“அப்படி என்ன வேதனை?” என தவமணி முகம் சுருக்க.. “என் மருமகளுக்கு குழந்தையில்லைங்க.. அது பிரச்சனையில்ல, என் மகனும் எவ்வளவோ எடுத்து சொல்லிட்டான்.. ஆனா அதையே நினைச்சிட்டு மனசை ரொம்ப வருத்திக்குவா போல.. என்னைக்கும் இல்லாம இன்னைக்கு லீவ் போட்டிருக்கா.. காலைல சாப்பிடவும் இல்ல, இப்போ என் மகன் வந்துதான் சாப்பிட வச்சான்.
இப்படியே எத்தனை நாள் வருந்துறது? நமக்கு இல்லனு முடிவாகிடுச்சி.. அதை ஏத்துக்கிறதுதான பரவால்ல? இந்த புள்ளக்கு குழந்தையும் வேணும்.. ஆனா தத்தெடுத்து வளர்க்கவும் பிடிக்கலனா என்னங்க பண்றது?
இதையே நினைச்சி நினைச்சி சிரிப்பையே தொலைச்சிட்டா.. ரூம்க்குள்ள இருந்தாலும் அவ சிரிப்பு சத்தம் வெளில கேட்கும். இப்போலாம் அவ சிரிப்பு சத்தம் கேட்டு வருசமாச்சி..” என வேதனையாக சொன்னவர்..
“அச்சோ.. என் பையனுக்கு காது கேட்டிருக்குமோ.? வீட்டு விசயம் வெளில போனா அவனுக்கு அவ்வளோ கோபம் வருமே.. குழந்தை பத்தி பேசவும் அவன் இருக்கிறதையே ஒரு நிமிஷம் மறந்துட்டேன்..” என தவமணியை கிளப்புவதில் கவனம் வைத்து.. “தவறா நினைக்க வேணாம்.. நீங்க கிளம்புங்க.. சாவியை நான் பத்திரமா வச்சிக்கிறேன்.. மத்தது போன்ல பேசிக்கலாம்.” என அவசரப்படுத்தினார்.
“குழந்தையை பார்த்துக்கிற ஆயாங்களுக்கு பேரு வாடகைத்தாயா?” என கேளியாய் சிரித்தவர்.. “குழந்தையிருந்தா அதை பார்த்துக்க நான் இருக்கேன்.. குழந்தை இல்லன்றதுதான் பிரச்சனையே..” என்றார் கவலையாக.
“அச்சோ நான் சொல்றது அது இல்லைங்க.. உங்களுக்கு எப்படி சொல்றதுனு எனக்கு தெரியல, சொன்னாலும் உங்களுக்கு புரியாது.. உங்க மருமகளை கூப்பிடுங்க, அவங்ககிட்ட சொல்றேன்.” என்றார் தவமணி.
****** *****
தவமணியின் பேச்சை கேட்டிருந்த ஷர்மியின் முகம் ஜொலிக்கவே.. ‘‘தேவ்.. தேவ்..” என ஆனந்தமாய் அழைத்தவள்.. “நமக்கு குழந்தை வரும்.. நம்ம குழந்தையை நாம வளர்த்தலாம், எனக்கு இவ்வளோநாள் இது தோணவே இல்ல..” என ஷர்மி சந்தோசமாய் பிதற்ற.. அப்பொழுதுதான் கூடிக்களித்து விலகியவன்.. “ப்ச்.. ஷர்மி.. கொஞ்சம் முன்னதான இனி எப்பவும் குழந்தைப் பத்தி நினைக்க வேணாம்னு சொன்னேன்..” என்றான் சலிப்பாக.
“ப்ச்.. உங்களுக்கு நான் சொல்ல வரது புரியல, இருங்க வரேன்.. ”என வேகமாய் குளியலறை சென்றவள்.. “உங்கம்மா யாரோடவோ பேசிட்டிருக்காங்க.. அவங்களை வெய்ட் பண்ண சொல்லுங்க, எனக்கு அவங்களோட பேசனும்.. பத்தே நிமிஷத்துல வந்துடறேன்..” என பேசிக்கொண்டே அவசரமாய் குளித்தாள்.
வெளியே யார் பேசியதும் தேவேஷின் காதில் விழவில்லை, குழந்தை நினைப்பாகவே இருப்பதால் எதையோ உளறுகிறாள் என்று கோபம் வரவே இறுக்கத்தோடு அமர்ந்திருந்தான்.
