கடல் – 12
கதவை திறந்ததும் வெளியே வேகமாய் வந்தவள் அங்கிருந்த தோட்டத்து வேலையாட்களையும், தோப்புக்கு அமர்த்தியிருந்த காவல்காரர்களோடு இன்னும் சிலரும், பக்கத்து தோப்பு ஆட்களும் என கூடியிருந்தனர்.
அதனை பார்த்துவிட்டு உள்ளே நின்றவனை திரும்பி பார்த்து முறைத்தவள் மீண்டும் கூட்டத்தில் துழாவ அங்கே ஒரு மூலையில் முருகய்யனும், சற்று தூரத்தில் இறுகிய முகத்துடன் தலையில் கைவைத்து அமர்ந்திருந்த அன்னமும் கண்ணில் பட்டனர்.
“எவனோ சோலிய பாத்துருக்கான்ப்பு. மின்னுவ நமக்கு தெரியாதா?…” என ஒருவன் ஆரம்பிக்க,
“அதெதுக்கு தருமனும் உள்ள இருந்தானாம்? அத கேளுய்யா…” என இன்னொருவனும் சொல்ல மின்னொளியின் கண்கள் தவிப்புடன் தன் தந்தையை தான் பார்த்தது.
அவரோ கலங்கிப்போய் நின்றார். அடுத்தடுத்து இப்படி பிரச்சனைகள் வந்தால் அவரும் தான் என்ன செய்வார்? மனதளவில் ஒடிந்துவிட்டார்.
“இப்ப என்னப்பா சும்மா தேவையில்லாத பேச்ச பேசிக்கிட்டு. எல்லா மொறமக்காரங்க தான? கெட்டி வச்சிடவேண்டிதேன்…”
“வாய மூடுங்கைய்யா. எவனாச்சும் இன்னொருக்க இந்த பேச்ச பேசினீங்க?…” என விரல் நீட்டி எச்சரித்தவள்,
“இந்தா வெளில வாடா…” என தர்மராஜை அழைக்க அவன் பயந்துகொண்டே அச்சத்துடன் வெளியே வந்து நின்றான்.
“எதுக்கு என்னிய பாக்க வந்ததா சொன்ன? அத்த இப்ப இங்க சொல்லு…” என்று அதிகாரமாய் சொல்ல அன்னமும் மகன் என்ன சொல்ல போகிறான் என பரிதவிப்புடன் பார்க்க தர்மராஜோ மின்னொளியின் மிரட்டலில் தன் திட்டத்தை மறந்தவனாக,
“அன்னிக்கு நடந்ததுக்கு மன்னிச்சுக்க கேக்கத்தேன் வந்தேன். எவனோ கதவ சாத்திப்புட்டானுங்க…” என சொல்ல,
“ஏம்லே அதேன் பாக்கெட்டுல போன வச்சிருக்கதான? ஒரு போன போட்டு ஆருக்காச்சும் தாக்கல் சொல்லிருக்கலாமில்ல?…” என்றதும் மின்னொளி இன்னும் முறைக்க,
“பதட்டத்துல அத மறந்துட்டேன்…” என்று தலை குனிந்தவாறு பேச,
“அதேன் கேட்டுகிட்டீகள்ள. போங்கைய்யா. இதுக்குன்னே வந்துருவீக…” என உச்சஸ்தானியில் சத்தம் போட,
“இந்தாம்மா…” என இடையிட்ட ஒருவனை,
“அதேன் சொல்லுதுல இது எங்க வீட்டு வெவகாரம். நாங்க பேசிக்கிடுதோம்…”என்று வந்து மின்னொளியின் முன்னால் நின்றது அன்னமே தான்.
சத்தமிடுவார், சண்டையிடுவார், பெரிதாய் பிரச்சனை செய்வார் என்று அனைவரும் நினைத்திருக்க அவரோ இத்தனை நிதானமாய் பேசிக்கொள்கிறோம் என்று சொல்லிவிட்டாரே என பார்த்தபடி நின்றனர்.
