மூன்று மாதங்கள் முடிந்திருக்க.. புது வீட்டிற்கு குடியேறியிருந்த மங்கைக்கு அந்த வீட்டு சூழலும், கற்பகத்தின் நட்பும் பிடித்திட.. எங்கும் வேலைக்கு போக பிடிக்காமல் கற்பகத்தோடு பழகுவது, அவரோடு கோவில் சென்று வருவதென ஒருமாதத்தை கடத்தியிருந்தாள்.
மங்கை இங்கே குடிவரும்போது வந்திருந்த தவமணி பத்து நாள் வரை தங்கியிருந்து பின்னே தன் தாய்தந்தையரிம் சென்றுவிட்டார். இங்கிருந்து இருபது நிமிட பயணத்தில் பெரிய தனியார் மருத்துவமணையும், புகழ்பெற்ற சிறப்பு மருத்துவர்களும் அங்கே வேலைசெய்ய, அம்மருத்துவமணையில் வேலைக்கு கேள் என்றார் தவமணி.
அன்னை சொன்னது போல் அங்கு வேலைக்கு கேட்க, மங்கைக்கு வேலையும் கிடைத்தது. ஆனால் வேலைக்கு சேர்ந்த பத்தாவது நாளே அம்மருத்துவமணையில் பணிபுரியும் மருத்துவன் மங்கையிடம் தன் காதலை வெளிப்படுத்த, மங்கை அதனை நிராகரித்தாள்.
அம்மருத்துவன் தொடர்ந்து தொல்லை செய்ய சக ஊழியர்களிடம் இவள் புலம்ப, அப்பொழுதுதான் அவனிற்கு ஏற்கனவே திருமணமானதென்றும், சுமாரான பெண்களிடமே அசடு வழியும் அவன் எங்கே இப்படி பேரழகியை விட்டு வைக்க போறான் என்றும் சொல்ல, அடுத்தநாள் வேலைக்கு செல்லவில்லை மங்கை.
முன்னறிவிப்பின்றி இப்படி விடுமுறை எடுக்கக்கூடாதென மருத்துவமணையிலிருந்து எம்.டி சாட, இனி அங்கு வேலைக்கு வரமாட்டேன் என்றுவிட்டாள்.
“ஏன் வேலைக்கு போகல?” என தவமணி திட்ட “அங்க போக விருப்பமில்லை, இங்க வீட்டிற்கருகே இரண்டு தெரு தள்ளி ஒரு சின்ன கிளினிக் இருக்கு, அங்க கேட்கிறேன்” என்றாள் மங்கை.
“அது குழந்தைகள் நல மருத்துவமணை மட்டும்தான்.. அங்கு பெரிதாய் ஒன்னும் கற்றுக்கொள்ள முடியாது, பெரிய மருத்துவமணையில் சேர்ந்தால்தான் நிறைய கற்றுக்கொள்ள முடியும் என தவமணி திட்ட,
சிறு விசயத்தையெல்லாம் அன்னையிடம் சொல்லி அவர்களின் மன அழுத்தத்தை அதிகப்படுத்த வேணாம் என நினைத்திருந்த மங்கை தற்போது வேறு வழியின்றி மருத்துவமணையில் நடந்ததை சொல்லி, எனக்கு எதையும் கத்துக்க வேணாம், கத்துக்கிட்டதை வச்சி நிம்மதியான வாழ்க்கை வாழ்ந்தால் போதும்..” என அருகிலிருந்த சிறிய மருத்துவமணையில் வேலைக்கு சேர்ந்தாள்.
இதோ வேலைக்கு சேர்ந்தும் ஒரு மாதம் ஆகியிருக்க, அன்னையை வர சொல்லி அடம்பிடித்தாள். தாத்தாக்கு உடம்பு சரியில்லை என தவமணி மறுக்கவே, “ம்மா இன்னைக்குதான் ஃபர்ஸ்ட் சேலரி வாங்கப்போறேன். உனக்கு ட்ரீட் வைக்கனும்.” என்றாள் ஆசையாக.