பிறகுதான் யாரோ பேசும் சத்தம் வர.. வெளியே வந்தவன் அங்கே தவமணியைப் பார்த்ததும், வீட்டுக்கே வந்து பேசும் அளவிற்கு நட்பு வளர்த்திருக்கிறாயா என்பதாய் கற்பகத்தை முறைத்தான்.
“தேவா.. இவங்க..” எனும்போதே.. “யாரைப் பத்தியும் எனக்கு தெரியவேணாம்.” என்றவன்.. “இன்னும் சாப்பிடாம என்ன செய்திட்டிருக்கிங்க? உயிரை வாங்கனே மாமியார் மருமக ரெண்டுபேரும் இருப்பிங்களா?” என்றான் கோபமாக.
“தவமணி.. நீங்க தப்பா நினைக்காதிங்க, நான் சாப்பிடாம இருக்க டென்ஷன்ல கத்துறான்..” என கற்பகம் சங்கடப்பட, “நீங்க சாப்பிடுங்க, எதாவது உதவி தேவைனா கால் பண்ணுங்க.” என கிளம்பினார் தவமணி.
தவமணி கேட்டைக் கூட அடைந்திருக்கமாட்டார்.. “கண்டவங்களையும் எதுக்குமா உள்ள விடறிங்க? அப்படி என்ன நியாயம் வேண்டிகிடக்கு.? உனக்கு பேசனும்னா அபி வீட்டுக்கு போய் பத்து நாள் தங்கிட்டு வாங்க.” என கத்தினான்.
“அந்தம்மா ஊர் நியாயம் பேச வரலப்பா, எனக்கும் அப்படி பிடிக்காது. இரண்டு நாள் முன்ன எதிர்த்த வீட்டுல பால்காய்ச்சினாங்கள்ல? அங்க தங்கபோற பொண்ணோட அம்மா இவங்கதான், ஊருக்கு கிளம்பறாங்களாம், என்கிட்ட சாவி கொடுத்துட்டு, அவங்க பொண்ணை பார்த்துக்க சொல்லிட்டு போக வந்தாங்க.”
தேவேஷ்.. “கண்டவங்களையும் பார்த்துக்கிறதுதான் உன் வேலையா?”என அதற்கும் திட்ட, “புருசன் பொண்டாட்டி இரண்டுபேரும் காலைல போனா சாயங்காலம் வரிங்க, இடையில எனக்கு எதாவது அவசரத் தேவைனா அக்கம்பக்கத்துல கொஞ்சம் அனுசரனையா இருந்துதான் ஆகனும்.” என்றார் தானும் கோபத்தோடு.
அவசரமாய் வெளியே வந்த ஷர்மி.. “உங்களோட ஒருத்தர் பேசிட்டிருந்தாங்களே.? அவங்க போய்டாங்களா?” என்றாள்.
“வாடகைத்தாய்னா.. நம்ம தேவைக்கு அடுத்தவங்க உயிரை வாங்கறதும்மா..” என அன்னைக்கு விளக்கியவன்.. “உலகத்துல எத்தனையோ குழந்தைங்க ஆதரவில்லாம இருக்கும்போது இந்த முறையில குழந்தை பெத்துக்கிறது எனக்கு சுத்தமா பிடிக்கல..” என மனைவியை எச்சரித்து உள்ளே போனான் தேவேஷ்.
“தேவ்..” என ஷர்மிளாவும் பின்னோடே போக.. வாடகைத்தாய் என்பது தற்போதும் கற்பகத்திற்கு புரியாமல் போக, மகனும் வேறு கோபமாய் உள்ளே போக, இந்த வாடகைத்தாய்ன்னா அப்படி என்னவாத்தான் இருக்கும் என்ற யோசனையோடு மகளிற்கு அழைத்தார்.
அபிராமி அழைப்பை ஏற்கவும்.. “நாளைக்கு கிளம்பி வா.” என்றார்.
“என்னம்மா? திரும்பவும் இரண்டு பேரும் சண்டை போட்டுக்கிட்டாங்களா?” என்றாள் கவலையாக.
