ஐ.வி.எஃப் முறைக்கு தேவேஷ் சம்மதிக்கமாட்டான் எனத் தோன்ற, அன்னை வீட்டிற்கு சென்று கொஞ்ச நாள் இருந்துட்டு வரேன் என தாய் வீடு கிளம்பியிருந்தாள் ஷர்மிளா.
இரண்டொரு நாளில் திரும்பி வந்திடுவாள் என நினைத்த தேவேஷை மட்டுமல்லாது கற்பகத்தையும் சேர்த்தே ஏமாற்றியிருந்தாள் ஷர்மிளா.
ஷர்மிளா சென்று ஒருவாரம் முடிந்திருக்க, “தேவா.. போய் ஷர்மிளாவை கூட்டிட்டு வா, இல்ல நல்லாயிருக்காளானு பார்த்துட்டு வா.” என்றார் கற்பகம்.
திருமணமானதிலிருந்து இதுவரை இப்படி சென்று தங்கியிராத ஷர்மிளா தற்போது இப்படி இருக்கவும், “விடும்மா, கொஞ்ச நாள் இருந்துட்டு வரட்டும், அப்போவாவது இந்த குழந்தை விசயத்தை மறக்கறாளா பார்க்கலாம்.” என்றான்.
இரண்டு வாரம் முடிந்திருக்க, ஷர்மிளா வரவில்லையென்றதும்.. அன்று அவளிற்கு அழைத்து “வேலை முடித்து உன்னை பார்க்க வரேன்.” என்றான்.
வரேன் என்பவனை வேணாம் என சொல்ல மனமில்லாதவளாய்.. “சரிங்க தேவ்.” என்றாள். அன்று மாலை தேவேஷ் வரவும்.. இதுவரை மருமகனிடம் நேரடியாக பேசியிராத ஷர்மிளாவின் அம்மா இம்முறை.. “வாங்க மாப்பிள்ளை..” என வரவேற்றார்.
“ம்..” என உள்ளே வந்தவன் அங்கிருந்த சோபாவில் அமரப்போக.. “வாங்க தேவ்.” என அறையிலிருந்த ஷர்மிளா வரவேற்றாள்.
தேவேஷ் ஷர்மியிருந்த அறைக்குள் செல்ல.. இரண்டு வாரம் பார்க்காத தவிப்பில் இறுக அணைத்தான் மனைவியை. “தேவ்.. கதவு திறந்திருக்கு.” என்று நெளிய.. காதலிக்கும் காலத்திலேயே ஒருநாள் பார்க்க முடியாமல் போனதற்கு ஷர்மி போட்ட சண்டைக்கு பிறகு எத்தனை காரணம் இருந்தாலும் தினமும் அரைமணிநேரமாவது சந்திக்காமல் இருக்கமாட்டான்.
அன்றிலிருந்து கடந்த இரண்டு வாரம் முன்பு வரை தன்னை பாராமல் ஒருநாளும் இருந்திராதவள்.. இப்போது பதினைந்து நாள் பிரிவையும் தாண்டி தன் அணைப்பை தவிர்க்கிறாள் என்றதும் அதிலேயே அவளின் மனநிலை தெரிந்து தானே விடுவித்தான் மனைவியை.
“ம்.. ரொம்ப நிம்மதியா இருக்க போல.” என்றான் முக வாட்டமாக.
“ச்ச.. ச்ச.. அப்படியில்ல தேவ்.. இன்னும் இரண்டு நாள்ல யு.எஸ்லயிருந்து தம்பி வரான், அவனுக்கு பொண்ணு பார்க்க நானும் கூட இருந்த பரவால்லனு அம்மா நினைக்கிறாங்க..” என தம்பி வரப்போகிறான் என்ற உண்மையோடு பொண்ணு பார்க்க சொல்வது என்ற பொய்யை சொல்லி, “அதோட எனக்கும் கொஞ்சம் தனிமை தேவைப்படுது.” என்றாள் தடுமாற்றமாக.
