அன்றிரவு தேவேஷ் ஷர்மியோடு நெருங்கிப்படுக்க.. வழக்கமாய் தான் நெருங்கும்போதிருக்கும் பூரிப்பு, ஷர்மியின் முகத்தில் இல்லாமல் இருக்கவும்.. “கண்டதையும் யோசிக்காம தூங்கு ஷர்மி.” என அணைத்துப்படுக்க, காலையில் கணவனிற்காக தவித்த தவிப்பு தற்போது சிறிதும் இல்லாமல் நிர்மலமாய் கண்மூடினாள்.
அதில் பெரிதாய் ஏமார்ந்த தேவேஷ்.. இனி இவளாக வரும் வரை நெருங்கவே கூடாது என்ற கோபத்தோடு கண்மூடினான்.
அடுத்தநாள் வழக்கம்போல் சமையல் முடித்த ஷர்மிளா வேலைக்கு கிளம்பிக்கொண்டிருக்க.. ஏதும் பேசாமல் தானும் கிளம்பினான்.
இப்படியாக மேலும் நான்கு மாதங்கள் முடிந்திருக்க.. ஷர்மிளா இயல்பாக இல்லை என உணர்ந்தபோதும் தேவேஷால் ஒன்றும் செய்ய முடியவில்லை.
என்ன கேட்டாலும் ஒன்றுமில்லை என்பவளிடம் என்ன செய்வது என நொந்துபோனான். இன்னும் இரண்டு மாதத்தில் குழந்தை வந்துவிடும், அப்பொழும் இப்படியே இருந்தாளென்றால் என்ன செய்வதென யோசித்தவன், மருத்துவரிடம் கவுன்சிலிங் அழைத்து செல்லலாம் என்றெண்ணினான்.
எண்ணிய எண்ணம் ஈடேற.. “ஷர்மி நாளைக்கு ஒரு பார்ட்டிக்கு போகனும், கம்பெனிக்கு லீவ் சொல்லிடு.” என்க.. “என்ன பார்ட்டி? நானும் வந்தே ஆகனுமா..?” என்றாள்.
“வந்தே ஆகனுமானா?” என முறைக்க.. “ப்ராஜக்ட் போய்ட்டிருக்கு தேவ். டைட் ஒர்க்.” என முகம் சுருக்கினாள்.
“ஓ.. அப்படியா? சரி பாரு.. உன்னை கேட்காம என் வெய்ஃபை கூட்டிட்டு வரன்னு சொன்னது என் தப்புதான்..” என்றான் இறுக்கமாக.
“தேவ்..” என அருகே வர, “ஷர்மி ப்ளீஸ்.. அங்கையே நில்லு.” என கையுயர்த்தினான் வேகமாக.
“தேவ்.” என கண்கலங்க, அதில் இன்னும் எரிச்சலானவன்.. டாக்டர் என்ன டாக்டர்? நாமளே பேசிடுவோம் என.. “இந்த குழந்தை விசயம் ஆரம்பிக்கும் முன்ன என்னைக்காவது ஒரு நாள் என்னை பிரிஞ்சிருக்கியா யோசிச்சி பாரு.” என்றான்.
ஷர்மிளா தடுமாற.. “ஒரு நாள் பேசலைன்னாலும் அப்படி அழுவியே.. இப்போ என்னாச்சுடி உனக்கு? கடைசியா நாம என்னைக்கு..” என சொல்ல வந்ததை நிறுத்தியவன்..
“என்னை விட உனக்கு குழந்தை யார் மாதிரி பிறக்கும்ன்றதுதான் பிரச்சனை? ஒருவேளை குழந்தை டோனர் மாதிரி பிறந்துட்டா என்ன பண்ணலாம்? நீயே அதையும் சொல்லு..” என்றான் பொறுமை இழந்தவனாய்.
“அப்படி ஆகாது தேவ்.. நான் சாமிக்கு நேந்திருக்கேன்.” என்றாள் பாவமாக.
“மண்ணாங்கட்டி..” என பொறுமி.. “இன்கேஸ் உன் வேண்டுதலையும் மீறி டோனர் போல பிறந்துடுச்சினா என்ன பண்ணலாம் சொல்லு.” என்றான் மீண்டும்.