“சண்டை மாதிரியும் இருக்கு, சமாதனம் மாதிரியும் இருக்கு, இவங்களை என்னால புரிஞ்சிக்கவே முடியல, எனக்கு வேற ஒன்னு தெரிஞ்சாகனும்.. நாளைக்கு கிளம்பி வா.” என்றார் மீண்டும்.
“ம்மா.. நாளன்னைக்கு செக்கப் போகனும். நாளைக்கு வந்துட்டு உடனே வந்தா ரொம்ப டையர்டாகிடுவேன். பெரியவன் வேற அங்க வந்தா உன்னோடவே இருக்கேன்னு அடம் பண்ணுவான்.. எதுக்கு வரசொல்ற? நாளைக்கே வர அளவுக்கு அப்படி என்ன அவசரம்?” என்றாள் தவிப்பாக.
“இந்த.. வாடகைத்தாய்ன்னா என்னடி அர்த்தம்? அதை ஷர்மி சொன்னதும் உங்கண்ணன் வேற கோவமா உள்ள போறான்.” என்றார் கவலையாக.
“ம்மா.. இது சூப்பர் ஐடியாமா.. அண்ணியே சொன்னாங்களா? அவங்களுக்கு இதுல விருப்பமா?” என்றாள் சந்தோசமாக.
“நான் நல்லா இருக்கிறது இருக்கட்டும்.. முதல்ல நான் கேட்டதுக்கு விளக்கம் சொல்லு.” என்றார்.
கார்த்திகா பொறுமையாக கால்மணி நேரம் வரை விளக்க.. “அடி ஆத்தி.. இப்படிலாமா இருக்கு? இதுக்கு எவடி ஒத்துக்குவா? பணத்துக்காக இதெல்லாமா செய்யிறாங்க?” என்றார் அதீத வியப்போடும் அதிர்வோடும்.
கார்த்திகா.. “குழந்தை பெத்துக்க தகுதியிருந்து, அழகு குறைஞ்சிடும்ன்ற காரணத்துக்காக அண்ணி இப்படி சொன்னாங்கனா அது தப்புதான்.. அவங்களுக்கு குழந்தையை தாங்கற அளவுக்கு சக்தியில்லனா இப்படி குழந்தை பெத்துக்கிறதுல தப்பு ஏதும் இல்லம்மா.. அண்ணி மாதிரி உள்ளவங்களுக்காகத்தான் இப்படி கண்டுபிடிச்சிருக்காங்க, இதை நாமளே யோசிச்சிருக்கனும், மண்டைக்கு தோணாமலே போய்டுச்சி.” என்றாள் பொறுமையாக.
இப்படி குழந்தை பிறப்பு கற்பகத்திற்கும் அத்தனை உவப்பானதாக தோன்றாமல் போக.. “ஆனாலும் இதுக்கு யாருடி ஒத்துப்பாங்க? எனக்கொரு குழந்தை பெத்து கொடுனு எவகிட்டயாவது போய் நின்னா செருப்பை கழட்டிட மாட்டா?” என்றார் முகச்சுழிப்போடு.
“அப்படிலாம் இல்லமா, நல்ல குணம் படைச்சவங்க இதுக்குனே இருக்காங்க.. அவங்களை தேடி கண்டுபிடிக்கிறதுதான் சிரமம்.. அதெல்லாம் அண்ணி பார்த்துப்பாங்க, நீ அண்ணாக்கு எடுத்து சொல்லு..” என்றாள் கார்த்திகா.
“சரி நான் வைக்கிறேன்.” என இணைப்பை துண்டித்தவர் கண்கள் மகனின் அறையை பார்க்க.. கதவு திறந்துதான் இருந்தது.
“பிறசவம்ன்றது சாதாரண விசயமா? நம்ம சந்தோசத்துக்காக இன்னொருத்தரை பாடுபடுத்தலாமா? எவ்வளவு பணம் கொடுத்தாலும், என்னதான் நம்ம ரத்தம்னாலும் காலத்துக்கும் குழந்தையை பெத்து கொடுத்தவங்க முகம் நமக்கு மறக்குமா? குழந்தையை பார்க்கும்போதெல்லாம் பெத்து கொடுத்தவங்க முகம்தான் கண்முன்ன வரும்..
