கடல் – 13
மின்னொளி கிளம்பி சென்ற சிறிது நேரத்திலேயே ராஜாத்தி காசியாத்தாவுக்கு அழைத்துவிட்டார்.
“ஒங்கிட்ட எதாச்சும் சொன்னானா சோதி?…” என எடுத்த எடுப்பிலேயே கேட்க,
“இந்தா மெதுவாத்தேன் பேசேன். எந்த வண்டிய புடிக்கிததுக்கு இம்புட்டு வேவமா பேசுத?…” என விஷயத்தின் வீரியம் புரியாது சாவாகாசமாக காசியாத்தா கதைபேசும் பாவனையில் கேட்க,
“ஆத்தா நா என்ன கேக்குதேன். நீ என்னத்த சொல்லுத?…” என கடுப்படிக்க,
“நீதேன் இன்னமும் சொல்லலையே…” என்றதும் இங்கே நடந்த விஷயத்தை சுருக்கமாய் சொல்ல,
“அந்த எடுபட்டநாயி கால வெட்டி அடுப்புல அவிக்காம இங்கன எங்கிட்ட வந்து உசும்பிட்டு கெடக்குத? வந்தாளாக்கும் வாசப்படி தாண்டி பொண்ணு கேட்டு. ஆரு வீட்டு புள்ளைய யாருக்கு தாரவாக்க?…” என காசியாத்தாவும் கோபமாக ராஜாத்தியை பேச,
“அவுக பண்ணினதுக்கு கொஞ்சமும் கொறச்ச இல்ல ஒம்மவன் பண்ணுனது. புள்ளைக்கு வாழ்க்க குடுன்னு உரிமயோட கேட்டுவந்த மனுசன மூஞ்சிலடிச்சமேனிக்கு கட்டமாட்டேன்னு பட்டுன்னு சொல்லிருக்கான்…”
“யாரடி சொல்லுத? சோதியா? என்னத்த சொன்னாலும் வெளங்குத மாதிரித்தேன் சொல்லேன். எனக்கு வெடவெடக்குதே. ஒம்புருசனா பொண்ண கட்டிக்க கேட்டாரு?…”
“அட ஆமாங்கறேன். உரிமையா கேட்ட மனுசனோட மனச ஒடச்சு அனுப்பிருக்கான். எனக்கு வார கோவத்துக்கு…”
“அட இருடி…” என்றவர் அதையும் கேட்டு தெரிந்துகொள்ள ராஜாத்தி விவரமாய் இப்பொழுது சொல்ல,
“ராசு ஒனக்கு இதுல சம்மதமா? அத சொல்லு மொத…” என்றவரிடம் ஒரு நொடி மௌனம் காத்தவர்,
“சம்மதமில்லாங்கையா ஒங்கிட்ட பேசுதேன். இங்காருத்தா எனக்கு அவுகள மிஞ்சி எதுவுங்கெடையாது. ஒனக்கே தெரியுமில்ல. ராவெல்லாம் ஒறங்காம பொலம்பி தவிச்சுட்டாரு. ஒரு மெடறு தண்ணி தொண்டக்குழில எறங்கலத்தா…” என அழுதுகொண்டே பேச,
“என்ன செய்யனுங்க? அத்த சொல்லு. சும்மா அழுவாத…”
“யே எனக்கு ஒரு பொண்ணு இருந்து அவளுக்கு இப்பிடி இருந்தா நீ ஒம்மவனுக்கு கட்டிவைக்க மாட்டியா? என்னானாலும் அவ எனக்கும் மவதேன். எப்பவும் இந்த வீட்டுக்கு மூத்த மவேன் மாதிரிக்கிதேன் இருப்பா எங்க மின்னலு. நேத்திக்கு அவ இருந்த இருப்ப பாத்துட்டு யே ஈரக்கொலையே ஆடிருச்சுத்தா…”
“ராசு நெசமாத்தேன் சொல்லுதியாடி…”
“அட என்னாத்தா நீயி எத்தனவாட்டி சொல்லுதேன். ஒம்மவன்கிட்ட சொல்லி பரிசம் போட வர சொல்லு. அம்புட்டுதேன். எனக்கு அவரும் மின்னலும் சந்தோசமா இருந்தா போதும். அதுவுங்காட்டி அந்த தருமேன் என்ன பண்ணுவானோன்னு வேற அஞ்சிக்கெடக்காக…”
“என்னடி செஞ்சிருவான்? எம்மவன்கிட்ட சொன்னா அவன் சோலிய முடிச்சுப்புடுவான். சும்மா வெசனத்துல விம்மாம ஆவற சோலிய பாரு. நா அவென் வரவும் பேசுதேன்…”
“பேசு, அந்த பொம்பள இன்னிக்கு வீடேறி வந்து மிரட்டலா பேசிட்டு போறா. பூச்சாண்டி காட்டிட்டு போறா. எவேன் கட்ட வருவான்னு பாக்குதேன்னு. எவனோ என்னத்துக்காம் வரனும்? எந்தம்பி இருக்கச்ச? அவன மிஞ்சி இவ என்னத்த கிழிக்குதான்னு பாக்குதேன்….”
