வீட்டிற்கு வந்து குளித்து சாப்பிட்டுக்கொண்டிருந்த மங்கைக்கு குழந்தையின் நினைவே வலம்வர.. இது தப்பு, அது அவர்கள் குழந்தை என தனக்குத்தானே மந்திரம் சொல்லிக்கொண்டாள்.
தவமணி அழைக்கவே.. “ம்மா..” என குரல் கமறினாள் மங்கை.
“மங்கை.. என்னாச்சு? குரல் ஏன் ஒரு மாதிரியிருக்கு? உடம்பு சரியில்லையா?” எனப்பதறினார் தவமணி.
“என்ன சொல்ற மங்கை? நாலுநாள் முன்னகூட கற்பகம்மாகிட்ட நான் பேசினேனே.. எல்லாரும் நல்லாயிருக்காங்கனு சொன்னாங்களே.” என தவமணியும் வருந்த.. குழந்தை பிறந்ததிலிருந்து அனைத்தும் சொல்லி முடித்தாள்.
இப்படி நேரத்தில் குழந்தையை பார்த்துக்கொண்டது சந்தோசம்தான் என்றாலும், தன் தந்தையின் பணத்தை வெறுப்பாய் நினைப்பளுக்கு, தற்போது அதை புழங்கும் எண்ணம் வரும் அளவிற்கு குழந்தைக்காக மகள் இலகியிருக்கிறாள் என்பது தவமணிக்கு நெருடலாக இருக்கவே.. “ஷர்மிளா பொண்ணு இருக்கும்போது போனது பிரச்சனையில்ல, இப்போ போனினா, அந்த பையன் பொண்டாட்டி செத்ததுக்கப்புறம் இந்த பொண்ணு அடிக்கடி அங்க போகுதுனு தேவையில்லாம பேர் வச்சிடுவாங்க. அப்படி அசிங்கம் உனக்கும் தேவையில்ல, அந்த பையனுக்கும் தேவையில்ல..
அதோட அந்த தம்பி எப்பவும் ஒட்டாமத்தான் பேசும்.. நான் வீட்டுக்கு போனா கூட பிடிக்காது. அதனால இனி அவங்க வீட்டுக்கு முடிந்தவரை போகாத.” என எச்சரித்தார்.
குழந்தையிடம் ஒட்டக்கூடாது என மங்கையே முடிவெடுத்திருந்ததால்.. “சரிம்மா.. நான் போகமாட்டேன்.” என ஒப்புக்கொண்டவள்.. “ஆனா குழந்தைதான் பாவம், இப்போயிருந்தே அம்மா அன்புக்கு குடுத்து வைக்கில.” என்றாள் வருத்தமாக.
“குழந்தையை நினைச்சி ரொம்ப படுத்திக்காத.. கற்பகம்மா நல்லா பார்த்துப்பாங்க.” என தேற்றி, “நீதான் வயசுபுள்ள, அங்க போகக்கூடாது, நான் போலாம்.. இந்த வாரம் வரேன், இந்த நேரம் கற்பகம்மாக்கு ஆறுதல் தேவையாயிருக்கும்.” என அரைமணிநேரம் வரை பேசியிருந்து இணைப்பை துண்டித்தார்.
அன்னையிடம் பேசியவாறு சாப்பிட்டு முடித்தவளுக்கு குழந்தை முகமே கண்முன் வந்தது. பேசாம ஹாஸ்பிட்டலுக்கு போலாமா என யோசிக்க, நேற்றிரவு தூங்காதது உடல் அத்தனை அசதியை கொடுக்கவே, டாக்டர்கிட்டதான் லீவ் சொல்லிட்டமே, நாளைக்கே போய்க்கலாம். டியூட்டிக்கு போய்ட்டு முடியலன்னு உக்கார முடியாது என என கதவடைத்து பெட்டில் சரிந்து உறங்க முற்பட்டாள்.
வெகு நேரம் விழித்திருந்தவள், மதியம் இரண்டு மணிக்குமேல் உறங்கினாள். மூனுமணிபோல் மங்கை வீட்டு வாயில்மணி விடாமல் அடித்தது.