எனக்கு இப்படி குழந்தை வேணவே வேணாம்.. ஆதரவில்லாம அன்புக்கு ஏங்கற எத்தனையோ குழந்தைகள் இருக்காங்க.. அவங்கள்ல உனக்கு பிடிச்ச குழந்தையா பார்த்து தத்தெடுத்துக்கலாம். இல்ல குழந்தையும் வேணாம் ஒரு மண்ணும் வேணாம்..” என்றான் முடிவாக.
“எவனோ ஒருத்தன் குழந்தை எனக்கு வேணாம்.. எனக்கு உங்க குழந்தைதான் வேணும்.. பெத்து கொடுக்குறவங்களை நீங்க பார்க்க வேணாம்.. யாரையும் கட்டாயப்படுத்தி இதுக்கு சம்மதிக்க வைக்கப்போறதில்ல, இதுக்காக இருக்கிறவங்களை தேடித்தான் ஏற்பாடு செய்யப்போறேன்.. ப்ளீஸ் தேவ்.” என்றாள் கெஞ்சலாக.
மீண்டும் இதையே பேசவும்.. “உயிரோட இருந்தாதான குழந்தை பெத்துக்கனும், வாரிசு வேணும்னு தோணுது?? பேசாம இரண்டு பேரும் செத்து போலாம் வா..” என இழுத்தான் ஆக்ரோசமாக.
“தேவா..” எனப் பதறினார் கற்பகம்.
“நீ ஏன் தேவா சாகனும்? என் தேவாக்கு வாரிசை பெத்துதர முடியாத நான்தான் போகனும்..” என கலங்கினாள் ஷர்மி.
“ஷர்மி..” என தன் கையை சுவற்றில் குத்தியவன்.. “உனக்கு எப்படி தத்தெடுக்கிறது பிடிக்கலயோ அதுமாதிரி இப்படி குழந்தை பெத்துக்க எனக்கு பிடிக்கல ஷர்மி.. சுத்தமா பிடிக்கல.. நம்ம இரண்டு பேருக்கு இடையில் இன்னொரு முகத்தை நன்றியோட கூட என்னால நினைச்சிட்டிருக்க முடியாது.. ப்ளீஸ் என்னை புரிஞ்சிக்கோ..” என்றான் மன்றாடலாக.
“ஆனா எனக்கு நம்ம குழந்தைதான் வேணும்.. இல்ல நான் வாழ்ந்தாலும் செத்ததுக்கு சமம் தேவ்.. இரண்டு நாள் முன்ன அது இன்னும் ஸ்ட்ராங்காயிடுச்சி..” என்றாள் கண்ணீரோடு.
“அப்போ நான் பேசாததை நீ இன்னும் மன்னிக்கல? கொஞ்சம் முன்ன மன்னிச்ச மாதிரி நடிச்சியா? என்கிட்ட உனக்கு நடிக்க கூட வருமா ஷர்மி?” என தேவேஷ் ஊன்றிப் பார்க்க..
“நீ தப்பே செய்யாதபோது நான் எதுக்கு உன்னை மன்னிக்கனும் தேவ்? என் நினைப்பெல்லாம் என் தேவ்வால என்னோட பேசாம இரண்டு நாள் எப்படி இருக்க முடிஞ்சதுன்றதுதான்..” என கதறியவள்.. “இரண்டுநாள் பேசாததுக்கு இத்தனை அழுகையானு உங்களுக்கு எரிச்சலாவோ, சலிப்பாவோ கூட இருக்கலாம்.. ஆனா எனக்கு செத்துடலாம் போல தோணுச்சு தேவ்.. ரொம்ப இன்செக்யூரா ஃபீல் ஆனுச்சி..
இப்போ இரண்டு நாள்ல ஆரம்பிக்கிறது, பின்னாடி இரண்டு வாரம் ஆகலாம், அப்பறம் இரண்டு வருஷமாகலாம்னு இன்னும் என்னென்னவோ தோணுது.. என்னால தாங்கவே முடியல..
உனக்காக இல்லனாலும் எனக்காக.. என் உயிரை பிடிச்சி வைக்க.. உன்னோடான என் வாழ்க்கைக்கு அர்த்தம் கொடுக்க.. நம்ம குழந்தைதான் எனக்கு வேணும்.. நம்ம குழந்தை மட்டும்தான் எனக்கு வேணும்..” என்றவள் குரலில்.. தீர்மானம், கெஞ்சல், மிரட்டல், எச்சரிக்கை என அனைத்தும் நிரம்பியிருந்தது.