“தேவேஷ் மார்கெட் சென்று வந்த சற்று நேரத்தில்.. அபிராமியும் கார்த்திகாவும் குடும்பத்தோடு வந்திருந்தனர். “ஹே.. வா வா அபி.” என தேவேஷ் வரவேற்க.. “ம்ஹும்..” என முகம் திருப்பினாள் அபிராமி.
தேவேஷ்.. “நிஜமா திடீர்னுதான் அபி முடிவு செய்தேன். உன்னால வர முடியலனா நான் என்ன செய்யட்டும்?” என நியாயம் கேட்டான் பாவமாக.
அபிராமி.. “நாளைக்கு ஃபங்சன்னு ஒரு நாள் முன்ன சொல்ற? அதுவும் சாயங்காலம் சொல்ற? சின்னவனுக்கு காய்ச்சல், கார்த்திக்கா மாமியாருக்கு முடியல. எப்படி வரது? எங்க சௌகரியம் பத்தி கேட்டுட்டு செய்யவேண்டியதுதான?” என வெடித்தாள் உண்மைக் கோபமாக.
“அச்சோ ரொம்ப சூடா இருப்பா போலயே.” என கார்த்திகாவைப் பார்த்தான் பாவமாக.
“ஒன்னுக்கு இரண்டு கல்யாணம் செய்துருக்க.. கூடப்பிறந்த நாங்க ஒரு கல்யாணத்தை கூட பார்க்கல, சரி போகட்டும்னு விட்டா, இப்போ தாலி பிரிச்சி கோர்க்குறதுக்கும் திடீர்னு சொன்னா என்ன அர்த்தம்?” என கார்த்தியும் காய்ந்தாள் கோபமாக.
அடுத்ததாக மாமன் மச்சான் உதவியை நாடி தேவேஷ் அவர்களைப் பார்க்க.. “வீட்டு மாப்பிள்ளைங்களுக்குனு ஒரு மரியாதையே இல்ல.” என அவர்களும் பொய்யாய் கோபப்படவும்.. “சரி.. சரி.. தப்புதான்.. இனி நீங்க இல்லாம ஒரு விசயம் கூட நடக்காது.” என சரண்டர் ஆனான் தேவேஷ்.
அனைவரும் அமைதியாய் இருக்க.. “சரி சரி.. இந்த முறை என்ன வாங்கி வந்திங்க?” என சூழலை இலகுவாக்க முயன்றாள் மங்கை.
“ஒன்னும் வாங்கி வரல.” என முறைத்தாள் அபிராமி.
“எதுவுமே வாங்காமத்தான் இத்தனை திட்டா?” என மங்கையும் முறைக்க.. “உங்களை..” என சிரித்தாள் அபிராமி.
தேவேஷ்.. “சாரி அபி.. நிஜமாவே திடீர்னுதான் முடிவு செய்தேன். நீ இவ்வளோ சீரியஸா எடுப்பனு தெரிஞ்சிருந்தா ஒரு வாரம் தள்ளிகூட வச்சிருப்பேன்.” என்றான் வருத்தத்தோடு.
“உனக்கு எல்லாமே திடீர்னுதான் தோணும்.” என கோபித்து.. “இனி எதாவது சொல்லாம செய்தேன்னா எப்பவும் இங்க வரமாட்டேன்.” என எச்சரித்தாள்.
“ஹப்பா சாமி.. கோபம் போச்சா?” என்றான் நிம்மதியாக.
“ம்ம்..” என பொய்யாய் முறுக்கினாள் அபிராமி. பின்னே கெஞ்சி கொஞ்சி சமாதனம் செய்தான்.
தவமணி அவர்களின் தாய்தந்தை தனியே இருப்பதால், மருமகனிடம் நேரம் கிடைக்கும்போது வருவதாக சொல்லி பதினொரு மணிபோல் மருமகளோடு கிளம்பினார்.
வேலைநாட்கள் என்பதால் அபிராமியும் கார்த்திகாவும், விடுமுறை நாட்களில் வருவதாக சொல்லி மதியம் மூன்று மணிபோல் கிளம்பினர்.
நான்கு மணிபோல் மங்கை பணிக்கு தயாராகவும்.. “இன்னைக்கு ஒரு நாள் லீவ் போடேன்.” என்றான் பாவமாக.
“முடியாது முடியாது.” என்றாள் ஸ்ட்ரிக்டாக.
“உன்கிட்ட ஒரு முக்கியமான விசயம் சொல்லனும் மங்கை.” என்றான் கெஞ்சலாக.
“உங்க பழைய விசயம் எதுவும் எனக்கு இனி வேணாம்.” என்றபடி தலைவாரினாள்.