அவரை யோசனையுடன் பார்த்த மின்னொளியின் உள்ளுணர்வு எதையோ எச்சரிக்க தன் தந்தையை பார்த்தவள் அங்கே கயிற்று கட்டிலில் இருந்த சாப்பாட்டு கூடையையும் தனது போனையும் எடுத்துகொண்டு விறுவிறுவென முருகய்யனின் அருகில் சென்று அவரின் கையை பிடித்து நடக்க ஆரம்பித்துவிட்டாள்.
பல வருடங்களுக்கு பின்னான மகளின் ஸ்பரிசம் சிலிர்க்கும் உணர்வை கூட அனுபவிக்க முடியாது குறுகிப்போய் இருந்தார்.
அவருக்கும் தெரியும் மகளை பற்றி. ஆனாலும் ஊர் வாயை மூட முடியுமா? தர்மனின் மேல் ஆத்திரமாக வந்தது. இவனை யார் மன்னிப்பு கேட்க அழைத்தது என்று. அந்த ஆற்றாமையை காட்ட கூட முடியாமல் மகளின் வழி நடத்துதலில் வீடு நோக்கி சென்றார்.
அவர்கள் செல்வதை பார்த்தபடி இருந்த கூட்டத்தார் முணுமுணுப்புடன் தங்களுக்குள்,
“இத்தினி பேரு பேசிக்கிட்டு இருக்கோமே இது பாட்டுக்கு போவுது. கொஞ்சமும் மருவாதின்றதே இல்லாம வளத்து வச்சிருக்கான் முருகேன்…” என சாட அன்னம் முறைத்த முறைப்பில் சத்தமின்றி கலைந்தனர்.
அன்னம் மகனை நிமிர்ந்து கூட பார்க்கவில்லை. வேலைகளை போட்டுவிட்டு வேகமாய் வீட்டிற்கு சென்றுவிட்டார்.
அதற்குள் ஊருக்குள் காட்டுத்தீயென விஷயம் பரவி இருக்க இவரை பார்த்ததும் அனைவரும் அவர்களுக்குள் பேசிக்கொள்ள தலைவேதனையாக போனது.
அவரின் பின்னே வந்த தர்மனுக்கு இப்பொழுது ஒருவித திருப்தி. ஊர்மக்கள் பேசி பேசியே மின்னொளியை தன்னிடம் சேர்த்துவிடுவார்கள் என்னும் எண்ணத்துடன் வீட்டிற்கு சென்றான்.
வீட்டு சாவி அவனிடம் இருப்பதால் அங்கே வாசலில் மரத்தடியில் அவர் அமர்ந்திருக்க அதனை கண்டு வேகமாய் வீட்டை திறந்தவன் அன்னத்தை எப்படி சம்மதிக்க வைக்கவென யோசனையோடு முகத்தை மிக பாவமாய் வைத்துக்கொண்டான்.
உள்ளே சென்றவர் தண்ணீரை குடித்துவிட்டு அமர அவரின் காலடியில் அமர்ந்தவன்,
“அம்மோவ்…” என்றான் மெதுவாய். அவனை நிமிர்ந்து பார்த்த அன்னம் மகனை புதிதாய் பார்ப்பதை போல பார்த்தபடியே இருக்க இவனுக்கோ மனதிற்குள் திடுக்கென்று இருந்தது.
“அம்மோவ் நானு…”
“ஒனக்கு அவள புடிக்குதா ராசு?…” என்றார் எடுத்த எடுப்பிலேயே.
“அம்மோவ்…” என நம்பமுடியாமல் பார்த்தான் அவன்.
“சொல்லுலே ஒனக்கு புடிக்குதா?…” என மீண்டும் கேட்க மௌனமாய் தலை குனிந்தான்.
“அதுக்கு ஏம்லே அந்த புள்ளைய அசிங்கப்படுத்துத மாதிரி பண்ணுன?…” என்றார் உணர்ச்சியற்ற குரலில்.
“அம்மா, சத்தியமா இல்லம்மோவ். நா அப்பிடி பண்ணுதவனா?…” என அழுகையை கையிலெடுக்க,
“இங்காரு ராசு, ஒங்கம்மா கோவக்காரிதேன். அவள கண்டாலே வேப்பங்காயிதேன். அதுக்குன்னு முட்டாக்கழுத கெடையாது. எனக்கு அவளையு தெரியும், ஒன்னியவும் தெரியும்லே…”
“என்னைய நீ நம்பலையா?…” என்றான் மகன்.