“ஓ.. தனிமை வேணுமா? அப்போ நான் கிளம்பறேன்.” என தேவேஷ் வெளியேற எத்தணிக்க.. “தேவ்.. என்னை மன்னிச்சிடுங்க..” என அவனின் கைப்பிடித்து நிறுத்த.. “ம் சரி மன்னிச்சிட்டேன்..” என்றான் இயந்திரகதியாக.
“தேவ்.. குழந்தை இல்லாத வலியிலயிருந்து கொஞ்சம் வெளியவர எனக்கு டைம் தேவைப்படுது..” என்றாள் தலைகுனிந்து.
“குழந்தையில்லன்ற உன்னோட வருத்தத்தை ஒத்துக்கிறேன், அதுக்காக நம்ம வீட்ல ஸ்ட்ரெஸ் ஆகுதுன்றதையும், இங்க ரிலீஃப் ஆகுதுன்றதையும் நீ எப்படி சொன்னாலும் என்னால நம்பமுடியாது, என்னை விட்டு பிரிஞ்சிருக்குறதுல என்னை விட நீதாண்டி ஸ்ட்ரெஸ்ஸாகுவ.” எனக்கடிந்து கிளம்பப்பார்க்க.. “தேவ்..” என்றாள் கலக்கமாக.
எதுவுமே நிரந்தரம் கிடையாது, நமக்கானது என்னைக்கானாலும் நம்மை தேடி வரும். நிச்சயம் உன்னால இங்க நிம்மதியா இருக்க முடியாது, ரொம்ப கஷ்டப்படுத்திக்காம சீக்கிரம் என்கிட்ட வந்துடு..” என்று வெளியேறினான்.
“தேவ்..” என ஷர்மிளா பின்னோடு வர, “சாப்பிட வாங்க தம்பி.” என ஷர்மிளாவின் அன்னை தண்ணீர் சொம்பை நீட்ட, “இல்ல பரவால்லைங்க.. நான் கிளம்பறேன்.” என கிளம்பினான்.
*** ***** ****
வீட்டை விட்டு ஷர்மிளா சென்று இரண்டு மாதங்கள் ஆகியிருக்க, மனைவியை பிரிந்த மகனின் வாட்ட முகம் தாளாமல் தேவேஷோடு சேர்ந்து கற்பகமும் வெகுவாய் சோர்ந்து போனார்.
திருமணமானதிலிருந்து இப்படி நீண்ட நாட்கள் ஷர்மி எப்பொழுதும் தங்கியிராததால் கற்பகத்திற்கு மருமகளோடு போனில் பேசும் நிலை வந்ததில்லை. முதல் முறையாக மருமகளிற்கு அழைத்தார்.
ஷர்மிளா அன்னை வீட்டிற்கு எதன் காரணமாக வந்தாளோ அந்த வேலை முடிந்து பத்து நாட்களாகியிருக்க, எப்போது நம் வீட்டிற்கு செல்லலாம்? தேவ்விடம் இவ்விசயத்தை எப்படி ஆரம்பிப்பது? தேவ் என்ன சொல்வாரோ என பல யோசனையிலிருந்தவளிற்கு.. என்றும் தன்னோடு போனில் பேசியிராத மாமியார், தற்போது காலை ஏழு மணிக்கெல்லாம் அழைத்திடவும், தேவ்வை பிரிந்திருக்கும் ஏக்கத்தோடு கற்பகத்தின் பாசம் மனதை அசைக்க.. “நாளைக்கு வந்துடறேன்.” என்றாள்.
மருமகளின் பதில் சந்தோசம் தர.. “அதென்ன நாளைக்கு? இன்னைக்கு வந்தா ஆகாதா?” என்றார் வழக்கமான கோபத்தோடு.