“தாத்தாக்கு ரொம்ப முடியலடா, என்னால அங்க வரமுடியாது, ட்ரீட்டுக்கான பணத்தை எடுத்து வச்சிடு, தாத்தாக்கு சரியானதும் வரேன், என்ஜாய் பண்ணலாம்.” என்றார் சமாதனமாக.
“ம்..” என்றாள் சுரத்தின்றி.
“அறிவுகிட்ட இனி பணம் அனுப்பாதன்னு சொன்னியாம், எனக்கு போன் செய்து புலம்பறான். எதுக்கு அப்படி சொன்ன? நீ வாங்குற சேலரி வாடகை அது இதுன்னு எல்லாத்துக்கும் எப்படி பத்தும்?” என்றார் அதட்டலாக.
“வாடகை ஐய்யாயிரம் ரூபாதான? என் சேலரி எட்டாயிரம்.. என் ஒருத்தி சாப்பிட மாசம் மூவாயிரம் போதும்.. பத்தலைன்னா கேட்டுக்கிறேன்னு சொன்னேன்.. ஆனா எங்க கேட்டான்? டுவன்டி தௌசன் போட்டு விட்டுருக்கான்.” என்றாள் கோபமாக.
“அங்க தனியா இருக்க.. எதாவது எமர்ஜன்சினா யார்கிட்ட போய் கேட்ப?” என அதட்டி, “இன்னும் கொஞ்சநாள்தான? உனக்கு கல்யாணமாகிட்டா போடமாட்டான்.” என்றார்.
“ம்..ம்.. அப்படியே நைசா ஆரம்பிக்காதிங்க, இப்போதான் சம்பாதிக்க ஆரம்பிச்சிருக்கேன், எனக்குனு கொஞ்சம் சேர்த்து வச்சிகிக்கிட்டு, அப்பா சொத்தை யோசிக்காம என் சேலரிக்கு யார் ஓ.கே சொல்றாங்களோ அவங்களைத்தான் கல்யாணம் செய்துக்குவேன்.” என்றாள் திடமாக.
“உங்கப்பா சொத்தை சொல்லவேணாம் சொல்றது ஓ.கே.. ஆனா உனக்குனு சேர்த்து வச்சதுக்கப்புறம்தான் கல்யாணம்லாம் நீ சொல்லக்கூடாது, நீ சொன்ன மாதிரி உன் தகுதிக்கு ஓ.கே சொல்ற மாப்பிள்ளை வந்தா உடனே கல்யாணம் செய்தாகனும்..” என்றார் கண்டிப்போடு.
“ம் அப்பப்போ வருவாங்கமா, வரும்போதெல்லாம் அவங்க மருமகள் கவலைப் பத்திதான் புலம்புவாங்க, என் மகன் குழந்தை வேற பொண்ணு வயித்துல பிறந்தா அந்த பொண்ணோட ஜாடையேது குழந்தைக்கு வந்திடுமானு ஸரோகேஸி பத்தி நிறைய கேட்பாங்க, ரொம்ப நல்லவங்கமா.. நீ மாமியார் ஆனாலும் ஆன்ட்டி மாதிரியே இரும்மா..” என்றாள் பெருமையாக.
“ம்க்கூம்.. அந்த கொடுப்பினைலாம் எனக்கில்ல, உங்கண்ணனும் அங்க விட்டு எங்க இங்க வரமாட்டான், உன்னையும், அம்மாப்பாவையும் விட்டுட்டு அவனோட என்னாலயும் போக முடியாது.” என்றார் ஏக்கமாக.
“கல்யாணத்துக்கப்புறம் இங்கையே வேலை பார்த்துக்க சொல்லுமா.” என சமாதனம் செய்து இணைப்பை துண்டித்து வேலைக்கு செல்ல ஆயத்தமானாள்.
மங்கை வேலைக்கு செல்லும் மருத்துவமணை மிகச் சிறியது, ஒரு வருடம் முன்புதான் ஆரம்பித்திருந்தார்கள். இரண்டு டாக்டர்கள், மங்கையோடு சேர்த்து நான்கு செவிலியர்கள், என அங்கு மொத்தமாக இருபதுபேர் மட்டுமே வேலை செய்கின்றனர்.