“ஒன்னிய நம்புததும், நம்பாததும் ரெண்டாவதுலே. ஒங்கூட அந்த கதிரு வந்தான் தான?…” என மேலும் அதிரவைத்து,
“நீ சொல்லாம அந்நேரம் எவனும் வாரதுக்கும் வாய்ப்பு இல்ல. இத மின்னு வீட்டு தோப்புல செய்யிததுக்கும் எவனுக்கும் தெகிரியமில்ல. இம்புட்டு நாளு நடக்காதது இப்ப நடக்குது. எனக்கு வெளங்காதா?…” என்றவர்,
“சோக்காளிக செரி பேசிட்டு போவீகன்னு பாத்தா என்ன காரியத்தலே பண்ணி வெச்சிருக்க? பொம்பளப்புள்ள பாவம் பொல்லாததுலே. நம்ம வம்சத்தையே வேரறுத்துப்போடும். இப்பிடின்னு எங்கிட்ட நீ சொல்லிருந்தா அவ வீட்டு படியேறி போயி நானே பேசிருப்பேனே?…”
“அம்மோவ், நீ நெசமாத்தேன் சொல்லுதியா?…” என ஆசையில் அவன் கண்கள் விரிந்ததில் அன்னத்தின் மனது சுக்குநூறாய் உடைந்து போனது.
இதுதான் என் வளர்ப்பா? எங்கே தவறு செய்தேன்? இப்படி பாவத்திற்கு அஞ்சாதவனாய் மனதளவில் உருவெடுத்திருக்கும் தன் மகனின் எதிர்காலம் பயத்தை விதைத்தது.
அதையும் விட அவனிடம் ஒட்டிக்கொண்டிருக்கும் கெட்டபழக்கம் அவனையே சிதைத்துவிடுமோ என்று பயந்தார்.
அவனுடைய நண்பர்கள் வீட்டில் சண்டையிட்ட போது அங்கு அவர் அறிந்த தகவல் வெறும் குடியோடு மட்டுமா மகனின் பழக்கம், பெயர்தெரியாத போதை பழக்கம் வேறு உள்ளதாமே? என பயந்து செத்துகொண்டிருந்தார் இந்த நொடி வரை.
இரு நாட்களுக்கும் முன்பு குணசாலி தன்னை வந்து பார்த்த பொழுதே அவருக்கு ஒரே யோசனை தான்.
“இங்காரு மதினி, நம்ம பையனுக்கு பொண்ணு தேடி இன்னும் சிக்கமாட்டிக்குது. இப்ப இந்த சலம்பலு வேற. கெட்ட சகவாசம். பேசாம அந்த மின்னுவ கெட்டி வச்சிட்டா இவனும் அடங்கிக்கெடப்பான். அவளும் ஒங்காலுக்கு கீழ. இப்ப இருக்கதுக்கு நீ பொண்ணு கேட்டா மவராசனா கெட்டிவச்சிடுவாரு அண்ணே. யோசி…”
இப்படி அன்னத்தின் மனதில் கல்லெறிந்துவிட்டு சென்றிருந்தாள் குணசாலி. அதையே யோசித்துகொண்டிருந்தவர் இப்பொழுது இப்படி ஒரு காரியத்தை செய்துவைத்திருக்க இனி இதில் பின்வாங்க முடியாது என்று புரிந்துகொண்டார்.
“இன்னிக்கே நா போயி அவ வீட்டுல பேசிட்டு வாரேன்…” என்று சொல்லவும் தர்மராஜின் முகத்தில் அப்படி ஒரு சந்தோஷம். அதை வேதனையுடன் பார்த்தவர் அவனிடம் பேச விருப்பமில்லாமல் நகர்ந்துவிட்டார்.
நினைத்தது நடந்துவிட்ட இறுமாப்பில் தர்மராஜ் வலம் வர மாலை அன்னம் முருகய்யன் வீட்டிற்கு செல்வதை ஊரே வேடிக்கையாக பார்த்தது.
“எனக்கு அப்பவே தெரியும் இதுதேன் நடக்குமின்னு…” என அவரின் காதுபடவே பேச்சுக்கள் வர எதையும் காதில் போட்டுக்கொள்ளாதவாரு அவ்வீட்டினுள் நுழைந்தார்.