ஷர்மிளா தடுமாற.. “குழந்தையை ஆஸ்ரமத்துல விட்டு வளர்த்தலாமா?” என ஊன்றிப்பார்த்தான்.
“அச்சோ.. ஏன் தேவ் இப்படி பேசுறிங்க? அது உங்க குழந்தை, நம்ம குடும்ப வாரிசு. ஆஸ்ரமத்துல வளர்த்துறதுக்கா இத்தனை பாடுபட்டேன்?” என்றாள் கண்ணீரோடு.
“நம்ம குழந்தையா இருந்தா நாம வளர்த்தலாம்.. என் குழந்தையை எப்படி நம்ம வீட்டுல வளர்த்த முடியும்?” என்றான் முகம்சிவக்க.
தேவ்வின் கோபம் புரிய.. “அது நம்ம குழந்தைதான்.. நம்ம குழந்தைதான்.. நம்ம வீட்டுல, நம்ம பராமரிப்புலதான் குழந்தை வளரனும்.” என்றாள்.
“பராமரிப்பு மட்டும் போதுமா?” என்க.. “இல்ல பாசம், அன்பு எல்லாமும் கொடுக்கனும்.” என கணவனை நெருங்கினாள்.
“நீ இல்லாம இருக்க மாட்டனு தெரிஞ்சேதான ஒன்பது மாசமா என்னை தவிக்க வச்சிட்டிருக்க? இன்னைக்கு எதுக்கு நெருங்குற? என்னோட டைம் ஸ்பென்ட் பண்ண முடியாதளவுக்கு உனக்கு ப்ராஜ்க்ட் ஒர்க்கிருக்கும். போய் அதைப்பாரு..
தனியா படுத்து பழகிகிட்ட மாதிரி பார்ட்டிக்கும் தனியா போய் பழகிக்கிறேன்.” என கிளம்பியவன் ஷர்மியின் அழைப்பிற்கு திரும்பியும் பாரமல் சென்றான்.
ஒன்பது மாசமாகவா தவிக்க விட்டேன்? அச்சோ என தலையில் கை வைத்து அமர்ந்தாள் வேதனையோடு.
தேவேஷ் பைக் சத்ததில்தான் மகன் கிளம்பிவிட்டான் எனப்புரிய.. “ஷர்மிளா.. தேவ் ஏன் சாப்பிடாம போறான்?” என்ற கற்பகத்தின் குரலில் தெளிந்தவள்.. “இன்னைக்கு மதியம் ஒரு பார்ட்டி இருக்காம்.. அதுக்கு அரேன்ஜ் பண்ண கிளம்பிட்டாங்க.. டிபன் அங்கையே பார்த்துக்கிறாராம்.” என்றவள்..
இன்னைக்கு எதை போட்டுக்கலாம்? என பார்ட்டிக்கு ஏற்றவாறு வெகு நாட்களுக்குப் பிறகு நன்றாக உடுத்தி தன்னை அலங்கரித்து வெளியே வந்தவள்.. “மதியம் என்னையும் வரசொல்லிட்டு போயிருக்காங்க.. ரெண்டுபேரும் வர லேட்டானாலும் ஆகும், மதியத்துக்கு செஞ்சது மீந்துடுச்சேனு நைட்டுக்கு பழையது சாப்பிட வேணாம்.. உங்களுக்கு டிபன் ஆர்டர் பண்ணிடறேன், நாங்க வரவரைக்கும் காத்திருக்காம சாப்பிட்டுருங்க.” என கிளம்பினாள்.
“இவளும் சாப்பிடாமலே போறாளே.. இதுல மதியத்துக்கும் வேற செஞ்சி வச்சிருக்கா..” என நொடித்தவாறு கற்பகம் மங்கைக்கு அழைத்து, நிலையை சொல்லி.. “இங்க சாதம் மீந்துடுச்சி, மதியத்துக்கு மெஸ்ல வாங்காத, வீட்டுல சாப்பாடு வச்சிடறேன். அதை சாப்பிட்டுக்கோ.” என ஹாட்பாக்ஸில் போட்டு மங்கை வீட்டிற்கு சென்றார்.