“அதான்டி, பாத்துக்கிடுவோம்…”
“ஆத்தா ஒங்கிட்ட இன்னொன்னைத்தையும் போட்டுவெக்கிதேன். மூச்சுவிடாத. மதினி தருமேன் வீட்டுக்கு வந்துட்டு போனதா சேதி. அதுதேன் எதையாச்சும் கோட்டித்தனம் பண்ணிருக்கும்னு நெனப்பா இருக்கு…”
“அவ எவளத்தேன் வாழவிட்டா? செஞ்சாலும் செய்யக்கூடியவதேன்…” என அதற்கும் காசியாத்தா நொடிக்க,
“செரி செரி. அவேங்கிட்ட பேசிட்டு எனக்கு சொல்லு…” என்று போனை வைத்துவிட்டு திரும்ப அங்கே அழகுப்பாட்டி கண்ணீருடன் நின்றார்.
“அத்தே எதாச்சும் வேணும்ங்களா?…” என்றதும் அவரை கைகூப்பி வணங்கியவர் நிற்கமுடியாமல் தள்ளாட,
“ஆத்தீ எத்தே எத்தே….” என அவரை பிடித்து நகர்த்திக்கொண்டு சென்று சேரில் அமர்த்தியவர் குடிக்க தண்ணீரை கொண்டுவந்து தந்தார்.
“இப்ப என்னத்துக்கு கண்ணா கசக்குதவுக?…” என அதட்டலாய் கேட்க,
“ஒன்னிய என்னவோன்னு நெனச்சுட்டேன் தாயி. நன்றி சொல்ல கைய கூட்டுனேன்னு நெனச்சியா? மன்னிச்சுக்கன்னு சொல்லத்தேன் கைய கூப்புனேன்…”
“ஆத்தே எம்புட்டு பெரிய வார்த்த?…” என ராஜாத்தி நெஞ்சை பிடிக்க,
“ஒனக்கு தெரியாதுத்தா அன்னிக்கு நீ அருளுக்கிட்ட பேசுனத என்னால புரிஞ்சுக்க முடிஞ்சது. ஆனாலுங்காட்டி…”
“அதேன் இப்ப எல்லாஞ்சரியாகிடுச்சுல. அவென் மாட்டேன்னு சொல்லமாட்டான். ஆனா மின்னலு…”
“அவ மறுக்கமட்டாத்தா. நா பாத்துக்கிடுதேன். ஆனா…”
“இங்காருங்கத்த அப்பக்கி எனக்கு எந்தம்பி முக்கியமாப்பாட்டான். இன்னிக்கு எம்புருசனும் புள்ளையும் முக்கியமா தோணுச்சி. இப்ப என்ன?…” என்றவர்,
“விடுங்க அத்த பேசி பேசி நமக்குத்தேன் வெசனம். வேலைய பாப்பம்…” என சொல்லிவிட்டு செல்ல அருள் சம்மதித்தாலும் இதற்கு மின்னொளி சம்மதிக்க வேண்டுமே என்னும் வேண்டுதலுடன் அமர்ந்திருந்தார் அழகுப்பாட்டி.
