர்வுகளை துடைத்து.
தேவேஷ் பேச்சில் பொய்யில்லை எனப்புரிய.. “குழந்தைக்காக எத்தனை போராடுனாங்க? கடைசியா யாரைப்பத்தியும் நினைக்காம எப்படி இப்படி செய்ய முடிஞ்சது? இது எத்தனை பெரிய துரோகம் என புலம்பியவளுக்கு கண்ணீரே வந்திருந்தது.
“ப்ச்.. இப்போ எதுக்கு அழற? அவ போனதால நீ மாட்டிக்கிட்டியேன்னா?” என்றான் கடுப்பாக.
அவங்க இறந்ததுக்கப்புறம் ஆன்ட்டி உங்களுக்கு கல்யாணம் செய்தே தீருவேனு சொன்னதும், நானிருக்கும்போது என் மகன் இன்னொருத்திகிட்ட கஷ்டப்படுவானேனு நினைச்சப்பதான் தாய்மை எத்தனை வலியை கொடுக்கும்னு புரிஞ்சது.
குழந்தையை விடக்கூடாதுன்றதுக்காக, உங்களையும் கஷ்டப்படுத்தி..” என்றவளுக்கு ஷர்மிளா மீது அத்தனை கோபம் வர, அவளிடம் சண்டைபோட முடியாத நிலையில் ஆத்திரம் அழுகையாய் வெடித்தது.
தான் அழுவது தேவேஷிற்கு பிடிக்கவில்லை என்பதும் மங்கைக்கு நிம்மதியை தர.. “ப்பா.. மங்கா.” என குழந்தையும் உதடு பிதுக்க.. தன்னை சமன் படுத்தி பாத்ரூம் சென்று முகம் கழுவி வந்தவள்.. “சஞ்சுக்குட்டி சாப்பிட்டாச்சா?” என கேட்டவாறு குழந்தையை தேவேஷிடமிருந்து வாங்கி வெளியே வந்தவள்.. “ஆன்ட்டி.. எதாவது இருக்கா? பசிக்குது.” என்றாள்.
கிச்சனிலிருந்து வெளியே வந்த கற்பகம்.. “நீ வருவனு தெரியாது மங்கை, எங்களுக்கு மட்டும்தான் செய்தேன். இதோ சட்னி அரைச்சிட்டேன்.. பத்து நிமிஷத்துல தோசை ஊத்திடறேன்.” என்று வேலையில் கவனமாக..
“என்ன? ஞாயித்துக்கிழமையில சட்னியா? என்னால சாப்பிட முடியாது.. சான்ஸே இல்ல.. தோசை ஊத்தாதிங்க..” என்று ஹோட்டலில் ஆர்டர் செய்ய மொபைலை எடுக்க.. வெளியே வந்த கற்பகம்,, மங்கையின் சிவந்த முகத்தைப் பார்த்து.. “அழுதியா மங்கை?” என்றார் தவிப்பாக.
கற்பகம் முகம் குழப்பத்தை காண்பிக்க.. “ம்மா.. மங்கா ஊ..” என அழுது காட்டினான் குழந்தை. “டேய்.. நான் அப்படியாடா அழுதேன்?” என குழந்தையை அதட்ட.. “சஞ்சு என்னைப் போல இருக்குறதால அழுதாலும் அழகா இருக்கான்.. நீ அழுததை விட, அதை பார்க்க சகிக்காமத்தான் இவன் அழுதான்.” என்றான் உள்ளடக்கிய சிரிப்போடு.
“கரிக்கட்டை கலர்ல இருந்துட்டு, உங்களுக்கு இப்படியொரு நினைப்பிருக்கா?” என முறைத்தவள்.. “என் கலர்ல இருக்கிறதாலதான் காஷ்மிர் ஆப்பிள் மாதிரி இருக்கான்.” என்றாள் பெருமையாக.
இருவரும் உரையாடுவது கற்பகத்திற்கு பெருத்த நிம்மதியைத் தர.. பால்பாட்டிலை எடுத்தவர்.. “வாடா கண்ணா.. அம்மா பால் கொடுக்குறேன்.” என்றார்.