சிரம்மப்பட்டு கண்விழித்தவள்.. “வரேன்.. வரேன்..” என சலிப்போடு எழுந்தவள், யாராயிருக்கும் என்ற யோசனையோடு கதவைத் திறக்க, அங்கே கற்பகமும், கார்த்திகா இருவரும் நின்றிருந்தனர்.
“வாங்க ஆன்ட்டி, வாங்கக்கா.” என வரவேற்றவள்.. “இரண்டு பேரும் இங்க வந்துட்டிங்க? குழந்தையை யார் பாத்துக்கிறா ஆன்ட்டி?”
“ஏன் ஆன்ட்டி இவ்வளோ டல்லா பேசுறிங்க? உங்களுக்கு குழந்தையை பிடிக்கலயா?” என்றாள் பதட்டத்தோடு.
“என் பேரனை எனக்கு பிடிக்காம போகுமா மங்கை? அவன்தான் என் மகனை மீட்டு கொண்டுவரனும்னு கடவுளை வேண்டிட்டிருக்கேன்.” என கண்கலங்கினார் கற்பகம்.
பெரும் நிம்மதியடைந்தவள்..“நிச்சயம் ஆன்ட்டி.. உங்க மகனை அவன்தான் மீட்டெடுக்கப்போறான்.” என்றாள் நம்பிக்கையாக.
இருவரும் அமைதியாக இருக்கவே, “எதோ முக்கியமா பேச வந்திருப்பிங்க போல ஆன்ட்டி.. இல்லனா கார்த்திக்காவாவது என் வீட்டுக்கு வரதாவது? அதுவும் உங்க மகன் இருக்கும்போது..” என்றாள் மங்கை.
“ஆமாம் மங்கை, முக்கியமான விசயமாத்தான் வந்தோம்..” என்றவர் தன்னிடமிருந்த பையிலிருந்து பணத்தை எடுத்து நீட்டி.. “ஹாஸ்பிட்டலுக்கு நீ கட்டின பணத்தை தேவா கொடுத்துட்டு வர சொன்னான்.” என்றார்.
“ஆன்ட்டி.. இதுக்கென்ன அவசரம் இப்போ? இருக்கும்போது கொடுத்தா போதும்.” என்றாள் தடுமாற்றமாக.
“நம்ம மங்கைதான? இரண்டு மூனு தவனையா கூட கொடுத்துக்கலாம்னு நானும் சொன்னேன் மங்கை.. அவன் கேட்டாதான? குழந்தையை தூக்கிட்டு வீட்டுக்கு வந்ததும் வெளில போனவன் அரைமணி நேரம் முன்னதான் வந்தான்.
குழந்தை முகத்தை கூட இன்னும் பார்க்கல, முதல்ல இந்த பணத்தை அந்த பொண்ணுகிட்ட கொடுத்துட்டு வாங்கனு பிடிவாதமா நிக்கிறான். அதான் வந்தேன்.” என்றார் கற்பகம்.
பணத்தை வாங்கவும்.. “சரியா இருக்கானு எண்ணி பாரு மங்கை.” என்றாள் கார்த்திகா.
“எதிரிகிட்ட கடன்பட்டதை போல இரண்டு மணிநேரத்துல ஆறு லட்சத்தை ரெடி பண்ணி கொடுத்திருக்காங்க, நிச்சயம் சரியாத்தான் இருக்கும்.” என்று உள்ளேபோய் பணத்தை வைத்து வந்தவள்.. “இருங்கக்கா டீ வச்சிட்டு வரேன்.” என்றாள்.
“அதெல்லாம் வேணாம் மங்கை. இப்படி உக்காரு.” என்றாள் கார்த்திகா.
“என்னக்கா? இனி இப்படி உதவிலாம் செய்யக்கூடாதுனு எனக்கு லெசன் எடுக்க சொன்னாரா உங்க தம்பி?” என கேட்டவாறு அவர்கள் முன்னமர்ந்தாள் மங்கை.
கார்த்திகா ஆச்சர்யமாய் பார்க்கவும்.. “அப்போ நான் சொன்னது சரிதானா?” என்றாள் சிரிப்போடு.
“என் தம்பியை தப்பா புரிஞ்சிட்டிருக்க..”