மகள் பேசிவிட்டு வைத்ததிலிருந்து அருளிடம் இதை எப்படி பேச என்ற யோசனையுடனே தான் அமர்ந்திருந்தார் காசியாத்தா.
மின்னொளியை அருளுக்கு எடுக்க ராஜாத்தியே சொல்லிய பின்பு அவருக்கு எந்தவித தயக்கமும் இல்லை. முதலில் ராஜாத்தியை போலத்தான் அவரும் நினைத்தார்.
ஆனால் இன்று அவளின் எதிர்காலத்திற்கு வாழ்க்கைக்கு ஒரு சிக்கல் என்னும் பொழுது அவரால் பார்த்துக்கொண்டு அமைதியாக இருக்க முடியவில்லை. முத்துநகையின் ஆன்மா தங்களை எந்த ஜென்மத்திலும் மன்னிக்காது என்று முத்துநகையின் நினைவில் மனம் கலங்கியவர் ஒரு முடிவோடு மகனை மதியமே வீட்டிற்கு வர சொல்ல அவனும் வந்துவிட்டான்.
“என்ன கெழவிக்கு பொழுது போவ மாட்டிக்காக்கும்?…” என்றபடி கை கால்களை கழுவிவிட்டு சாப்பிட அமர அவனுக்கு பரிமாறி சாப்பிட்டு முடிக்கும் வரைக்கும் அமைதியாக இருந்தவர் அவன் முடித்ததும் ஆரம்பித்தார்.
“நேத்து ஒமாமேன் வந்தாராக்கும் ஒன்னிய பாக்க?…” என்றதும் அவனுக்கு புரிந்துபோனது.
“ஆமா அதுக்கென்னங்குத?…” என விட்டேற்றியாக பேசியவன் மனம் முழுவதும் மின்னொளியின் பேச்சிலேயே சுற்ற,
“மின்னுவ கட்டமாட்டேன்னு சொன்னியாலே?…”
“ப்ச், இப்ப என்னத்தா? நா வேற எப்புடி சொல்லுவேன்னு நெனச்ச?. அவள என்னால. ப்ச், இந்த பேச்ச விடு…” என சொல்லியவனிடம் ஒன்றும் பேசாமல் தன் போனை எடுத்து மகளுக்கு அழைத்து,
“இந்தாருடி, இவேன்கிட்ட என்னால பேச ஆகாது. நீ வந்துக்கோ. பேசிக்கோ. சுப்பு வண்டிக்கி சொல்லிவிடறேன்…” என்று வைத்துவிட்டு சுப்புவிற்கு அழைத்து உடனே சென்று ராஜாத்தியை அழைத்துவருமாறு சொல்லிவிட்டு வைக்க,
“இப்ப என்னத்துக்கு அத்த வர சொல்லுத? அக்காவுக்கே இது ஒத்துவராதுக்கு தெரியும். நீ எதையாச்சும் பேசி என்னிய எரிச்சல உண்டாக்காத…” என்று அருளை தவிர்த்துவிட்டு அவன் உறங்கும் கட்டிலின் கீழே அமர்ந்துகொண்டு புலம்ப ஆரம்பித்தார்.
“கெழவி பேச்சுக்கு இங்க என்ன மருவாதி? ஈங்குமின்னா கேக்க நாதியுண்டா?…”
“கெழவி, இங்க என்ன நாதியத்து போச்சுன்னு ஒப்பாரிய கூட்டுற?…” என்றவனின் கத்தலுக்கு காசியாத்தாவிடம் பதிலில்லை.
“ஒத்தப்புள்ள பெத்தவகளுக்கு உறியில சோறு, ரெட்டப்புள்ள பெத்தவுகளுக்கு ரெண்டு வூட்டுலையும் சோறு. மூணு புள்ள பெத்தவுகளுக்கு முக்குல சோறு. நாலு புள்ள பெத்தா நடுவீதியில சோறு. அஞ்சுன்னா அதுவுமில்ல. இங்க ஒன்ன பெத்து அதுக்கே வீதிக்கு நிக்க போவுது எங்கட்ட…” என்று மூக்கை சீந்த,
“அடச்சே நிப்பாட்டு. எனக்கு வார வேகத்துக்கு…” என்றவன் கோபத்துடன் கட்டிலில் அமர்ந்துகொள்ள ராஜாத்தி வரும் வரை காசியாத்தா ஓய்வதாக இல்லை.
