கடல் – 10
வீட்டிற்கு வரும் வரையில் ஒரு நிம்மதியில்லை முருகய்யன், ராஜாத்தி இருவருக்கும். வழியிலேயே இளவரசன் உறங்கிவிட வாசலை அடைந்ததும் ராஜாத்தியிடம் இருந்து வாங்கி அவனை தோளில் போட்டுவிட்டு பணத்தை எடுக்க,
“வேணாம்னே. வாரப்பவே சோதி குடுத்துட்டாப்ல அண்ணே. நா பொறப்படுதேன்…” என ஆட்டோ ட்ரைவர் கிளம்பிவிட வேகமாய் வீட்டிற்கு சென்று கதவை தட்ட உறக்கமில்லா கண்களுடன் உடனே வந்து கதவை திறந்தாள் மின்னொளி.
தான் சொன்னாலும் வராமல் இருக்கபோவதில்லை. வருவார்கள் என்று தெரியும். ஆனால் இத்தனை நேரம் கழித்து வருவார்கள் என அவள் எதிர்பார்க்கவில்லை.
“இவர்களுக்கு தான் இவ்வளவு தானா? தான் அங்கே இல்லை என்றால் கூட பரவாயில்லையா?” என அதுவும் வேறு அவளின் மனதை வருத்த எதுவும் பேசாமல் உள்ளே சென்றாள்.
அப்போது தான் சாப்பிட்டு முடித்திருப்பாள் போலும். ராஜாத்தி அடுப்படிக்குள் வர அங்கே கோதுமை மாவில் கூழ் காய்ச்சப்பட்டு இன்னொரு பாத்திரத்தில் வெங்காயம் பச்சைமிளகாய் வறுக்கப்பட்டு கொஞ்சம் இருந்தது.
“அங்க சாப்புடலையோ?” என்ற யோசனையை தனக்குள்ளேயே வைத்துக்கொண்டார். முருகய்யனிடம் சொன்னால் உறங்கவே மாட்டார்.
“என் மகள் சாப்பிட்டாளா? இல்லையா என கூட பார்க்காமல் சந்தோஷமாக இருந்துவிட்டேனே?” என சொல்லி சொல்லியே புலம்பி தவிப்பார் என்பதால் அதனை அப்படியே விட்டுவிட்டார்.
ராஜாத்தியின் பார்வையின் கேள்வியை புறம் தள்ளிய மின்னொளி சோர்வுடன் வந்து கட்டிலில் படுத்துக்கொண்டாள்.
கதவை பூட்டவென வந்த ராஜாத்தியின் பார்வை அவளை மீண்டும் தொட்டது. உடலை குறுக்கிக்கொண்டு ஒரு கையை வயிற்றில் பிடித்துக்கொண்டு அவள் படுத்திருந்த கோலம் கண்டு அருகே சென்றவர்,
“ஒடம்புக்கு நோவுதா மின்னலு? சூடு புடிச்சிருக்கா? மோரு கரைச்சி கொண்டாரட்டா?…” என மெதுவாய் கேட்க தலையை நிமிர்த்தி பார்த்தவள் இல்லை என்பதை போல தலையாட்டி மறுத்துவிட்டு மறுபுறம் திரும்பி படுத்துக்கொண்டாள்.
சில நொடிகள் அங்கேயே அவர் நிற்க மீண்டும் திரும்பி பார்த்த மின்னொளி சற்று அலுப்புடன்,
“போய் படுங்க…” என்று சொல்லி கண்களை மூடிக்கொள்ள ஒரு பெருமூச்சுடன் சென்றுவிட்டார்.
ஏனோ மனது சஞ்சலம் கொண்டது. சொல்லத்தெரியாத ஒரு உணர்வு அவரை படுத்த எதுவோ நடக்கபோவதை போலவே தோன்றியது. யோசித்து ஒன்றும் பிடிபடாமல் போக மெதுவாய் கண்களை மூடினார் அவர்.
இங்கே சுப்பு ஆட்டோ வந்ததை கண்டு மின்னொளி குடும்பத்தை பார்த்ததும் உடனே அருளுக்கு அழைத்தான்.
“ஏலே இப்பவாச்சும் கெளம்பவா? இல்ல விடியலு வரைக்கி இங்கனவே காவ காக்கனுமா?…” என கடுப்புடன் கேட்டான் சுப்பு.
