ஷர்மிளா அமைதிகாக்கவும்.. கதவடைத்தவன் மனைவியை அணைக்க.. “வேண்டாம் தேவ்.. நீங்க போய் சாப்பிடுங்க, நான் ரெடியாகி வரேன்.” என விலக முற்பட்டாள்.
“ப்ச்.. ஷர்மி..” என இன்னும் சேர்த்தணைக்க.. கணவன் அணைப்பிற்கு கட்டுபட்டவள்.. “போய் சாப்பிடுங்க, நான் குளிச்சிட்டு வரேன்..” என்றாள் சமாதனமாக.
“குளிக்காம சமைக்கமாட்டியே.. இன்னைக்கென்ன?” என்க.. “எழுந்துக்க ரொம்ப லேட் ஆகிடுச்சி, முகம் கை கழுவிட்டு சமைக்க போய்ட்டேன். விடுங்க டைம் ஆச்சு..” என விலகி குளியலறை புகுந்தாள்.
அரைமணி நேரமாகியும் ஷர்மி வெளிவராமல் இருக்கவே.. “ஷர்மி..” என கதவை தட்டினாள் தேவேஷ்.
நான்கைந்து முறை கூப்பிட்ட பின்னே வெளிவந்தவள் முகமும் கண்களும் சிவந்து சுரந்திருக்க.. “ஷர்மி..” என பதறி அணைக்க.. மீண்டும் ஒருமுறை அழுது தீர்த்து.. “இன்னைக்கு நான் லீவ் தேவ்.. நீங்க கிளம்புங்க..” என்றாள்.
குழந்தையின்மை காரணமாக ஷர்மி மிகுந்த குழப்பத்தில் இருக்கிறாள் எனப்புரிந்தாலும், இன்று தேவஷ் அவனின் ப்ராஜக்ட்டை சப்மிட் செய்தே ஆகவேண்டும் என்பதால்.. “ஷர்மி.. என்னயிது? லீவ் போட்டு வீட்ல இருந்தா எல்லாம் சரியாகிடுமா? நானும் இன்னைக்கு போயே ஆகனும்.. தனியா இருந்து என்ன செய்யபோற? கிளம்பு..” என்றான் கட்டளையாக.
“ஆமாம்.. லீவ் போட்டு வீட்ல இருந்தா குழந்தை வரும்னா.. இரண்டு வருசத்துக்கு முன்னவே ஜாபை ரிசைன் பண்ணிருப்பேன்.. நான் வீட்டுல இருந்தாலும் எதுவும் சரியாகாதுனு எனக்கும் தெரியும்..” என விரக்தியாய் சொல்ல… தற்போதுதான் ஷர்மி தாளமுடியாத வேதனையில் இருப்பது புரிய.. “ஷர்மி.. உன்னை விட குழந்தை எனக்கு முக்கியமா? எப்பப்பாரு அதையே நினைச்சிட்டிருப்பியா?” என வருந்தினான் தேவேஷ்.
“இன்னைக்கு என்னால வேலைல கான்சன்ட்ரேட் பண்ண முடியாது தேவ்.. கால் பண்ணி சொல்லிட்டேன்.. நீங்க கிளம்புங்க..” என்றாள் தன்மையாகவே.
“சரி உன் கம்பெனிக்கு போகாத, என்னோட வா.. இரண்டு மணிநேரத்துல ப்ராஜக்ட் சப்மிட் செய்திடுவேன், ஹாஃப்டே லீவ் போட்டுட்டு வெளில போலாம்..” என்றான்.
“ப்ச்.. எனக்கு டையர்டா இருக்கு..” என்றாள் சலிப்பாக.
“சரி இப்போ ரெஸ்ட் எடுத்துட்டு மதியம் ரெடியா இரு.. நான் வந்து பிக்கப் பண்ணிக்கிறேன்.” என கிளம்பினான்.