அருளுக்கு காசியாத்தாவின் புலம்பலும், மின்னொளியின் பேச்சும், முருகய்யனின் வேண்டுதலும் மாறி மாறி வதைக்க மனது வேறெதையும் நினைக்காமல் அவளை கண்டிப்பாக திருமணம் செய்யவேண்டுமா என்பதிலேயே உழன்றுகொண்டு வேறெதையும் நினைக்காமல் சண்டித்தனம் செய்தது.
சிறிது நேரத்திற்கெல்லாம் ஆட்டோவில் வந்துவிட்ட ராஜாத்தியோ வேகமாய் வந்ததும் அருளை ஓரக்கண்ணால் பார்த்துவிட்டு தாயிடம் நெருங்க அவனோ நிம்மதி பெருமூச்சுடன்,
“வாக்கா, நீயாச்சும் இதுக்கு வெளங்க சொல்லு. என்னிய என்ன பேச்சு பேசுது தெரியுமா?…” என்று அக்காவிடம் முறையிட,
“அத பேசத்தேன் வந்தேன் சோதி. நாந்தேன் ஒனக்கு புடிக்குதான்னு கேக்க சொன்னே. ஒனக்கு புடிக்காதுதேன். இருந்தாலும் கேக்கனுமின்னுதேன். நாளப்பின்ன எங்கிட்ட ஒத்த வார்த்த சொன்னீகளான்னு நீ கேட்டுப்போட கூடாது பாரு…”
ராஜாத்தி சொல்லவும் ஒரு நொடி திடுக்கிட்டவன் எச்சிலை கூட்டி விழுங்கியபடி தாயையும், தமக்கையையும் மாறி மாறி பார்க்க,
“ஆத்தா வீட்டுல பேசி ஒரு முடிவுக்கு வந்துட்டம். தருமனுக்கே மின்னல கெட்டி வச்சிடுவோமின்னு. என்னதேன் இருந்தாலும் ஊரு பாக்க ஒத்த ரூமுக்குள்ள…” என்று சொல்லி முடிக்கும் முன்னரே எகிறினான் அருள்.
“என்னது கெட்டிவெப்பியா? கொஞ்சமாச்சும் கூறு வேணா? ஒத்த ரூமுக்குள்ள இருந்தா கெட்டிவெக்கனுமா?…”
“வேற என்னாலே சோதி பண்ண சொல்லுத? எல்லாந்தெரிஞ்ச நீயே வேணாமின்னுட்ட. அத்த வுடு, இப்ப இத நீதேன் தலையெடுத்து நடத்திவைக்கனும்…”
“அதுக்கு? ஊரே சொன்ன பழிய இப்ப ஊரக்கூட்டி உண்மன்னு சொல்லபோறீகளாக்கும்? இதுக்கு நா வேற வரனுமாக்கும்?…” எதற்கு கோவமென்றே புரியாமல் சகட்டுமேனிக்கு ராஜாத்தியிடம் முறைத்துக்கொண்டு பாய்ந்தான்.
“இதுல நா முடிவு பண்ண ஒண்ணுமில்ல சோதி. எல்லா ஒம்மாமேன்தேன்…”
“அட போத்தா. எல்லாருஞ்சேந்து அந்த புள்ளைய கழிச்சுக்கட்ட பாக்குதீக. எனக்கு வெளங்கிப்போச்சு. இது அதோட வாழ்க்கைக்கு நல்லதில்ல, அம்புட்டுத்தேன் சொல்லுவேன்…” அருளின் கோபம் ஒருவகையில் ராஜாத்திக்கு நம்பிக்கையை விதைத்தது.