ஆளுக்கொரு மூலையில் அவர்கள் குடும்பத்தினர் அமர்ந்திருக்க மின்னொளி அங்கே இல்லை. அவள் அவளின் தாயின் அறைக்குள் தன்னை அமிழ்த்திக்கொண்டாள். பால் கறக்கும் பொழுது கூட வெளியே வரவில்லை.
பால்காரரிடம் ராஜாத்தி பாலை எடுத்து சென்றுவிடும்படி சொல்லிவிட்டார். அவரும் அரசல்புரசலாக அறிந்திருந்தார் தானே?
மின்னொளி எப்பொழுதும் மனது பாரமாகிவிட்டால் ஆறுதல் தேடி அந்த அறைக்குள் சரணடைவது தான் அவளின் வாடிக்கை. இன்றும் அப்படியே தாயின் மடி தேடி சென்றிருக்க,
“அண்ணே…” என்ற குரலில் நிமிர்ந்து பார்த்தனர் மற்றவர்கள். நடு வீட்டிற்குள் வந்திருந்தார் அன்னம். வாவென யாரும் அழைக்கவில்லை என்றாலும் அழகுப்பாட்டியின் அருகே வந்து அமர்ந்துகொண்டார்.
“நா என்னன்னு சொல்லுவேன் பெரியாத்தா? நம்ம குடும்பத்துக்கு கேடுகாலம் புடிச்சு ஆட்டிவெக்கிது…” என ஆரம்பிக்க,
“இப்ப எதுக்குத்தா வந்திருக்க? அத்த மொத சொல்லு நீ…” அழகுப்பாட்டி கத்திரிப்பதை போல பேச அதில் துணுக்குற்ற அன்னம்,
“எல்லாம் நல்ல விசயமாத்தேன். ஊருக்குள்ள ஆளுக்கொரு பேச்சு பேசுதாக. அவிங்க வாயடைக்க வேணாமா? அதேன் சூட்டோடு சூடா பேசாம நாம நம்ம புள்ளைங்களுக்கு ஒரு கலியாணத்த பண்ணி வெச்சுட்டோமின்னா ஒருத்தனும் ஒத்த வார்த்த பேச முடியாது பாருங்க…”
அன்னம் சொல்லவும் அதிர்ந்து போய் பார்த்தனர் மற்றவர்கள். அன்னத்தின் குரல் கேட்டதுமே மின்னொளியின் காதுகள் கூர்மையாகிவிட்டது.
அவர் பேசிய அனைத்தையும் கேட்டுக்கொண்டே தான் அமர்ந்திருந்தாள். இதற்கு தன் குடும்பத்தினர் என்ன பதில் சொல்ல போகின்றனர் என்பதில் தான் அவளின் கவனம் மொத்தமும் இருந்தது.
“சொல்லுண்ணே, நம்மக்குள்ள எல்லா கசப்பையும் மறந்துட்டு புள்ளைகளுக்காக ஒத்துபோவோம். செரின்னு ஒத்த வார்த்த சொல்லு. இந்த ஊரே வாய பொளக்கற மாதிரி இந்த கலியாணத்த நடத்திப்புடுவோம் என்ன சொல்லுத? ராசு நீ சொல்லுத்தா…” என்று அவர்களை யோசிக்கவிடாமல் சம்மதிக்க வைப்பதிலேயே குறியாய் இருக்க அவர் சொல்லியதிலிருந்து மீள முடியாமல் அமர்ந்திருந்தனர்.
ராஜாத்திக்கு அதிசயத்திலும் அதிசயமாய் அன்னம் எப்படி இப்படி இறங்கிவந்து பேச முடியும் என்று யோசிக்க ஆரம்பித்தார். அத்தனை லேசுப்பட்டவர் இல்லை அவர். அவர் இப்படி தானே வந்து சம்பந்தம் பேசுவதென்பது சுலபமில்லையே என அவரின் மூளை எடுத்துக்கொடுக்க,
“எதுனாலும் அவுக முடிவுதேன் மதினி. அவுக எது செஞ்சாலும் எம்புள்ள நல்லதுக்குத்தேன்…” என்று சொல்லி மாமியாரை பார்க்க அழகுப்பாட்டியோ பதறினார் எங்கே மகன் ஒப்புக்கொண்டு விடுவானோ என.