அதிக கூட்டம் இல்லாமல் ஓரளவிற்கு பிஸியாக இருந்த மருத்துவமணை, தற்போது டாக்டர் செவிலியர்களின் கனிவான கவனிப்பிற்காகவும், குறைந்த கட்டணத்திற்காகவும் அதிகம் வர ஆரம்பித்தனர்.
கற்பகம் குழந்தையின்மைப் பற்றி அடிக்கடி வருந்துவதால் குழந்தையின்மை எத்தனை மனஅழுத்தத்தை உண்டாக்கும் என அறிந்திருந்தாதாலும், இங்கு வரும் குழந்தைகளிடமும், பெற்றோரிடமும் மிகவும் கனிவாக நடந்துகொள்வாள் மங்கை.
வீட்டிற்கு சென்றாலும் தனிமைதானே என அதிகம் மருத்துவமணையில்தான் இருப்பாள். மங்கையின் தன்னலமற்ற சேவை மருத்துவர்களுக்கும் பிடித்திருக்க, இரவு நேரங்களை விட பகலில் மங்கையின் சேவை அதிகம் தேவைப்படவும், மங்கைக்கு இரவில் ஓய்வு கொடுத்து காலை எட்டு மணிமுதல் மதியம் இரண்டு மணிவரையும், மாலை நான்கு மணிமுதல் இரவு ஒன்பது மணிவரையுமான பணிநேரத்தை ஒதுக்கி வேலைக்கு சேர்ந்த இரண்டாம் மாதத்திலேயே எட்டாயிரம் ஊதியத்தை பத்தாயிரமாக அதிகரித்திருந்தனர்.
மருத்துவர்களின் கண்ணியமான நடத்தை மங்கைக்கும் பிடித்திருக்க.. பணியை விரும்பி செய்தாள். தந்தையால் கிடைத்த கசப்பான அனுபங்களை மறக்க ஆரம்பித்தாள்.
பனிரெண்டாம் வகுப்பு வரையான படிப்பு தந்தை கொடுத்ததானாலும்.. கடந்த நான்கு வருடங்களாக மங்கையின் படிப்பிற்கு அவளின் அண்ணன்தான் பணம் அனுப்பினான்.
தன்னை மாற்றிக்கொள்ள விலையுயர்ந்த உடையணிவதை சுலபமாய் தவிர்த்தாள்தான்.. ஆனால் விபரமறிந்ததிலிருந்து செல்வ செழிப்பில் வளர்ந்தவளாதலால் ருசியாக உண்டு பழகியிருக்க மங்கையால் உண்பதில் எளிமையை கடைபிடிக்கமுடியவில்லை.
சொந்த சம்பாத்தியம் கொடுத்த சந்தோசத்தில் பணம் வேணாம் என்கிறாள் என உணர்ந்தபோதும், தங்கை வகையாய் உண்பாள் என்பதற்காகவே மங்கையின் பேச்சை கேளாமல் பணம் போட்டிருந்தான் அறிவுக்கரசு.
இதோ வேலைக்கு சேர்ந்து இரண்டாம் மாதம் முடிந்திருக்க, பணம் வேணாம் என சொன்னவள், தன் சம்பளத்தோடு, அண்ணன் அனுப்பிய இருபதாயிரத்தையும் சேர்த்து இரண்டாயிரம் மட்டுமே மீதம் வைத்திருந்தாள்.
தவமணி தந்தையின் உடல்நலம் நன்றாக தேறியிருக்க இரண்டு மாதம் கழித்து மகளைக் காண வந்திருந்தார். மங்கை மருத்துவமணையில் இருக்க கற்பகத்திற்கு அழைத்து வீட்டின் சாவி வாங்க வருவதாக சொல்ல, “நானே எடுத்து வருகிறேன்.” என கற்பகம் வந்தார்.