“நீதேன் கட்டமாட்டேனுட்டல, பொறவென்ன?…”
“மாட்டேன்னா கல்லக்கட்டி கெணத்துல தள்ளுவீயளோ? அந்த வாயாடிக்கும் அந்த பயலுக்கும் கொஞ்சமாச்சு ஒத்துவருமா? புருசெங்காரேன் கொஞ்சமாச்சும் தெகிரியமா இருக்கவேணா? அதேன் பொஞ்சாதிக்கு பாதுகாப்பு. அவனே சரியான தொட நடுங்கிப்பய. அவென் கெட்டகேட்டுக்கு நம்ம ஒளி வேணுமாக்கும்?…”
அருள் கோபத்தில் பொரிந்துகொண்டிருக்க ராஜாத்தியும், காசியாத்தாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.
“நம்மக்கிட்ட ஒரு கொற இருக்கு சோதி. அதையும் நாம பாக்கனுமில்ல. அப்பனா இதையும் ஏத்துக்கத்தேன் வேணும்…”
“நீயாக்கா இப்பிடி பேசுத? எத கொறன்னு சொல்லுத? கலியாணம் ஆனதும் வரிசையா புள்ளபெத்து போட்டா மட்டும் நெறஞ்சிருமா? இப்ப நீ என்னத்த நெறைய கண்டுட்ட?…” என பட்டென கேட்டுவிட இதை எதிர்பார்க்காத ராஜாத்தி,
“சோதி எத்த பேசனுமோ அத்த மட்டும் பேசு…”
“மன்னிச்சிடுக்கா, வாய்தவறின்னு சொல்லமாட்டேன். நீ அந்த வீட்டுல வாக்கப்பட்டதுல இருந்து பாக்குதேன். அதேன்…”
“அத்த விடு, நாளைக்கி பரிசம் போட தருமன வரசொல்லலாமின்னு பேசுதாக. நீ வேண்டாமின்னு சொன்னதால மாமனுக்கு இங்க வர சங்கடம். அதேன் என்னிய போயி அழச்சுட்டு வர சொன்னாக…”
“அம்புட்டு தொலவுக்கு போயாச்சா?…”
“நீதேன் புடிக்கலன்னு சொல்லிட்டியே…”
“புடிக்கலன்னா? இப்பவும் புடிக்கலதேன். இருந்தாலும் என் கண்ணு முன்னாடி. ப்ச்…” என்று ஆத்திரப்பட்டவன்,
“நேத்து மட்டும் அவென் என் கையில அவப்பட்டுருந்தா சாணியாக்கிருப்பேன். தப்பிச்சுட்டான்…” என அடக்கமுடியாமல் பொரும,
“செரி சோதி, நாளைக்கி நேரமா வந்துரு. வேல நெறைய கெடக்கு…” என கிளம்ப பார்க்க,
“அட இருத்தா…” என ராஜாத்தியை அமர்த்தியவன்,
“கெழவி போயி அக்காவுக்கு மோரு கரைச்சு எடுத்தா…” என சொல்ல,
“விடுலே, கொள்ள சோலி கெடக்கு. நீ வேற…” என அவனிடமிருந்து கையை உருவ பார்க்க,
“இப்ப என்ன அந்த வாயாடிய நா கட்டிக்கனும் அம்புட்டுத்தான? நீயே சொல்லுத. அதனாங்காட்டி எனக்கு செரி…” என்றான் பட்டென.
தண்ணீர் நிரம்பிய சொம்பை அப்படியே கீழே போட்ட காசியாத்தா ஓடிவந்து,
“ஏலே நெசந்தானா?…” என கேட்க,
“ஆமாங்கறேன். நெசந்தேன். இத எத்தனவாட்டி சொல்ல? நாளைக்கி அங்க போவ என்ன செய்யனுமின்னு சொல்லு. வாங்கியாறேன்…” என்றான் அவர்கள் இருவரின் முகத்தையும் பார்க்காமல்.
“சோதி அந்த அன்னம் மிரட்டுரமாதிரி வேற பேசிருக்காய்யா…”
“யாரா இருந்தாலும் எங்கிட்ட வரட்டும். பாத்துகிடுதேன். நீ போயி ஒம்புருசன பரிசத்தோட கலியாணத்துக்கும் நாள குறிக்க சொல்லு. நாளைக்கி நாங்க வாரோம். அப்பிடி ஒன்னும் ஒன்னியவும், அந்த புள்ளையவும் நாங்க விட்டுக்குடுத்துறமாட்டோம்த்தா…” உரிமையுடன்.