“மூனு நாள் முன்னதான் பேச ஆரம்பிச்சிங்க.” என இவளும் முறைத்து.. “நான் கூட எதோ என்னை பிரிய முடியாம சொல்றிங்கனு கொஞ்சூண்டு சந்தோசப்பட்டேன், என் சந்தோசத்துல மண்ணள்ளி போட்டுட்டு என்னவோ ராணுவ ரகசியம் சொல்றமாதிரி ஈஸி, கஷ்டம்னு கடுப்பேத்திக்கிட்டு..” என முனகினாள் கடுப்பாக.
“ஹே.. எல்லாத்துக்கும் சேர்த்துதான் லீவ் போட சொன்னேன்.” என இவன் அணைக்க.. திமிறியவள் கிளம்ப ஆயத்தமானாள்.
குழந்தை உள்ளே வர.. “மங்கா வேய்க்கு போயா?” என்றான் சோர்வாக. “ஆமாடா குட்டி.. நாளைக்கு வரேன்.” என முத்தமிட்டு மகனோடு வெளியே வந்தாள்.
“இரண்டு நாள் லீவ் போடலாமில்ல மங்கை?” என கற்பகம் ஆவலாய் கேட்க.. “இப்போ ஆறு மாசம் முன்னதான ஜாயின் செய்தேன்? லீவ்லாம் கொடுக்க மாட்டாங்க ஆன்ட்டி, நாளைக்கு காலைல வரேன்.” என்றாள் கனிவாக.
“நீ போய் விட்டுட்டு வாயேன் தேவா.” என்க.. “பரவால்ல ஆன்ட்டி அவர் குழந்தையோட இருக்கட்டும். கொரோனா இன்னும் ஒழிஞ்ச பாடில்ல, ஹாஸ்பிட்டலுக்கெல்லாம் தேவையில்லாம வரக்கூடாது.” என கிளம்பியிருந்தாள்.
“பஸ்ஸில் அமர்ந்ததும் தேவாவிற்கு அழைத்து.. “எதோ முக்கியமான விசயம்னிங்களே.. என்ன விசயம்?” என்றாள்.
“சொல்ல மாட்டேன் போடி.” என இணைப்பை துண்டிக்கவும்.. சிரித்தவாறு பயணித்தாள்.
அடுத்தநாள் காலை எட்டு மணிபோல் மங்கை வர.. தேவாவும் குழந்தையும் மார்கெட் சென்றிருந்தார்கள். இவள் குளித்து வர.. தேவேஷ் கிளம்பும் வரை மங்கையின் நேரத்தை குழந்தை எடுத்துக்கொண்டான். மாலை தேவேஷ் வருவதற்குள் மங்கை கிளம்பிடுவாள். இப்படியாக பத்து நாள் முடிந்திருக்க.. அன்று மாலை தேவா வரும்பொழுது மங்கை வீட்டிலிருக்கவும் தேவேஷின் முகம் மலர்ந்தது.
அறைக்குள் வந்ததும் அணைத்துக்கொண்டவன்.. “எத்தனை நாளைக்கு டே ஷிஃப்ட்?” என்றான் சந்தோசமாக.
“ஒரு மாசத்துக்கு.” என்றாள் உற்சாகமாக.
அன்று லீவ் போட சொல்வேன் என எதிர்ப்பார்ப்பதாய் மங்கை சொன்னதிலிருந்தே, நமக்குத்தான் இரண்டாம் திருமணம், மங்கைக்கு அப்படியல்லவே, இனி அவள் எதிர்பார்ப்பை அவள் சொல்லாமல் நிறைவேற்ற வேண்டும் என அன்றே நினைத்ததால், மற்ற விசயம் பிறகு பேசிக்கொள்ளலாம் என இன்றைய நாளை முழுதாய் ஒதுக்கினான் மங்கைக்கு.
அன்று ஒரு நாள் மட்டுமல்லாது அடுத்து வந்த இருபது நாட்கள் இன்பமாகவே கழிந்தது. அன்று மதியம்.. “சிஸ்டர்.. ஸ்கேன் செய்ய எந்த பக்கமா போகனும்?” என கர்பினிபெண் கேட்கவும், அவர்களுக்கு வழி சொன்ன பிறகுதான் பதினைந்து நாட்களுக்கு முன்பே தான் ஆகியிருக்க வேண்டுமே என தோன்ற.. பெருகிய சந்தோசத்தோடு தனக்குத்தானே பரிசோதித்தாள்.
அவளின் சந்தோசம் தற்காலிகம் இல்லை என்றது சோதனை முடிவு. பிறகு டாக்டரிடமும் பரிசோதித்து உறுதி செய்தபின்.. அடுத்து ஒரு நாள் விடுப்பு சொல்லி வீட்டிற்கு கிளம்பினாள்.
