“தேவ்.” என ஷர்மிளா அருகே வரவும்.. பொறுமையை இழுத்துப்பிடித்தவன்.. “இந்த எக் டொனேட் முறையெல்லாம் வேணாம் ஷர்மி.. எனக்கு சுத்தமா பிடிக்கல” என்றான் முடிவாக.
“இனி வேணாம் சொல்ல முடியாது தேவ்.” என்றாள் தேவேஷின் கைப்பிடித்து.
தேவேஷ் ஊன்றிப்பார்க்கவும்.. தலைகவிழ்ந்தவள்.. “எக் டொனேட் பண்ணிட்டாங்க.. எம்ரியோ சக்ஸ்ஸ்ஃபுலா வளர்ந்து ஸரோகேஸி யூட்ரஸ்ல உங்க குழந்தை வளர ஆரம்பிச்சாச்சு.” என்றாள்.
“ஷர்மி..” என அதிர்ந்தவன்.. “என்ன பேசுற? கனவு கண்டியா? நானில்லாம எப்படி இது சாத்தியம்?” என்றான் நம்பமுடியாமல்.
“நீங்க முன்ன கொடுத்த ஸ்போர்ம் வச்சு செய்தாங்க. உங்களுக்கு வேலையிருக்குறதா சொல்லி உங்க கையெழுத்தும் நானே போட்டுட்டேன்.. டாக்டர் முன்னவே பழக்கம்ன்றதால நான் சொன்னதும் அக்ஸப்ட் பண்ணிட்டாங்க..” என்றாள் பயத்தோடு.
ஷர்மியை அடிக்க கை ஓங்கிய கையை சோபாவில் குத்தியவன்.. முன்பு சென்ற மருத்துவமணைக்கு போன் செய்தான். “வேணாம் தேவ்.” என அவனின் மொபைலை பிடுங்கியவள்.. “வேணாம்னு மட்டும் சொல்லிடாதிங்க.. எல்லா ப்ராஸசும் முடிஞ்சி கரு நல்லபடியா வளர ஆரம்பிச்சாச்சு. இனி வேணாம் சொன்னா அது ஸரோகேஸிக்கு ரொம்ப கஷ்டமாகிடும்..” என்றாள் மன்றாடலாக.
ஷர்மி இப்படி செய்வாள் என சுத்தமாய் எதிர்பார்க்கவில்லை தேவேஷ். என்னதான் ஷர்மிளா சொன்னாலும் தன் சம்மதமில்லாமல் இது சாத்தியமா என்று தேவாவால் கூட இன்னும் நம்பமுடியவில்லை. தலையைப் பிடித்து அமர்ந்தவன் சில நிமிடத்திலேயே தனதறைக்குள் புகுந்து மாற்றுடை அணிய ஆரம்பிக்கவும்.. “ஹாஸ்பிட்டலுக்கா தேவ்?” எனப் பதறினாள்.
“எங்கையோ போறேன். இனி எல்லாமும் உன்கிட்ட சொல்லிட்டுதான் செய்யனும்ன்ற அவசியம் எனக்கும் இல்ல..” என கோபமாய் கத்தி கிளம்பினான்.
“சொல்லியிருந்தா நீ சம்மதிக்கமாட்ட தேவ்.” என ஷர்மிளா பின்னோட போக.. அவளை அடிக்க முடியாத கோபத்தில் பைக்கை உதைத்து கிளப்பி மருத்துவமணைக்கு கிளம்பினான்.
கோவிலுக்கு சென்ற கற்கத்திற்கு மனம் வீட்டிலேயே சுழல அரைமணி நேரத்தில் வீட்டிற்கு வந்தார். கதவு திறந்திருக்க பெருத்த அமைதி நிலவவும் பதறியவராய்.. “தேவா.. சர்மிளா..” என உள்ளே நுழைந்தார்.
இவரின் பதட்டக் குரலுக்கு வெளியே வந்த ஷர்மிளா.. “அவங்க வெளில கிளம்பியிருக்காங்க.. மதியம் வந்துடுவாங்க..” என்றாள்.
“சாப்பிட்டானா? நீ சாப்பிட்டியா?” என்க.. “அவர் இன்னும் சாப்பிடலையா?”