பின்னே குளிர் வேறு உடலை துளைத்தெடுத்தது. மின்னொளி வீட்டில் வேறு வெளியே லைட் எரிந்துகொண்டிருக்க அவள் பார்த்துவிட்டால் என்ன செய்வதென்று வேறு பயந்தான்.
அவள் வீட்டிலிருந்து அந்த தெருவின் கடைசி திருப்பத்தில் தான் ஆட்டோவை நிறுத்தி அங்கிருந்த திண்ணையில் அமருவதும் பின் பத்து நிமிடத்திற்கு பின்னே எழுந்து சென்று வீட்டை பார்ப்பதுமாய் இருந்தான்.
தான் விட்டுசென்று வந்து அருளுக்கு பேசிவிட்டு கால்மணி நேரம் கழித்து அங்கே சென்று பார்க்க மின்னொளி பின்னால் உள்ள மாட்டுத்தொழுவத்தில் இருந்து கைகளை தட்டியபடி வந்தவள் வாசலில் இருந்த தொட்டி தண்ணீரில் கையை கழுவிவிட்டு வீட்டிற்குள் சென்று கதவை அடைப்பது வரை பார்த்துவிட்டு மீண்டும் வந்து அமர்ந்துகொண்டான்.
இப்படியே நேரம் செல்ல செல்ல அருள் போனில் அவர்கள் கிளம்பிவிட்டார்கள் என்றதும் கொஞ்சம் நிம்மதியானவன் வீட்டிற்கு கிளம்ப கேட்க,
“இங்க என்ன வெட்டிமுறிக்கித சோலி கெடக்காம்? அங்கன இருந்தாதேன் என்னவாம்?…” என இப்பொழுது அருள் இயல்பாய் மாறியிருக்க,
“நீ பேசுவலே, பேசுவ. சம்சாரி ஆனாத்தேன் ஒனக்கு தெரியும்லே. அதுவரைக்கி நீ பேசத்தேன் செய்யுவ…” என சாபமிடுவதை போல பேச அதில் வாய்விட்டு சிரித்த அருள்,
“அது ஆகறப்ப பாத்துக்கலாம். வந்து தொல…” என்று வைத்துவிட்டான். நிம்மதி பெருமூச்சோடு தன் ஊரை பார்த்து கிளம்பினான் சுப்பு.
விடியும் நேரம் இன்னமும் இருள் பிரியா வானம் தன் வெளிச்சத்தை அதிகாரமாய் நிலைநாட்ட காத்துக்கிடக்க பால் கறக்க வந்துவிட்டார் பால்காரர்.
முதல்நாள் அலைச்சலும், மின்னொளி செய்துவைத்த வேலையாலும் இரவு வெகுநேரம் உறங்காமல் சற்று அசந்துவிட்டனர் முருகய்யனும், ராஜாத்தியும். அழகுப்பாட்டி இருந்திருந்தால் கூட அவரே சத்தமிட்டு எழுப்பியிருப்பார்.
“என்னத்தா நேத்து விசேசம் நல்லதா நடந்துச்சா?…” என கேட்டுக்கொண்டே அவளிடம் பேச்சுக்கொடுத்தபடி பாலை கறந்து முடித்து திரும்பிய பால்காரர் அங்கே வைக்கோல் அடைத்திருந்த கூரைக்கு கீழே ஒரு கம்பில் கட்டிவைக்கப்பட்டிருந்த தர்மராஜை பார்த்து அரண்டு நின்றார்.
“ஏத்தா மின்னு…” என அதிர்ந்து பார்க்க,
“அங்க தான போறீக? போயி அந்தம்மாவ வர சொல்லுங்க…” என சுவாதீனமாய் சொல்லியவள் கறந்து ஊற்றப்பட்டிருந்த பால் கேன்களையும், அதை அளந்து ஊற்ற என அனைத்தையும் எடுத்துக்கொண்டு திண்ணைக்கு சென்றாள்.