அன்று தேவா வழக்கமாக வரும் நேரம் கடந்தும் வராமல் போகவே, அவனிற்கு அழைத்தாள். “மங்கை நான் அப்புறம் பேசுறேன்.” என இணைப்பை துண்டித்தான்.
இரவு எட்டரை மணிபோல் தேவா வீட்டிற்கு வர.. தாமதமாக வந்ததால் “ப்பா..” என முறைத்தான் குழந்தை. சாக்லேட் கொடுத்து குழந்தையை சமாதானம் செய்தவன்.. பணிநேரத்தில் என்றும் அழைக்காத மனைவி, இன்று அழைத்தும் பேசாததால் கோபமாக இருப்பாளோ எனப்பார்க்க.. அப்படியில்லாமல் மங்கை முகம் ஜொலித்தது.
“சாரிடா.. ஒரு முக்கியமான மீட்டிங்ல இருந்தேன், அதான் பேச முடியல.” என்றான்.
“சரி வேணாம், இங்க வீட்டுலயே கும்பிடலாம், போய் முகம் கழுவி வாங்க.” என்றாள்.
“ம்..” என உள்ளே போனவன்.. மனைவியை அழைக்க.. “சாமி கும்பிடனும் வாங்க.” என்றாள்.
“உன் பர்த் டே வா இன்னைக்கு?” என்றவாறு வெளியே வந்தவன், மங்கை சொன்னதை செய்ய.. வணங்கி முடித்ததும்.. “நாம இஷ்ட்டப்பட்டு கஷ்ட்டப்பட்டதுக்கு பலன் கிடைச்சிருக்கு.” என கிசுகிசுத்தாள் வெக்கத்தோடு.
“என்ன சொல்ற?” என தேவா இன்ப அதிர்ச்சியோடு மங்கையின் வயிற்றைப் பார்க்க.. “ம்..” என தலையாட்டி ஆமோதித்து.. “வாங்க ஆன்ட்டிகிட்ட சொல்வோம்.” என்க.. “அம்மாகிட்ட அப்புறம் சொல்லலாம், உள்ள வா.” என தேவேஷ் தனதறைக்கு போக எத்தனிக்க.. இவள் கற்பகம் அருகே வந்தமர்ந்தாள்.
வேறு வழியின்றி தேவா அன்னையிடம் வர.. “இன்னைக்கு மங்கைக்கு பிறந்த நாளா தேவா? பாயாசம்லாம் செய்தா.. ஆனா என்கிட்ட எதுவும் சொல்லல.” என்றார் பிணக்கோடு.
“மங்கை ப்ளீஸ்.. உள்ள வா..” என உள்ளே போனான் தேவேஷ்.
அவனின் குரல் மாற்றம் உணர்ந்து.. “ஒரு நிமிஷம் ஆன்ட்டி..” என அறையினுள் வர.. “நிஜமாவா? டாக்டர்கிட்ட செக்கப் செய்தியா?” என்றான் பெரிய பொக்கிஷம் கிடைக்கவிருக்கும் தோரணையில்.
“ம்.. நிஜமாதான்..” என மருத்துவமணையில் நடந்ததை விளக்கி.. “ஆராக்கு வாமிட், மயக்கம்னு நிறைய சொல்வாங்க, ஆனா அப்படி எந்த சிம்டம்சும் எனக்கு தெரியலங்க,
எப்பவும் பீரியட்ஸ் கரெக்டா ஆகிடுமே, இந்த மாசம் பதினைஞ்சு நாளுக்கு மேல ஆகிடுச்சேனு அந்த டௌட்லதான் செக் பண்ணினேன்..
இப்படி இந்த மாசமே.. நான் எதிர்பார்க்கவேயில்ல.” என்றவளை ஆரத்தழுவியவன் கால்மணி நேரம் வரை விடவேயில்லை.
“ஏங்க.. ஆன்ட்டி என்னவோ ஏதோனு வெய்ட் பண்ணிட்டிருப்பாங்க” என்கவும் மனைவியை விலக்கியவன்.. தன் ஆனந்த கண்ணீர் துடைத்து.. “போய் சொல்லிட்டு சீக்கிரம் உள்ள வரனும்.” என கட்டளையிட.. இவன் கண்ணீர் பார்த்து மங்கை தயங்க.. “இது ஒன்னுமில்ல, நீ போய் சொல்லிட்டு வா..” என அனுப்பிவைத்தான்.
கற்பகம் குழந்தைக்கு கதை சொல்லி உறங்க வைத்துக்கொண்டிருக்க.. தானும் மகனருகே படுத்துகொள்ள, அன்னையிடம் தொணதொணத்தவாறு பத்து நிமிடம் கழித்து உறங்கினான் சஞ்ஜெய்.
“ஆன்ட்டி.. அபிகிட்ட பேசலாமா?” என்றாள்.