“சரி இப்பவே கிளம்பறேன்.” என்றவள் இணைப்பை துண்டித்து.. “ம்மா.. நான் எங்க வீட்டுக்கு கிளம்பறேன்..” என்று கிளம்ப ஆயத்தமானாள்.
ஷர்மியின் அன்னை.. “ஷர்மி.. உன்ன கல்யாணம் செய்துக்கும்போது இப்படி என் லட்டு பிள்ளையை தட்டிட்டு போய்ட்டானேன்னு மருமகனை ரொம்ப தப்பா நினைச்சேன்.. ஆனா உன் குறையை ஒரு விசயமாவே நினைக்காம இத்தனை தாங்குற மாப்பிள்ளை கிடைக்க கொடுத்து வச்சிருக்கனும்னு இப்போ ரொம்ப பெருமையா இருக்கு..
ஒரு அம்மாவா உன்னை கெஞ்சி கேட்டுக்கிறேன்.. இப்போ மாப்பிள்ளைக்கு தெரியாம செய்ததை போல இனி செய்யாத.. எதுனாலும் அவர் சொல்றதை கேளு..” என்றார் வேண்டுதலாக.
உனக்கு என்னையும் தம்பியையும் போல என் தேவ்க்காக அவர் வாரிசு வேணாமா? ம்ஹும்.. ஈஸியா குழந்தை கிடைச்ச உனக்கெல்லாம் என் வேதனைப் புரியாது என உள்ளுக்குள் நினைத்தவாறு.. அமைதியான பார்வை பார்த்தவள்.. “சரிம்மா நான் கிளம்பறேன்.” என கால் டாக்ஸிக்கு அழைத்து காத்திருந்தாள்.
ஷர்மிளா.. தன் அன்னையிடமும் ஸரோகேஸி முறையில் மீண்டும் ஒரு முயற்சி என்றுதான் சொல்லியிருந்தாளே தவிர.. வேறொரு பெண்ணின் சினைமுட்டை தானம் மூலம் குழந்தை என்றெல்லாம் சொல்லவில்லை. அதுவும் இம்முறை மருமகனிற்கு தெரியாமல் செய்வது ஷர்மிளா அன்னைக்கு வருத்தத்தை தர, மருமகன் இதை எப்படி எடுப்பாரோ என்ற பதட்டத்தில் இருந்தார்.
டாக்ஸி வரவும்.. “ஷர்மி.. மாப்பிள்ளைக்கு நிதானமா எடுத்து சொல்லு.. அவர் கோபப்பட்டாலும் நீ கொஞ்சம் தணிஞ்சி போ.” என எடுத்துரைத்து மகளை வழியனுப்பினார்.
*** *** **** *****
காலை ஒன்பது மணிபோல் வீட்டிற்கு வந்தாள் ஷர்மிளா. “வா.. வா..” என ஆவலாய் வரவேற்ற கற்பகம்.. “கூப்பிட்டாத்தான் வருவனு தெரிஞ்சிருந்தா நீ போன இரண்டு நாளுக்குள்ள கூப்பிட்டிருப்பேன்.. இப்படியா போய் ஒரேடியா தங்குவ?” என்றார் சிறு கோபத்தோடு.
கோபமாக கேட்டாலும் கற்பகத்தின் பாசம் அவரின் கண்ணில் தெரிய.. வாரிசு வேணும் என்பது இத்தனை நாள் தேவ்விற்காக மட்டும் என நினைத்தவளுக்கு, தற்போது இவர்களுக்காகவும் நாம் செய்ய நினைத்ததில் தவறே இல்லை என இன்னும் தெளிவானாள் ஷர்மிளா.
கார் வெளியே இருக்கவும் இன்னும் தேவ் கிளம்பவில்லை எனப்புரிய, தன் வருகையை சொல்லியிருப்பார்கள் என நினைத்து.. “அவரை பார்த்துட்டு வரேன்..” என தனதறைக்குள் நுழைந்தாள்.
“வா..” என்றான்.