*** *** *** ***
கம்பெனிக்கு சென்று அவசர வேலைகளை மட்டும் முடித்து, தேவாவிற்கு அழைக்க அவன் அழைப்பை ஏற்கவில்லை. “சரி, நம்ம டிரெஸ்க்கு மேட்சா தேவ்க்கு வாங்கிட்டு, நேர்ல போய் சர்ப்ரைஸ் கொடுக்கலாம்..” என கிளம்பினாள்.
கணவனுக்கு பார்த்து பார்த்து எடுக்க இரண்டு மணி நேரம் ஆகியிருக்க, மீண்டும் தேவாவிற்கு அழைத்தாள், அவன் எடுக்கவில்லையென்றதும்.. “உங்களை பார்க்கத்தான் வந்துட்டிருக்கேன்.. பார்ட்டிக்கு என்னை விட்டுட்டு கிளம்பிடாதிங்க தேவ்.” என குறுஞ்செய்தி அனுப்பி கார் பார்க்கிங்கிற்கு சென்றவளுக்கு அழைப்பு வர.. “ஹாஸ்பிட்டல்ல இருந்தா?” என முனகியவாறு அழைப்பை ஏற்றாள்.
“ஹலோ.. ஷர்மிளா?” என கேட்க.. “எஸ் ஷர்மிளாதான்..” என்றதும், அந்த பக்கம் என்ன சொன்னார்களோ.. இவளிற்கு கேட்காமல் போக, “ஓஹ்..சிக்னல் இல்ல..” என அவசரமாய் காரெடுத்தவள் மாலிற்கு வெளியே வந்த மருத்துவமணைக்கு அழைக்க, இம்முறை அவர்கள் அழைப்பை ஏற்கவில்லை.
“காட்.. டைம் வேற ஒன்னாகப்போகுது, பார்ட்டி எத்தனை மணிக்குனு தெரிஞ்சாலாவது ஹாஸ்பிட்டல் போய்ட்டு வரலாம்.. குழந்தைக்கு என்னாச்சோ?” என நினைத்தபடி தேவிற்கு மீண்டும் அழைத்தாள். இம்முறை ஏற்றவன்.. “என்ன?” என்றான்.
“அவனின் கோபத்தில் மருத்துவமணை அழைப்பை விடுத்து, “நானும் பார்ட்டிக்கு வரேன்.. இன்னும் இருபது நிமிஷத்துல அங்க வந்துடுவேன்.. வெய்ட் பண்ணுங்க” என இணைப்பை துண்டித்து, காரின் வேகத்தை அதிகப்படுத்தினாள்.
தேவேஷ் கம்பெனியை அடைந்தவள், கம்பெனியின் நெரெதிரில் இருக்கும் கார்பார்க்கிங்கில் காரை பார்க் செய்து, சாலையை கடக்க நின்று கொண்டிருந்தவளுக்கு அழைப்பு வர.. “டாக்டர்.. நான் ஷர்மி பேசுறேன்.. சொல்லுங்க..” என்றாள்.
“சந்தோசமான விசயம்தான், உங்களுக்கு குழந்தை பிறந்திருக்கு.” என்றனர்.
“இப்போ ஒன்பது மாசம்தானே.. அதுக்குள்ள..” என்றவளுக்கு வார்த்தைகள் தடுமாற.. “சம் டைம்ஸ் இப்படி ஆகும். நீங்க உடனே ஹாஸ்பிட்டல் வாங்க.” என்க.. “என்ன குழந்தை?” என இவள் ஆவலாக கேட்க.. “அதை நேர்ல வந்து தெரிஞ்சிக்கோங்க.” என இணைப்பை துண்டித்தனர்.
தேவ்.. உனக்கு வாரிசு வந்தாச்சு என சந்தோசித்தவளுக்கு.. என்ன குழந்தையா இருக்கும்? ஆண் என்றால் தேவ் போல் இருக்குமா? அல்லது மங்கையின் அப்பாபோல் வருமா? என யோசிக்க.. ஆண் என்றால் கூட பரவாயில்லை, பெண்ணாக இருந்து அது மங்கையைப் போல் இருந்தால் என நினைத்தவளுக்கு வியர்வை சொட்ட ஆரம்பித்தது.
