எதோ பழகிய வீடுபோல் அன்னையின் த்வணியிருக்க ஆச்சர்யமாய் விழித்தவளின் கவனம் கலைத்து.. “வா…” என உள்ளே அழைத்துப்போனான்.
ரூமினுள் வந்ததும்.. “இன்னைக்கு தாலி பிரிச்சு கோர்த்துடலாம். அவளின் கட்டிலில் இருந்த பட்டுசாரியை காண்பித்து.. “குளிச்சிட்டு இதை கட்டிட்டுவா..உன் நிகில் அண்ணனோட, இன்னும் இரண்டு ஃபிரண்ட்ஸ் வராங்க, கொஞ்சம் சிரிச்ச மாதிரி இரு.. இல்ல என்னை கலாய்ச்சிடுவானுங்க.” என வெளியேறினான்.
ஆராதனாவின் உதவியோடு, பட்டு சாரி, ஜிமிக்கி, டாலர் செயினோடு மங்கை தயாராகி வர.. மங்கை தலையில் மல்லிகையை நிறைத்து, தேவேஷ் அருகே அமரப்பணித்தார் தவமணி.
ஐந்து நிமிட மந்திரத்திற்கு பின்னே சாஸ்திர சம்பிரதாயம்படி மங்கை கழுத்தில் மாங்கல்யம் அணிவித்தான் தேவேஷ். ஒரு குட்டி கல்யாணம் போல் இவர்களின் தாலிபிரித்து கோர்க்கும் விழா முடிந்திருக்க.. பெருமகிழ்ச்சியடைந்த நண்பர்கள்.. “வாழ்த்துக்கள் ம்மா..” என மனதாற வாழ்த்தினர்.
அதிகாலை மூன்று மணிக்கெல்லாம் எழுந்து கொண்ட குழந்தையும்.. “அப்பா மங்கா கய்யாணம்” என குதூகலித்தான்.
எட்டு மணிபோல் விருந்து முடித்ததும் தேவேஷின் நண்பர்கள் விடைபெற்றிட.. தேவேஷ் தனதறைக்குள் வந்தான்.
மங்கை ஹாலில் இருக்க.. மகளை பார்க்க வேண்டும் என நான்கு மாதங்களாய் தவித்த தவமணி, இன்று மங்கையை கண்டுகொள்ளவேயில்லை.
கர்பினி ஆராதனாவிற்கு, அதிகாலை எழுந்தது அசதியைத் தர.. கற்பகம் அறையில் படுத்துறங்கினாள். சின்ன அலங்காரத்திற்கே வீடு பொலிவாய் இருப்பதாய் தோன்ற.. அன்று முதலிரவில் பயம் வராத மங்கைக்கு தற்போது பகலிலும் உள்ளே செல்ல தயக்கமாக இருக்க ஹாலிலேயே அமர்ந்திருந்தாள்.
பத்து நிமிடமாகியும் மங்கை வராததால், “உள்ள வா மங்கை.” என்றான். “ஹான்..” என இவள் விழிவிரிக்க.. மீண்டும் “உள்ள வா.” என்றான் கனிவாக.
மங்கை உள்ளே வரவும்.. “எதுக்கு இப்படி டென்ஷனா இருக்க? டிரெஸ் சேன்ஜ் பண்ணிப்பனுதான் கூப்பிட்டேன்.”
மங்கை அமைதியாகவே இருக்க.. “சரி.. நைட் டியூட்டி பார்த்தது டையர்டா இருக்கும். தூங்கு..” என்றவன் வேஷ்டி சர்ட் களைந்து பேண்ட்சர்டிற்கு மாறி கம்பெனிக்கு கிளம்பினான்.
தேவேஷ் வெளியே போவதை பார்த்த தவமணி உள்ளே வர.. “மாப்பிள்ளை கம்பெனிக்கு கிளம்பிட்டார். இன்னும் ஏன் பேயடிச்சமாதிரி இருக்க?” என்றார்.