“உங்க தம்பியை தப்பா புரிஞ்சிக்கிற அளவுக்கு எனக்கும் அவருக்கும் ஒரு பழக்கமும் இல்லக்கா.. ஹாஸ்பிட்டல்ல அவருக்கு என்னை அடையாளம் தெரிஞ்சதே பெரிய விசயம்.. ஆனா காரணமே இல்லாம என்கிட்ட கோபப்பட்டதுதான் எனக்கு கஷ்டமா இருக்கு.”
கார்த்திகா.. “கடன்னு ஒருத்தர்கிட்ட போய் நிக்குறது தேவாக்கு சுத்தமா பிடிக்காது.. அததுக்குனு இவ்வளோதானு பட்ஜட் போட்டு வாழ்ற நடுத்தர குடும்பம்.. அப்போயிருந்தே வருமானத்துக்கு ஏற்ற மாதிரிதான் எதுவானாலும் திட்டமிடுவான்..
ஒரு சில பசங்க மாதிரி அவனுக்கு நிறைய ஃப்ரண்ட்ஸ் கிடையாது.. காலேஜ் படிக்கும்போது ஒருத்தனும், இப்போ கம்பெனியில இரண்டு இல்ல மூனுபேர். மொத்தமா அவனோட நட்புவட்டத்துல நாலஞ்சி பேர்தான் இருப்பாங்க.
அந்த நாலஞ்சு பேரோடவும் சந்தோசத்தை பகிர்ந்துக்குவானே தவிர, துக்கத்தை பகிர்ந்துக்கமாட்டான்.
நானா ரொம்ப வற்புறுத்தினா மட்டும்தான் அவன் கஷ்டத்தை என்கிட்ட சொல்லுவான்.. அம்மா மேல நிறைய அன்பிருந்தாலும் எல்லாம் மனசோடதான்.. ஷர்மியை தவிர்த்து அவன் சிரிச்சி பேசுற ஒரே ஆள் அபிராமி மட்டும்தான்.”
“ம்..” என கார்த்திகா முறைக்கவும்.. “ஹா..ஹா.. சும்மா தமாசு.. நீங்க கன்டினியூவ் பண்ணுங்க.” என கதை கேட்கும் பாவனையோடு நிமிர்ந்தமர்ந்தாள்.
“உன்ன..” என முறைக்க முயன்றவளுக்கு சிரிப்பு வந்திட.. “ஹப்பா சிரிச்சிட்டிங்க.. தேங்க் காட்.” என சிரித்தவள்.. “உங்க தம்பி எதோ சொல்லிவிட்டுருக்கார், அதை சொல்ல எதுக்குக்கா இத்தனை சுத்தி வளைக்குறிங்க.. அவர் சொல்லிவிட்டதை சொல்லுங்க, எதுவானாலும் நான் தப்பா நினைக்கமாட்டேன்.” என்றாள் தன்மையாக.
“வேற ஒருத்தராயிருந்தா நானும் இவ்வளோ பேசமாட்டேன்.. வாழ்க்கையில மறக்க முடியாத உதவி செய்திருக்க.. உன்கிட்ட அப்படி பேச தயக்கமா இருந்தது.. தேவா சொன்னதை சொல்லலைன்னா அவன் திட்டுவான்..” என்றாள் சங்கடமாக.
மங்கை.. “அச்சோ பயங்கர சஸ்பன்ஸ் வைக்கிறிங்களே.”
“ஒரு சஸ்பன்சும் இல்ல.. உன்கிட்ட கொடுத்த பணத்துல, ஹாஸ்பிட்டல்ல சொன்னதை விட ஐயாயிரம் அதிகமா இருக்கும்.. அது நீ குழந்தைக்கு வாங்கின டிரெஸ்க்கானதாம்..
பக்கத்து வீட்டுல இருக்கேன்றதுக்காக ரொம்ப அட்வான்டேஜ் எடுத்துக்கக்கூடாதாம்.. அதிகப்பிரசங்கித்தனமா இனிமே இப்படி பண உதவிலாம் செய்யகூடாதாம்..” என கடகடவென ஒப்பித்தாள் பாவமாக.
“ம்..” என்றாள் இலகுவாக.
கார்த்திகா வழிவிரிக்க.. “இவ்வளோதானா? எங்கம்மாகிட்ட பேசக்கூடாது, அப்படியிப்படினு நான் இன்னும் நிறைய எதிர்பார்த்தேன்.. நல்லகாலம் அப்படி எதுவும் இல்ல..” என்றாள்.