நாநூறடி தூரத்தில் லாரி ஒன்று வந்துகொண்டிருக்க, போக்குவரத்து காவலர் ஷர்மியின் புறமிருந்தவர்களை நிறுத்தி வைத்திருந்தார். இவளும் காவலர் சொல்லும்போது சாலையை கடக்க பொறுமையாகத்தான் நின்று கொண்டுடிருந்தாள்..
குழந்தைக்கு நாம்தான் பாசம், அன்பு எல்லாம் கொடுத்து வளர்கனும் என தேவ் சொன்ன விசயங்கள் வலம்வர, மங்கை போல குழந்தையிருந்தால் தன்னால் குழந்தையிடம் அன்பு பாராட்ட முடியுமா என்ற பதட்டம் ஒருபுறம் இருக்க..
தேவ் அக்குழந்தையை கொஞ்சுவது போலவும், குழந்தைக்காக தன்னிடம் சண்டை போடுவது போலவும், எங்கப்பா எனக்குதான் சப்போர்ட் செய்வார் என சிறியவள் பழிப்பு காட்டுவதுபோல் என பலவிதமாக எண்ணங்கள் தோன்ற.. உடல் தன்போல் சாலையைக் கடக்க.. “ஏய்.. பொண்ணே..” என காவலர் கத்தியது ஷர்மியின் கவனத்தை சிறிதும் கலைக்கவில்லை..
இனி உங்களுக்கு நான் இரண்டாம்பட்சம்தானா? என நினைத்தவளுக்கு உடல் இரும்பாய் இறுக.. நிச்சயம் தற்கொலை செய்யும் எண்ணமெல்லாம் இதற்கு முன் தோன்றியதேயில்லை, ஆனால் இந்த நொடி விபத்தாகும் என தெரிந்தே வாகனத்தை எதிர்த்து ஒரு கணம் வெறித்து நின்றாள்.
கண்ணிமைக்கும் நேரத்தில் ஷர்மியை பதம் பார்த்திருந்தது லாரி.. “தேவ்.” என்ற கடைசி உச்சரிப்பு அவள் உதட்டை விட்டு வெளியேறும் முன்னே சுயநினைவை இழந்திருந்தாள் ஷர்மிளா.
“சார்.. சார் என்மேல தப்பில்ல, எவ்வளோ முயற்சி செய்து சடர்ன்பிரேக் போட்டேன், ஒரு ஸ்டெப் தள்ளியிருந்திருந்தாங்கனா கூட மோதியிருக்காது. சாகறதுக்கே வந்த மாதிரி நின்னுட்டாங்க.” எனப் பதறினான் லாரிடிரைவர்.
ஆம்புலன்ஸிற்கு போன்செய்த காவலர்.. ஷர்மியின் மொபைலில் கடைசி அழைப்பிற்கு அழைக்க, கவுன்ஸிலிங்கிற்காக மனைவியை அழைத்து செல்லும் எண்ணத்திலிருந்த தேவ்.. “வெய்ட் பண்றேன் வா.” என்றான்.
தேவ் வேலை செய்யும் கம்பெனியின் பெயரை சொன்ன காவலர்.. “இவங்களுக்கு ஆக்ஸிடண்ட் ஆகிடுச்சி, நீங்க யார் அவங்களுக்கு?” என்க.. பதறி வெளிவர.. கசங்கிய மலராய் சரிந்திருந்த ஷர்மியின் தலையின் பின்புறத்திலிருந்து ரத்தம் பெருக்கெடுத்திருந்தைப் பார்த்தவன்.. “ஷர்மி..” என்ற கத்தலோடு அருகே வந்தான்.
தேவாவோடு வேலை செய்பவர்களும் வெளியே வந்திருக்க, ஷர்மிளா இறந்துவிட்டாள் என தேவாவைத் தவிர அனைவருக்கும் தெரிந்தது.. ஆம்புலன்ஸில் ஏறும்போது கூட நம்பிக்கையோடே ஏறினான் தேவேஷ்.
“ஷர்மி ஷர்மி..” என ஜெபித்துக்கொண்டிருக்க, பத்து நிமிட பயணத்திற்கு பிறகு மருத்துவமணை வந்தடைந்தனர். பரிசோதித்த மருத்துவர், ஷர்மிளாவின் இறப்பை சொல்ல, ஏற்றுக்கொள்ள முடியாமல் திண்டாடினான் தேவேஷ்.