“அண்ணே செரின்னுதேன் சொல்லும். பொம்பளைங்க நாமதேன் புரிஞ்சுக்கனும்…” என சொல்லவும் கதவு திறக்கும் ஓசையில் அனைவரும் நிமிர்ந்து பார்க்க மின்னொளி வந்து நின்றாள் கூடத்தில்.
“வாத்தா, என்னிய மன்னிச்சிக்கிடுத்தா. கோவத்துல ஒன்னிய கண்டபடி ஏசிருந்தாலும் இப்ப மனசார ஒன்னிய கேட்டு வந்துருக்கேன்…” என சொல்ல மின்னொளி பார்வை முழுவதும் தந்தையினிடத்தில்.
நேருக்கு நேராய் மகள் பார்க்க அவரின் முகத்தில் உள்ளதை படிக்க முயன்றவர் ஒருவாறு அவளின் மனநிலையை அனுமானித்து,
“இங்காரு அன்னம், எனக்கு என் பொண்ண தெரியும். அவளுக்கு இதுல விருப்பமில்ல. நீயி ஒன் சோலிய பாரு. பேசுதவன் வேலவெட்டி இல்லாம பேசத்தேன் செய்யுவான். அதுக்கெல்லா வெசனப்பட்டா ஆச்சா? எவனோ ஆகாதபோகாதவே இழுத்துவுட்ட எழவுக்கு இப்பிடி அவசரப்பட்டு முடிவெடுக்க என்னால முடியாதுத்தா…”
முருகய்யன் ஒரேடியாக மறுத்துவிட இதை எதிர்பார்க்காதவர் அதிர்ச்சியோடு மின்னொளியை பார்க்க அவளோ லேசான மனதுடன் தகப்பனை கண்கலங்க பார்த்து நிற்க,
“என்னண்ணே புத்தியோடதேன் பேசுதியா? சுத்த கூறுகெட்ட பேச்சால இருக்குது. நா எறங்கி வந்து கேட்டதும் ஒனக்கு சுளுவா போச்சோ? நல்லதுக்கில்லண்ணே. பொம்பளப்புள்ள வாழ்க்க…” மறைமுகமான எச்சரிக்கை அதில் பொதிந்திருக்க,
“எம்மவளுக்காக நீ அக்கற நீட்டுதது சந்தோசந்தேன். அதுக்குன்னு கலியாணம்? அது செரி வராதுத்தா. என்னிக்கும் நா ஒன்னிய தள்ளி நெனச்சதில்ல. நீயா சண்டபிடிச்ச. நீயா விரோதமா பாத்த. அதுக்கு நா என்ன பண்ணுவே? எல்லாமே நீயா முடிவு பண்ணுத…”
“பழச மனசுல வெச்சிக்கிட்டுத்தேன் நீ இப்பிடி பேசுத. எனக்கு நல்லா புரிஞ்சிக்கிடுச்சு. இங்காரு, இப்ப ஒம்பொண்ண என் மவனுக்கு கட்டிவச்சாதேன். இல்லனா எவனும் கட்ட நா விடமாட்டேன் பாத்துக்க. அவ எம்வீட்டு மருமவ…”
அன்னம் தன் கோபத்தை காட்ட ஆரம்பித்தார். ஊர் பார்க்க பெண் கேட்டு வந்து முடியாதென இவர் மறுத்தால் ஊருக்குள் தன்னை எப்படி மதிப்பார்கள்? அதைவிட என் மகனின் எதிர்காலம்? என சுயநலமாய் நினைத்தவர்,
“நல்லா யோசிச்சு சொல்லுண்ணே. இது அவ நல்லதுக்கும்தேன். ஒனக்கு நாலு நாளு டையம் தாரேன்…” என்று சொல்லிவிட்டு அனைவரையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு செல்ல அனைவரின் முகமுமே கோபத்தை பிரதிபலித்தது.
ஏற்கனவே கலக்கத்தில் இருந்தவர்கள் அன்னத்தின் பேச்சில் நிலைகுலைந்து நின்றனர். மின்னொளி அப்படியே அமர்ந்துவிட்டாள்.