கம்பெனிக்கு சென்றவன் தனது வேலையை முடித்து மதியம் பர்மிஷன் போட்டு வீட்டிற்கு கிளம்ப.. வருங்காலங்களில் எத்தனை பிரச்சனை வந்தாலும் ஒருவரையொருவர் சமாதனம் செய்யாமல் அன்றைய பொழுது விடியக்கூடாது, முக்கியமாக சண்டையால் ஒரு மணிநேரம் கூட பேசாமல் இருக்க கூடாது.. யார்மீது தவறிருக்கிறதோ அவர்தான் மன்னிப்பு கேட்டு சமாதனம் செய்ய வேண்டும்..” என திருமணத்திற்கு முன்பே பேசிக்கொண்டது நியாபம் வர.. “ஷிட்.. இதுக்குத்தான் இத்தனை அழுதியா? முட்டாள்.. முட்டாள்..” என திட்டிக்கொண்டே காரை வேகமாக செலுத்தினான்.
தேவேஷ் உள்ளே வர.. கற்பகம் “ஷர்மிளா காலைலயிருந்து சாப்பிடல தேவா.. அவ ஏன் இன்னைக்கு வேலைக்கு போகல? உடம்புக்கு முடியலையா? சாப்பிட கூப்பிட்டா தலைவலி சரியானதும் சாப்பிட்டுக்கிறேனு சொல்லிட்டா..” என்றார் கவலையாக.
தேவேஷ் உள்ளே போக அயர்ந்து உறங்கிக்கொண்டிருந்தாள் ஷர்மிளா. பகலில் உறங்கும் பழக்கமே ஷர்மிளாவிற்கு கிடையாதென்பதால்.. “அம்மா..” என அழைக்க.. கற்பகம் வரவும்.. “எவ்வளோ நேரமா தூங்கிட்டிருக்கா?” என்றான்.
“தெரியலப்பா.. பத்து மணிக்கு சாப்பிட கூப்பிட்டேன், அதுக்கப்புறத்துலயிருந்து வெளிலயே வரல..”
“சரிம்மா..” என்றதும் கற்பகம் வெளியே வர.. “ஷர்மி..” என கன்னம் தட்டினான்.
எழாமல் இருக்கவே “ஷர்மி..” என உலுக்கினான் சற்று வேகமாக.
“ம்ம்..” என மெல்ல கண்விழிக்க முயன்றவள் மீண்டும் கண்மூட.. “ஷர்மி எழுந்துக்கோ.. சாப்பிடாம தூங்கிட்டிருக்க.. உடம்புக்கு என்ன பண்ணுது?” என பதட்டத்தோடு கன்னம் தட்ட… அதில் நன்றாக தூக்கம் கலைந்தவள் எழுந்தமர்ந்தாள்.
“வா சாப்பிடலாம்..” என்றவன்.. “இல்ல நீ போய் முகம் கழுவு, நான் இங்கையே எடுத்துட்டு வரேன்.” என வெளியேறினான்.
தேவேஷ் இரண்டுநாளாய் பேசாததில் மனம் பெரும் அழுத்தத்திற்குள்ளாக, இரவெல்லாம் தூங்காமல் இருந்தவள்.. தற்போது தூங்கி எழவும் சற்று தெளிவாகியிருந்தாள். எழுந்து முகம் கழுவி வெளியே வர எத்தணிக்க.. “உள்ளபோ.. இங்கையே சாப்பிடலாம்.” என்றான்.
“இல்ல இங்க எங்க வச்சி சாப்பிடறது? டேபிள்க்கே போலாம்.” என தேவேஷ் கையிலிருந்து குழம்பு பாத்திரத்தை வாங்க.. “ம்ஹும்.. உள்ளயே வா, கீழ உக்கார்ந்துக்கலாம்..” என உள்ளே சென்று தரையில் வைத்தான்.
உள்ளே வந்தவள்.. “என்ன சமைச்சது அப்படியே இருக்கு? உங்கம்மா சாப்பிடலயா?” என்றாள் அக்கறையாக.
“தெரியலையே..” என்றவன்.. “ம்மா..” என்க.. “எனக்கு பசியில்ல தேவா, நீங்க சாப்பிடுங்க நான் அப்புறம் சாப்பிட்டுக்கிறேன்.” என குரல்கொடுத்தார்.