“எத்தனை கடன் பட்டாலும் யார்கிட்டயும் நன்றிகடன் மட்டும் பட்டுடக்கூடாதுனு அடிக்கடி சொல்வான் மங்கை.. நீ இப்போ செய்த உதவிக்கு எத்தனை நன்றி சொன்னாலும் பத்தாதுனு அவனுக்கே தெரியும்..
ஏற்கனவே ஸரோகேஸியை ஏற்பாடு செய்து, என் குழந்தை பிறக்க இவளும் ஒரு காரணமா இருந்திருக்கா, இதுல நாம இத்தனை பேரிருக்க, என் பையன் பிறந்த முதல்நாளே அவளோட பராமரிப்புல இருந்திருக்கான்..
நைட்டெல்லாம் என் மகனை பக்கத்துலயிருந்து பார்த்திருக்கா.. இவளை யார் இதெல்லாம் செய்ய சொன்னது? நைட்டாவது அம்மாக்கு கால் பண்ணி சொல்லியிருக்கலாமில்ல? குழந்தைக்கு பிறந்தநாள் வரும்போதெல்லாம் தேவையில்லாத தொல்லையா இவ நியாபகம் வராம இருக்குமானு கோபமா கத்தினான்.
அப்போதான் அவன் கோபத்துக்கான காரணம் புரிஞ்சது. அவனை தப்பா நினைக்காத..” என்றாள் கார்த்திகா.
“மறக்க முடியாத நன்றினு இதுல ஒன்னுமேயில்லக்கா, நான் இங்க தனியா இருக்கேன், நாளைக்கே எனக்கு எதாவது ஒன்னுனா ஆன்ட்டிகிட்டதான் வந்து நிற்ப்பேன்.
அதுகூட இன்னும் எவ்வளோ நாளைக்கோ.. எங்கம்மா தீவிரமா எனக்கு மாப்பிள்ளை பார்த்துட்டு இருக்காங்க. நல்ல பையனா கிடைச்சா உடனே கல்யாணம்தான். அதுக்கப்புறம் ஆன்ட்டியை கூட பார்க்க முடியாது..
உங்க தம்பியை கவலைப்படாம இருக்க சொல்லுங்க, யாருக்கும் நான் தொல்லையா இருக்க மாட்டேன்..” என்றாள் மங்கை.
கற்பகத்திற்கு அழைப்பு வரவே, “என்ன தேவா?” என்றார்.
“பணத்தை கொடுக்க எவ்வளோ நேரமாகும்? இங்க அபி பையனும் கத்துறான், என் பையனும் கத்துறான்.. எனக்கும் தூக்க தெரியல.. சீக்கிரம் வாங்க.” என கத்தினான் தேவேஷ்.
“சரி மங்கை, என் பேரனுங்க ரெண்டுபேரும் கத்துறாங்களாம்.. நான் கிளம்புறேன்..” என இருவரும் எழவே.. “பேரன் கத்துறானா? இல்ல உங்க மகன் கத்துறாங்களா?” என கிண்டலடித்தவள்..
“ஷர்மிக்காவை நினைச்சி நேத்து சாயங்காலம் நீங்க அழுத அழுகை எனக்கு ரொம்ப கஷ்டமா இருந்தது.. ஷர்மிக்கா இழப்பு தாங்க முடியாத வேதனைதான்.. இப்படி பாசம்கொண்ட மாமியாரோட வாழ அவங்களுக்கு கொடுத்து வைக்கல..” என வருந்தியவள்.. “இனி குழந்தை வளர்ப்புல உங்க கவனத்தை செலுத்துங்க ஆன்ட்டி..” என ஆறுதல் சொல்லி வழியனுப்பினாள்.
***** ****
பத்து நாள் கடந்திருக்க, அன்று மருத்துவமணையில் நிறைய கூட்டமிருக்கவே காலை எட்டு மணிக்கு வந்த மங்கை, ஒன்பது மணிக்கு சாப்பிட மட்டுமே ஐந்து நிமிடம் அமர்ந்தாள், அதன்பின் அமர கூட நேரமில்லை.
“மங்கை, நீங்க போய் சாப்பிடுங்க, மணி மூனாகப்போகுது.” என்றார் மருத்துவர்.