யாரிடமும் எதையும் கேட்டு செய்து பழக்கமில்லாதவள், இப்பொழுது தான் செய்தது தன்னளவில் சரி என்றாலும் குடும்பத்தை எந்தளவிற்கு அது பாதிக்கிறது என்று கண்டு உடைந்து போய் அமர்ந்தாள்.
அரைமணிநேரம் கடந்திருக்கும். மகளை பார்த்தவர் தன் தாயின் அருகில் வந்து நின்றவர்,
“ஆத்தா, ஒம்பேத்திட்ட சொல்லு, அப்பேன் நானு உசுரோட இருக்கற வரைக்கு கலங்காம இருக்க சொல்லுத்தா. அவள வாழவச்சு பாக்காம யே உசுரு போவாதுத்தா. கண்ண தொடைக்க சொல்லு. இப்ப வந்துடறேன்…” என்று தோளில் துண்டை போட்டுக்கொண்டு கிளம்பிவிட்டார்.
முருகய்யன் பேசியதை கேட்டதும் தான் தன் கண்களில் கண்ணீர் வழிவதையே உணர்ந்தாள் மின்னொளி. கண்ணை துடைத்துக்கொண்டு அமர்ந்திருக்க,
“ஆத்தா, எஞ்சாமி, செத்த பக்கத்துல வாய்யா…” என அழைத்த அழகுப்பாட்டியின் அருகே நகர்ந்து அமரவும் அவளை தன் மடியில் சாய்த்துக்கொண்டார்.
“எம்புள்ளைக்கு நானில்ல இங்க குடும்பமே ஆதரவுதேன். கலங்காதத்தா. ஒங்கப்பேன் தாங்கமாட்டான்த்தா…” என தலையை வருட ராஜாத்தியின் அருகே அமர்ந்திருந்த இளவரசன் தன் தாயை பார்க்க,
“போயி மின்னுக்கிட்ட ஒக்காரு சாமி…” என மகனை அனுப்பிவிட்டார். அவனும் வந்து மின்னொளியின் மேல் சாய்ந்து அணைத்துக்கொண்டான்.
தன்னை உயிரென தாங்கும் குடும்பம் வாய்க்கபெற்றவள், வரம் வாங்கி பிறந்திருந்தவள் என அந்த நொடி தன்னை உணர்ந்தாள்.
இரண்டுமணிநேரம் கழித்து வீட்டிற்குள் வந்த முருகய்யன் முகமே வாடிப்போய் இருந்தது. அவர் வரும் வரைக்கும் அனைவரும் அப்படியே இருக்க தளர்ந்து போய் வந்தவரிடம் எதுவும் கேட்காமல் குடிக்க தண்ணீரை கொண்டுவந்து கொடுத்தார் ராஜாத்தி.
முருகய்யன் தயங்கி தயங்கி தன் முகத்தை பார்ப்பதை கண்ட மின்னொளி அங்கிருந்து எழுந்து செல்ல செல்லும் அவளையே பார்த்திருந்தவர் மகள் மீண்டும் தாயின் அறைக்குள் முடங்குவதை பார்த்துவிட்டு,
“எம்புள்ளைய என்னால கரசேக்க முடியாதா ராசு?…” என சிறுபிள்ளை போல விசும்பியவரை கண்டு சமைந்துபோனார் ராஜாத்தி.
முத்துநகை இறந்த வீட்டில் அவர் கண்ணீர் விட்டது. அதன் பின் இன்றுதான் பார்க்கிறார்.
“ஆத்தீ எஞ்சாமி ஒம்ம கண்ணுல தண்ணியா? என்னாச்சுன்னு சொல்லுகவே…” என பதற அழகுப்பாட்டியும் வந்து அவரை தோள் தட்ட,
“எம்மா எம்புள்ளைக்காக அருளுக்கிட்ட கையேந்துனேன். அவனே என்ன கைவிட்டுட்டானே. வேற எவேன் வருவான் எம்மவள கட்டிக்க?…” என்றதும்,
“அருளிடம் சென்று திருமணத்திற்கு கேட்டாரா?” என ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக நினைக்க, ராஜாத்திக்கு இது என்ன சோதனை என்றிருக்க, அழகுப்பாட்டிக்கு மறுத்துவிட்டானா என்ற வேதனையை தர, மின்னொளி அருளிடம் தன்னை திருமணம் செய்ய சொல்லி கேட்டதே பெரும் அதிர்ச்சியாக இருந்தது.