“வேணாம்த்தா. சத்தமில்லாம அவுத்துவுட்டுரு. அன்னத்துக்கு தெரிஞ்சா ஒன்னிய நாக்குமேல பல்லப்போட்டு பேசிப்போடுவா…” என தர்மராஜின் அருகே செல்ல பார்க்க,
“எண்ணே, நீ சொல்லுததுன்னா சொல்லு. இல்ல விடியவும் அதுவா தெரிஞ்சு வரட்டும்…” என்றவள் அவனின் கைக்கட்டை அவிழ்க்காமல் இடுப்பில் உள்ள கட்டையும், கால் கட்டையும் அவிழ்த்துவிட்டு அழைத்துக்கொண்டு திண்ணையின் கீழே அமர்த்தி விட்டாள்.
“இந்த எடத்த விட்டு அசைஞ்ச நடக்குறதே வேற…” என அவனை மிரட்டவேறு செய்ய தர்மராஜ் நிமிரவே இல்லை. உண்மைக்கும் பயந்துபோய் தான் அமர்ந்திருந்தான்.
அதற்குள் பால் வாங்குவதற்கென வந்திருந்த சில பெண்கள் இதை கண்டு வாயடைத்து நிற்க அதில் ஒருத்தி அடித்துபிடித்து ஓடிச்சென்று அன்னத்திடம் சொல்ல வீட்டில் மகனை காணாது இத்தனை காலையிலேயே எங்கே போனானோ என்னும் கவலையுடன் இருந்த அன்னத்திற்கு அது பெரும் இடியாக இருந்தது.
“ஆத்தே இதுக்கா உசுரக்குடுத்து வளத்தேன்…” என தலையிலும், நெஞ்சிலும் அடித்துக்கொண்டு மின்னொளி வீட்டை நோக்கி வர வாசலில் கேட்ட சலசலப்பில் எழுந்து வெளியே வந்த முருகய்யனும், ராஜாத்தியும் நெஞ்சை பிடித்துக்கொண்டு நின்றுவிட்டார்.
“இந்த கூத்தை பாத்தியா ராசு, ஒம்மவ பண்ணிருக்க காரியத்த? எங்கியாச்சும் நடக்குமா?…” என பால் வாங்க வந்தவர்கள் ஆளுக்கு ஆள் பேச,
“என்ன பண்ணிருக்க மின்னலு? அய்யோ…” என ராஜாத்தி வேகமாய் தர்மராஜை விடுவிக்க நெருங்க பார்க்க அதற்குள் அன்னமும் வந்துவிட்டார்.
“அடியே என்னடி பண்ணுதீக எம்மவன?…” என கத்திக்கொண்டு வாசலை தாண்டப்பார்க்க,
“செத்த அங்கனையே நில்லுங்க…” என்ற மின்னொளியை பார்த்த அன்னம்,
“என்னடி என் மகனை வளை…”
“ஒத்த வார்த்த வாயில இருந்து அசிங்கமா வந்துச்சு நா மனுசியா இருக்கமாட்டேன். அன்னைக்கு என்னவோ பேசுனீங்க? இப்ப என்ன சொல்லுதீக? ஒம்மவேன் சோக்காளிக்க கூட சேந்து எவ்வீட்டு கொட்டாயில சாராயம் குடிப்பான் அத என்னிய வேடிக்க பாக்க சொல்லுதீயளோ?…”
“அடுக்காதுடி இது ஆண்டவனுக்கே அடுக்காது. எம்மவன கொற சொல்லுத. என்னத்த சொல்லி அவன நீ வரவச்ச?…”
“எங்க ஒம்புள்ளைய நாஞ்சொல்லுதத இல்லன்னு சொல்ல சொல்லு பாப்போம். குடிகாரன குடிக்காரன்னுதேன் சொல்லுவாக. இங்க எல்லாருக்கும் அரசல்புரசலா எல்லாந்தெரியும்…” என்ற மின்னொளியின் குரல் உயர தர்மராஜ் கூனிக்குறுகி அமர்ந்திருந்தான்.
“எத்தா என்னதேன் குடிச்சிருந்தாலும் நீ அந்நேரமே அன்னத்துக்கு தாக்கல் சொல்லிருக்கலாமில்ல…” என்றொருவர் சொல்ல,
“யே ராசு ஒனக்கு கூடவா தெரியாது? நீயும் ராவுக்கே வந்துட்டே தானே?…” இன்னொருவர் கேட்க,
“தெரியாதுக்கா, சத்தியங்காட்டி தெரியாதே…” என்று ராஜாத்தி அழ அவரின் கோபம் எல்லாம் மின்னொளி மீது தான் பாய்ந்தது.