“இல்ல சார், இன்னும் பதினைஞ்சு பேர்தான் இருக்காங்க, முடிச்சிட்டே போய்க்கிறேன்.” என்றாள்.
“எல்லா பேசன்டையும் பார்த்து முடிக்க எப்படியும் இன்னும் ஒருமணி நேரமாவது ஆகிடும், சாப்பாடு ஆர்டர் பண்றேன், இன்னைக்கு நானும் இங்கையே சாப்பிடறேன், பசி வயித்தை கிள்ளுது.” என்றார்.
இதுவரை இப்படி பழக்கம் இல்லாததால்.. “உங்களுக்கு பண்ணிக்கோங்க சார், எனக்கு வேண்டாம்..” என்க.. “ரொம்ப லேட்டாகிடுச்சினுதானே சொல்றேன், உங்களை விட்டுட்டு நான் மட்டும் எப்படி சாப்பிடறது?
சாப்பாடு வேணாம்னா கிளம்புங்க, நான் ப்ரதிபாவை வச்சி பார்த்துக்கிறேன்..” என மருத்துவர் கோபத்தோடும் உரிமையோடும் அதட்டவே சாப்பிட ஒப்புக்கொண்டாள்.
அனைவரையும் பார்த்து முடித்து நான்கு மணிபோல் ஆகிட, பிறகுதான் சாப்பிட அமர்ந்தனர். வழக்கமாக பணிநேரத்தில் மொபைலை சைலன்ட்டில் போட்டு வைப்பவள், பணி நேரம் முடித்துதான் கையிலெடுப்பாள்.
இன்று மருத்துவரோடு அமர்ந்து சாப்பிடுவது வேறு சங்கடத்தை உண்டாக்கியிருக்கவே,சாப்பிட்டுக்கொண்டே மொபைலை கையிலெடுக்க, “நாலு மிஸ்டு காலா? யாராயிருக்கும்? புது நம்பரா இருக்கே.” என யோசித்தவாறு சாப்பிடவும்.. அந்த எண்ணிலிருந்தே மீண்டும் அழைப்பு வந்தது.
அழைப்பை ஏற்கவும், “சாப்பிடும்போது என்ன போன்?” என மருத்துவர் மிரட்ட, “எதோ நியூ நம்பர் சார், ஆல்ரெடி நாலு மிஸ்டு கால் இருக்கு..” என்றவள் “ஹலோ..” என்க..
“ஹலோ.. முதல்ல உங்களுக்கு யார் வேணும்? எனக்கு சௌமியானு யாரும் தெரியாது.” என இணைப்பை துண்டித்தாள்.
மீண்டும் அழைப்பு வரவும்.. “ராங் கால்ஸ்க்கு எதுக்கு இம்ப்பார்ட்டன்ட் கொடுக்குறிங்க? லீவிட்.” என மருத்துவர் சொல்ல.. “ஹம்.” என மொபைலை வைத்து சாப்பிடலானாள்.
மீண்டும் மீண்டும் அழைப்பு வரவே.. “ஹலோ உங்களுக்கு யார்ங்க வேணும்.?” என்றாள் சலிப்பாக.
“போன் ஸ்பீக்கர்ல போடுங்க.” என மருத்துவர் சொல்லவே.. அதன் படி செய்ய.. “எனக்கு மங்கை எனும் மங்கையர்கரசிதான் வேணும்.. அது நீங்கதான?” என்றாள் சௌமியா.
“இதென்ன என் பேரை கரெக்ட்டா சொல்றா? ட்ரூ காலர்ல பார்த்திருப்பாளோ? என யோசித்தவாறு.. “நான் மங்கையர்கரசியேதான்.. நீங்க யாரு? என்கிட்ட உங்களுக்கு என்ன வேணும்?” என்றாள் மங்கை.
“பத்து நாள் முன்ன, பிறந்ததும் அம்மாவை முழுங்கின குட்டிசாத்தானை குட்டிசாத்தானு சொன்னதுக்கு டாக்டர்கிட்ட போட்டு கொடுத்திங்களே.. அந்த சௌமியாதான் பேசுறேன்.. நான் யார்னு இப்போ நியாபகத்துக்கு வருதா?” என்றாள் மிரட்டலாக.