“முருகா, அய்யா கலங்காதப்பு. பாத்துக்கலாம். எதுக்கு அவதியவதியா பண்ணப்பாக்குத?….” அழகுப்பாட்டி தேற்ற,
“ஆத்தா எனக்கு பயமா இருக்குது. அந்த பய தருமேன் போக்கே செரியில்ல. பாக்கத்தேன் அப்புராணி. ஆனா பழக்கவழக்கமேல்லாம் சொல்லிக்கித மாதிரி இல்லியே. இன்னிக்கு எம்பொண்ண அசிங்கப்படுத்த நெனச்சவே நாளைக்கி என்னானாலும் செய்யுவானே?…”
“என்னய்யா சொல்லுத?…” என அதிர்ச்சியுடன் கேட்க,
“ஆமாத்தா எனக்கு அவென் மேலதேன் சந்தேகமாவே இருக்கு…” என்றவரின் பயம் அவரின் குரலிலேயே அப்பட்டமாய் தெரிய,
“மொத இத்த வுடு. பொறவு பேசுவோம். என்ன நாஞ்சொல்லுதது? ஒம்மவ வேற கலங்கிப்போயி கெடக்கா. இப்ப நீயும் பேசுனா. வேணாம்ய்யா…” என தேற்ற அதன் பின் ஒருவரும் பேசிக்கொள்ளவில்லை. அப்படி ஒரு அமைதி அந்த வீட்டில். உறக்கம் என்பது ஒருவருக்கும் இல்லை.
விடிந்ததும் அவரவர் வேலையை அவரவர் செய்துகொண்டிருக்க வழக்கம் போல தோப்பிருக்கு மின்னொளி கிளம்ப அழகுப்பாட்டி விடவில்லை.
“வேணாம்த்தா சொல்லுதத கேளு. எங்கயும் போவ வேணா. எங்க கண்ணுமுன்னவே இரு…” என தடுக்க,
“நீ என்னிய நம்புதியா கெழவி?…” என கேட்க,
“ஆத்தே என்ன வார்த்தடி சொல்லிட்ட? ஒன்னிய நம்பாமலா?…” என்று அவளை கட்டிக்கொள்ள,
“அத்தே விடுங்க. அவ போவட்டும்…” ராஜாத்தி சொல்லவும் அவரின் முகத்தில் என்ன கண்டாரோ அழகுப்பாட்டி விட்டுவிட்டார்.
மின்னொளி நேராக தோப்பிற்கு செல்லாமல் ஊருக்கு வெளியே நடந்து வந்து சுப்புவிற்கு அழைத்து ஆட்டோவை எடுத்துக்கொண்டு வருமாறு சொல்ல அவனும் எதுவும் கேட்காமல் வந்துவிட்டான்.
“ஓங்கூட்டாளி எங்கருப்பான்? அங்க வண்டிய வுடு…” என்றவளின் தோரணையில் பதிலின்றி அவளை அழைத்துக்கொண்டு அருளின் வயல் காட்டிற்கு சென்றான்.
“இங்கனயே நில்லு, இப்ப வந்துடுவேன்…” என்று சொல்லி இறங்கியவள் வரப்பில் நடந்துகொண்டே அவனை தேட தூரத்தில் கிணற்று மேட்டு நிழலில் அமர்ந்திருந்தான் அருள்ஜோதி.
பம்புசெட்டில் தண்ணீர் பாய்ந்துகொண்டிருக்க சிந்தனையோ வேறுலகில் இருந்தது. இவள் வருவதை கூட உணரவில்லை அவன். அவளின் கொலுசொலி அவனை சமீபித்ததும் தான் நிமிர்ந்து பார்த்தான். பார்த்ததும் துள்ளி இறங்கியவன்,
“இங்க என்ன ஒனக்கு சோலி?…” என்றான் பதட்டமாக.