“என்ன? கம்பெனிக்கு போய்ட்டானா?” என நினைத்தவள்.. சற்று முன் தேவேஷிடம் இயல்பாய் நடந்துகொண்டதையும், மாப்பிள்ளை என்ற அழைப்பையும் நினைத்து.. “நீ எப்போ அவர் பக்கம் சாய்ஞ்ச?” என்றாள்.
“நேத்து போன் செய்து தன்மையா பேசினதுலயிருந்து.” என்றார் நிறைவாக.
மங்கை முகமும் நிம்மதியைக் காட்ட, “ஒரு வாரம் லீவ் போடு” என்றார்.
“ம்மா அதெல்லாம் முடியாது.” என்றாள்.
எப்பவும் இவ நினைச்சதையேத்தான் சாதிப்பா என முறைத்தவர்.. இன்றொருநாள் தங்க வைத்தால் போதும், நாளையிலயிருந்து என்னவோ பண்ணட்டும் என நினைத்து.. “நைட் டியூட்டி பார்த்து டையர்டா இருக்கும். தூங்கு. இன்னைக்கு நைட் முகூர்த்தம் இருக்கு.” என அசால்ட்டாய் சொல்லி வெளியேற.. விதிர்த்துப்போனாள் மங்கை.
ஆனாலும்.. நாம ஏன் எஸ்கேப் ஆகனும்? அன்னைக்கு போல இன்னைக்கும் மிரட்டி தூங்க சொல்லனும்.” என முடிவெடுக்க, தற்போது மனமும் இலகுவாக, இலகுவான உடைக்கு மாறி உறங்க முற்பட்டாள்.
மாலை ஆறு மணிபோல் தேவேஷ் வர.. “ஹே.. டியூட்டிக்கு போகல?” என்றான் ஆச்சர்யமாக.
“எங்க போக விட்டாங்க?” என இவனிடம் காய்ந்தாள்.
“பார்டா.. பெரியவங்க பேச்சு கூட கேப்பியா நீ?” என பாத்ரூமினுள் சென்று உடைமாற்றி வந்தவன்.. “ம்மா டீ.” என்றான் உள்ளிருந்து.
தேவேஷின் இந்த பேச்சும் உவப்பாய் தோன்றாமல் போக.. தேவேஷை தவிர்க்கவும் முடியாமல், அவனோடு இணங்கவும் முடியாமல்.. இன்னமும் முகம் இறுகினாள்.
“என்ன?” என்றான் சற்று குரல் உயர்த்தி.
“டீ கேட்டிங்கள்ல? வச்சிட்டு வரேன்.” என வெளியேறினாள்.
“டீ வேணாம்.” என்றான் கடுப்பாக.
“இப்ப கொஞ்சம் முன்ன கேட்டிங்கதான? இப்போ ஏன் வேணாம்ன்றிங்க?நான் வைப்பேன், நீங்க குடிச்சிதான் ஆகனும்.” என டிகாஷனில் பாலை ஊற்றினாள்.
கோபத்தோடு எழுந்து மங்கையிடம் செல்ல.. வெளியே கார் சத்தமும், அன்னையின் குரலும் கேட்கவும் அமைதியாக உள்ளே வந்தான்.
“டீ போடுறியா மங்கை? எல்லாருக்கும் சேர்த்து போடு.” என சொத்தென அமர்ந்தார் தவமணி.
“மங்கா.. ஆயா.. ஐஸ்கீம், சாக்கில்லாம் வாங்கி” என பொருள்களை காண்பிக்க மங்கையின் கைப்பிடித்து இழுக்க.. “இருடா.. இருடா..” என டீயை ஊற்றி “ஆன்ட்டி உங்க மகன்கிட்ட கொடுங்க.” என நீட்ட.. “நீ போய் கொடு.” என தவமணி முறைக்க.. “கொடுத்தா கொடுங்க, இல்ல போங்க.” என டேபிள் மீது வைத்து குழந்தையோடு ஒன்றினாள்.