“அவ்வளோதானா நான்?” என அருகே நெருங்க.. “நீதான உங்கம்மா வீட்டுல விலகுன? என்னை மறுக்குற அளவுக்கு பிரச்சனை இருக்கும்போது அது சரியாகிடுச்சா இல்லையானு தெரியாம என்ன வேற என்ன செய்ய சொல்ற?” என்றான் தளர்வாக.
“தேவ்..” என அணைத்தாள் தவிப்பாக.
இங்கிருந்து கிளம்பும்போதிருந்த ஷர்மியின் முகத்தைவிட தற்போதிருக்கும் ஷர்மியின் முகம் சற்று தெளிவையும், குழந்தையில்லை என்ற வேதனையை மறந்தவளாகவும் காட்ட அதில் நிம்மதியடைந்து.. தானும் அணைத்து இன்னைக்கு லீவ் போட்டுட்டேன்.. நீயும் போட்டுடு..” என்றான்.
கணவன் அணைப்பு உணர்த்துவது எதை எனப்புரிந்த போதும்.. இனியும் உண்மை சொல்லாமல் இணங்க முடியாது என மனம் எடுத்துரைக்க.. மெல்ல விலக முயன்றாள்.
ஷர்மி விலகுவது புரிய.. இரண்டு மாதமாய் தவிக்கவிட்ட கோபம் மேலோங்க.. விலகமுடியா வண்ணம் இன்னும் சேர்த்தணைத்தான். “உங்ககிட்ட பேசனும் தேவ்.” என்றாள் சன்னக்குரலில்.
குழந்தைப் பற்றி கடந்த இரண்டு வருடங்களாக எத்தனை மனக்கசப்பு வந்தபோதும் எதற்காகவும் தன்னை மறுக்காத மனைவி தற்போது இரண்டு மாத பிரிவிற்கு பிறகும் மறுக்கவே.. “இப்போலாம் உனக்கு என்னை விட மத்த எல்லாமும் முக்கியமா ஆகிடுச்சில்ல?” என கடிந்து விலகி கட்டிலில் அமர்ந்தான் கோபத்தோடு.
கதவை தாழிட்டு.. “தேவ்..” என கணவனை நெருங்க.. தன்னிடமிருந்து அவளை விலக்கியவன்.. “முதல்ல என்ன பேசனுமோ பேசிடு ஷர்மி..” என்றான் வரவழைத்த இயல்போடு.
எப்படி ஆரம்பிப்பது எனப்புரியாமல்.. “தேவ்..” என்ற வார்த்தையோடு ஷர்மி தயங்க..
“காட்.. குழந்தை.. குழந்தை.. குழந்தை..” என ஆத்திரமாய் கத்த, ஷர்மியின் கண்கள் குளம் கட்டவே.. அதில் தன்னை சமன் செய்தவன்.. “அதுக்கான முயற்சி எல்லாமும்தான் எடுதாச்சே ஷர்மி.. இன்னும் என்னதான் செய்யிறது? எந்த நேரமும் இதையே நினைச்சிட்டிருப்பியா?” என்றான் வேதனையாக.
“ஆமாம் தேவ்.. என்னால இதுலயிருந்து மீளமுடியல, என்னால என் தேவ்க்கு வாரிசில்லாம ஆகிடக்கூடாது.. அதனால..” என இவள் நிறுத்த..
குழந்தை தத்தெடுக்க முடிவெடுத்திருக்கிறாளோ என சிறு நம்பிக்கை தோன்ற.. “அதனால..?” என்றான் ஆவலாக.
“அதனால..” என ஓவம் டொனேட் பற்றி சொல்ல வந்தவளுக்கு, தேவ் என்ன சொல்வானோ என்ற தயக்கம் உண்டாக.. தத்தெடுப்பதை முன்பு வேண்டாம் என சொன்னவளுக்கு தற்போது விருப்பம் வந்திருக்குமோ? சொல்ல தயங்குகிறாளோ என.. “குழந்தை தத்தெடுத்துக்கலாமா ஷர்மி..?” என்றான் சந்தோசமாக.