தம்பியின் தோளில் சாய்ந்து அழுதேவிட்டார் ராஜாத்தி. அவருக்கு அத்தனை சந்தோஷம், அதையும் மீறிய ஒரு நிறைவு.
“இந்தா அன்னிக்கே சொன்னேனுல்ல நீ அந்த புள்ளைய கட்டசொல்லாம இருந்தா செரித்தேன்னு. அதுதேன் நடந்திருக்கு…” என்று கிண்டலாய் சொல்ல,
“இப்ப என்னாலே?. வேணாமின்னா சொல்லு…”
“போதும்த்தா, மொத கெளம்பு. இல்ல இரு நானே வாரேன்…” என்றவன் சுப்புவை பார்க்க அவனோ என்ன நடக்கிறதென புரியாமல் பார்த்தான்.
காலையில் மின்னொளி பார்க்கவேண்டும் என வந்தாள், இப்பொழுது ராஜாத்தி. அதற்கு முதல்நாள் நடந்த நிகழ்வுகள் வேறு. இப்பொழுது வரிசையாக இருக்க குழப்பமாய் பார்க்க அருள் வண்டியை எடுக்குமாறு கையை நீட்டினான்.
“ஊருக்கு ஆட்டோ ஓட்டுதேனோ இல்லியோ இவுக குடும்பத்துக்கு நல்லாவே ஓட்டுதேன்…” என்ற முணுமுணுப்புடன் ஆட்டோவை கிளப்பினான் சுப்பு.
வீட்டிற்கு சென்று ராஜாத்தியை இறக்கிவிட்டுவிட்டு சிறிது நேரத்திற்கெல்லாம் அவனே முருகய்யனை பார்க்க தோப்பிற்கு வந்துவிட்டான்.
இவனை பார்த்ததுமே முகத்தில் ஒருநொடி மின்னிமறைந்த எதிர்பார்ப்பையும் கண்டுகொண்டவன் பேச்சை எப்படி ஆரம்பிப்பது என்று புரியாமல் நிற்க,
“வாய்யா, எதாச்சும் சோலியா? என்ன இம்புட்டு தொலவு?…” என சாதாரணமாக கேட்பதை போல இருந்தாலும் குரல் கமறியது.
“இல்ல ஒங்கள பாக்கத்தேன்…” என்றதும்,
“ஓஹ், சொல்லும்யா என்ன விசயம்?…” என கேட்க,
“ஒக்காந்து பேசுவோமே…” என்றான் அருள்.
எப்பொழுதும் வந்தால் வந்ததை பேசிவிட்டு தானே இருந்து செல்ல சொன்னாலும் கேட்காமல் கிளம்பிவிடுபவன் இன்று அமர்ந்து பேச விரும்புவதை பார்த்தவர் நேற்று மறுத்ததற்கு இன்று விளக்கமும், சமாதானமும் சொல்லத்தான் அமர்ந்து பேச நினைக்கிறான் என்றே நினைத்தார்.
“செரிய்யா வா…” என அவனை அழைத்துக்கொண்டு கயிற்று கட்டிலில் அமர்ந்தவர்,
“யலே முனியாண்டி ரெண்டு எளனி சீவி கொண்டாலே…” என்று சொல்லிவிட்டு அருளை பார்க்க,
“வந்து நேத்து நீங்க பேசுதப்ப எனக்கு என்ன பதில சொல்லன்னு யோசிக்கல. அதேன் வெடுக்குன்னு சொல்லிப்புட்டேன்…”
“அதுக்கென்னய்யா? ஒனக்கு விருப்பமில்லாததுக்கு என்ன பண்ணமுடியும்? செரி விடு. பாத்துக்கிடுவோம்…” என சொல்ல அதற்குள் இளநீர் வந்துவிட,
“மொத குடிய்யா. பொறவு பேசு. தாளாத வெயிலுல வந்துருக்க…”என உபசரிக்க குடித்து முடித்தவன் இன்னமும் தயக்கத்துடனே அமர்ந்திருக்க,
“நா ஒன்னு நெனைக்கலய்யா. நீ மனசுல வெச்சுக்காத. போயி சோலிய பாரு…”
“அதுக்குத்தேன் வந்தேனுங்க…” என்றவன் அவர் இன்னமும் தன்னை மாப்பிள்ளை என்று அழைக்காததை வருத்தமாய் குறித்துக்கொண்டான்.