இரவு உணவிற்கு தேவேஷை அழைக்கவும்.. வெளியே வந்தவன் ஆராதனாவோடும், மகனோடும் இயல்பாய் உரையாடினான். அதுவே தவமணிக்கு மேலும் நிம்மதியை உண்டாக்கியது.
தேவேஷ் உள்ளே சென்றதும் சாப்பிட்டுகொண்டிருக்கும் மங்கை தலையில் பூவை வைத்துவிட.. “இப்போ எதுக்கு இத்தனை கலாட்டா? என்னவோ இன்னைக்குத்தான் கல்யாணம் ஆனமாதிரி..” என அன்னையை முறைத்தபடியே சாப்பிட்டாள்.
“போடி..” என அதட்டி பால் சொம்பை கையில் திணிக்க.. மங்கை உள்ளே வரவும்.. பெட்சீட்டை கீழே விரித்துக்கொண்டிருந்தான் தேவேஷ்.
அதில் கடுப்பானவள்.. “ம்.” என பாலை நீட்டினாள்.
“எனக்கு வேணாம், நீ குடிச்சிட்டு தூங்கு” என மங்கை முகம் பார்க்க.. அவளின் இறுகிய முகம் கண்டு.. “இப்போ என்ன.?” என்றான் சலிப்பாக.
மனதில் பட்டால் உடனே செயல்படுத்தும் பழக்கமுடைய மங்கைக்கு.. இன்றும் மனதில் உள்ளதை கேட்டுவிடும் எண்ணம் தோன்ற.. “அன்னைக்கு உண்மையா மெய் மறந்து முத்தம் கொடுத்திங்களா? இல்ல..” என வார்த்தையை முழுங்கவும்..
“அப்படினா?” என தேவேஷ் புருவம் இடுங்க.. “கல்யாணத்துக்கு நான் கேட்டப்போ சொன்னிங்களே.. குழந்தைக்கு அம்மாவானா போதுமா? மத்தது எதுவும் வேணாமானு? என் மேல பாவப்பட்டு அதுக்காக..” எனும்போதே வார்த்தை தொண்டைக்குள் சிக்க.. கண்ணீர் வெளிக்கிளம்பியது.
தேவேஷ்.. “ஏய் ச்சிய் வாயமூடு..” என அதட்ட.. “முத்தம் கொடுக்க என் காதல் மட்டும் போதுமா?” என வேதனையோடு கேட்டு.. “போதாததுக்கு சிறைபடுறேன், அடிமையா இருக்கேன்னு பிணாத்துனிங்க.. அப்போ நான் என்ன நினைக்கட்டும்?” என்றாள் ஆற்றாமையாக.
பாலை வாங்கி டேபிளில் வைத்தவன்.. “உக்காரு.” என பணித்து கீழே தன் விரிப்பில் அமர்ந்தவன்.. “நான் உன்னை விரும்பாதபோதும், எனக்காக எல்லாரையும் சமாளிச்சது தெரிய வரவும், அந்த நேரம் உன் காதலுக்கு எதையாவது செய்யனும் தோணுச்சு. எதைப் பத்தியும் யோசிக்காம முத்தம் கொடுத்துட்டேன். யோசிக்காம கொடுத்தாலும் பிடிக்காம செய்ய முடியுமா?” என எடுத்துரைத்து..
“என்னைப் பொறுத்தவரை அது ஒரு சாதாரண விசயம்.. உன் ரியாக்ஷன் பார்த்துதான், உன் விருப்பமில்லாம செய்தது தப்புனு புரிஞ்சது. அதுக்காக சாரியும் சொன்னேன்.
குழந்தைக்காகவும், என் நிம்மதிக்காவும் நீ ரொம்ப கஷ்டப்படுற.. அது எனக்கு பிடிக்கல.. கஷ்டமாவும் இருக்கு.” என மனதை வெளிப்படுத்தியவன்..