“அவுக நேரங்கழிச்சுதேன் வந்தாக. நாந்தேன் வெரசா வந்தேன்…” என மின்னொளி சொல்ல,
“அதேன் எதுக்குங்கறேன்?…” என அன்னம் அவளை அவமானம் செய்வதிலேயே குறியாய் இருக்க,
“அப்படி வரப்போயித்தேன் ஒம்மவனும் அவன் சோக்காளிகளும் இங்க அடிச்ச கூத்து தெரிஞ்சது. மத்தவனெல்லாம் குதிச்சு ஓடிட்டான். ஒம்மவனால அதுக்கு கூட முடியல. குடிச்சதோட அவேன் பேசுனான் பாரு…” என முகம் சிவக்க எள்ளலாய் அவள் சொல்ல,
“என்னன்னாலும் ஒரு எளந்தாரி புள்ளைய நீ இப்பிடி செய்ய கூடாது மின்னு. நல்லாவா இருக்கு?…” என அவளுக்கு ஒருத்தி அறிவுரை சொல்ல,
“பார்ரா, எம்புட்டு கரிசனம்? நாளைக்கு ஒவ்வீட்டு கொல்லையில வந்து சரக்கடிக்க சொல்லுதேன். நீ பெரியமனசு பண்ணி எடத்த விடு…” என மின்னொளி பதில் கொடுக்கவும் வாயை மூடிக்கொண்டாள் அப்பெண்.
“நானே போலீசுக்கு சொல்லாம வீட்டுக்கு சொல்லிவிட்டா ரொம்பத்தேன்…” என்றவளை எரிக்கும் கண்களால் பார்த்த அன்னத்திற்கு மகன் அமர்ந்திருந்த கோலமும் ஊர் மத்தியில் மின்னொளி செய்த அவமானமும் வெறிபிடிக்க செய்ய,
“ஏட்டி வெறுவாக்கெட்ட கூவ?…” என இடுப்பு சேலையை சொறுகிக்கொண்டு அன்னம் பாய்ந்துகொண்டு அவளின் கழுத்தை பிடிக்க வந்துவிட,
“இதா இந்த கோமிக்க வேல ஏங்கிட்ட வெச்சிக்காத. நாக்க நறுக்கிப்புடுவேன் பாத்துக்க. போனா போவுதேன்னு ஒம்மவன விட நெனச்சா நீயே போலீஸுக்கு சொல்ல வெச்சிடுவ?…” அதற்கு மேல் சீறிக்கொண்டு மின்னொளி அன்னத்தின் மேல் பாய பார்க்க என்றைக்கும் அமைதியாய் பேசும் ராஜாத்தியோ,
“இந்தா அவள இழுத்தாந்து உள்ள விடுங்க. ஊரு சிரிச்செது பத்தாதோ?…” என கணவனிடம் கோபப்பட்டார்.
முருகைய்யன் மனைவி சொல்லை கேட்டு மகளை நெருங்க திரும்பி தகப்பனை பார்த்த பார்வையில் அப்படியே நின்றுவிட்டார். மீண்டும் அன்னத்தை பார்த்த மின்னொளி,
“ஒம்மவன் வேணுமா? வேணாமா?…” அவளின் அழுத்தம் திருத்தமான கேள்வியில் அன்னத்தின் கோபம் பன்மடங்கானலும் இவளை இப்படியே விட்டுவிட்டு செல்வதா?, இல்லை மகனை அழைத்துக்கொண்டு சென்றுவிட்டு பிறகு பார்ப்பதா?” என யோசனையுடன் நிற்க,
“இது செரிப்பட்டு வராது. ஏலே அமிக்கிணி போய் ஏட்டு வீட்டு கதவ தட்டி கூட்டியாலே…” என்றதும் அன்னத்திற்கு அழுகை முட்டிக்கொண்டு வந்தது.
“நீயெல்லா என்னத்த வாழறன்னு பாக்குதேன்டி. இதுக்குத்தேன் ஆண்டவன் ஒன்னிய இப்பிடி வச்சிருக்கான். இதுக்கே இந்த சிலுப்பு சிலுப்புத நீ. நல்லாவே இருக்கமாட்டடி…” என்று கண்ணீருடன் மண்ணை வாரி எறிந்து சொல்லியவர் மகனை பார்க்க தலைகுனிந்து அமர்ந்திருந்தான் அவன்.