“வாங்க, வாங்க நல்லாயிருக்கிங்களா?” என விசாரித்தபடி வீட்டை திறக்கவும்.. “இப்போ கொஞ்சம் நிம்மதியாத்தான் இருக்கேன், என் மகன் குழந்தை என்னைக்கு என் கைக்கு வருதோ அன்னைக்குத்தான் முழு நிம்மதி.” என்றார் பெரும் கவலையாக.
தவமணி.. “கவலைப்படாதிங்க. எல்லாம் நல்லபடியா நடக்கும்..” எனத்தேற்றி, தன்னை சுத்தம் செய்து வந்து மகளுக்காக எடுத்து வந்த மீன் குழம்பை எடுத்து வெளியே வைத்து, “கொஞ்சம் இருங்க, இன்னும் ஒரு மணிநேரத்துல மங்கை சாப்பிட வந்திடுவா, சாதம் வச்சிட்டு வரேன்.” என சமையலறை புகுந்து குக்கரில் அரிசி வைத்து, பாலை காய்ச்சியவர் கற்பகத்திற்கும் தனக்கும் சேர்த்து காபி கலந்து வந்தார்.
பிறகு காபி குடித்துக்கொண்டு கருவளர்ச்சி பற்றி கேட்கவும்.. அதுபற்றி பெரிதாய் கற்பகத்திற்கு தெரியவில்லை என அவரின் பேச்சில் புரிய.. ஸரோகேஸி குறித்து அவரின் பொதுவான பயங்களை போக்கி தெளிவுபடுத்திக்கொண்டிருந்தார்.
பிறகு மங்கை வரவும்.. “ம்மா..” என கட்டிக்கொண்டவள்.. கற்பகத்திடம்.. “ஆன்ட்டி அம்மா சமையல் செமையா இருக்கும், வாங்க சாப்பிடலாம்.” என தன்னை சுத்தம் செய்து சாப்பிட அமர்ந்தாள் ஆர்வமாக.
“நான் இப்போதான்ம்மா சாப்பிட்டேன், நீ சாப்பிடு.” என்க.. கற்பகம் இதுவரை இங்கு சாப்பிட்டதில்லை என்பதால், மேற்கொண்டு வற்புறுத்தாமல் சாப்பிடலானாள்.
பத்து நிமிடத்தில் சாப்பிட்டு முடித்தவள்.. “ம்மா ஒரு டென் மினிட்ஸ்..” என அங்கிருந்த சோபாவில் படுத்து கண்மூடினாள்.
கற்பகத்திடம்.. “நான்வெஜ் சாப்பிட்டா மட்டும் குட்டி தூக்கம் போடாம இருக்கமாட்டா..” என மகளின் தலைகோத.. மங்கை உறங்கிய பின்னே.. “என் ஃபிரண்டோட மகனுக்குதான் மங்கையை கொடுக்க கேட்டிருந்தேன்.. ஒரு டாக்டர் எப்படி நர்ஸை கட்டிக்க சம்மதிப்பாங்கனு என் பொண்ணு அப்பவே சொன்னா..
என் ஃபிரண்டு அவ மகனுக்கு பேசி புரிய வைப்பானு நம்பிக்கையா சொன்னேன்.. ஆனா கடைசியா என்ன ஆச்சு தெரியுங்களா? அந்த டாக்டர் பையனுக்கு மங்கை போட்டோவைப் பார்த்ததுமே ரொம்ப பிடிச்சிடுச்சி, ஆனா என் ஃப்ரண்ட்தான் ஒத்துக்கல..
என் பொண்ணுக்கென்ன குறைனு அவகிட்ட கேட்டேன், உன் புருசனுக்கு பொறந்திருக்காளே.. அந்த ஒன்னு போதாதானு சொல்லிட்டா, போலீஸ்காரனுக்கு பொண்ணு கொடுக்கக்கூடாதுனு சொல்வாங்க.. அது ஏன்னு உன் புருசனைப் பார்த்துதான் தெரிஞ்சிக்கிட்டோம், அவன் செய்த பாவத்தை என் மகனுக்கு கட்டி வச்சி உங்க பாவத்தை பங்குபோட நான் தயாரா இல்லன்னுட்டா..