தத்தெடுப்பது என்ற வார்த்தை வந்த நொடி சிறிதும் தாமதியாமல்.. “இல்ல.. எனக்கு என் தேவ் குழந்தைதான் வேணும்..” என்றாள் பிடிவாதமாக.
“ப்ச்.. ஷர்மி.. நம்ம ப்ராப்லம் என்னனு டாக்டர் தெளிவா சொன்னதுக்கப்புறமும் இது என்ன பேச்சு? நீ என்ன சின்ன குழந்தையா?” என்றான் சலிப்பாக.
“ப்ராப்லம் நமக்கு இல்ல, எனக்கு மட்டும்தான்…” என திருத்தியவள்.. “வேற ஆப்ஷன் இருக்கு தேவ்.” என்றாள் ஆர்வமாக.
“அது.. எக் டொனேட்..” என்றதும்.. “ஷர்மி..” என கத்தினான் ஆத்திரமாக.
“தேவ்.. நான் சொல்றதை கொஞ்சம் பொறுமையா கேளுங்க.” என ஷர்மிளா கெஞ்ச.. வந்ததும் சண்டையா என்ற பதட்டத்தோடு அறையருகே வந்த கற்பகம்.. “தேவா..” என குரல்கொடுத்தார்.
கற்பகத்தின் குரல் இருவருக்கும் கேளாமல் போக.. “எனக்கு உன் குழந்தை வேணும் தேவ்.” என்றாள் பாவமாக.
“நம்ம குழந்தைன்றது மாறி, இப்போ என் குழந்தையாகிடுச்சி பார்த்தியா? நீ யோசிக்கிறது எவ்வளோ பெரிய முட்டாள்தனம்னு இதுலயே தெரியலையா?” என்றான் உள்ளடக்கிய ஆத்திரத்தோடு.
“நம்ம குழந்தை, என் குழந்தைனு என்ன பேச்சு பேசறான்? என புரியாமல் விழித்தவர்.. ஒருவேளை குழந்தைக்காக இவளே வேற கல்யாணம் செய்துக்க கேட்பாளோ என யோசிக்க, இவ பக்கத்துல இல்லாததுக்கே என் மகன் பட்ட அவஸ்த்தை போதாதா? தேவா பத்தி கொஞ்சமும் நினைக்காம கண்டதையும் யோசிக்கிறாளே எனப்பதறி.. “தேவா” என இன்னும் சற்று குரல் உயர்த்தினார் கற்பகம்.
உள்ளே நுழைந்தவர்.. “சண்டை வந்தா கூட என்னனு கேட்கக்கூடாதா? அப்போ நான் எதுக்கு இங்க?” என்றார் ஆற்றாமையாக.
“சண்டை எங்க ரூம்க்குள்ளதான நடக்குது? ஹாலுக்கு வரும்போது நீ பேசு, இப்போ எதாவது வேலையிருந்தா அதைப்போய் பாரும்மா..” என்றான் கற்பகம் முகம் பாராமல்.
“தேவ்.” என ஷர்மிளா பதற.. கலங்கிய கண்களோடு கற்பகம் வெளியேற.. “பாவம்.. அவங்க என்ன செய்வாங்க? ஏன் தேவ் இப்படி?” என தலையில் கைவைத்தாள் தளர்வாக.
அன்னையை அவமானப்படுத்தியது தேவேஷிற்கும் வேதனைதான் என்றாலும், இவளின் எண்ணம் புரிந்தால் இன்னும் வேதனையடைவார் என்பதால் கற்பகத்தை வெளியேற்ற இவ்வாறு பேசினான்.
“நான் கோவில்க்கு போய் வரேன்.” என குரல் கொடுத்து கற்பகம் வெளியேற.. ஹாலில் வந்தமர்ந்தான் இறுகிய முகத்தோடு.