“கேட்டியாலே. அந்த கோட்டிக்காரானுவ கூட சேராதன்னேன்…” என அழுதுகொண்டே அவனின் கையில் கட்டப்பட்டிருந்த மின்னொளியின் தாவணியை கழட்டிகொண்டே வசைபாட அவனோ நிமிரவே இல்லை.
விடியல் கொஞ்சம் கொஞ்சமாக தன் வெளிச்சத்தை பரப்பிகொண்டிருக்க ஊரில் இருந்தவர்கள் கூடியிருந்தனர். அழுதுகொண்டே மகனை அழைத்துக்கொண்டு அன்னம் செல்ல போகும் நேரம் மின்னொளியை அவர் பார்த்த பார்வையில் தான் அத்தனை வெறுப்பும், ஆத்திரமும் அலையாய் பெருகியது.
தன்னை கடந்து செல்ல இருந்தவனை பார்த்த மின்னொளி அவனின் தடுமாற்றமான நடையில் முகத்தை சுருக்கினாள்.
“லே கூட்டாளி வெக்கிதது முக்கியமில்லலே. ஒ சோக்காளி யோக்கியனா இருக்கனும்ப்பே. போ போ…” என எகத்தாளமாய் வேறு சொல்ல அவன் சட்டென்று அவளை நிமிர்ந்து பார்க்க அந்த பார்வை வீச்சில் அவளின் வார்த்தை அப்படியே நின்றது.
பார்த்தவன் பார்த்தபடி இருக்க அன்னத்தின் இழுப்பின் கீழே மின்னொளியை அழுத்தமாய் பார்த்துக்கொண்டே அவன் செல்ல கூட்டம் மொத்தமும்,
“அன்னம் மவன் எம்புட்டு யோக்கியம்ன்னு நமக்குத்தேன் தெரியுமே. இவ அடங்காக்குதிர. இவக்கிட்ட சிக்கிட்டாம் பாவத்த…” என முணுமுணுக்க,
“அந்த சனியன் புடிச்சவனுங்கதேன் இவனுக்கு எதையாச்சும் ஊத்திவிட்டுருப்பானுங்க. பாவத்த இதுவும் என்னனு வெளங்காம குடிச்சுட்டு இங்க மாட்டிக்கிச்சு. பாவம் அன்னம். ஆனாலும் இவளுக்கிருக்க கொழுப்பு ஆகாதுடிம்மா…” என்று கிசுகிசுக்க,
“படம் பாத்தா பாத்திட்டு கம்முக்கு போவனும். அத்த விட்டு இங்க என்னவே பேச்சு? என்கிட்டே வந்து பேசுங்க…” மின்னொளி அதற்கும் சத்தமிட கப்சிப்பென்று கலைந்தனர்.
“இதெல்லா நல்லதுக்குன்னு நெனைக்கிதீகளா? மான மருவாதின்னு எல்லாத்தையும் வாங்கிப்புட்டா…” ராஜாத்தி அழ ஆரம்பிக்க அவரை கண்டுகொள்ளாமல் அலட்சியத்துடன் வேகமாய் வீட்டுக்குள் நுழைந்தாள் மின்னொளி.
உள்ளே நுழைந்த வேகத்தில் மீண்டும் வாசலுக்கு வர அங்கே நின்றபடி இவர்கள் வாசலை வெறித்தவண்ணம் நின்றான் அருள்ஜோதி. அவனை பார்த்ததும் உண்டான எரிச்சலுடன்,
“வந்துட்டான் பலகாரச்சீரை தூக்கிட்டு, யார் கேட்டா இவன்கிட்ட?…” என்று அவள் முறைக்க முருகய்யனும் ராஜாத்தியும் என்ன செய்வதென புரியாது விழிபிதுங்கி நின்றனர்.
அருளோ மின்னொளி பேசியதும் அவளுக்கு மேலான கோபத்துடன் அங்கிருந்து ஆத்திரத்துடன் கிளம்ப பதறிப்போயினர் முருகய்யனும், ராஜாத்தியும். அதை ஒருவித அலட்சியத்துடன் பார்த்து நின்றாள் மின்னொளி.