“இல்ல, நீ வரன்னு சொல்லவும், இன்னைக்கு வீட்டுலதான் இருப்பேன். ஷர்மி வந்ததுக்கப்புறம் சாப்பிட்டுக்கிறேனு சொன்னான், இப்போ சாப்பிடாம கூட எங்க போய்ட்டான்?” என்றார் கவலையாக.
“அச்சோ ஹாஸ்பிட்டல் போய் வர மதியம் ஆகிடுமே.”எனப் புலம்பினாள் ஷர்மிளா.
கற்பகம்.. “ஹாஸ்பிட்டலுக்கா? எதுக்கு?”
சொல்லாமல் தான் செய்த செயலுக்கு முதலில் கத்தினாலும் பொறுமையாக எடுத்து சொன்னால் சம்மதித்திடுவான் என நினைத்திருந்த ஷர்மிளாவிற்கு, தேவா இந்தளவிற்கு மறுப்பான் என்றோ கோபம் வரும் என்றோ நினைக்கவில்லை, எனவே தன் மாமியாரிடம் விசயத்தை சொல்லலாம், அனைவருக்கும் தெரிந்தால் வேறு வழியின்றி சமாதனம் ஆகிடுவான் என நினைத்து.. “அது.. எல்லாம் நல்ல விசயம்தான், சந்தோசமான விசயமும் கூட, ஆனா உங்க மகனுக்குத்தான் பிடிக்கல.” என்றாள்.
சற்று முன் தேவா கத்தியதையும், தற்போது ஷர்மி பேசுவதையும் ஒப்பிட்டு.. “நீ என்ன சொன்னனு சொல்லு முதல்ல? நல்ல விசயமானு நான் சொல்றேன்.” என சிடுசிடுத்தார் கற்பகம்.
குழந்தை பெறும் பாக்கியமே ஷர்மிளாவிற்கு இல்லை என முன்னவே தெரிந்திருக்க, வாடகைத்தாய் முறையும் தோல்வியில் முடிய, தற்போது ஷர்மிளா சொல்வதில் எதோ வில்லங்கம் எனத்தோன்ற.. “என்ன சொல்ற..?” என்றார் சிறிதும் மகிழ்வின்றி.
“உங்க மகனுக்கு வாரிசு வரப்போகுதுனு சொல்றேன். கொஞ்சம் கூட சந்தோசமில்லாம கேட்குறிங்க? தமிழ்லதான சொன்னேன்.?” என்றாள் உரிமைக் கோபமாக.
“இரண்டு மாசமா நீ இல்லாம பித்து பிடிச்ச மாதிரி இருந்தான், இன்னைக்கு நீ வரன்னதும் வேலைக்கு கூட போகல, அப்படியிருந்தவனுக்கு கோபம் வர அளவுக்கு என்ன சொல்லி வெளில போக வச்ச?” என்றார் கோபமாக.
“அச்சோ..” என தலையில் அடித்துக்கொண்டவள்.. “முன்ன வாடகைத்தாய் முறையில குழந்தைக்கு ஏற்பாடு செய்தோம்ல? அதே மாதிரி இப்போ திரும்பவும் முயற்சி செய்தாங்க, கடவுள் அனுகிரகத்துல அது நல்லபடியா முடிஞ்சிருக்கு, இன்னும் எட்டே மாசத்துல நம்ம வீட்டுக்கு வாரிசு வரப்போகுது.. இப்போ புரியுதுங்களா?” என்றாள் பொறுமையாக.
“ஷர்மி..” என சந்தோசமடைந்தவர்.. “இது எப்படி? இன்னொரு பொண்ணை ஏற்பாடு செய்தாங்களா? தேவ் எதுக்கு இதுக்கு கோபப்படுறான்?”என கேள்விகளை அடுக்கினார்.
“இப்படி குழந்தை முன்னவே அவருக்கு பிடிக்கலதான? அது தோல்வியில முடியவும், திரும்பவும் இன்னொரு பொண்ணுக்கு கஷ்டத்தை கொடுத்து அப்படியென்ன குழந்தைனு உங்க மகனுக்கு கோபம், அதில்லாம அவர்கிட்ட சொல்லாம செய்துட்டேன்ற ஆத்திரம், அதான் கோபமா கிளம்பிட்டார், அவர் வந்ததும் நீங்க சமாதனம் செயிங்க.” என்றாள்.