ராஜாத்தியுடன் முருகய்யனுக்கு திருமணம் ஆனதிலிருந்து அவரை மாமா என்று அழைக்காதவன் அருள்ஜோதி.
ஆனால் அவர் வாய்க்கு வாய் வார்த்தைக்கு வார்த்தை “மாப்ள மாப்ள” என்று அழைத்து பழகியிருந்தவன் இன்று அவரிடம் அந்த அழைப்பு இல்லை என்னும் பொழுது அத்தனை வலித்தது. இப்படித்தானே இருந்திருக்கும் அவருக்கும் என நினைத்துப்பார்த்தவன்,
“மாமோவ்…” என்றான் வெகு வருடங்களுக்கு பிறகு.
“என்னய்யா என்ன சொன்ன?…”
“ஒங்கள மாமோவ்ன்னு இப்பவும் நா கூப்புடலாம்தான?…” என்றதும் கண்கள் கலங்கிப்போனது அவருக்கு.
“கூப்புடுய்யா, ஒன்னிய தவுர வேற எவனுக்கு உரிம இருக்காம்?…” என நெகிழ்ந்து போய் பேச,
“ஒளிய எனக்கு கட்டிதாரீகளா மாமோவ்…” என அடுத்து கேட்டுவிட முருகய்யனுக்கு தன் காதில் கேட்டதை நம்ப முடியவில்லை.
“யோவ் மாப்ள நெசமாத்தேன் சொல்லுதியா? மாப்ள…” என சந்தோஷத்தில் நெஞ்சடைத்தது அவருக்கு.
“அட ஆமாங்கறேன்…” என சிரித்தான் அருள்.
“என்நெஞ்சுல பால வார்த்தய்யா. அந்த சாமியே எனக்கு வரங்குடுத்தமாட்டுல இருக்குது…” என்று ஆனந்த கூத்தாடினார் முருகய்யன்.
“நேத்திக்கி திடுதிப்புன்னதும் ஒன்னும் யோசிக்க முடியல. ஒங்கட்ட இப்ப விசயத்த சொல்லி நாளைக்கு பரிசம் போட வரலாமின்னு அம்மா சொல்லிட்டு வர சொல்லுச்சு. அதுக்குத்தேன் என்ன மொறன்னு கேட்டுட்டு போவலாமின்னு…”
“ஒனக்கு தெரியாததாய்யா? ஓமனசு போல செய்யி ராசா…” என்றார் நிறைந்த மனதுடன்.
“செரி மாமோவ், நாளைக்கு வார நேரத்த போனு போட்டு சொல்லுதேன்…” என்று எழுந்துகொண்டவன் அவரின் முகத்தை பார்த்து நிற்க,
“என்னய்யா?…” என்றார்.
“அது ஒளி…”
“மேக்கால காட்டுல இருப்பான்னு நெனைக்குதேன். இன்னிக்கு அங்க மருந்தடிக்குதோம்…” என்றதும்,
“செரி நா பாத்துக்கிடுதேம். கெளம்புதேன்…” என்று அவன் கிளம்பிவிட மனதெல்லாம் மகிழ்ச்சியுடன் ராஜாத்திக்கு அழைத்தார் முருகய்யன்.
அருளோ மின்னொளியை பார்த்து அவளிடம் பேசவேண்டும் என எண்ணியவன் பின் மனதை மாற்றியவனாக அவளை பார்க்காமலேயே மீண்டும் வீடு திரும்பிவிட்டான் இன்னமும் தெளியாத மனதோடு.
அவனுக்கு ஒரு விஷயம் மட்டும் புரிந்தது. மின்னொளிக்கு அமையும் வாழ்க்கை நல்லதாக, நிம்மதியானதாக இருக்கவேண்டும் என தன் மனம் விரும்புவதை அவனால் உணர முடிந்தது.