ஹும்.. எல்லாம் நான் வாங்கிய வரம்..” என தவமணி கண்கலங்க.. “ஹே.. நான் சொன்னது நடந்துச்சா.. நடந்துச்சா..” என சிரிப்போடு எழுந்தாள் மங்கை.
“தூங்கறமாதிரி நடிச்சிட்டிருந்தியா?” என தவமணி முறைக்க, “ஃபுல்லா சாப்பிடவும தூக்கம் வந்ததுதான்.. நீ பேச ஆரம்பிச்ச டாப்பிக் தூக்கத்தை கலைச்சி விட்டுடுச்சி.. ஷப்பா.. இனி இந்த கல்யாண பேச்சுலயிருந்து கொஞ்ச நாளைக்கு நான் எஸ்கேப்..” என கண்ணிமைத்தாள் சந்தோசமாக.
“அவ வேணாம்னு சொன்னா நாட்டுல வேற மாப்பிள்ளையே இல்லையா? என் பொண்ணை வேணாம்னு சொன்னவ ஏண்டா இந்த இடத்தை விட்டோம்னு நினைக்கிற அளவுக்கு நீ வாழ்ந்து காட்டனும்.. உனக்கேத்த பையனை சீக்கிரம் தேடி பிடிக்கிறேன்..” என்றார் கோபமாக.
“இந்த நா…ள்.. உன் காலண்டர்ல குறிச்சி வச்சிக்கோ மொமண்ட்ம்மா..” என்றாள் கிண்டலாக.
தவமணி முகம் வாடவே.. “சரி சரி.. உனக்கு பசிக்கும் சாப்பிடு.” என்றாள். தான் இருப்பதால் சாப்பிட தயங்குகிறார் என.. “சாயங்காலம் வரேனுங்க.” என கிளம்பினார் கற்பகம்.
பிறகு தவமணி சாப்பிட்டு முடிக்க, அறிவு அழைக்கவும் அழைப்பை ஏற்றவள்.. “டேய், இந்த நேரம் அங்க மிட்நைட்தான? இந்நேரத்துக்கு தூங்காம என்ன செய்யிற? அங்கையே யாரையாவது லவ் பண்ணி கூட்டிட்டு வந்திடாத, ஃபாரின்காரிலாம் உனக்கு செட்டாகமாட்டாங்க..” என அண்ணனை கிண்டலடிக்க, “ஏய் குடுடி..” என போனை பறித்தார் தவமணி.
மழை வருவது போலிருக்க வெளியே காயும் துணிகளை எடுக்க வந்தவள் கண்ணில் ஷர்மி படவே.. “ஏங்க.. அக்கா.. பார்த்து வாங்க, பள்ளத்துல விழுந்துடாதிங்க..” என கத்தினாள் மங்கை.
அத்தெரு முழுதும் மின்சார வாரியத்தினர் பள்ளம் தோண்டி வைத்திருக்க, அதை ஒட்டியபடி சிந்தனையின்றி கலங்கிய கண்களோடு எதோபோல் நடந்து வந்துகொண்டிருந்தாள் ஷர்மிளா.
ஷர்மியின் காதில் மங்கை கத்தியது கேட்டதற்கான அறிகுறி இல்லாமல் போகவே.. “பள்ளத்துல விழந்துடப் போறிங்க..” என வேகமாய் ஓடியவள் ஷர்மிளாவின் கையைப் பிடித்ததும்.. தன்ணுணர்விற்கு வந்தவள்.. “விடுப்பா நான் பார்த்துக்கிறேன்..” என கையை உருவ முற்பட்டாள்.
“ஆன்ட்டி இப்போதான் எங்கையோ வெளில போனாங்க, நீங்க இந்த டைம்க்கு வருவிங்கனு தெரியல போல, வீடு பூட்டியிருக்கு, ஆன்ட்டி வரும்வரை எங்க வீட்டுக்கு வாங்க..” என தன் வீட்டிற்கு அழைத்து வந்தாள்.