ஒரே தட்டில் போட்டு ஷர்மிக்கு ஊட்டப்போக மறுக்காமல் வாங்கிக்கொண்டாள். முன்தின வாக்குவாதத்திற்கு பிறகு கோவிக்காமல் சாப்பாடை வாங்கிக்கொண்டதில் தேவாவிற்கு ஆச்சர்யம்தான்.. கூடவே எதையாவது நினைச்சி மருகிட்டிருக்காளோ என சந்தேகமும் வர.. முதல்ல சாப்பிடட்டும், அப்புறம் கேட்போம் என ஊட்டி தானும் சாப்பிட்டான்.
சாப்பிட்டதும் மீதத்தை வெளியே எடுத்துப்போக ஷர்மி எத்தணிக்க.. “அப்புறம் எடுத்து வச்சிக்கலாம்.” என மனைவியை வளைத்தவன் மடிமீது அமரவைக்க.. “உங்கம்மா பசியோட இருப்பாங்க.” என எழ முற்படவும்.. “நீ இரு.. நான் எடுத்து கொடுத்துட்டு வரேன்.” என ஷர்மியை விடுவித்து மீதத்தை எடுத்து வெளியே வந்தவன் டேபிளில் வைத்து.. “ம்மா.. முதல்ல வந்து சாப்பிடு.” என குரல்கொடுத்து உள்ளே வந்தான்.
“என்னாச்சு ஷர்மி? காலைல ஏன் சாப்பிடல? பகல்ல எப்பவும் தூங்கமாட்ட? இன்னைக்கென்ன இவ்வளோ தூக்கம்? நைட் ரொம்ப நேரம் தூங்கலயா? ஒர்க் பண்ணுனியா?” என்றான் தவிப்பாக.
“ம்..” என்றாள் ஒற்றை சொல்லாக.
“சாரிடி.. உன்னை சமாதனம் செய்யாமலே நைட் தூங்கிட்டேன்.” என கன்னம் தேய்த்தான் காதலோடு.
“ஷர்மி..” என இதழோடு இதழ்கலக்க.. கணவனுக்கு ஒப்புக்கொடுத்தாலும் மனம் லயிக்கவில்லை. தேவேஷ் முன்னேற.. “கதவை தாழ் போட்டிங்களா?” என்றவளின் குரலில் காதலில்லாமல் இருக்க.. விலகி முகம் பார்த்தவன்.. “உள்ள வரும்போதே போட்டுட்டேன்..” என்றவனின் தாபம் களைந்திருந்தது.
“வாங்க..” என்றவள் தேவ்வை தன்மீது சரித்துக்கொண்டாள். எங்கே தன் கண்பார்த்து எதையாவது கேட்பானோ என தேவாவை யோசிக்கவிடாமல் அணைத்து தன் சம்மதம் தெரிவித்தாள்.
மனைவியின் செய்கை முற்றிலும் மாறுபட்டதாய் இருக்க.. “ஷர்மி..” என விலகினான் வேதனையாக.
“தேவா ப்ளீஸ்..” என அழைக்கவும்.. “அப்போ நைட் ஒர்க்னால தூங்காம இல்ல, நான் பேசாததுனாலதான?” என வருந்தியவன்.. “குழந்தையாலதான நமக்குள்ள சண்டை வருது? இனி எப்பவும் குழந்தை பத்தின பேச்சு இருக்க கூடாது.. உன்னை கஷ்டப்படுத்துறது எதுவும் எனக்கு வேணாம்.. சரியா?” என்றான் கெஞ்சலோடு.
நிச்சயம் இது மோகம் அல்ல.. கல்யாணமானதிலிருந்து ஒரு நாளும் இதற்காக இப்படி அழைத்தவளும் அல்ல.. எதையோ சரிசெய்ய தன்னை அழைக்கிறாள் என புரிந்தபோதும்.. அதுதானே கணவன் மனைவி உறவு.. இன்பத்தை கொடுப்பது மட்டும் கூடுதல் அல்லவே.. மனைவியின் மனவேதனை இதனால் தணியும் என்றால் கணவனுக்கு இதைவிட வேறென்ன வேணும்? என்ற கர்வத்தோடும் காதலோடும் மனைவியின் உடை களைந்தான்.