“நீ ஏன் அவன்கிட்ட சொல்லாம செய்த?” என தானும் கடிந்தவருக்கு, முதன்முறையாக மருமகள் தன்னிடம் பொறுப்பை ஒப்படைக்கவே சந்தோசமடைந்தவராய்.. “சரி சரி.. அவனை நான் சமாதனப்படுத்துறேன்.. நீ சாப்பிடு.” என்றார் அக்கறையாக.
“இல்ல, எனக்கு பசியில்ல, அவர் வரட்டும்.” என உள்ளே சென்றுவிட்டாள்.
ஷர்மிளா சொன்னதெல்லாம் உண்மையெனவும், தான் நேரில் வராததற்கு டாக்டரிடம் பணம் கொடுத்து சம்மதிக்க வைத்திருக்கிறாள் என அனைத்தும் தெரிந்தவனுக்கு தாள முடியாத ஆத்திரம் வர.. “இப்படி குழந்தை வேண்டாம்.” என்றான்.
தேவேஷ் பேச்சை கேட்டு அதிர்ந்த மருத்துவர்.. “குழந்தைக்காவும், தற்போது கருவை கலைத்தால் கரு சுமக்கும் பெண்ணிற்கு ஏற்படும் பின்விளைவுகளையும் மருத்துவர் எடுத்துரைக்க ஏதும் செய்ய முடியாதவனாய் வீடு வந்தான்.
மகனை கண்டதும்.. “வா தேவா.. நல்ல விசயம்தான மருமக சொல்லியிருக்கா? நீ சம்மதிப்ப்பியோ மாட்டியோனு உன்கிட்ட சொல்லாம செய்தது தப்புதான்.. ஆனாலும் இது சந்தோசப்படவேண்டிய விசயம்தான? ஷர்மிகிட்ட எதுக்கு அவ்வளோ கோப்பட்ட?” என கடிந்தவாறு.. “முகம் கை கழுவிட்டு வந்து முதல்ல சாப்பிட வா.” என்றார்.
“ஷர்மி..” என கத்தினான்.
“தேவ்..” எனப் பதறி வெளியே வர.. கேட்க ஆயிரம் கேள்விகள் இருந்தபோதும், அன்னை அருகேயிருப்பதால்.. “எங்கல்லாம் கடன் வாங்கின? பணத்துக்கு என்ன செய்த?” என்றான்.
கற்பகம்.. “அதானே? அப்பவே அவ்வளோ பணம் செலவாச்சுனு சொன்னியே? இப்போ பணத்துக்கு என்ன செய்த?” என்றார் கவலையாக.
“எங்கையும் கடன் வாங்கல தேவ்.. ஸரோகேஸியோட ட்ரீட்மண்ட் செலவு மட்டும்தான் இப்போதைக்கு. குழந்தை பெத்து கொடுத்ததுக்கப்புறம் அவங்களுக்கான பணத்தை வாங்கிக்கிறேனுட்டாங்க..” என்றாள்.
“ம்..” என ஹாலிலிருந்த சோபாவிலேயே படுத்து கண்மூட.. “சாப்பிட வா தேவா.” என்றார் கற்பகம்.
“நீ வருவனு ஷர்மிளா சாப்பிடாம இருக்காடா.” என்க.. “பசிச்சா சாப்பிடுவா, சும்மா நச்சு பண்ணாத.” என சிடுசிடுத்தான்.
முன்பு குழந்தை முயற்சி தோல்வியில் முடிந்தபோது இவனும்தானே வருந்தினான்.. தற்போது ஏன் இப்படி இருக்கிறான் என யோசித்து.. “உன் பொண்டாட்டி சொல்லாம செய்தாலும் என்கிட்டதான் எகுறுவியா?” என கடுகடுத்து.. “என்னவோ செய்யிங்க.” என தனதறைக்குள் போனார்.
“தேவ்.. சாப்பிட வாங்க.” என்றதும்.. கண்மூடியிருந்தவனின் முகம் இன்னும் இறுகியது.