தேவேஷ்.. “இங்கதான இருக்கேன்?” என்க.. “நாலு மாசம் முன்ன சஞ்சு போட்டோவை டி.பில வச்சேன்.. அவனை பார்த்ததுலயிருந்து அம்மா குழந்தையை பார்க்க வரன்னு ஒரே பிடிவாதம்.. உங்களுக்கு பிடிக்காதேனு வரவேணாம்னுட்டேன்..” என்றாள்.
தேவேஷ்.. “அப்போ எனக்கு யாரையும் பிடிக்காதுதான், ஆனா இப்போ பிடிக்கலனு சொல்ல ஒன்னும் இல்ல..
மகளுக்கு இப்படி கல்யாணம்னா எந்த அம்மாவும் தாங்கிக்க மாட்டாங்க, அது தப்பும் இல்ல, அவங்களைப் பொறுத்தவரை சரியாதான் இருந்திருக்காங்க.. அவங்க வரதுல எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல.” என்றான்.
எழுந்தவள்.. சுவற்றில் தொங்கிய கேலண்டரைப் பார்த்து ஒரு சில நாட்களை தள்ளி.. “வர புதன்கிழமை நாள் நல்லா இருக்கு.. அன்னைக்கு தாலி பிரிச்சி கட்டுறிங்களா? எங்கம்மா முன்ன..” என கனிவாகவே கேட்டாள்.
தேவேஷ் உள்ளே சென்றிட.. மங்கை பின்னோடு போனாள். “ஒரு மனுசன் எத்தனை முறை கல்யாணம் செய்யிறது? இது வேணாமே” என்றான் மறுப்பாக.
“சரி..” என தன்மையாகவே ஏற்று வெளியே வந்தவள் குழந்தையோடு விளையாடினாள். பிறகு உணவு வர.. கற்பகம் தேவேஷிற்கு எடுத்து வைத்து, அவளும் குழந்தையும் உண்டனர். மதியம் மூன்று மணிபோல் முகம் கழுவ உள்ளே போகவும்.. “கிளம்பனுமா?” என்றான்.
“ஆமாம்.. ஈவ்னிங் சிக்ஸ்க்கு ஹாஸ்பிட்டல்ல இருக்கனும்..” என்றபடி தலை வாரினாள்.
“எவ்ளோ நாளைக்கு நைட் ஷிஃப்ட்?”
“பத்து நாள் வரைக்கும்.” என பேசியபடி தயாராகி வெளியே வர.. “மங்கா வேய்க்கு போயா?” என்றான் சோகமாக.
“ஆமாடா பட்டு.” என குழந்தைக்கு முத்தமிட்டு கிளம்பினாள்.
*** *** ****
புதன் கிழமை அதிகாலை நான்கு மணிபோல் மருத்துவமணைக்கு வந்தவன், மங்கை வேலைசெய்யும் வார்டை விசாரித்து இரண்டாம் தளம் வர.. “தாத்தாவையும் தூங்க விடாம, நீங்களும் தூங்காம.. ஏன் பாட்டி இப்படி படுத்துறிங்க? நாங்கதான் இருக்கோம்ல? கொஞ்ச நேரம் அப்படிபோய் படுங்களேன்.” என சலிப்பாக எடுத்துரைத்துக்கொண்டிருந்தாள் மங்கை.
“யார் சார் நீங்க? இந்த டைம்ல எப்படி உள்ள வந்திங்க?” என இன்னொரு செவிலியின் குரலில் திரும்பியவளுக்கு, கணவனைக் கண்டதும் தூக்கமும், சோர்வும் சொல்லாமல் விடைபெற்றிருக்க.. வேகமாய் தேவேஷிடம் வந்தவள்.. “என்ன இந்த நேரத்துல? ஆன்ட்டி நல்லா இருக்காங்கதானே? சஞ்சுக்கு ஏது..” என படபடக்க..
“ரிலாக்ஸ்..” என்றான் அமைதியாக.
“எப்பவும் வந்ததில்ல? என்ன ஆச்சு? எதுக்கு வந்திங்க?” என்றாள் படபடப்பு குறையாமல்.
“உன்னை வீட்டுக்கு கூட்டிட்டு போக வந்தேன். பர்மிஷன் சொல்லிட்டு கிளம்பு.” என்றான்.