அவன் தலை மறைந்ததும் பால் வாங்க நிற்பவர்களுக்கு அவள் ஊற்ற ஒருவரும் ஒரு வார்த்தை பேசவில்லை அவளின் முகத்தில் இருந்த கடுமையில். எதுவுமே நடக்காததை போல அவள் இருக்க ராஜாத்திக்குதான் பொறுக்கவில்லை.
கிளம்பி சென்ற அருள் சிறிது நேரத்திற்கெல்லாம் அழகுப்பாட்டியுடன் வந்துவிட்டான்.
முதலிலேயே அவரும் உடன் வருகிறேன் என்று தான் சொன்னார். கணேசன் தான் முறையாக முருகய்யன் வீட்டுக்கு பலகாரம் கொடுக்கவேண்டும் என்றதும் அதை எடுத்துக்கொண்டு கிளம்ப காசியாத்தா வேறு சமைத்த கறி, கோழி வகைகள் அனைத்தும் அப்படியே இருக்க அதையும் பாத்திரங்களில் ஊற்றி கொடுத்துவிட்டார்.
அவனுடன் வருகிறேன் என்ற அழகுப்பாட்டியை மாலை வரை இருக்குமாறு சொல்லி கிளம்பி வந்தவன் மின்னொளி செய்துவைத்த காரியத்தினால் கடும் கோபமாகி கொண்டுவந்ததை வாசலிலேயே இறக்கிவிட்டு கிளம்பிவிட்டான்.
அதை பார்த்து எடுத்து வந்த ராஜாத்தி ஓரத்தில் வைத்துவிட்டு விடாமல் அழுதுக்கொண்டு இருக்க உறக்கம் கலைந்து எழுந்துவந்த இளவரசனை மின்னொளி பார்த்துக்கொண்டாள்.
ராஜாத்தியின் புலம்பல்கள் எதுவும் அவளின் காதில் ஏறவில்லை. அவள் பாட்டுக்கு வேலைகளை பார்த்தபடி இருக்க அழகுப்பாட்டி வந்ததும் அத்தனை கோபமாய் வந்து மின்னொளியை அறைய போக,
“கெழவி, ஒன்னிய இங்க அடிக்கவா கூட்டியாந்தேன்? நித்தம் இவளால எங்கக்காவுக்கு நிம்மதியில்ல. பொம்பள புள்ள அடக்க ஒடுக்கமா இருக்க முடியாதா? ஏன் ராமுச்சூடும் அந்த மனுசேன் அதேன் இவ அப்பா இங்க தானே இருந்தாரு. விசயத்த சொல்லுததுக்கென்ன இவளுக்கு?…” என்று அருள் எகிறிவிட்டு செல்ல,
“இப்ப இவன யாரு பஞ்சாயத்துக்கு கூப்புட்டா கெழவி?…” என மின்னொளியும் அருளை திட்ட,
“சும்மா நிறுத்து புள்ள. நானும் பாத்துட்டே இருக்கேன். எப்ப பாத்தாலும் ஒரண்டைய கூட்டுத. இப்ப என்ன காரியத்த பண்ணிவச்சிருக்க?…”
“அவென் எதுக்கு நம்ம தொழுவத்துல தன்னியடிச்சான்? குடியிருக்க வீடுன்னு நெனச்சானா என்ன?…”
“காவாலிப்பயலுவ அப்பிடித்தேன் இருப்பானுவ. அதுக்கு நீ எதுக்குடி கட்டிவச்ச? வெளக்கமாத்தால நாலு சாத்து சாத்தி அடிச்சு தொறத்தரத விட்டுப்புட்டு இப்ப ஊரே நாக்குமேல பல்ல போட்டு பேசுமே?…” என்றவர்,
“குடிகார நாயிக, ஏடாகூடமா என்னத்தையாச்சும் பண்ணிருந்தா வீட்டுல ஒரு உசுரு மிஞ்சிருக்குமாடி? யோசிக்கவே மாட்டியா? இந்த மொத்த ஊருமே இனி பரிகாசமா ஏசுமே…”
“பேசினா பேசட்டும். அதுக்காவலாம் பயந்துக்கிட்டா இருப்பாங்க?…” மின்னொளியின் அலட்சியம் அழகுப்பாட்டியை பயமுறுத்தியது.