“தேவ்.” என மீண்டும் அழைக்க.. “சாப்டுட்டேனு இப்போதான அம்மாகிட்ட சொன்னேன்? உனக்கு வேற தனியா சொல்லனுமா?” என முறைத்தான்.
சாப்பிட்டிருக்கமாட்டான் என தெரிந்தபோதும், சாப்பிட்டேன் என்பவனை எப்படி சாப்பிட வைப்பதென தெரியாமல் தடுமாறினாள்.
அரைமணி நேரம் அமைதியில் கழிய.. தேவாவிற்கு அழைப்பு வரவும்.. “சொல்லு கார்த்தி.” என்றான்.
“என்னடா? இவ்வளோ பெரிய விசயம் அம்மா சொல்றாங்க? புருசன் பொண்டாட்டி ரெண்டு பேரும் ஒத்த வார்த்தை சொல்லலை?” என குறைபட்டாள் கார்த்திகா.
“போனை வைக்கிறியா?” என கடுகடுத்து இணைப்பை துண்டித்தான். பின்னே அபிராமி அழைக்கவும் அதையும் துண்டித்தான். பிறகு இருவரின் கணவன்கள் ஒவ்வொருவராக அழைக்கவும்.. “ம்.. தேங்க்ஸ்.. கொஞ்சம் பிஸியா இருக்கேன், அப்புறம் பேசுறேன்.” என இணைப்பை துண்டித்தவன்.. “ம்மா..” என கத்தினான்.
“என்னடா?” என கற்பகம் வெளியே வர.. “அதுக்குள்ள உன்ன யாரு ஊரெல்லாம் சொல்ல சொன்னது?” என்றான் கடுப்பாக.
“இதெல்லாம் மூடி மறைக்கிற விசயமாடா? இன்னும் எட்டுமாசத்துல தன்னால வெளிய வரப்போகுது.. உனக்கு பிடிக்கலன்றதுக்காக என் சந்தோசத்தை பெத்த பிள்ளைங்ககிட்ட கூட சொல்லிக்க கூடாதா?” என பொறுமினார் கற்பகம்.
இருவரையும் பார்க்க பிடிக்காமல் எழுந்து உள்ளே போகவும், ஷர்மிளாவும் பின்னோடு போக, கட்டிலில் படுத்தவன்.. “என்னை ஃப்ரீயா விடு ஷர்மி.” என கவிழ்ந்து படுத்தான்.
இனி எல்லோருக்கும் தெரிந்தாயிற்று.. கார்த்தியும், அபியும் வந்து எடுத்துரைத்தால் கோபம் தணிவான் என அமைதிகாத்தாள் ஷர்மிளா.
அடுத்த வாரத்தில் அபிராமியின் பிரசவ தேதி வரவே, இம்முறை விஜயன் இங்கேயே பார்த்துக்கிறேன் என விஜயன் சொன்னதையும், மருமகனோட அப்பாம்மாவும் பெரிய மகனோட இருக்காங்க, ஒத்த ஆளா மருமகன் எப்படி பார்த்துப்பார்? நீ சொன்னா மருமகன் அபியை அனுப்பிவைப்பார், நீ போன்பண்ணி நான் அவளை இங்க அழைச்சிட்டு வரன்னு சொல்லு.” என்றார் கற்பகம்.
“இல்லம்மா, அபியை இங்க அழைச்சிட்டு வந்துட்டா விஜயனுக்கு ரொம்ப சிரமமாகிடும், நீ போய் அங்க தங்கியிருந்து அபிக்கு குழந்தை பிறந்ததுக்கப்புறம் வா.” என்றான்.
“நிஜமாவா சொல்ற?” என கற்பகம் ஆச்சர்யமாய் கேட்க.. “ஆமாம்மா, நேத்து நைட் விஜயன் போன் செய்து உங்களை அனுப்பி வைக்க முடியுமானு கேட்டார். அவங்கம்மாக்கும் உடம்பு சரியில்லயாம், இந்த நேரம் உன்னை விட்டா அபிக்கு வேற ஆளில்ல, நீயா கேட்கலனாலும் நானே சொல்லலாமுனுதான் இருந்தேன்.” என்றான்.