சற்றுநேரத்தில் வெளியே அழைப்பு மணி ஒலி விடாமல் கேட்க.. தேவேஷின் கவனத்தை அவ்வொலி எட்டவில்லையென்றாலும் ஷர்மியின் கவனம் அங்கே சென்றது.
கதவைத் திறந்த கற்பகம் அங்கே தவமணியை எதிர்பார்க்கவில்லை. சில நொடி அதிர்ந்து நின்றாலும்.. “வாங்க..” என்றார்.
“பரவால்லைங்க.. இந்தாங்க வீட்டு சாவி.” என நீட்டினார்.
“என்கிட்ட எதுக்கு கொடுக்கிறிங்க?” என கற்பகம் சங்கடப்பட.. “என் பொண்ணுகிட்ட ஒன்னு இருக்கு.. நர்ஸிங்கே முடிக்கபோறா.. ஆனா இன்னும் சில விசயங்கள்ல பொறுப்பு வரல.. தங்க செய்யினையே நாலஞ்சி தொலைச்சிருக்கா.. இந்த சாவி எம்மாத்திரம்?
என்னைக்காவது எங்கயைவது விட்டுட்டு வந்துட்டாள்னா உங்க்கிட்ட வாங்கிக்கலாமில்ல? அதோட நான் இங்க வந்தாலும் அவ வரவரைக்கும் சாவிக்காக வெய்ட் பண்ணாம உங்ககிட்ட வாங்கிக்கலாமில்ல? அதுக்குத்தான்..” என நீட்டினார்.
கற்பகம் தயக்கத்தோடு வாங்கி வைக்கவும்.. “என்னடா? வீடிருக்குனு சொன்ன கொடுமைக்கு இத்தனை நச்சு பண்றாங்களேனு நினைக்காதிங்க.. என் பொண்ணு தேவையில்லாம யாரையும் தொல்லை பண்ணமாட்டா.. என் பொண்ணால உங்களுக்கு எந்த தொல்லையும் வராது.. பயப்படாதிங்க.” என்றார்.
“இல்ல.. என் பையனும் மருமகளும் எப்பவும் சாயங்காலம்தான் வருவாங்க.. இன்னைக்கு இரண்டு பேரும் வீட்டுல இருக்காங்க..” என்றார் சங்கடமாக.
தவமணி.. “ஓ.. வீட்டுல இருக்காங்களா?” என்றவருக்கு மகனிற்கு அடுத்தவர்களிடம் பேசினால் பிடிக்காது என கற்பகம் முன்பு சொன்னது நினைவு வர.. “மணி மூனாகப்போகுது.. இன்னும் சாப்பிடலயா நீங்க? நான் கிளம்பறேன்.. முதல்ல சாப்பிடுங்க..” என எழுந்தார் தவமணி.
“ஏன் மருமக சரிகிடையாதுங்களா?” என கிசுகிசுத்தார் தவமணி.
“ச்ச.. ச்ச.. அப்படில்லாம் இல்லைங்க.. என் மருமக தங்கமான பொண்ணு.. எனக்கு இரண்டு பொண்ணுங்க.. இதுவரைக்கும் நாத்தனார்னு ஒருநாளும் பிரிச்சி பார்க்கமாட்டா.. வேலைக்கு போனாலும் எனக்கு சமைச்சி வைக்காம போகமாட்டா..
என்ன? என் பொண்ணுங்க, பேரன் பேத்தி, மருமகனுங்கனு எல்லார்கிட்டயும் அன்பா பேசினாலும் என்கிட்ட மட்டும் கொஞ்சம் வெடுக்கு வெடுக்குனு இருப்பா.. அவ்வளவுதான்.. மத்தபடி ஒரு குறையும் அவளை சொல்றதுக்கில்ல.” என்றார் பெருமையாக.
“மருமக வேதனையில இருக்கிறதுதானுங்க எனக்கு வேதனையா இருக்கு.. இந்த மனசை தேத்துறதுக்கு எதோ மன டாக்டரு இருக்காங்களாமே.. அப்படி யாரவாது உங்களுக்கு தெரிஞ்சா சொல்லுங்களே.. நீங்களும் பாதி டாக்டருக்கு படிச்சிருக்கேன்னு அன்னைக்கு சொன்னிங்களே..” என்றார்.