மெட்டிபோடும்போது பேசியதை பிணாத்தலாய் நினைத்ததையும், இரட்டை அர்த்தத்தில் பேசும்போது, அதை அறியாமல் மல்லுக்கு நிற்பதையும் நினைத்தபடி மங்கையை ஆழப் பார்த்தவன்.. “பல நேரம் பயங்கர மெச்சூரிட்டியா இருக்க, சில நேரம் ரொம்ப ரொம்ப சின்ன பொண்ணாகிடற..உன்னை எப்படி சமாளிக்கிறது?” என்றான் யோசனையாக.
“நீங்க எதுக்கு என்னை சமாளிக்கனும்? நாளைக்கெல்லாம் டியூட்டிக்கு போய்டுவேன். எப்பவும்போல நிம்மதியா இருங்க.” என நொடிப்போடு படுத்தாள்.
“அப்படியா? ஆனா எனக்கு நிம்மதியா இல்லையே.. மேல வந்து படுத்தா நிம்மதி கிடைக்குமானு பார்க்கட்டா?” என்றான்.
மங்கையிடம் பதிலில்லாமல் போக.. “பொண்டாட்டிகிட்ட விருப்பத்தோட சிறைபடுறதுக்கு பேரு காதல் இல்லையா?” என மங்கை காதருகே கிசுகிசுக்க.. “ஹான் “ என அதிர்வாய் திரும்ப.. கீழேதான் அமர்ந்திருந்தான். இவன் உயரத்திற்கு சற்றே எட்டவும் மங்கையருகே சென்று மீண்டது இவன் முகம்.
“நான் தேவமங்கை.” என சட்டென சொன்னவள் நாக்கை கடிக்க.. “அஹான்..” என காதருகே குரல் கேட்க.. தேவ மங்கை என்ற சொல்லில் மொத்தமாய் வீழ்ந்தவன்.. இம்முறை அவளோடு நெருங்கிப் படுத்திருந்தான்.
“கீழ பெட்சீட் போட்டிங்க? இப்போ எதுக்கு மேல வந்திங்க?” என முறைக்க.. “தேவமங்கைக்கு இந்த தேவனை புரிய வைக்க வந்தேன்..” என்றவன் மங்கையை தன்மீது போட்டுக்கொள்ள.. “என்னை பிடிச்சிருக்கா?” என்றாள் தவிப்பாக.
வெக்கப்படுவானு பார்த்தா இப்படி கேக்குறாளே என வருந்தியவன்.. “நீயே கண்டுபிடி.” என கன்னத்தில் முத்தமிட்டு, அணைப்பை கூட்டவும், அதற்கே மூச்சுவாங்கினாள் மங்கை.
“ரிலாக்ஸ்..” என கிசுகிசுத்தவன் முத்தம் கண்ணுக்கு இடம்பெயர.. என்னதான் ஷர்மிளா துரோகம் செய்திருந்தாலும், அவங்களை மறக்கமுடியாது, ஆனால் குறைந்தபட்சம் தன்னோடான தனிமையிலாவது மறக்கவேண்டுமென மனம் தவிக்க.. “தேவமங்கை சொல்லுங்க..” என்றாள் கட்டளையாக.
மங்கையின் எண்ணம்புரிய, அவளின் விருப்பப்படி “தேவமங்கை..” என இதழை ஆக்ரமிக்க.. இறுகியிருந்தவள் இலகினாள். சின்னவளின் சொல்லுக்கு அடிபணிந்தவனாய்.. “தேவமங்கை.. தேவமங்கை..” என இடைவிடாது உச்சரித்தபடி தன் அன்பை முத்தத்தால் காண்பிக்க.. மெய்மறந்தாள் மங்கை.
இவனின் முத்தங்கள் அவளின் உள்ளுணர்வுகளை விழிக்க செய்ய, காதலோடு கூடும் கூடலில் மட்டுமே சாத்தியமாகும் தற்காலிக மரணம்.. உடல் இயங்கிக் கொண்டிருக்கும்போதே மங்கைக்கு நடந்தேறியது.
தான் வயதில் மூத்தவன்.. இவள் சின்னவளாகிற்றே என அத்தனை கவனமாய் கலந்தான் மங்கையோடு.