“நீ பண்ணிவச்சிருக்க காரியத்துக்கு அவனுங்க வஞ்சம் வச்சி எதாச்சும் பண்ணிட்டானுங்கன்னா? ஏன்டி ஒனக்கு வெளங்க மாட்டிக்கு? பொம்பளைப்புள்ளையா வளந்து நிக்கித. எங்களுக்குத்தேன் ஈரக்கொலையே நடுங்குது…”
“ப்ச், கெழவி வாரச்சவே அவென் ஒனக்கு மந்திரிச்சு கூட்டியாந்தானா? இந்த வசவு வையுத…”
“ஏத்தா அங்க பாரு ஒ சின்னாத்தால. எங்க மொகத்துல அருளு கருகிக்கெடக்குத்தா. ஒனக்கு வெளங்குதா இல்லியா? ஒ அப்பனோட மூஞ்சிய பாரு. நாலு சோலியா வெளிய போறவேன், எத்தன பேச்சு இதனால வாங்கனும்?…”
“இப்ப என்ன என்ன செய்ய சொல்லுத?…” மின்னொளிக்கு எரிச்சலாகியது.
“எதுக்குடி எகிறுத? ஆஞ்சுபிடுவேன் பாத்துக்க. எங்கையோ போறாத்தா, எம்மேல ஏறாத்தான்னு ஒங்கோவத்த அவேங்கிட்ட எதுக்கு காமிச்ச? ஒனக்கு தெரியும் தானே அவே அப்புராணின்னு. இப்பிடி முச்சந்தில நிறுத்தி மூக்கறுத்தமாதிரி பண்ணிட்டியே, சும்மாவே அன்னத்தோட வாயில விழுந்தா தப்பிக்க முடியாது…” என்றவர் கண்ணீரை துடைத்துவிட்டு,
“நீ வாழவேண்டிய குறுத்துடி. அவ என்னென்ன பேச போறாளோ?…” என்று கண்ணீர் விட மின்னொளிக்கு தான் தலைவேதனையாய் போனது.
“பொட்டப்புள்ளைக்கு இம்புட்டு ஆகாது. இந்த வீட்டுல ஆம்பளைன்னு இவ அப்பனுக்கு என்ன மருவாதி?…” என தன் போக்கில் அழகுப்பாட்டி புலம்ப ராஜாத்தி தான் ஆறுதலாய் அமர்ந்துகொண்டார் அவருடன்.
மின்னொளி தான் தவறு செய்யவில்லை என்பதில் தெளிவாய் இருந்தவள் பாட்டியின் பேச்சில் கொஞ்சம் தடுமாறினாள்.
ஆமாம் தானே? அத்தனை பேரும் தப்பித்தோம் என்று ஓடிவிட தர்மராஜை மட்டும் அவள் கட்டி வைத்தது எதனால்?
உண்மையில் அவனால் ஒரு அடி கூட எடுத்து வைக்கமுடியாத அளவுக்கு தான் அவனின் நிலை இருந்தது.
அந்த போதையில் அவன் பேசியது வேறு. இவன் மனதில் இப்படியெல்லாம் வேறு நினைப்பிருக்கிறதா? என்கிற கோபம் வேறு.
மனதில் இருந்த அலைப்புருதல் வேறு. அவளை வேறெதுவும் யோசிக்கவிடவில்லை.
மாமன் வீட்டில் அந்நியப்பட்டு நின்றது, தன்னை யாருமற்றவளாய் மனது வரித்துக்கொண்டது எல்லாவற்றிற்கும் மேல் என் வீடென்றால் ஒரு பயமில்லாமல் இப்படி அக்கிரமம் செய்கிறார்களே அதிலும் குடியிருக்கும் வீட்டில். என்ன ஒரு அகம்பாவம் என்கிற கோபம் அனைத்தும் தர்மராஜிடம் காட்டிவிட்டாள்.
இதன் விளைவு, அது தன்னை கொண்டு செல்லும் நிறுத்தப்போகும் இடத்தை அறியாமல் போனால் மின்னொளி.
அதுவும் விரைவிலேயே. அந்த விரைவும் அடுத்த ஒரு இரண்டு வாரங்களுக்குள்ளேயே என்பதையும் தெரியாமல் நின்றாள்.