“இன்னும் இரண்டு மணிநேரம்தான்.. டியூட்டி முடிஞ்சிடும்” என்க.. “ம்ஹும்.. இப்போ கிளம்பினாத்தான் சரியா இருக்கும். வீட்டுல உனக்காகத்தான் எல்லாரும் வெய்ட்டிங்.” என்றான்.
“முன்னாடியே சொல்லியிருக்கனும். இப்போ வர முடியாது.” என கெஞ்சலாய் சொல்ல.. “புருசனா இருந்தாலும் டியூட்டி டைம் முடியாம வரமாட்டா, அவ ஒரு ரூல்ஸ் பார்ட்டினு நான்தான் சொன்னேன்லப்பா?” என நாற்பத்தி ஐந்து வயது மதிக்கதக்க மருத்துவப் பெண்மணி சொல்ல..
“டாக்டர்..இவர் என்..” என தடுமாற.. “புருசனை அறிமுகம் செய்ய எதுக்கு இத்தனை தடுமாற்றம்?” என சிரித்தவர்.. “என்கிட்ட பர்மிஷன் கேட்டுட்டுதான் வந்தார். பெரிய டாக்டர் வந்தார்னா என்கிட்ட சொல்லிட்டுதான் போயிருக்கனு சொல்லிக்கிறேன்.. நீ கிளம்பு.” என்றார்.
“ரூம் போய் குளிச்சிட்டு வரேன்.” என்றாள்.
“வீட்டுக்கு போய் குளிச்சிக்கலாம் வா.” என்றான்.
“ப்ச்..” என சலிக்க.. “வொய்ட் டிரெஸ்ல கொஞ்சம் சுமாரா இருக்கனுதான் சொல்றேன். வா.” என கைப்பிடித்து அழைத்துபோனான்.
வெளியே தன் கார் நிற்க.. ஆச்சர்யமாய் பார்த்தாள். “பைக்லனா குளிரும். அதான் காரெடுத்துட்டு வந்தேன்.” என விளக்கமளித்தபடி காரினுள் ஏற.. மங்கை அமர்ந்ததும்.. “யார் வந்திருக்கா? என்ன ஆச்சு?” என்றாள்.
குரலின் கலக்கம் தாளாமல்.. “உங்கம்மா குழந்தையைப் பார்க்க ஆசைப்பட்டாங்கனு சொன்னயில்ல? அதான் நானே போன் செய்து வர சொன்னேன். உங்கண்ணியும் வந்துருக்காங்க..”
பெரிதாய் விழிவிரித்த மங்கை முகம் பிரகாசமாக.. “தேங்க்யூ..” என்றாள் சந்தோசமாக. தேவேஷ் முறைக்க.. “ஆனாலும் இன்னும் இரண்டு மணிநேரம் டியூட்டி முடிச்சிட்டே வந்திருக்கலாம். அம்மா புரிஞ்சிப்பாங்க, இப்படிலாம் வரக்கூடாது.” என முறைத்தாள்.
“வீட்டுக்கு போக முக்கால்மணிநேரம் ஆகும். தொணதொணக்காம தூங்கு. அங்க போனா தூங்க முடியாது.” என்றான் அதட்டலாக.
“ம்க்கூம்.. நீங்க வந்த அதிர்ச்சியில தூக்கம் பறந்தே போச்சு.” என நொடித்து.. “நான் எப்பவும் நிறைய பேசுவேன். நீங்க அப்படியில்லதான? இப்போ எப்படி இவ்வளோ பேசுறிங்க?” என்றாள்.
தேவேஷ் அமைதியாக காரோட்ட, இது போல் பல கேள்விகளுக்கு அமைதியையே பதிலாய் தந்து வீடு வந்து சேர்ந்தான்.
வீட்டின் முன் மாவிலை தோரணம் கட்டியிருக்க.. உள்ளே நுழைந்ததும் சாம்பிராணி புகை வரவேற்றது. மங்கை தேவேஷைப் பார்க்க.. “வா.. மங்கை, சீக்கிரம் குளிச்சி ரெடியாகு. இன்னும் பத்து நிமிஷத்துல ஐயர் வந்துடுவார்.” என அவசரப்படுத்தினார் தவமணி.