“சரி.. நாளைக்கு போலாமா?”
“எனக்கு கொஞ்சம் வேலையிருக்குமா, விஜயனே வந்து உன்னை கூட்டிட்டு போறாராம், அங்க போய்ட்டு குழந்தை பிறந்ததுக்கப்புறம் சொல்லு, நான் வரேன்.” என்றான்.
ஓரிரு நாளில் கோபம் தணிவான் என காத்திருந்தாள் ஷர்மிளா. ஆனால் அடுத்து வந்த வாரத்தில் அபிராமியின் குழந்தையை காண சென்றபோதும் கூட இயல்பாய் பேசவில்லை.
மேலும் மூன்று மாதங்கள் கடந்தும் தேவேஷின் முகம் இயல்பு நிலைக்கு திரும்பாமல் இருக்கவே பெரும் வேதனைக்குள்ளானாள் ஷர்மிளா.
அபிராமி குழந்தைக்கு மூன்று மாதம் முடிந்திருக்க, கார்த்தி அபிராமியோடு வந்தார் கற்பகம். பரஸ்பர விசாரிப்பிற்கு பின்னே.. “ஏன் தேவா ஷர்மியை இப்படி படுத்துற?” என கார்த்திகா வேதனையோடு கேட்க..
“அவதான் கார்த்தி என்னை படுத்திட்டிருக்கா..” என கண்கலங்கினான்.
தன் அப்பா இறப்பிற்கு பின்னே தற்போது கண்கலங்கி நிற்கும் தம்பியைப் பார்த்து பதறியவளாய்.. “என்ன தேவா சொல்ற?” என்றாள் கார்த்திகா.
குழந்தை பிறப்பை பற்றி எடுத்துரைத்து, “எல்லாம் எனக்காக செய்யிறா கார்த்தி, ஆனா அந்த குழந்தையோட அவளால ஒட்டியிருக்க முடியாது, இப்ப வரைக்கும் ஒருமுறை கூட நம்ம குழந்தைனு அவ வாய்ல வந்ததில்ல, உங்க குழந்தைனுதான் சொல்றா..
கோபத்துல ஒருநாள் பேசலைன்னாலும் அப்படி அழுவா கார்த்தி.. அவ பெத்த குழந்தையா இருந்தாலும், குழந்தையை கொஞ்சும்போது பொஸஸிவா ஃபீல் பண்ணுவா, இதுல இன்னொரு பொண்ணோட குழந்தையை நான் கொஞ்சுறதையோ, கேர் பண்ணிக்கிறதையோ எப்படி தாங்கிப்பா?
கடவுள் புண்ணியத்துல குழந்தை என் ஜாடையில பிறந்தாலாவது தப்பிச்சேன், ஒருவேளை ஓவம் டோனரோட ஜாடையில இருந்ததுனா, அவ தேவாவை பங்கு போட இன்னொருத்தர் வந்துட்டாங்கன்ற ஏக்கத்துல செத்தே போய்டுவா கார்த்தி.. என்னைத் தவிர யாருக்கும் அவளைப் பத்தி தெரியாது, ஆனா என்கிட்ட எதுவுமே கலந்துக்காம எல்லா ஏற்பாடும் செய்துட்டா..” என்றான் தாளமுடியாத வேதனையோடு.
இவர்கள் பேசிக்கொண்டிருந்ததை கேட்ட ஷர்மிக்கு கண்ணீர் ஆறாய் பெருக்கெடுத்தது. “இல்ல.. என் தேவ் குழந்தை தேவ்வைப் போலத்தான் இருக்கும். டோனர் ஜாடை வராது.. இந்த விசயத்திலயாவது கடவுள் என் பக்கம் இருக்க மாட்டாரா?” என கதற.. “ஷர்மி..” என அணைத்துக்கொண்டவன்.. “அப்படி ஆகாது ஷர்மி.. நீ நினைச்ச மாதிரிதான் குழந்தை பிறக்கும்..” என தேவேஷ் ஆறுதல் படுத்த.. சிறுமியாய் அழும் ஷர்மியை பயத்தோடு பார்த்திருந்தாள் கார்த்திகா.