அருகிலிருந்த நண்பர்கள் கற்பகத்திற்கு அழைத்து சொல்ல, ஆனவரை அழுது தீர்த்த கற்பகம்.. ஷர்மியின் அம்மா, மற்றும் மகள்களுக்கு சொன்னார்.
*** ***** *****
குழந்தையை வாங்கிக்கொள்ள ஷர்மிளாவிற்கு அழைத்து அவள் எடுக்காமல் போகவே, தேவாவிற்கு அழைத்தனர்.. தேவாவும் எடுக்காமல் போகவே, மங்கைக்கு அழைத்து குழந்தை பிறப்பை சொல்லி, “அவங்களை வந்து குழந்தையை பார்த்துக்க சொல்லுங்க, ஸரோகேஸிக்கு செட்டில் பண்ணனும்.. போன் செய்தா எடுக்கல..” என்று மருத்துவர் குறைபடவே.. “சரிங்க நான் என்னனு பார்க்குறேன்.” என கற்பகத்திற்கு அழைத்தாள் மங்கை.
கற்பகம் எடுக்காமல் போகவே.. இரண்டு மணியாதலால் எப்படியும் வீட்டிற்கு போய்தானே ஆகனும்? சந்தோச செய்தியை நேரிலேயே சொல்வோம் என கிளம்பினாள்.
கற்பகம் வீட்டிலிருந்த கூட்டமும், அழுகுரல் சத்தமும் மங்கையை அச்சுறுத்த, பயத்தோடே உள்ளே போனாள். அங்கே கற்பகமும், ஷர்மிளாவின் அன்னை சொந்த பந்தங்கள் என நிறையபேர் இருக்க.. மெல்ல அவர்களை நெருங்கியவள்.. “ஆன்ட்டி எதுக்கு இப்படி அழறிங்க?” என்றாள்.
“என் மருமக என்னை விட்டுட்டு போய்ட்டாம்மா..” என நடந்ததை சொல்லி, “காலைல தழதழன்னு அவ்வளோ அழகா கிளம்பினா.. இப்போ பொணமா அவளை எப்படி பார்ப்பேன்? மருமகளில்லாம என் மகன் எப்படி இருப்பான்?” என கதறியழுதார் கற்பகம்.
செய்தியை கிரகிக்க முடியாமல் மங்கை சிலையாய் இருக்க.. ஷர்மிளாவின் உடல் வீட்டிற்கு வந்தது. அத்தனை நேரம் அழாமல் இருந்த தேவேஷ்.. தனக்கு பிறகு ஷர்மியை நன்கறிந்த அன்னையைக் கட்டிக்கொண்டு.. “ம்மா..” என கதறினான்.
மருத்துவமணையிலிருந்து மங்கைக்கு அழைப்பு வர.. “அப்போ குழந்தைக்கு அம்மா..” என நினைக்க பெருகிய கண்ணீரோடு மருத்துவமணைக்கு கிளம்பினாள் மங்கையர்கரசி.
(ஃப்ரண்ட்ஸ்.. ஸ்போர்ம் அல்லது ஓவம் குறைபாடுள்ளவர்கள்.. அதனை தானமாக பெற்று குழந்தைபெறும் தம்பதிகளில் ஒருவர் இறக்க நேர்ந்தாலோ, அல்லது விவாகரத்து வாங்க நேர்ந்தாலோ, அக்குழந்தையின் நிலை என்ன? என்பதை சொல்ல நினைத்துதான் இக்கருவை கதையாக எழுத நினைத்தேன்..
இரண்டு பதிவுகள் மட்டுமே ஷர்மிளா வரும்படிதான் முதலில் யோசித்திருந்தேன்.. ஆனால் என்னையறியாமல் கதைப்போக்கு கணமாக வந்துடுச்சி.. இனி கொஞ்சம் கொஞ்சமாக இயல்புக்கு வந்திடும். மங்கையை உற்சாகப்படுத்த வந்துடுங்க ஃப்ரண்ட்ஸ்..)