“இந்த நேரத்துக்கா?” என கற்பகம் தயங்க.. “சொல்லைனா என்னைத்தான் திட்டுவாங்க.” என அபிராமிக்கு அழைத்து ஸ்பீக்கரில் போட்டு.. “நம்ம சஞ்சு குட்டிக்கு தம்பியோ, தங்கையோ வரப்போறாங்கனு உங்க மககிட்ட சொல்லுங்க ஆன்ட்டி.” என்றாள் உரக்க.
“மங்கை..” என கற்பகமும் அபிராமியும் ஒருசேர ஆர்ப்பரிக்க.. “சற்று நேரம் உரையாடிய பின்.. “கார்த்திக்காகிட்ட சொல்லிடுங்க. நான் காலைல பேசுறேன்.” என இணைப்பை துண்டிக்க..
ஷர்மி இறப்பு தற்கொலை எனத்தெரியாத கற்பகம், தேவா மாதிரி குழந்தை வேணும்னுட்டு பார்க்காத கூட அல்ப ஆயுசுல போய்ட்டாளே என இன்னும் கூட பல நேரம் வருந்துவதுண்டு ஆனால் மங்கையிடம் காட்டிக்கொள்ள மாட்டார்.
தற்போதும் கூட.. இந்த பாக்கியம் இல்லாமத்தான் ஒருத்தி படாத பாடுபட்டா.. என மனதில் நினைத்து.. “உனக்கு அந்த கடவுள் ஒரு குறையும் வைக்கமாட்டார்னு எனக்கு தெரியும் மங்கை..” என கன்னம் தடவினார் நெகிழ்வோடு.
“ஆன்ட்டி.. தூங்குங்க, நான் அவருக்கு சாப்பிட கொடுக்குறேன்.” என தனதறை வர.. தேவேஷ் முகம் பார்த்தவள்.. “ஏங்க என்ன இப்படி எக்ஸைட் ஆகுறிங்க?” என்றாள் கனிவாக.
“ம்கூம்..” என தன்னை சரி செய்தவன்.. “மங்கை… நான் சொல்றதை பொறுமையா கேட்பியா? உனக்கு பிடிக்கலனா அதுலயிருந்து நீ மொத்தமா விலகிக்கோ, ஆனா என்.. என்னை மட்டும் கன்ட்ரோல் பண்ண நினைச்சிடாத.” என்றான் கெஞ்சலாக.
“புருசனை கன்ட்ரோல்ல வச்கிக்கிட்டு, அடிமையோட பொண்டாட்டியா வாழ நான் எப்பவும் விரும்பினதில்ல, எனக்கு அப்படி பிடிக்காது.” என கண்டித்து.. “என்னனு சொல்லுங்க.” என ஊக்கினாள்.
“ஷர்மிக்கு குழந்தை பாக்கியம் இல்லனதும், தத்தெடுக்கலாம்னு சொன்னேன், அவ ஒத்துக்கவேயில்ல, டெஸ்ட் டியூப் பேபி ஃபெயிலியர் ஆனப்போ ரொம்ப வருந்தினா.
அந்த நேரம் நம்ம அபி ஹஸ்பண்டோட சொந்தத்துல, கொரோனோவால புருசன் பொண்டாட்டி இரண்டு பேரும் இறந்துட்டாங்கனும், அவங்களுக்கு இரண்டு குழந்தையிருப்பதாவும், சொந்தபந்தம் பாரும் அரவணைக்கலனும், சென்னையில நல்ல ஆஸ்ரமம் இருந்தா சொல்லுங்க, அங்க சேர்த்துடலாம்னு விஜயன் ஹெல்ப் கேட்டார்.
நான் கூட்டிட்டு வர சொன்னேன், பொண்ணுக்கு ஆறு வயசு, அவ தம்பிக்கு நாலு வயசு.. குழந்தைகளைப் பார்த்ததும் எனக்கு ஆஸ்ரமத்துல சேர்த்த மனசேயில்ல, கார்டியனா இருப்போம்னு ஹாஸ்டல்ல சேர்த்தேன்.
நான் சேர்த்துருக்க ஸ்கூல் ரொம்ப நல்ல ஸ்கூல், நல்ல ஃபுட் கொடுப்பாங்க, ரொம்ப கேரிங்கா பார்த்துப்பாங்க. ரொம்ப கஷ்டப்பட்ட குழந்தைகள் போல.. ஒரு மாசம் கழிச்சி குழந்தைகளை பார்க்க போனப்ப, கடவுளை பார்க்குற மாதிரி பார்த்தாங்க.
எங்கப்பாம்மா இருந்தப்போ கூட இப்படி சாப்பாடும், பஞ்சு மெத்தையில தூங்கினதும் இல்லனு ஆறு வயசு சுபா சொல்லும்போது புத்துயிர் வந்ததை போல உணர்ந்தேன்.