இப்படி அவனை தேடி என்றுமே அவள் வந்ததில்லை. முதல் நாள் வேறு தன் கைகளை பிடித்தபடி முருகய்யன் கெஞ்சியது, இவன் மறுத்தது எல்லாம் சேர்ந்து அவனை இம்சித்துக்கொண்டிருந்தது. இவள் இப்படி காலையிலே வந்து நின்றால் என்னவென நினைப்பான்?
“வீட்ல எல்லாருமே சொகந்தானே?…” என வினவியவனின் முகத்தை ஆழ்ந்து பார்த்தவள்,
“என்னிய கட்டிக்கமாட்டேன்னு நேத்து எங்கப்பாருட்ட சொன்னியா?…” என்றாள் தன் கைகளை மார்பின் குறுக்கே கட்டிக்கொண்டு. அவளின் தோரணையில் பெருமூச்சுவிட்டவன் யாருக்கும் ஒன்றுமில்லை என்னும் ஆசுவாசத்தில்,
“ஆமா, அதுக்கென்ன இப்ப? அதேன் மாட்டேன்னு சொல்லிட்டேம்ல. பொறவு நீ எதுக்கு வந்த? கெளம்பு மொத….” என அவளை விரட்டினான்.
“போவத்தேன் போறேன். பொறவு இங்கனயே ஒங்கூட இருப்பேன்னு நெனப்பாக்கும்?…” என்றவளின் குரலில் இருந்ததென்ன என்பதை கண்டுபிடிக்க முடியாமல்,
“என்னடி பேச்செல்லாம் ஒரு மார்க்கமா போவுது? போன்னா போயிரு. இந்தா ஒத்தையிலையா வந்த? இரு, சுப்புவ வர சொல்லுதேன். வண்டில போ…” என்று போனை எடுக்க,
“போவத்தேன் போவத்தேன். அதுக்குமின்ன மொத நாஞ்சொல்லுதத கேளு. நாளான்னிக்கு நீ ஒங்கம்மாவோட என்னிய பரிசம் போட வரனும். அதுக்கு ஒனக்கு தாக்கல் சொல்லத்தேன் வந்தேன்…” என பட்டென்று விஷயத்தை போட்டுடைக்க,
“என்ன என்ன என்ன சொல்லுத? மறுக்கா சொல்லு…” என நம்பமுடியாமல் அவன் தடுமாற,
“ஒனக்கு ஒருக்கா சொன்ன புரியாதா? என்னிய பரிசம் போட வரனுமின்னு சொல்லுதேன். வர அம்புட்டுதேன்…” என முடிவாய் ஸ்திரமாய் சொல்ல,
“என்னடி வெளாடுதியா? அதேன் நேத்தே ஒங்கப்பாருட்ட சொல்லிட்டேனுல்ல மாட்டேன்னு. பொறவு நீ வந்து நின்னா நா வந்துருவேனா?…”
“இங்காரு நீ வர அவ்வளோதேன். எப்பேர்ப்பட்ட மனுசேன் அவரு? ஒங்கிட்ட கையேந்தி கேட்க வச்சுட்டல. கேட்டவருட்ட மாட்டேன்னு அந்த மனுசன உசுரோட கொலையறுத்துட்டல…”என கண் கலங்கி அவள் சொல்ல ஏற்கனவே அந்த குற்றவுணர்வில் தான் அருள் குமைந்துகொண்டிருந்தான்.
இப்பொழுது மின்னொளியும் அதனை சொல்லிக்காண்பிக்க பதிலின்றி பார்த்தான் மின்னொளியை.
முதல்முறையாக ஒரு கோபமில்லாத பார்வை. ஆனால் அதற்கென அவளுடன் திருமணமெல்லாம் நினைத்துக்கூட பார்க்கமுடியவில்லை.
“இங்காரு புள்ள, நீ…”
“ஒன்னும் பேச வேணா. நீ வர. வரனும். நீ வருவன்னு பட்டுடுத்தி ஒனக்காக நா காத்துட்டு இருப்பேன். வந்து என்னிய பரிசம் போட்டு போற. அம்புட்டுத்தேன். போய் ஒங்கம்மாட்ட தாக்கல் சொல்லிடு…” என்றவள் அங்கிருந்து சென்றுவிட அசையாமல் நின்றான் அருள்.